Mohini Vanam Ch 6 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in
மோகினி வனம் – சாண்டில்யன்
அத்தியாயம் – 6 விசுவாமித்திரன் மனம்!
Mohini Vanam Ch 6 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in
பஞ்சணையில் கிடந்த அந்தப் பைங்கிளியின் காய்ச்சலின் முழுவேகத்தை அறிய அவள் கழுத்தில் கையை வைத்தவுடன் அவள் கையொன்று எழுந்து தனது கையைப் பற்றியதைக் கண்ட தீபசந்த், அவள் முழு சுரணை
அடைந்துவிட்டாள் என்பதைப் புரிந்துகொண்டதால் முகத்தில் திருப்தியைக் காட்டினான். “காய்ச்சல் அதிகமாக அடிக்கிறதா?” என்று வினவவும் செய்தான்.
“அதிகக் காய்ச்சல் இல்லை. தாங்கும்படியாகத்தான் இருக்கிறது” என்று அவள் கண்களைத் திறக்காமலே உதடுகளை மட்டும் அசைத்துப் பதில் சொன்னாள். அப்பொழுதும் பற்றிய அவன் கையை அவள் விடு தலை செய்யவில்லை.
அவள் கை பட்டதாலும் சற்றே இறுகிய பிடிப்பாலும் சற்று சங்கடப்பட்ட அந்த வாலிபன், “பெண்ணே! சற்று கையை விடு” என்றான் மெதுவாக.
அவள் செவ்விய இதழ்களில் வெட்கம் கலந்த புன்முறுவல் ஒன்று தவழ்ந்தது. “எதற்கு?” என்று விஷமமாக வினவினாள் புஷ்பாவதி.
தீப்சந்தின் சங்கடம் முன்னைவிட அதிகமானாலும் அதை அவன் வெளிக்குக் காட்டிக்கொள்ளாமலே “தலைக்காயத்தைப் பார்க்க வேண்டும்” என்று சொன்னான் கூடிய வரையில் குரலைத் திடப்படுத்திக் கொண்டு.
அவள் கைவிரல்கள் மெதுவாக அகன்று அவன் கையை விடுதலை செய்யவே, தீப்சந்த் சற்று நன்றாகக் குனிந்து இரு கைகளாலும் அவள் குழலின் இழைகளை நீக்கிக் காயத்தைப் பரிசோதித்தான். மருத்துவர் கொடுத்த களிம்பு
ரத்தக்கசிவை அடியோடு நிறுத்திவிட்டதையும், அந்த வாள் பிடிக் காயம்கூட ஓரளவு ஆறிவிட்டதைப் போல் தோன்றியதையும் கண்டு, “மருத்துவர் நல்ல திறமைசாலிதான்” என்று தனக்குள் சொல்லிக்கொண்ட தோடு, “பெண்ணே!
நாளை இந்தக் காயம் முற்றும் ஆறிவிடும்” என்று அவளுக்குத் தைரியமும் சொன்னான்.
அவன் அவள்மீது நன்றாகக் குனிந்து காயத்தைப் பரிசோதித்தபோது அவன் மார்பு அவள் முகத்துக்கு நேராக இருந்தது. இரவில் படுக்க உத்தேசித்ததன் காரண மாக அவன் தனது மேல்சட்டையை மட்டும் கழற்றியிருந்ததால் அவன்
கழுத்திலிருந்து தொங்கிய நவரத்தின ஜெபமாலை அவள் நெற்றியில் புரளவே செய்தது. அவள் கண்களுக்குப் புலனான அவனது விரிந்த மார்பும், வாலிபத்தின் காரணமாக அதில் லேசாக வளர்ந்திருந்த கரிய முடியும், அவன்
ஆண்மைக்கும் தேகபலத்துக்கும் சான்று கூறுவதைக் கவனித்தாள் அந்தப் பருவ மகள். “அப்பா! எத்தனை கெட்டியான மார்பு! இதில் கத்தி பாய்ந்தால் கூட அதுதான் மழுங்கும்” என்று உள்ளூர அவன் வலிமையை வியந்தாள்.
