Mohini Vanam Ch 42 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in
மோகினி வனம் – சாண்டில்யன்
அத்தியாயம் – 42 பத்தினியின் சாபம்!
Mohini Vanam Ch 42 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in
உலகத்தையெல்லாம் அழகுபடுத்தக் கூடியதும், மனித உள்ளங்களில் மகிழ்ச்சியை விளைவிக்க வல்லதுமான பௌர்ணமியின் வெண்ணிலவு மோகினிவனத்தின் அந்தப் பகுதியைப் பயங்கரமாக அடித்திருந்தது. பக்கத்தில் புஷபச்
செடிகளிலிருந்து வெளியே வந்து அங்கு நடந்த விபரீதத்தைப் பார்த்த மகாராணா பீம்சிங் தனது முகத்தில் பெரும் வெறுப்பைக் காட்டியதன்றி, சற்று எட்ட நின்றிருந்த தமது பெயருடைய சலூம்பிரா தன்னைச் சிறிதும் லட்சியம் செய்யாமல்
நின்றிருந்ததைக் கண்டு சினத்தின் வசப்படவும் செய்தார். இருப்பினும் தம்மால் ஏதும் செய்ய இயலாதலால் பேசாமலே நின்றார்.
அவருடைய செயலற்ற நிலையைக் கண்ட பீம்சிங் சலூம்பிரா லேசாக நகைத்து, “மகாராணா! இன்று தாங்கள் வசிக்கும் இடத்திலேயே எனது நண்பர் ஒருவரின் ரத்தம் சிந்தப்பட்டிருக்கிறது. இங்கே நிலத்தில் மாண்டு கிடப்பவன்
அர்ஜுன்சிங்.உங்களுக்கு இவனை ஏற்கெனவே தெரியும்.” என்று கூறினார், நகைப்பும் இகழ்ச்சியும் ஊடுருவிய குரலில்.
மகாராணா இயற்கையாகவே கோழையானாலும் அந்தச் சமயத்தில் அவர் வீர பரம்பரையின் ரத்தம், அவர் கோழைத்தனத்தை தற்காலிகமாக அழித்துவிடவே “ஆம், தெரியும்! மந்திரி சோம்ஜியைக் கொலை செய்தவன்.” என்றார் சற்று
தைரியத்துடன்.
“அதற்கு ஏன் அவனைத் தண்டிக்கவில்லை?” என்று சலூம்பிரா கேட்டார்.
“எய்தவன் இருக்க அம்பைத் தண்டிப்பது நீதியாகாது என்ற காரணத்தால்” இதை மகாராணா உறுதியுடன் சொன்னார்.
“என்னைச் சொல்கிறீர்களா?” என்று சலூம்பிரா கேட்டார்.
“சலூம்பிரா! உங்களுக்கு மனச்சாட்சி இருந்தால் அதுவே பதில் சொல்லும். வேறு யாரும் விளக்கத் தேவையில்லை.” இதைச் சொன்ன மகாராணாவின் கண்கள் சலூம்பிராவை நோக்கிக் குற்றம் சாட்டும் முறையில் பார்த்தன.
சலூம்பிரா சிறிது நேரம் சிந்தித்தார். பிறகு சொன்னார் : “நான் தனியாகத்தான் வந்திருக்கிறேன் மகாராணா.” என்று.
“அதற்கு என்னை என்ன செய்யச் சொல்கிறீர்?” மகாராணா வினவினார்.
“என்னைச் சிறை செய்யலாம். தண்டனை விதிக்கலாம்.”
“உங்களைச் சிறை செய்து பயனில்லை சலூம்பிரா! தண்டனை அளித்தும் பயனில்லை. ஆயுள் பூராவும் இனி நீங்கள் அனுபவிக்கப் போகிற தண்டனையை நான் கொடுக்க முடியாது.”
“அது என்ன தண்டனை?”
