Mohini Vanam Ch 44 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in
மோகினி வனம் – சாண்டில்யன்
அத்தியாயம் – 44 ராணியின் தூதர்!
Mohini Vanam Ch 44 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in
வேல் விழியாள் புஷ்பாவதியின் கழுத்தில் வேலை ஊன்றிய வண்ணம் அவள் நகைகளைக் கழற்றும் உத்தேசத்துடன் அவள் புரவியை நெருங்கிய வீரன் அடுத்த விநாடி ஓவென்று அலறி மண்ணில் சாய்ந்தான்.
அதே நேரத்தில் இன்னொரு வீரனின் மேல் பலமான வாள் ஒன்றால் தட்டப்பட்டு அவன் கையிலிருந்து பறந்து மண்ணில் வீழ்ந்தவன் மார்புமீது குறுக்கே படுத்துக் கொண்டது.
புஷ்பாவதியின் கழுத்தில் வேலை அழுத்தியவன் வயிற்றில் திடீரெனப் பாய்ந்துவிட்ட புஷ்பாவதியின் குறுவாள் அவன் குருதியால் மண்ணை நனைத்துக் கொண்டிருந்தது.
தீப்சந்தின் வாளால் வேலைத் துறந்தவன் என்ன செய்வதென்று தெரியாமல் திருதிருவென விழித்தான் சில விநாடிகள். பிறகு அங்கிருந்து ஓட எத்தனிக்கவே, ‘டேய் உனக்கு உயிரின்மேல் ஆசையிருந்தால் இருந்த இடத்தை விட்டு நகராதே.”
என்று எச்சரித்த தீப்சந்த், தனது புரவியை விட்டுத் தரையில் குதித்து, “இப்படி வா” என்று அந்த வீரனை அழைத்தான். அவன் அருகில் வந்ததும் அவனை ஏற இறங்கப் பார்த்த தீப்சந்த், “உன்னைப் பார்த்தால் வீரனைப்போல் தெரிகிறது.”
என்றான்.
“ஆம், வீரன் தான்.” என்று அவன் தலையைக் குனிந்த வண்ணம் பதில் சொன்னான்.
“இந்த வழிப்பறி வேலையில் எத்தனை நாளாக ஈடு பட்டிருக்கிறாய்?” என்று விசாரித்தான் தீப்சந்த்.
அந்த இரு அன்னியோன்னிய வீர தம்பதிகளைப் பார்த்த ராஜமாதாவுக்கு ஒருபுறம் மகிழ்ச்சி பொங்கினாலும் இன்னொருபுறம் துயரமே மனத்தில் ததும்பி நின்றது. இப்படித் தனது மகன் மட்டும் இருந்திருந்தால், தான் தலை தூக்கி
நிற்க முடியும் என்ற நினைப்பால் பெரு மூச்சு விட்டாள் ராஜமாதா. “தீப்சந்த்! நீங்கள் இருவரும் நீண்ட நாள் மங்கல வாழ்வு வாழ வேண்டும்.” என்று ஆசிர்வாதம் செய்தாள்.
தீப்சந்த் ராஜமாதாவின் ஆசிக்கு நன்றி தெரிவித்தான். “வீரன் வாழ்ககை நலம், நல்ல அரசை, திடமான மன்னனைப் பொறுத்தது” என்றான்
ராஜமாதா பெருமூச்சு விட்டாள். “ தீப்சந்த்! அந்தப் பாக்கியம் மேவாருக்கு இல்லை” என்று துக்கம் நெஞ்சை அடைக்க வெளிப்படையாகவே பேசினாள். மேலும் சொன்னாள்: “தீப்சந்த்! மன்னன் தூசியாக மதிக்கப்படு கிறான். மேவார்
அரியணைக்குத் துணை நின்ற சலூம்பிரா இனம் இப்பொழுது அதே அரியணையைத் தகர்ப்பதில் முனைந்திருக்கிறது. என் மகன் எப்படி மேவாருக்கு துரதிர்ஷ்டமோ, அதுபோல் சலூம்பிராவின் நடவடிக்கையும் மேவாரின் சாபக்கேடு,
இந்த ராஜ வர்க்கம் பிழைக்க வேண்டுமானால் சீர்பட வேண்டுமானால் – நாம் பீம்சிங் சலூம்பிராவை அழிக்கவேண்டும். அல்லது அடக்க வேண்டும். வேறு உதவியில்லாமல் அதைச் செய்ய முடியாது. ஆகவே துணை அழைக்க முடிவு செய்து
விட்டேன்” என்றாள். “நீங்கள் இருவரும் பயணத்தால் களைத்திருப்பீர்கள். நீராடி உணவருந்துங்கள். பிறகு பேசுவோம்.” என்றும் கூறினாள் ராஜமாதா.