அவளது குழலைப் புரட்டிக் காயத்தைப் பார்த்த கைகளின் மேல் பாகங்கள் மெல்லியதாயிருந்தாலும் இரும்புத் தண்டுகள் போலிருந்ததைக் கவனித்தாள் புஷ்பாவதி. அதில் இரண்டொரு காயங்களும் இருப்பதைப் பார்த்து “இவருக்குச்
சண்டையென்றால் விருந்து போலிருக்கிறது!” என்றும் சொல்லிக்கொண்டாள். மார்பில் இருந்த ஓரிரு காயங்களும் கூட கருமையான முடியின் இடையே பளிச்சிட்டது மிக அழகாக இருந்ததைக் கவனித்தாள் புஷ்பாவதி. தலையைக்
கவனித்ததால் வளைந்திருந்த அவன் தேகமே கடினம் நிறைந்த மென்மையுடனும் சாட்டையை உருவி விட்டதுபோலும் இருந்ததால் அது எப்படியும் வளையக்கூடிய மிக லாவகமான சரீரம் என்பதைப் புரிந்துகொண்டாள் அந்தப் பருவ
மங்கை.
அவன் சிறிது நேரமே அவள் தலைக்காயத்தைப் பரிசோதித்தாலும், அதற்குள்ளாகவே அவன் உடலை எடை போட்டுவிட்ட அந்த ஏந்திழையிடம் இருந்து விலகி நின்று கொண்டு அவளை நோக்கினான் தீப்சந்த்.
அரண்மனை அந்தப்புரத்தில் அந்தச் சிறு அறையின் சாளரத்தின் மூலம் வெண்மதி வீசிய நிலவு கட்டிலில் கிடந்த அந்தக்கட்டழகிமீது பூர்ணமாக விழுந்திருந்ததால் அவள் எழில்களின் ஒவ்வொரு அம்சமும் மிகத்தெளிவாகத் தெரிந்தது
தீப்சந்தின் கண்களுக்கு. கழுத்தில் ஜெபமாலையுடன் இடையில் சராய் மட்டும் தரித்து நெடியனாய் நின்ற தீப்சந்த் நிலவில் கிடந்த புஷ்பாவதியை உற்றுப் பார்த்துக்கொண்டே நீண்ட நேரம் சிலையென நின்றான். நிலவில் அவள் முகத்தைக்
கண்ட தீப்சந்த் வெளியில் வானில் தவழ்ந்த சந்திரனை விட அவள் முகம் அழகாயிருப்பதைக் கவனித்தான். நீலவானத்தில் அந்த அரைச்சந்திரன் சதா ஓடிக்கொண்டிருப்பதற்குக் காரணம் புஷ்பாவதியின் முழுமதி முகத்தைக்
கண்டதனால்தான் என்று நினைத்த தீப்சந்த் “இவள் கன்னங்களில் சிவப்பு தட்டியிருக்கிறது செந்தாமரை வண்ணத்தில், அந்த அரைச்சந்திரனிடம் வெளுத்த ஒரே வண்ணந்தானே இருக்கிறது?” என்று அரைமதியைக் கண்டிக்கவும் செய்தான்.
