Mohini Vanam Ch 47 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in
மோகினி வனம் – சாண்டில்யன்
அத்தியாயம் – 47 அன்னியர் புகுவது நீதியா?
Mohini Vanam Ch 47 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in
கோட்டா சமஸ்தானாதிபதியும் மகாவீரனுமான ஜலீம்சிங் ஜாலாவின் திறமைமிக்க படையும் சிந்தியாவின் தட்சணதேச வாயுவேகப் புரவிப் படையும் டீபாயின் பீரங்கிப் படையும் இணைந்த படைகள் சித்தூரை முற்றுகையிட்டும் புரட்சிக்காரரான பீம்சிங்
சலூம்பிரா சித்தூரை விட்டு வெளியே வரவில்லை. கோட்டையைப் பட்டினி போடுமுன்பு அவரே சரணடைய ஒரு சந்தர்ப்பம் அளிக்க விரும்பிய சிந்தியா தீப்சந்துடனும் புஷ்பாவதியுடனும் ஆலோசனை நடத்தினார். “என்ன தவறு செய்தவராயிருந்தாலும்
சலூம்பிரா சரணடைய ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டாமா?” என்று தீப்சந்தை நோக்கி வினவினார் சிந்தியா.
“மன்னரிடம் அபராதப்பட்டு மேவாரைச் சீர்குலைத்த ராஜத் துரோகிக்கு மன்னிப்பு உண்டா?” என்று புஷ்பாவதி கேட்டாள்.
“மனைவியைத் தூக்கிக்கொண்டு சென்ற ராவணனையே ராமன் மன்னிக்க சித்தமாயிருப்பதாகக் கூறவில்லையா?” என்று மாதாஜி சிந்தியா வினவினார்.
“ராவணன் ராமனின் அடிமையல்ல. அவன் செய்தது குற்றம், பாதகம். ஆனால் ராமன் அவனது அரசனாக இல்லாதவரை ராவணன் செய்தது ராஜத்துரோகம் குற்றமாகாது.” என்று சுட்டிக் காட்டினாள் புஷ்பாவதி.
தீப்சந்த் ஏதும் பேசாமலே இருந்ததால் அவன் வாயையும் கிண்டிய சிந்தியா, “நீ என்ன சொல்கிறாய் தீப்சந்த்” என்று வினவினார்.
“நான் வீரனே தவிர ராஜதந்திரியல்ல. படைத்தலைவர் சொல்வதைக் கேட்க வேண்டியவன். நீங்கள் எதைச் சொன்னாலும் நிறைவேற்ற சித்தமாயிருக்கிறேன்.” என்று பட்டும் படாமலும் பேசினான் தீப்சந்த்.
மனைவி இறந்த பின்பு முதன் முதலாக அன்றுதான் புன்முறுவல் செய்தார் சிந்தியா.”தீப்சந்த்! உண்மையான ராஜதந்திரி நீதான். எதற்கும் புரட்சிக்காரருக்கு ஒரு வாய்ப்பு அளிக்க நான் முடிவு செய்துவிட்டேன். சலூம்பிராவுக்கு யாரைத் தூது அனுப்பலாம்?”
என்று கேட்டார் மெதுவாக.
சிந்தியாவின் மனதில் இருப்பதைப் புரிந்து கொண்டதால் புஷ்பாவதியின் முகத்தில் அச்சத்தின் சாயை லேசாகப் படர்ந்தது. அதைக் கண்ட சிந்தியா சொன்னார் : “மகளே! உனக்கு விருப்பமில்லை என்றால் மாப்பிள்ளை போக வேண்டாம். வேறு யாரையாவது
அனுப்புகிறேன்” என்று.
“வேறு யாரையும் அனுப்ப வேண்டாம். தூதனுக்குத் தீங்கு செய்யும் கயவரல்ல சலூம்பிரா மகாவீரர் நானே போகிறேன்.” என்றான் தீப்சந்த்.