தீப்சந்த் இருந்த இடத்திலிருந்து நகரவில்லை. “புஷ்பாவதி! உள்ளே போய் நீராடி உணவருந்து. நான் ராஜமாதாவுடன் பேசிவிட்டு வருகிறேன்” என்று கண்டித்துச் சொல்ல, புஷ்பாவதி அந்தப்புரத்துக்குள் சென்றாள்.
அவள் உள்ளே சர்வசகஜமாகப் போவதைக் கண்ட மகாராணி புன்முறுவல் கொண்டு “தீப்சந்த்! உங்கள் பழைய அறை அப்படியே இருக்கிறது. அதை நான் யாருக்கும் அளிக்கவில்லை. பூட்டியே வைத்திருக்கிறேன்” என்றாள். தீப்சந்தும்
புன்முறுவல் கொண்டான், பழைய நினைவுகள் அவன் முகத்தில் தனி சோபையை விரியச் செய்தது. “ராஜமாதா! எது செய்தாலும் அதில் நியாயமிருக்கும். முன்யோசனையும் இருக்கும்” என்று கூறினான். மேற்கொண்டு கேட்டான்
“சோம்ஜிக்குப் பிறகு ஆட்சி எப்படியிருக்கிறது?” என்று.
“ஆட்சி இருந்தால் அல்லவா எப்படியிருக்கிறதென்ற கேள்வி” என்ற ராஜமாதா “ தீப்சந்த்! மேவாரை சீர்திருத்த, அதன் மதிப்பைப் பழைய நிலைக்குக் கொண்டு செல்ல பலமான ஒரு கை வேண்டும். யாரை அழைக்கலாம் அப்பணிக்கு?”
என்று வினவினாள்.
தீப்சந்துக்கு ராஜமாதாவின் நோக்கம் புரியாமல் இல்லை. ஏதோ முன்னேற்பாட்டுடனேயே தன்னை அழைத்திருக்கிறாள் என்பதை ஊகித்ததால், “ராஜமாதாவின் முடிவு எதுவானாலும் நிறைவேற்றக் சித்தமாயிருக்கிறேன்.” என்றான்.
ராஜமாதா புன்முறுவல் கொண்டாள். “தீப்சந்த்! நீ வீரனா, ராஜதந்திரியா அல்லது இரண்டும் சேர்ந்தவனா என்பது விளங்கவில்லை எனக்கு” என்று கூறினாள் புன் முறுவலின் ஊடே. பிறகு முகத்தில் கவலை படர கேட்டாள், “ஜலீம்சிங்
நமக்கு உதவி செய்வதாகக் கூறுகிறான். ஏற்றுக்கொள்ளலாமா?” என்று.
தீப்சந்த் சிந்தனையில் இறங்கினான் சில விநாடிகள். பிறகு சொன்னான்: “ஜலீம்சிங் மகாவீரன். ஆனால் அவனிடமுள்ள படைகளைக் கொண்டு சலூம்பிராவை வெற்றி கொள்வது கஷ்டம். தவிர சலூம்பிராவின் ஆதிக்கத்தில் இருந்து
ஜலீம்சிங்கின் ஆதிக்கத்தில் சிக்கிக் கொள்வதில் அர்த்தமில்லை.”
ஒப்புதலுக்கு அறிகுறியாகத் தலையை அசைத்தாள் ராஜமாதா. கடைசியில் சொன்னாள்: “உசிதப்படி செய்.”