“நிராயுதபாணியான மந்திரியைக் கொல்ல இந்த வஞ்சகனை அனுப்பியதற்கு உங்கள் மனசாட்சி அளிக்கும் தண்டனை! மகாவீரனான உமக்கு அதைவிடப் பெரிய தண்டனை தேவையில்லை. தவிர உமது ஈனச்செயல் சரித்திரத்திலும்
குறிக்கப்படும். உமக்கு இதைவிட என்ன பெரிய தண்டனையை நான் அளிக்க முடியும்?” இதைச் சொன்ன மகாராணா தைரியமாகவே சலூம் பிராவை ஏறெடுத்து நோக்கினார். மேலும் சொன்னார் : “பீம்சிங்! உங்கள் வம்சம் இந்த மேவாரைப்
பாதுகாக்கவும் மேவாரின் அரியணையைப் பாதுகாக்கவும் செய்த தியாகங்களும் சிந்திய இரத்தமும் வரலாற்றில் வைரக் கற்களால் பொறிக்கப்பட்டு இருக்கின்றன. மாசு மருவற்ற வைரங்கள் அந்தத் தியாக சரித்திரத்தை அலங்கரிக்கின்றன.
இப்பொழுது ஒரு புது வைரம் அதில் சேர்ந்திருக்கிறது. அதில் கரும்புள்ளி இருக்கிறது.” என்று.
அப்பொழுதும் சலூம்பிரா தமது முகத்தில் அனுதாப உணர்ச்சிகளைக் காட்டவில்லை. அச்சப்பட்டதாகவும் தெரியவில்லை அவர் முகாபாவத்தில். திடமாகவே பேசினார் சலூம்பிரா. “மகாராணா! நீர் சொல்லும் தியாகம் வீரர்களான
மகாராணாவை மேவார்பெற்றிருந்த காலம். இப்பொழுது காலம் வேறு, காலத்திற்கேற்ற மாறுதல் ஏற்படுவது இயற்கையின் போக்கு.” என்று தமது வெறுப்பைப் பூரணமாகக் காட்டினார். பிறகு மகாராணாவை விட்டு தீப்சந்தை நோக்கி, “.
தீப்சந்த்! அர்ஜுன்சிங்கைத் தர்மயுத்தத்தில் கொன்றாய். நீ உன்னைக் கொல்ல அவனுக்குப் பலமுறை இடம் அளித்தாய். அவன் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. சரி, முடிந்து விட்டது அவன் கதை. அவன் சடலத்தை என்ன
செய்ய உத்தேசம்?” என்று வினவினார்.
தீப்சந்த் வெறுப்புடன் பார்த்தான் அர்ஜுன்சிங்கின் சடலத்தை! “சலூம்பிரா! நீங்கள் எப்படி உத்தர விடுகிறீர்களோ அப்படிச் செய்கிறேன்.” என்றான்.
“நானே அவனை எடுத்துப் போகிறேன்” என்றார் சலூம்பிரா.
இந்த நாடகம் எதிலும் சேராமல் எட்ட நின்றிருந்த புஷ்பாவதியை நோக்கிய தீப்சந்த், “அவன் காயத்தைக் கட்ட துணி ஏதாவது கொண்டு வந்திருக்கிறாயா?” என்று வினவ, அவள் தனது புரவியிடம் சென்று ஒரு பையை எடுத்து வந்தாள்.
அதிலிருந்து துணியை எடுத்து அர்ஜுன்சிங் சடலத்தை தீப்சந்தே துடைத்து அவனைத் தூக்கி அவன் புரவியிலேயே கயிறு கொண்டு பிணைத்தான். பிறகு விலகி நின்று, “சலூம்பிரா | புரவி சித்தமாகி விட்டது.” என்றான்.
சலூம்பிரா புரவியின் குறுக்கே கிடந்த தனது நண்பன் சடலத்தைப் பார்த்தார். “தீப்சந்த்! இந்த விவகாரம் இத்துடன் நிற்காது. ஒரு கொடுமை இன்னொரு கொடுமையைச் சரிக்கட்டாது. இன்று நடந்ததும் கொலைதான். இவன் ஆயுதம்
அணிந்திருந்தாலும் உன்முன் நிராயுத பாணிதான்.” என்றார்.
