Mohini Vanam Ch 40 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in
மோகினி வனம் – சாண்டில்யன்
அத்தியாயம் – 40 இரு சபதங்கள்!
Mohini Vanam Ch 40 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in
சோம்ஜியின் கொலையில் மேவார் ஒரு கர்ம யோகியை இழந்துவிட்டதாக தீப்சந்த் கூறியதும் சோம்ஜியின் அறையில் விரும்பத்தகாத ஒரு மவுனம் குடி கொண்டது. அந்த அறையிலிருந்த சதிதாஸ், ராஜமாதா, தீப்சந்த் மூவரின்
மனத்தையுமே நிலைகுலையச் செய்திருந்ததால் மூவருமே ஏதும் பேசவில்லை. எந்த சமயத்திலும் எதையும் ஏறெடுத்து நோக்கும் துணிவுள்ள ராஜ மாதாவின் கண்கள் நிலத்திலேயே பதிந்து கிடந்தன.
அந்த மவுனத்தை தீப்சந்தே உடைத்து, “ராஜமாதா! மகாமந்திரியைக் கொலை செய்தவன் என்ன ஆனான்?” என்று வினவினான்.
“பீம்சிங் சலூம்பிராவுடன் சித்தூர் சென்று விட்டான்.” என்றாள் ராஜமாதா நிலத்திலிருந்த கண்களை எடுக்காமலே.
“அவன் பெயர்?” தீப்சந்த் வினவினான் உக்கிரமான குரலில்.
“அர்ஜுன் சிங்.” ராஜமாதாவின் குரலில் வெட்கமும் துக்கமும் இணைந்து கிடந்தன.
“கோராபூர் அர்ஜுன்சிங்கா?” தீப்சந்தின் கேள்வியில் இகழ்ச்சி ஒலித்தது.
“ஆம்.” அந்தப் பதிலை சதிதாஸ் சொன்னான்.
“அந்த மாளிகையில் மந்திரி சொல்லப்பட்டபோது யார் இருந்தது?”
“நானும் எனது சகோதரனும் இருந்தோம்.”
“காவலர்!”
“இரண்டு மூன்றுபேர் இருந்தோம்.”
“சோம்ஜி கொலை செய்யப்பட்டபோது நீங்கள் என்ன செய்தீர்கள்?”
“மன்னரிடம் ஓடினோம்.”
“ஓடுவதற்காக மந்திரிகளா?” இதை மிகுந்த சீற்றத்துடன் கேட்டான் தீப்சந்த்.
“நாங்கள் வீரர்களல்ல. கணக்குப் பார்ப்பவர்கள்” என்று சதிதாஸ் பதில் சொன்னான்.
அடுத்தபடி தீப்சந்த் தனது பார்வையை ராஜமாதா மீது திருப்பி “மன்னர் ஏன் கொலையாளியைச் சிறை செய்யவில்லை? சிறை செய்து ஏன் தண்டிக்கவில்லை?” என்று வினவினான்,
ராஜமாதா மெள்ள மெள்ள தைரியத்தை வர வழைத்துக்கொண்டு, “தீப்சந்த்! கேள்விகளைக் கேட்க உன்னை நான் வரவழைக்கவில்லை. மேவாரின் கேவல நிலைக்குப் பரிகாரம் காண வரவழைத்திருக்கிறேன்.” என்று சொன்னாள்.
அவனை ஏறெடுத்துப் பார்க்கவும் செய்தாள்.
தீப்சந்த் அந்த அறையில் அப்படியும் இப்படியும் இரு முறை உலாவினான். “ராஜமாதா! என்னிடம் என்ன பரிகாரத்தை எதிர்பார்க்கிறீர்கள்?” என்று வினவினான்.
“மன்னனைச் காக்க வேண்டும்.” என்றாள் ராஜமாதா.
“அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?” என்று தீப்சந்த் வினவினான்.
“சக்தாவதர்களைத் திரட்டி சலூம்பிராவுக்குப் புத்தி கற்பிக்கலாம்” என்று ராஜமாதா யோசனை சொன்னாள்.
தீப்சந்த் ராஜமாதாவை ஏறெடுத்து நோக்கினான். “ராஜமாதா நீங்கள் சொல்கிறபடி செய்தால் உள் நாட்டுப் போர் ஏற்படும். அதனால் மக்கள் பாதிக்கப்படுவார்கள். ஏற்கனவே நீதியோ சட்டமோ இல்லாத இந்த ராஜ்ஜியம் கலகலத்துவிடும்.