சிந்தியா தனது தூதை வாய்மூலமாகவே சொல்லியனுப்பினார். “சலூம்பிரா நாற்பது இலட்ச ரூபாய் இந்தப் போருக்கு நஷ்ட ஈடாகக் கொடுத்து, சித்தூரை விட்டுச் சரணடையும் பட்சத்தில் அவரும் அவரது படையும் எந்தவிதத் தொந்தரவுமின்றி வெளியே
செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று சொல், தீப்சந்த். மறுமொழியையும் பெற்று வா.” என்றார்.
புஷ்பாவதி முகத்தில் சிறிது கலக்கத்தைக் காட்டி னாள். அவளைத் தனிமையில் அழைத்துச் சென்று “புஷ்பாவதி! வீரன் மனைவி ஆபத்தைக் கண்டு கலங்கக் கூடாது. எனக்கு எந்தவிதத் தீங்கும் வராது. நான் இன்றிரவே திரும்பி விடுவேன்” என்று தைரியம்
கூறினான். புஷ்பாவதி அவனை இரு கைகளாலும் அணைத்து முகத்தைத் தூக்கினாள். துடித்த அவளுடைய இதழ்களைத் தனது அதரங்களால் பற்றி தைரியம் கொடுத்துவிட்டு சித்தூரின் கோட்டையை நோக்கிப் புரவியில் கிளம்பிய தீப்சந்த், அந்தக்
கோட்டையை அணுகியதும், சரித்திரப் பிரசித்தி பெற்றதும். மேவார் ராணா க்களின் ஆதி தலை நகரும், எத்தனையோ வீரச் செயல்களுக்கும் ராஜபுதன வீரர்களின் தியாகங்களுக்கும் அத்தாட்சியானதுமான சித்தூரின் கோட்டையின் அமைப்பில் அப்படியே
மனதைப்பறிகொடுத்து நின்றான். மகாராஜாவுக்காக உயிரைக் கொடுத்த ஜெய்மல், பட்டா ஆகிய இரு மகா வீரர்கள் அக்பரை எதிர்த்து மாண்டு விழுந்த இடங்களைப் பார்த்து மனம் உருகி இத்தகைய கோட்டைக்குள் ராணாவுக்குத் துரோகியான சலூம்பிரா
இருக்கிறார்” என்று எண்ணித் துன்பத்தின் வசப்பட்டான். பிறகு கோட்டையின் வாயிலுக்குச் சென்று அங்கிருந்த காவலரை நோக்கி “தீப்சந்த் வந்திருக்கிறான் என்று சலூம்பிராவிடம் சொல்லுங்கள்.” என்று இரைந்து அறிவித்தான்.
பதிலுக்குக் கோட்டை மீதிருந்து ஒரு பீரங்கி அவனை நோக்கி குறிவைக்கப்பட்டது. உள்ளே ஒரு புரவி விரைந்து செல்லும் அரவமும் கேட்டது. தீப்சந்த் கோட்டை பீரங்கியைக் கண்டு அலட்சியமாக நின்றான். அடுத்த சிறிது நேரத்திற்குள் கோட்டைக் கதவு
திறக்கப்பட்டு இரு வீரர்கள் அவனை வணங்கினார்கள். அவர்களுடன் சென்ற தீப்சந்த் ராணாக்களின் பிரதான அரண்மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டான்.
கோட்டையின் உட்புறம் சீர்கேடு அடைந்திருப்பதைப் பார்த்துக் கொண்டே சென்றான் தீப்சந்த். எங்கும் வறுமையும் துன்பமும் பரந்து கிடந்தன. இருப் பினும் சலூம்பிராவின் வீரர்கள் ஆணவத்துடன் ஆங்காங்கு உலாவிக் கொண்டிருந்தார்கள். ஒவ்வோர்
இடத்திலும் குழந்தைகளின் அழுகுரலும் தாய்மார்கள் அவற்றைச் சமாதானப் படுத்தச் சொல்லிக்கொண்டிருந்த சமாதான சொற்களும் அவன் காதில் விழுந்தன. “இவ்வளவு பேரை இம்சைப்படுத்துவது சலூம்பிராவுக்குச் சந்தோஷந்தானா?” என்று தனக்குள்
கேட்டுக்கொண்டே புரவியைச் செலுத்தினான் தீப்சந்த்.