“நீங்கள் எண்ணியிருப்பது சரி மகாராணி!” என்றான் தீப்சந்த்.
“நான் எண்ணியிருப்பதா?” ராஜமாதாவின் கேள்வியில் வியப்பு அதிகமாக ஒலித்தது.
“ஆம், ஜலீம்சிங்கின் வீரத்தை ஈடுசெய்ய மகாராஷ்டிரர் உதவி தேவை.” என்றான் தீப்சந்த்.
“தீப்சந்த்!” என்று ஆச்சரியக்குரல் எழுப்பினாள் ராஜமாதா.
“மகாராணி! வேறு வழியில்லை. மாதாஜி சிந்தியா தான் இங்கு ஒரு சீரான நிலையை ஏற்படுத்த முடியும்.” என்றான் தீப்சந்த்.
“சரி, தீப்சந்த். உன் விருப்பப்படி செய்” என்று ராஜமாதா கூறினாள்.
அன்று பகலே புஷ்பாவதியுடன் புறப்பட்ட தீப்சந்த், நேராக மாதாஜி சிந்தியா தங்கியிருந்த புஷ்கரத்தை நோக்கிக் கிளம்பினான்.
“உற்சாகத்தில் இருக்கிறீர்கள்.” என்றாள் புஷ்பாவதி.
“இருக்காதா? மாமனார் வீட்டுக்கு அல்லவா போகிறேன்?” என்றான் தீப்சந்த்.
புஷ்கரத்தைத் தீப்சந்த் அடைந்தபோது மாதாஜி சிந்தியா அவனை நேரில் வரவேற்றார். “மாப்பிள்ளை! வாருங்கள். மாமனார் அழைக்காமல் மாப்பிள்ளை வந்தால், விஷேசம் ஏதாவது இருக்க வேண்டும்.” என்றார்.
அப்பொழுது சிந்தியாவின் மனைவி தலையை நீட்டி, “வந்தது வராததுமாக மாப்பிள்ளையை விசாரிக்க ஆரம்பிக்காதீர்கள்.” என்று கடிந்து கொண்டாள்.
“இப்பொழுது வந்திருப்பது மாப்பிள்ளையல்ல. தூதர்” என்றார் சிந்தியா.
“யார் தூதர்?” என்று கேட்டாள் சிந்தியாவின் மனைவி.
“ராணியின் தூதர்” என்று விஷமமாகப் புன்முறுவல் செய்தார்.
நுழைநரியான சிந்தியா தன்னை அனுப்பியது யார்’ எதற்காக என்பதையெல்லாம் ஊகித்துவிட்டதைக் கண்ட தீப்சந்த், அவரிடம் மிகுந்த எச்சரிக்கையுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டிய அவசியத்தை உணர்ந்தான். ஆனால் மறு நாள்
ஆலோசனையில் சிந்தியாவுடன் இன் னொருவரும் கலந்து கொண்டார். அவரைப் பார்த்ததும் பெரிதும் எச்சரிக்கை அடைந்தான் தீப்சந்த்.
“மேவார் நிலையை சீர்திருத்தவே இவரை வரவழைத்தேன்” என்று அந்த மனிதரை அறிமுகப்படுத்தினார் சிந்தியா தமது மருமகனுக்கு. “மாப்பிள்ளை! இவர் பெயர் அம்பாஜி. இங்கே இவரைத் தெரியாதவர் யாரும் இருக்க முடியாது” என்று
வந்தவரைப் புகழ்ந்தார்.
அம்பாஜியின் கழுகுக் கண்கள் தீப்சந்தை அளவெடுத்தன நிதானமாக. தலையில் சிறிதேயிருந்த சிகையுட னும் கூரிய நீண்ட நாசியுடனும் ஒட்டிய கன்னங்களுட னும் ஜொலிக்கும் கண்களுடனும் காட்சியளித்த அம்பாஜி இங்ளேயை
சமாளிப்பது எளிதல்ல என்பதைப் புரிந்து கொண்டான் தீப்சந்த்.