Mohini Vanam Ch 39 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in
மோகினி வனம் – சாண்டில்யன்
அத்தியாயம் – 39 கர்ம யோகியின் கடிதம்!
Mohini Vanam Ch 39 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in
மண்டலக் கோட்டையின் பெரிய அரண்மனையின் திருமண மண்டபத்தில் புஷ்பாவதியின் கழுத்தில் மங்கல நாணை தீப்சந்த் முடிந்ததும் சோம்ஜியைப் பற்றிய அமங்கலச் செய்தி அடங்கிய ஓலையைத் தாங்கி வந்த தூதன் அந்த
மண்டபத்தில் தோன்றினான்.
மங்கல நாணை தீப்சந்த் அணிவித்ததும் மங்கையர் மங்கல கீதம் பாடி மகிழ்ந்து கொண்டிருந்த சமயத்தில் அந்த மண்டபத்தில் தோன்றிய தூதன் அந்தத் திருமண நிகழ்ச்சி எதிலும் ஈடுபடாமல ஒதுங்கி ஒரு தூணின் மறைவிலேயே
நின்றான் அரைநாழிகை நேரத்துக்குமேல். பிறகு தீப்சந்த் மட்டும் தனித்து வந்து அங்கிருந்த விருந்தாளிகளைச் சந்திக்க முயன்ற சமயத்தில் தனது தலையை மெதுவாக நீட்டினான். அவனைக் கண்ட தீப்சந்த் அவன் முகத்திலிருந்த துன்பக்
குறியையும் அதிர்ச்சியையும் கண்டு அவனைத் தனியே அழைத்துக் கொண்டு சென்று வந்த காரியத்தைப்பற்றி வினவினான்
உடனடியாக விஷயத்தை உடைக்காத தூதன் தீப்சந்துக்குத் தலைவணங்கி, “தங்களுக்கு அவசர ஓலை கொண்டு வந்திருக்கிறேன்.” என்று கூறினான்.
“யார் கொடுத்தது ஓலையை?” என்று தீப்சந்த் வினவினான்.
“ராஜமாதா.” என்று சுருக்கமாகப் பதில் சொன்னான் தூதன்.
“சரி! நீ இந்த அரண்மனையின் தென்பகுதியில் தங்கு. சீக்கிரம் சந்திக்கிறேன்” என்று கூறி ஓலையைப் பெற்றுக் கொண்டு திரும்பவும் விருந்தாளிகளைக் கவனிக்கச் சென்றான்.
விருந்தாளிகளை விசாரித்து விருந்தோம்பலை முடித்து அவர்களை அனுப்பிய பிறகு ஓலையைத் தனது மணவறையில் பிரித்துப் படித்த தீப்சந்த் திகைப்பின் எல்லையை அடைந்து அப்படியே உட்கார்ந்துவிட்ட சமயத்தில், அவனைத்
தேடி வந்த புஷ்பாவதி அவன் பஞ்சணையில் சிலையென உட்கார்ந்திருப்பதைக் கண்டதும் “ஏன்? என்ன விசேஷம்?” என்று வினவினாள்,
பதிலுக்குக் கையில் இருந்த ராஜமாதாவின் ஓலையை புஷ்பாவதியிடம் நீட்டினான். அந்த ஓலையைப் படித்த புஷ்பாவதியின் மனதில் சொல்லவொண்ணா துயரம் குடி கொள்ளவே “மந்திரி கொலைக்கு மகாராணா என்ன பரிகாரம்
கண்டார்?” என்று வினவினாள்.
“சோம்ஜி அவர் எதிரிகளால் அவரது மாளிகையிலேயே கொல்லப்பட்டார் என்று ஓலையில் கண்டிருக்கிறதே தவிர வேறு விவரம் இல்லை” என்று சுட்டிக் காட்டினான் தீப்சந்த்.
புஷ்பாவதியின் முகம் கோபத்தால் சிவந்தது. “வேறு ஒரு விவரம் இருக்கிறது” என்று கூறினாள் கோபம் துளிர்த்த குரலில்.