பீம்சிங் சலூம்பிரா சித்தூர் ராணாக்களின் கொலு மண்டபத்திலேயே தீப்சந்தை வரவேற்றார். அந்த மண்டபத்திலிருந்த ராணாக்களின் அரியணையில் அமராமல் பக்கத்திலிருந்த ராஜ பிரதிநிதியின் ஆசனத்தில் பீம்சிங் அமர்ந்திருந்ததைப் பார்த்த தீப்சந்த், “சலூம்பிரா!
இன்னும் ராஜ மரியாதையைக் கைவிட வில்லை” என்று தனக்குள் மகிழ்ச்சியுடன் சொல்லிக் கொண்டான். இந்த எண்ணங்களுடன் தலைவணங்கிய தீப்சந்த் உட்கார ஆசனத்தைக் கையால் சுட்டிக் காட்டினார் சலூம்பிரா.
தீப்சந்த் அதில் உட்காராமல் நின்றவண்ணம் சலூம்பிராவை ஏறெடுத்து நோக்கினான். “மேவாரின் மகாவீரருக்குத் தலைவணங்குகிறேன்” என்றும் சம்பிரதாயமாகக் கூறினான்.
பீம்சிங் உடனடியாகப் பதில் சொல்லவில்லை. அக்கம் பக்கத்தில் காலம் நின்ற வீரர்களை ஒருமுறை பார்த்ததும் அவர் குறிப்பை அறிந்து காவல் வீரர்கள் வெளியே சென்றனர். அந்த மகாலின் கதவுகளும் மூடப்பட்டன. “தீப்சந்த்! நீண்ட நாட்களுக்குப்பின்பு
சந்திக்கிறோம்…” என்று பேச்சை சலூம்பிராவே தொடங்கினார்.
“ஆம் பிரபு! இடையில் அந்த பாக்கியம் எனக்கு இல்லை.” என்றான் தீப்சந்த்.
“உன் மனைவி புஷ்பாவதி எப்படி இருக்கிறாள்?” என்று குசலம் விசாரித்தார் சலூம்பிரா.
“பழைய சம்பவத்துக்குப் பிறகு அவளுக்குத் தொந்தரவு ஏதும் இல்லை.” என்று தீப்சந்த் கூறினான்.
அதைக் கேட்ட சலூம்பிரா புன்முறுவல் செய்தார். “என் வீரர்களின் தவற்றை நீ மன்னிக்கவில்லை.” என்றும் சொன்னார் புன்முறுவலின் ஊடே.
“எனக்கு மகாவீரரான தங்கள் பெருந்தன்மைதான் நினைவிருக்கிறது.” என்றான் தீப்சந்த.
அதுவரை தீப்சந்த் நின்றுகொண்டே பேசுவதைக் கண்ட சலூம்பிரா “ஏன் நிற்கிறாய் தீப்சந்த்? உட்காருவதுதானே!” என்றார் அன்புடன்.
“தூதன் நிற்பதுதான் முறை” என்றுதான் வந்த காரியத்தைச் சூசகமாகக் குறிப்பிட்டான் தீப்சந்த்.
“ஓ! தாது வந்திருக்கிறாயா?” என்று ஏதும் தெரியாதது போல் கேட்டார் சலூம்பிரா,
“ஆம்.”
“சிந்தியாவிடம் இருந்து?”
“ஆம்.”
“சித்தூரை நான் விட்டுச் செல்ல என்ன லஞ்சம் கேட்கிறார் சிந்தியா?”