தீப்சந்த் அந்த மகாவீரனை ஏறெடுத்து நோக்கினான். “சலூம்பிரா! மேவார் அரசு நிலங்களை சூரையாடிய தற்காக மந்திரி கேள்வி கேட்டார். அது அவர் கடமை. கடமைக்காகத் தமது உயிரையும் விட்டார். அந்தக் கொலை சரி என்று
நினைக்கும் பட்சத்தில் அர்ஜுன்சிங் கைத் தூண்டியதற்குப் பழிவாங்க நீண்ட நாள் காத்துக் கொண்டிருக்க வேண்டாம். இதோ நான் இங்கேயே இருக்கிறேன். நம் இருவரிடமும் வாள் இருக்கிறது.” என்றான்
சலூம்பிரா பதில் சொல்லவில்லை. மெதுவாக தீப்சந்தை அணுகி அவன் தோள்மீது கையை வைத்தார். “ஏற்கெனவே நமது வாட்கள்சந்தித்திருக்கின் றன.என்னை உனது வாள் காயப்படுத்தியும் இருக்கிறது. ஆனால் நீ அன்று காட்டிய
கண்ணியத்தை நான் மறக்கவில்லை. நாம் சந்திப்பதானால் இதல்ல இடம்.” என்று கூறிவிட்டு நடக்க முற்பட்டவர் மகாராணாவை நோக்கித் தலைவணங்கி, “மகாராணா! அந்தப் பொறுப்பு உங்களுடையது” என்று கூறிவிட்டுத் தமது
புரவியில் ஏறி உட்கார்ந்து அர்ஜுன் சிங் உடல் இருந்த புரவியின் கயிற்றைத் தமது இடது கையால் பிடித்தவண்ணம் சண்டை நடந்த இடத்தை ஒருமுறை பார்த்தார். பிறகு எட்ட கணவன் பக்கத்தில் நின்றிருந்த புஷ்பாவ தியைப் பார்த்தார்.
உதடுகளில் புன்முறுவல் தவழ, “புஷ்பாவதி! ராஜபுதனத்தின் மகாவீரனை உன் கணவனாகப் பெற்றிருக்கிறாய். நீ அதிர்ஷ்டம் செய்தவள்.” என்று கூறினார். பிறகு புரவியை நடக்க விட்டார்.
அவர் போவதைப் பார்த்துக்கொண்டே நின்ற மகாராணா அவர் கண்ணுக்கு மறைந்ததும், “நீ எங்கிருக்கிறாய் தீப்சந்த்?” என்று வினவினார்.
“என் மாமனார் வீட்டில்.” என்ற தீப்சந்த் மனைவியை நோக்கினான்.
மகாராணா அடுத்து புஷ்பாவதியைப் பார்த்தார். “இவள் தந்தை வீட்டிலா?” என்று கேட்டார்.
“இவள் என் மனைவி. இவள் தந்தை வீடு என்றால் என் மாமனார் வீடாகத்தானே இருக்க முடியும்?” என்றான்.
“நாகராமக்ராவிலா?” என்று மகாராணா வினவினார்.
“இன்னும் இரண்டு நாட்களுக்கு அங்குதான் இருப்பேன்.”
“அதற்குப் பிறகு?”
“என் ஊருக்குப் போவேன்.”
“மண்டலக் கோட்டைக்கா?”
“ஆம்”
“இங்கிருந்தால் என்ன?”
“இனி இங்கு நிகழப்போது சக்தாவதர் சந்தாவதர் போர். அதனால் நாடு நாசமடையும். அதில் கலந்து கொள்ள நான் தயார் இல்லை.” என்ற தீப்சந்த், மகாராணாவை மேற்கொண்டு பேசவிடாமல் அவருக்குத் தலைவணங்கி, “நான்
வருகிறேன் மகாராணா” என்று விடைபெற்றுக் கொண்டான். புஷ்பாவதி நின்றிருந்த இடம் சென்று அவள் சிற்றிடையைப் பிடித்துத் தூக்கி அவளை அவளது புரவிமீது உட்கார வைத்துவிட்டுத் தானும் தனது புரவிமீது தாவினான். இரு
புரவிகளும் நாகராமக்ராவை நோக்கி நடந்தன.