“ஆம். இருக்கிறது.” என்று தீப்சந்த் சொன்ன பதிலில் வெறுப்பு இருந்தது.
“உங்களை வரச்சொல்லி இருக்கிறாள் ராஜமாதா.” என்ற புஷ்பாவதியின் குரலிலும் சினம் இருந்தது.
“ஆம்.”
“எதற்கு? தனது துப்பு கெட்ட பிள்ளையைக் காப்பாற்றவா?”
“அப்படி மகாராணாவைப் பற்றிப் பேசாதே புஷ்பாவதி.”
“வேறெப்படிப் பேசச் சொல்கிறீர்கள்? மந்திரியை கொலை செய்யப் பார்த்துக் கொண்டிருந்ததற்குப் பாராட்டச் சொல்கிறீர்களா?”
“ஆயிரம் இருந்தாலும் அவர் மேவாரின் ராஜ சின்னம். அந்த வம்சத்தைக் காப்பது நமது கடமை.”
“அவரே தமது பதவியைக் காப்பாற்றிக் கொள்ளாத போது நீங்கள் அதைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் என்ன?” இதை மிகுந்த வெறுப்பு நிறைந்த குரலில் வினவினாள் புஷ்பாவதி.
புஷ்பாவதியின் பூவுடலைத் தனக்கு அருகில் இழுத்து அணைத்தான் தீப்சந்த். அன்பு கனிந்த குரலில் பேசவும் முற்பட்டு, “புஷ்பாவதி! வீரன் கடமையென்று ஒன்று உண்டு. மேவார் ராணா முக்கியமல்ல நமக்கு. இன்று மோசமான
ராணா இருந்தால் அடுத்தபடி மகாவீரரான ஒரு ராணா வரலாம். இப்படி மாறி வந்ததும் வரலாற்றில் இருக்கிறது. ஆனால் மேவார் முக்கியம், அதன் நன்மை முக்கியம்” என்று கூறி அவள் பூங்கன் னத்தில் தனது இதழ்களைப்
பொருத்தினான்.
அவள் அவனை அகற்ற முயலவில்லை, அவன் அணைப்பைத் தடுக்கவும் முயன்றாள். “எனது சேடிகள் காத்திருக்கிறார்கள். இதற்கு நீங்கள் இரவு மட்டும் காத்திருக்க வேண்டும்” என்று சொன்னாள்.
தீப்சந்த் பெருமூச்சு விட்டான்.
“புஷ்பாவதி! இன்றிரவு நான் இங்கு இருக்க மாட்டேன்.” என்று துன்பக் குரலில் சொன்னான்.
புஷ்பாவதியின் முகத்தில் பேரதிர்ச்சி தெரிந்தது. “என்ன! இரவு இருக்கமாட்டீர்களா!” என்று வினவிய அவள் குரலிலும் பேரதிர்ச்சி ஒலித்தது.
அந்த அதிர்ச்சியை அவன் எதிர்பார்த்தே இருந்ததால் அவளைச் சுற்றியிருந்த தனது கைகளைச் சற்று இறுக்கினான் அவளுக்கு ஆறுதலைக் கொடுக்க. பிறகு ஒரு கையை எடுத்து அவள் முகத்தைத் தன்னை நோக்கித் திருப்பி அவள்
கண்களுடன் தனது கண்களை உறவாடவிட்டான். அவள் கண்களில் இருந்த பெரும் சோகம் அவன் மனதை அறுக்கத் தொடங்கியது. அந்த வேதனையுடன் பேசினான், “புஷ்பாவதி! உன் மன ஏக்கம் எனக்கு மட்டும் இல்லையா? மணந்த
இரவன்றே நாம் மணவறையில் இணையாதது எனக்கு மட்டும் ஏமாற்றத்தையும் வேதனையையும் அளிக்கவில்லையா? ஆனால் வேறு வழியில்லை புஷ்பாவதி. நான் காலம் கடந்து உதயபூர் சென்றால் அதற்குள் அங்கு இன்னும்
என்னென்ன விபரீதங்கள் நேரிடுமோ எனக்குத் தெரியாது. ஆகவே உடனே புறப்படுவதைத் தவிர வேறு வழியில்லை” என்று சொல்லி அவள் இதழ்களைத் தனது இதழ்களால் சந்தித்தான். இணைந்த இதழ்கள் நீண்ட நேரம் பிரியவில்லை.