“லஞ்சம் கேட்கவில்லை. தமது படைகளின் செயலுக்கு நஷ்டஈடு கேட்கிறார், நாற்பது இலட்ச ரூபாய்.”
இதைக் கேட்டதும் பயங்கரமாகச் சிரித்தார் சலூம்பிரா. “நாற்பது இலட்சமா? இந்தக் கோட்டையைப் பார்த்தாயல்லவா? இதில் நாற்பது இலட்சம் இருக்குமா?” என்று கேட்டார் சலூம்பிரா சிரிப்பின் ஊடே.
“நாற்பது இலட்சத்தை இந்தக் கோட்டையில் இருந்து வசூலிக்கச் சொல்லவில்லை சிந்தியா. வழியையும் உங்களுக்குச் சொல்லித்தர இஷ்டப்படவில்லை. நீங்கள் சரணடைய ஒரு வாய்ப்புக் கொடுக்கிறார். அதன் விலை நாற்பது இலட்சம்.” இதை மிக அடக்கமாகச்
சொன்னான் தீப்சந்த். அவன் குரலில் அடக்கத்துடன் உறுதியும் இருந்தது.
பீம்சிங் சலூம்பிரா தமது ஆசனத்தில் இருந்து எழுந்து அந்த மகாலில் அங்குமிங்கும் சிங்கம்போல் உலாவினார் பிறகு திடீரென்று நின்று “தூதுவரே!” என்று அழைத்தார் சிங்கக் குரலில்.
தீப்சந்த் நின்ற நிலையை விட்டு அகலவில்லை. பீம்சிங்கே பேசினார். “அந்த மராட்டியக் குள்ள நரியிடம் சொல், பணம் எதுவும் இல்லை என்று. சுற்றுப்புறத்திலுள்ள கிராமங்களையெல்லாம் சிந்தியா சூறையாடிய பிறகு நான் எங்கிருந்து பணம் கொடுப்பதென்று
கேள். இங்கு என்னிடம் பணம் இல்லை. ஆனால் பீரங்கிகள், குண்டுகள் வெடிமருந்துகள் இருக்கின்றன. அவை இனி பதில் சொல்லும் என்று சொல்.” என்றார் இடிபோல் ஒலித்த குரவில்.
தீந்சந்த் அவருடைய குரலைக் கண்டு மசியவில்லை. “இதுதான் பதிலா?’ என்று மட்டும் வினவினான்.
“ஆம்.” திட்டமாக வந்தது சலூம்பிராவின் பதில்.
தலைவணங்கித் திரும்பமுற்பட்ட தீப்சந்தை இரண்டு எட்டில் அணுகிய சலூம்பிரா அவன் தோள் மீது கையை வைத்து, “தீப்சந்த்! மகாராணா இருக்கையில் இந்த மராட்டியர் எனக்கெப்படித் தூது அனுப்பலாம்! மகாராணாவே இந்தக் கோட்டைக்கு நேரில் வருவது
தானே. அதற்குக்கூட துப்பில்லையா மகாராணாவுக்கு?”, என்று இரகசியமாக வினவினார். “ஆயிரம் உண்டு இங்கு சண்டை, எனில் அந்நியர் வந்து புகலென்ன நீதி?” என்றும் இரகசியம் ஓதினார்.
தீப்சந்த் லேசாகத் திரும்பினான் சலூம்பிராவை நோக்கி. “சலூம்பிரா! நம் உடலில் நோய் தோன்றும் போது வைத்தியன் வருகிறான். அது இயற்கைக்கு முரண்பாடு அல்ல.” என்று கூறினான்.
அதைக் கேட்ட சலூம்பிரா அவனை விட்டு விலகி நின்றார். தீப்சந்த் கதவுகளைத் திறந்து கொண்டு வெளியே சென்றான். அவனைத் தொடர்ந்து வெளியே வந்த சலூம்பிரா அவன் புரவியிலே றிப் போனதைப் பார்த்துக் கொண்டே நின்றார். தீப்சந்தைத் தொடர
முற்பட்ட இரு வீரர்களைத் தமது பார்வையாலேயே சிலைகளாக அடித்தார்.