அவர்கள் இருவரையும் பார்த்தவண்ணம் நீண்டநேரம் நின்ற மகாராணா புஷ்பாவதியின் உருவம் புரவியின்மீது உட்கார்ந்திருந்த இடத்தையும் அழகையும் கவனித்தார். “சலூம்பிரா சொன்னதில் தவறில்லை. இவள் அதிர்ஷ்டசாலி.
இவளைவிட இப்சந்த் பெரிய அதிர்ஷ்டசாலி. அவன் என்ன லாகவமாக ஆசையாக அவள் இடையைப் பிடித்துத் தூக்கிப் புரவிமீது வைத்தான்! எத்தனை சிறிய இடை! என்ன பக்குவமான உடல்! இடையைத் தூக்கியவன் அவளைத்
தழுவித்தானே புரவிமீது உட்கார வைத்தான்” என்று கூறி பெருமூச்செறிந்தார்.
தீப்சந்தும் புஷ்பாவதியும் புரவிகளை நெருங்கியே நடக்கச் செய்தனர். அப்பொழுது புஷ்பாவதி சொன்னாள். “நீங்கள் கோபித்துக் கொள்ளக்கூடாது. மேவார் இனி உருப்படாது.” என்று.
“சாபம் கொடுக்காதே புஷ்பாவதி. உன் சாபம் மேவாரை அழித்துவிடும்.” என்றான் தீப்சந்த் கெஞ்சிய குரலில்.
“சாபம் கொடுக்காமல் என்ன செய்வார்களாம்?” என்றாள் புஷ்பாவதி.
“ஏன் சாபம் கொடுக்க வேண்டும்? உன்னை மேவார் என்ன செய்தது?” என்று கேட்டான் தீப்சந்த்.
“மேவார் எதுவும் செய்யவில்லை.”
வேறு யார் உன்னை என்ன செய்தார்கள்?”
“என்ன செய்யவேண்டும்? நீங்கள் என்னைப் புரவியில் தூக்கி உட்கார வைத்தபோது அந்த மகாராணா என்னை எப்படிப் பார்த்தார் தெரியுமா?”
“சே, சே! வீண் கற்பனை மகாராணா காமுகன் தான். ஆனால் பிறன் மனைவியைப் பார்க்கும் அளவுக்கு கேவலமானவர் அல்ல.”
புஷ்பாவதி அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. “அவர் கண்களை நீங்கள் சரியாகப் பார்க்கவில்லை. மேவார் இனி உருப்படுவது குதிரைக் கொம்புதான்” என்று வலியுறுத்தியே சொன்னாள்.
தீப்சந்த் பதில் ஏதும் சொல்லவில்லை. உள்ளூர நினைத்துக்கொண்டான், “பத்தினியின் சாபம்!” என்று.
அந்த சாபம் வெகுவிரைவில் பலித்தது. அடுத்தமாதமே சக்தாவதர்களும் சந்தாவதர்களும் மோதிக்கொண்டார்கள்.
தீப்சந்த் அந்த மோதலில் கலந்துகொள்ளவில்லை.
ராஜமாதா ராம்பியாரி அனுப்பிய ஓலைக்கும் அவன் பதில் அனுப்பவில்லை. பெரும் நாசத்தை மேவாருக்கு விளைவித்த அந்தப் போரிலிருந்து விலகியே நின்றான்.
அடுத்த ஆறுமாத காலம் மேவார் ரணகளப்பட்டுக் கொண்டு இருந்தது. அந்த நேரத்தில் தீப்சந்த் மண்டலக் கோட்டையில் புஷ்பாவதியுடன் உல்லாச வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்தான். புஷ்பாவதி ஒருநாள் அவன் அணைப்பில்
இருந்தபோது கேட்டாள், “இது நியாயமா?” என்று.
“எது?” என்று கேட்ட தீப்சந்த், அவளை மேலும் இறுக்கினான்.
“இதுதான்” என்றாள் புஷ்பாவதி. அவள் மனம் உலகையே மறந்தது. அவளுக்குத் தீப்சந்தே உலகமானான். அவன் அவளைச் சொர்க்கத்துக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தான்.