பிரிந்தபோது அவள் ஏக்கம் மிக அதிகமாயிற்று. “இப்படித் தொட்டும் விட்டும் ஓடுவதுதான் கணவன் கடமையா?” என்று வினவி பெருமூச்சு விட்டாள், அந்த மணமகள்.
அவன் கேட்டான், அவளை இடதுகையால் அணைத்த வண்ணம், “உன்னை விட்டு யார் ஓடப் போவது?” என்று.
அவள் கண்களில் லேசாக நம்பிக்கை உதயமாயிற்று. அந்த நம்பிக்கை ஒலித்த குரலில் கேட்டாள். “அப்படியானால்!” என்று.
“உன்னையும் அழைத்துப் போகிறேன்” என்ற தீப்சந்த் “பயணத்துக்கு உன்னைத் தயார் செய்து கொள்” என்றும் கூறினான்.
“அப்படியானால் இந்த மணவறைச் சடங்குகள்…” என்று இழுத்தாள் அவள்.
“போகும் வழியிலுள்ள ஒரு தோப்பின் மண்தரை நமது மணவறையாகும்.” என்றான் தீப்சந்த்.
“இந்த மணவறையை மூடி வெளியிலிருந்து சேடிகள் மங்கல கீதம் பாடுவார்களே…” என்றாள் புஷ்பாவதி,
“தோப்புக் குயில்கள் நமக்கு இசை பாடும்.” என்றான் தீப்சந்த்.
அதற்கு மேல் அவள் தர்க்கம் ஏதும் செய்யவில்லை.
தீப்சந்த் திருமணத்துக்கு வந்திருந்த விருந்தினர் களிடமும் தாய் தந்தையரிடமும் விடைபெற்றுக் கொண்டு அன்று மாலையே கிளம்பினான் புஷ்பாவதியுடனும் ஓலையைக் கொண்டுவந்த தூதனுடனும், இரவு மூண்ட பிறகும்
அவன் பயணத்தை நிறுத்தவில்லை. மண்டலக் கோட்டையில் இருந்து கிளம்பி உதய பூரை நோக்கி வெகு வேகமாகப் பயணம் செய்தவன் கிட்டத்தட்ட நள்ளிரவு நெருங்கிய பின்பு வழியிலிருந்த சோலையொன்றில் தங்கினான்.
புரவியிலிருந்து தான் இறங்கி புஷ்பாவதியையும் இறக்கிவிட்ட தீப்சந்த் சோலை முகப்பில் தூதனை காவலிருக்கச் சொல்லிவிட்டு ஒரு மரத்தடியில் உட்கார்ந்தான். புஷ்பாவதி தனது புரவியிலிருந்த பையிலிருந்து ஒரு
பொட்டலத்தையும் ராஜஸ்தானின் நீண்ட பித்தளைக் கூஜாவையும் எடுத்து வந்து பொட்டலத்தைப் பிரித்து அவனுக்கு உணவு பரிமாறினாள்.
தீப்சந்த் அவளை வியப்புடன் நோக்கி, “உணவு கொண்டு வந்திருக்கிறாயா?” என்று வினவினான்.
“ஆம்” என்றாள் அவள் வெட்கம் ஒலித்த குரலில்.
“முன்னேற்பாட்டுடன் வந்திருக்கிறாய்!” தீப்சந்தின் குரலில் மகிழ்ச்சி இருந்தது.
“இது முன்னேற்பாடு அல்ல, கடமை.” என்றாள் புஷ்பாவதி.
“என்ன கடமை?”