இப்பொழுது இங்கு அரசாள்வது மொக லாயரை எதிர்த்துத் தன்னந்தனியாகப் போராடிய பிரதாபசிம்மனோ அல்லது ராஜசிம்மனோ அல்ல ; அரசனுக்கு வலு இல்லாதபோது வேறு பலத்தை துணை சேர்க்கவேண்டும்.” என்று
வெளிப்படையாகப் பேசினான்.
ராஜமாதாவின் இதயம் வெட்கத்தால் விரிந்து கொண் டிருந்தது. “என் மகனைப்பற்றி எனக்குத் தெரியும். அதை அறிந்துகொள்ள உன்னை வரவழைக்கவில்லை. மேவாரைக் காப்பாற்ற வழி கேட்கிறேன்.” என்றாள் ராஜமாதா உடைந்த
மனத்துடன்.
தீவிர சிந்தனையில் இறங்கினான் தீப்சந்த், பிறகு சொன்னான். “ராஜமாதா! ஒரு ராஜத்துரோகிக்கு, அரசனை நேருக்கு நேர் பழிப்பவனுக்கு அரசின் ஒரு பகுதியை சுதந்திரமாக ஆண்டு வருபவனுக்குப் புத்தி கற்பிக்காமல் நாம்
எதையும் சாதிக்க முடியாது. நம்மால் சலூம்பிராவை அடக்க முடியாவிட்டால் அடக்கக் கூடியவர்களை நாம் துணைக்குச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.” என்று.
“யாரைச் சேர்த்துக்கொள்ளலாம்?” என்று ராஜமாதா கேட்டாள்.
“இதற்குப் பரிகாரம் காணக்கூடியவர் ஒருவர் இருக்கிறார்…” என்று சற்று சந்தேகத்துடன் சொற்களை இழுத்தான் தீப்சந்த்.
“யாரது?” என்று ராஜமாதா கேட்டுக் கண்களைச் சற்றே நிமிர்த்தினாள் தீப்சந்தை நோக்கி.
தனது யோசனையை ராஜமாதா ஒப்புக்கொள்வாளோ மாட்டாளோ என்று சிறிது தயங்கிய தீப்சந்த் மெதுவாகச் சொன்னான், “மாதாஜி சிந்தியா” என்று.
இதைக் கேட்டதும் தனது ஆசனத்திலிருந்து கீழே இறங்கிவிட்ட ராஜமாதா ராம்பியாரி “தீப்சந்த்! சிந்தியா இந்த ராஜ்ஜியத்தைச் சூறையாடிவிடுவார். நமது கஷ்டத்துக்குப் பரிகாரம் சிந்தியா அல்ல” என்று உணர்ச்சிகள் கொந்தளிக்கப்
பேசினாள்.
“இப்பொழுது சலூம்பிரா சூறையாடுகிறார். வரிப்பணத்தை அவரே வசூலிக்கிறார். அவர் தூண்டுதல் இல்லாமல் அர்ஜுன்சிங் இந்தத் துணிகரக் கொலையைச் செய்திருக்கமாட்டான். அந்தக் கொலைக்குப் பழியை இருவிதத்தில்
வாங்கலாம். ஒன்று அர்ஜுன் சிங்கைக் கொல்லுவது. இரண்டு அவனைத் தூண்டிய ராஜத் துரோகி சலூம்பிரா வின் சக்தியை முறிப்பது.” என்று திட்டவட்டமாகத் தனது கருத்தைச் சொன்னான் தீப்சந்த்.
ராஜமாதாவின் முகத்தில் இகழ்ச்சிக்குறி படர்ந்தது. “தீப்சந்த்! பேசுவது எளிது. காரியத்தை நிறைவேற்றுவது கடினம். நீ சொன்ன இரண்டு காரியங்களும் செய்ய வேண்டியவைதான். ஆனால் அர்ஜுன் சிங்கை எப்படிக் கொல்லுவாய்?
சலூம்பிராவை எப்படி அடக்குவாய்?” என்று கேட்டாள் குரலிலும் இகழ்ச்சியைக் காட்டி.