சித்தார்க் கோட்டையில் இருந்து கிளம்பி மாதாஜி சிந்தியாவின் கூடாரத்துக்கு வந்த தீப்சந்த், சிந்தியாவிடம் சித்தூரில் நடந்ததை வரிக்கு வரி எடுத்துச் சொன்னான். மனைவியின் மரணத்தால் துன்பம் அடைந்திருந்த மாதாஜி சிந்தியாவுக்கு சலூம்பிராவின் பதில்
புண்ணில் வேலிடுவதைப் போலிருந்ததால் ஒரு விநாடி முகம் சுளித்தார். மறுவிநாடி தமது உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டு, “சலூம்பிரா சொல்வதிலும் நியாயம் இருக்கிறது. நான் மகாராணாவை உடனடியாகப் பார்க்க வேண்டும்.” என்றார்.
தீப்சந்த் திகைத்தான். சூர்ய வம்சத்தின் வாரிசைப் பார்ப்பது அத்தனை எளிதல்ல என்பது தீப்சந்துக்குத் தெரிந்தே இருந்தது. மராட்டிய பேஷ்வாவான முதல் பாஜிராவுக்குப் பிறகு யாருக்கும் மேவார் மகாராணா பேட்டி அளித்ததில்லை. மரபுக்கு முரணான அந்தப்
பேட்டி எப்படி சாத்தியம் என்று தீப்சந்த் சிந்தனை வசப்பட்டான்.
“தீப்சந்த்! நான் மகாராணாவைச் சந்திக்க. வேண்டும். இல்லாவிடில் சலூம்பிராவின் கேள்வி நியாயமாகிவிடும். மகாராணா இங்கு வந்து பெயருக்காவது போரில் ஈடுபட்டால்தான் மேவார் வீரர்களுக்கு நமது படையெடுப்பின் நியாயம் தெரியும். மகாராணா இங்கு
வராமல் நான் இனி ஒரு அடி முன்னெடுத்து வைக்க மாட்டேன்.” என்று தீர்மானமாகச் சொன்னார்.
அவர் பிடிவாதத்தை நன்கு அறிந்திருந்த தீப்சந்த் ஜலீம்சிங்குக்கு விஷயத்தை தெரிவிக்கவே ஜலீம்சிங் மகாராணாவும் சிந்தியாவும் சந்திக்க ஏற்பாடு செய்வதாக ஒப்புக்கொண்டார். ஜலீம்சிங்கும் சிந்தியாவின் மந்திரி சதாசிவமல்ஹாரும் மகாராணாவைச் சந்திக்க
உதயபூர் சென்றார்கள்.
மகாராணா மாதாஜியை நாகராமக்ரா (புலிமலை) வேட்டுவ விடுதியில் சந்திக்க ஒப்புக்கொண்டார்.
சிந்தியாவும் மகாராணாவும் நாகராமக்ரா வேட்டுவ விடுதியில் சந்தித்ததும் அதிர்ச்சி தரும் படியான விண்ணப்பத்தை சிந்தியா தெரிவித்தார். “மகாராணா! போர்க் களத்துக்குத் தாங்களும் வர வேண்டும்” என்று வேண்டிக் கொண்டார்.
கோழையான மகாராணாவின் வதனத்தில் சற்றே கிலி படர்ந்தது. அந்த சமயம் உள்ளே வந்தது ஒரு பெண் குழந்தை. அதன் தலையில் இருந்த உச்சிப்பூவைப் பார்த்த சிந்தியா – பெரும் பீதிக்குள்ளானார். அதுவரை அவருக்கிருந்த சந்தோஷமெல்லாம் காற்றில்
பறந்தது.