“கணவனுக்குக் காலா காலத்தில் உணவு சமைத்துப் போடுவது மனைவியின் முக்கிய கடமை.”
“இந்தச் சப்பாத்தி நீ தயாரித்ததா?”
“என் கடமையை வேறு யார் செய்ய முடியும்?” என்று கேட்டு அவனுக்கு உணவை ஊட்டினாள்.
“உணவை நீ ஊட்ட வேண்டுமா? எனக்குக் கை இல்லையா?” என்றான் தீப்சந்த்.
அப்பொழுது அவன் கை தனது மார்பில் ஊர்ந்து கொண்டிருந்ததைக் கவனித்த புஷ்பாவதி மெள்ள நகைத்தாள்.
“ஏன் நகைக்கிறாய்?” என்று தீப்சந்த் வினவ, “உங்கள் கை வேறு அலுவலில் இருக்கிறது. அதைத் தடை செய்ய இஷ்டமில்லை.” என்று கூறினாள்,
அதற்குமேல் உணவை வேகமாக முடித்துக் கொண்ட தீப்சந்த் அவளுக்குத் தானே உணவை ஊட்டினான். பிறகு தனது தலைப்பாகையைத் தரையில் விரித்து அவளைப் படுக்கச் சொல்லித் தானும் அவள் அருகில் படுத்தான்.
“புஷ்பாவதி! இந்த மண் தரை மணவறையை விட நன்றாயில்லை?” என்று தீப்சந்த் வினவினான்.
“ராமன் இருக்குமிடம் சீதைக்கு அயோத்தி.” என்றாள் புஷ்பாவதி.
அப்பொழுது சோலை மரங்களில் இருந்த ஏதோ இரண்டு பறவைகள் இன்பமாகக் கூவின. “கேட்டாயா, சோலைச் செடிகளின் கீதத்தை” என்ற தீப்சந்த் பக்கவாட்டில் புரண்டு அவள் பூவுடலை ஒரு கையால் அணைத் தான்.
உணர்ச்சிகள் அவ்விருவரையும் ஆட்கொண்டன. வேட்கை மிகுந்து வெட்கம் அகன்றது. காடே மணவறையாக மண் தரையே பஞ்சணையாக இருவரும் சொர்க்கத்தைப் படைத்துக் கொண்டார்கள்.
விடியும் நேரத்திற்கு முன்பாகவே எழுந்துவிட்ட தீப்சந்த் அலுத்துப் படுத்திருக்கும் அந்தப் புஷ்பக் கொடி யைப் பார்த்தான். அந்த அசந்த நிலையிலும் அவள் மனோகரமாகக் காட்சியளித்தாள். சிதைந்த ஆடையும் கலைந்த குழலும்
அழிந்த திலகமும் அவளை மோகனப் பதுமையாகச் செய்திருந்தன. அவளை எழுப்பாமல் தீப்சந்த் மட்டும் அருகிலிருந்த ஒரு சிறு கேணியில் முகம் கழுவித் தனது உடைகளைச் சீர்செய்து வாளையும் கட்டிக் கொண்டான். பிறகு
புஷ்பாவதியின் பக்கத்தில் உட்கார்ந்து அவளை மெதுவாக அசைத்து எழுப்பி, “எழுந்திருக்கிறாயா, புஷ்பாவதி! சூரியன் உதயமாகும் முன்பு வெகு தூரம் செல்லலாம்” என்று கூற, அவள் எழுந்து உட்கார்ந்தாள். “அதோ ஒரு சிறு
ஊற்றுக்கேணி இருக்கிறது. போய் வா முகம் கழுவி” என்று கூற அவள் மெதுவாக இடை அசைய தளர் நடை நடந்துச் சென்றாள்… சிறிது நேரத்தில் அவளும் சித்தமாகிவிட வே அவளை தீப்சந்த் தனது கைகளால் தூக்கிப் புரவியில் ஏற்றி
உட்கார வைத்தான். அதற்குக் காரணம் அவளுக்குப் புரிந்திருந்ததால் அவள் அவனைப் பார்த்து புன்னகை செய்தாள். அந்த ஒரு புன்னகைக்குப் பெரிய சாம்ராஜ்ஜியத்தையே கொடுக்கலாம் என்று எண்ணமிட்டான் தீப்சந்த்.