அந்த இகழ்ச்சியைக் கண்டு மனம் தளரவில்லை தீப்சந்த். “ராஜமாதா! அர்ஜுன் சிங்கைக் கொல்லுவது எனது பொறுப்பு. இன்னும் பத்து நாளைக்குள் அர்ஜுன் சிங் எனது வாளால் இறப்பான். சலூம்பிராவை அடக்க மாதாஜி
சிந்தியாவை அழைப்பதில் கவுரவக் குறைவு ஏது மில்லை. மேவாரின் வாழ்வு முக்கியமா மன்னரின் வீண் கவுரவம் முக்கியமா என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும்” என்றான்.
அப்பொழுதும் மகாராணி தீப்சந்தின் யோசனைக்கு இணங்கவில்லை. பேச்சை வேறு வழியில் திருப்பி “அர்ஜுன் சிங் கோராபூரில் இல்லை.” என்றாள்.
“சித்தூரில் சலூம்பிராவின் பாதுகாப்பில் இருக்கலாம்.” என்று அலட்சியமாகப் பேசினான் தீப்சந்த்.
“சித்தூர் சென்று அர்ஜுன் சிங்கைச் சண்டைக்கு இழுக்கப் போகிறாயா?” என்று ராஜமாதா கேட்டாள்.
“அது அவசியமில்லை. அவனை மோகினிவனத்துக்கு. வரவழைக்கிறேன்.” என்று சொன்னான் தீப்சந்த்.
“எப்படி?” ராஜமாதா வியப்புடன் கேட்டாள்.
அவனைச் சண்டைக்கு இழுத்து சலூம்பிராவுக்கு ஓலை அனுப்புகிறேன். சலூம்பிரா அவனை அனுப்பி வைப்பார்…” என்று சிறிது நிறுத்திய தீப்சந்த் “என் கையால் மடிய” என்றும் சொற்களைக் கூட்டினான்.
“சலூம்பிரா அவனை அனுப்பாவிட்டால்?” ராஜமாதா கேட்டாள்.
“கண்டிப்பாய் அனுப்புவார். எதைத் தியாகம் செய்தாலும் சலூம்பிரா மகாவீரன். ஒரு வீரன் அழைப்பை மறுக்கமாட்டார்.” என்று திட்டமாகக் கூறினான் தீப்சந்த்.
“அடுத்து சலூம்பிராவை அடக்க?” என்று கேள்வி எழுப்பிய ராஜமாதா, “சிந்தியாவை அழைட்பதைவிட வேறு வழியில்லையா?” என்றும் துக்கத்துடன் கேட்டாள்.
அதற்கு தீப்சந்த் பதில் சொல்லவில்லை. வேறு ஒரு குரல் ஒலித்தது அந்த அறைக்கு வெளியிலிருந்து. “வேறு வழியிருக்கிறது” என்று கூறியவண்ணம் வாயிற்படியில் நின்றான் சக்தாவதர்களின் தலைவனும் மகாவீரனுமான
சங்கிரமசிம்மன்.
சங்கிரமசிம்மன் அறை வாயிலில் கம்பீரமாக நின்றான். “சக்தாவதர்கள் இன்னும் அழிந்துவிடவில்லை ராஜமாதா! நாங்களே சலூம்பிராவை ஒழித்துவிடுகிறோம். இந்த வாளின் மேல் ஆணை.” என்று தனது வாளின்மீது கையை வைத்தான்
சங்கிரமசிம்மன்.
அர்ஜுன்சிங்கைப் பழிவாங்குவதாக தீப்சந்தும், சலூம்பிராவை அடக்கிவிடுவதாக சங்கிரமசிம்மனும் செய்த சப்தங்களைக் கேட்ட ராஜமாதாவின் கண்களில் நன்றி நீர் சுரந்தது. முகத்தைக் கைகளில் புதைத்துக் கொண்டு விம்மினாள்
ராஜமாதா. அவள் உள்ளம் உடைந்து கொண்டிருந்ததை அந்த இரு வீரர்களுமே புரிந்துகொண்டார்கள். அவர்கள் நெஞ்சங்களும் நெகிழ்ந்தன அந்த வீரமாதாவின் நெகிழ்ச்சியைக் கண்டு.
உதவாக்கரை பிள்ளையைப் பெற்றதன் தண்டனையை ராஜமாதா உள்ளூர அனுபவித்துக்கொண்டிருந்தாள்.