மீண்டும் தூதனுடனும் புஷ்பாவதியுடனும் பயணம் செய்த தீப்சந்த் வழியில் மேவாரின் கிராமங்கள் அடைந்திருந்த கேவல நிலையைக் கண்டான். எங்கும் ஏழ்மை குடி கொண்டிருந்தது. நிலங்களில் பயிர்கள் வாடிக் கிடந்தன.
கோதுமை, சோளப் பயிர்கள் தங்கள் கொண்டைகளைத் தரையில் சாய்த்துப் படுத்திருந்தன. சில இடங்களில் ஆடு மாடுகள் மாண்டு கிடந்தன கேட்பாரற்று, இவற்றை எல்லாம் பார்த்துக்கொண்டும் இரவில் ஆங்காங்கு தங்கியும் பயணம்
செய்த தீப்சந்த் நேராக உதயபூர் செல்லாமல் நாகராமக்ராவுக்குச் சென்று புஷ்பாவதியை அவள் தந்தையிடம் ஒப்படைத்து “என் மனைவியை ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டு, உதயபூர் நோக்கிக் கிளம்பி
மூன்றாவது நாள் மாலையில் சோம்ஜியின் மாளிகையை அடைந்து சோம்ஜியின் அறைக்குச் சென்றான். அந்த அறையில் சோம்ஜிக்குப் பதில் மந்திரியாக நியமிக்கப்பட்ட சதிதாஸ் நின்றிருந்தான். சற்று எட்ட இருந்த சோம்ஜியின்
ஆசனத்தில் ராஜமாதா கையில் ஒரு குழலை ஏந்தி உட்கார்ந் திருந்தாள்.
தீப்சந்தைக் கண்ட பின்பும் அவள் கண்கள் அழைப்பை விடுவிக்கவில்லை. வெறித்து தீப்சந்தை நோக்கின. கையிலிருந்த குழலை தீப்சந்திடம் நீட்டினாள். அதன் முத்திரைகள் உடைக்கப்பட்டிருந்தன. அது ராஜமாதாவுக்கு
.
விலாசமிடப்பட்டிருந்தது. குழலின் உள்ளிருந்த சீலையை எடுத்துப் பிரித்துப் படித்தான் தீப்சந்த். சோம்ஜியின் அந்த இறுதிக் கடிதத்தின் ஒவ்வொரு வரியும் தீப்சந்தின் உள்ளத்தைத் தீயெனச் சுட்டது.
சோம்ஜி எழுதியிருந்தார் :
“மகாராணி! இது எனது இறுதிக் கடிதம். எப்பொழுது மகாராணாவை மதியாத சந்தாவதர்களைத் துணைக்கு அழைக்க ஒப்புக்கொண்டார்களோ அன்றே இந்த ராஜ்ஜியம் அழிந்தது. இன்னும் சில தினங்களில் நான் கொல்லப்படுவேன்.
கடமையைச் செய்த மகிழ்ச்சியுடன் நான் மடிவேன். அத்துடன் மேவார் அரசின் மேன்மையும் மடியும். சீக்கிரம் தீப்சந்தை வரவழையுங்கள். அவன் யோசனைப்படி நடக்க முற்படுங்கள்.
இப்படிக்கு
“சோம்சந்த் காந்தி”
இந்தக் கடிதத்தைப் படித்த தீப்சந்த் “ஒரு கர்ம யோகியை மேவார் இழந்துவிட்டது” என்று சோகக் குரலில் சொன்னான். மகாராணியின் கண்களை ஏறெடுத்து நோக்கினான். அவன் கண்களைச் சந்திக்க முடியாத மகாராணி தனது
கண்களை நிலத்தை நோக்கித் தாழ்த்தினாள்.