ஏற்கனவே வெளுத்திருந்த அவள் கழுத்து வெண்ணிலவில் அதிகமாக வெளுத்துவிட்டதையும் அவளது வெண்ணிறச் சேலைகூட சந்திரன் வெண்மையைக் குறைத்துக் காட்டியதையும் பார்த்தான். அந்த வெள்ளை ஆடைக்குள் அவள்
மூச்சுவிட்டதால் எழுந்து எழுந்து தாழ்ந்த அவள் மார்பின் கெட்டி மொட்டுகள் இரண்டும் மறுக்க முடியாத அழைப்பை விடுத்ததால் அவற்றைப் பார்க்க முடியாமல் பார்வையைச் சற்றுக் கீழே இறக்கினான் தீப்சந்த். கீழே இன்னும் உன்மத்தம்
ஊட்டக்கூடிய நிலை இருந்தது. படிந்த ஆலிலை வயிறும் நீண்ட கால்களும் கால்களின் மேற்புறப் பெரிய உருண்ட பகுதிகளும் அவை இணைத்த இடமும் தீப்சந்தின் மனதை அலைத்தாலும் அவன் தன் மனதை ஓரளவு கட்டுப் படுத்தவே
செய்தான். “பெண் சிருஷ்டியே மயக்கமான சிருஷ்டி ஆண்களின் மனத்தை அலைக்கழிப்பதற்கே திப்பகங்கே ஆண்டவன் இந்த இனத்தைப் படைத்திருக்கிறான்” என்று சொல்லிக்கொண்டு அவள் கவர்ச்சியிலிருந்து தன்னை
விடுவித்துக்கொள்ளக் கழுத்திலிருந்த ஜெபமாலையை எடுத்து உருட்டலானான். அவன் உதடுகளும் மந்திரத்தை முணுமுணுத்தன.
அந்தச் சமயத்தில் விசுவாமித்திரன் தவத்தைக் கலைத்த மேனகைபோல் “அது என்ன ஜெபமாலையா!” என்று கேட்டாள் புஷ்பாவதி.
“ஆம்!” என்றான் தீப்சந்த் அவளைப் பார்க்காமல் நிலத்தில் கண்களை ஓட்டி.
“இது இரண்டாம் ஜாமம்” என்றாள் புஷ்பாவதி.
“அதனால் என்ன?” அதுவரை கலைந்த மனதைத் திடப்படுத்திக்கொண்டு கேட்டான் தீப்சந்த்.
“ஜெபத்துக்கு இது சமயமல்ல!” என்று சொன்ன அவள் லேசாக நகைத்தாள்.
“உன்னை யோசனை கேட்கும்போது சொல்லலாம். கண்களை மூடிக்கொண்டு உறங்கு” என்றான் தீப்சந்த் கடுமையாக.
“நிலத்தை ஏன் பார்த்துக்கொண்டு பேசுகிறீர்கள்? பெண்கள் தான் வெட்கத்தால் நிலத்தைப் பார்ப்பார்கள்.” என்று சுட்டிக்காட்டினாள் புஷ்பாவதி.
“எதைப் பார்த்தால் உனக்கென்ன? நிலம் பெண்களுக்கு மட்டுந்தான் சொந்தமா? ஆண்கள் பார்த்தால் என்ன?” என்று முரட்டுக் குரலில் கேட்டான் தீப்சந்த்.
“நிலத்தைப் பெண்கள் வெட்கத்தினால் பார்ப்பார்கள்…”
“சரி, சரி; பேசிக்கொண்டே இருக்காதே, தூங்கு. நான் ஜெபம் செய்ய வேண்டும்.”
“ஜெபமா!” லேசாக நகைத்தாள் புஷ்பாவதி. அந்த நகைப்பு ஜலதரங்கம்போல் அவன் காதில் விழுந்தது.
அந்த நகைப்பு மிக இன்பமாயிருந்தாலும் கோபத்தையே காட்டிய தீப்சந்த், “நட்ட நடு இரவில் சிரிப்பென்ன வேண்டியிருக்கிறது?” என்று சீறினான்.
“உங்களைப் பார்த்தால் சிரிப்பு வருகிறது” என்றாள் அவள்.
“என்னைப் பார்த்தால் சிரிப்பு வருகிறதா?” என்று அவன் கேட்டான். கட்டிலை நெருங்கவும் செய்தான்.
“ஆம்.”
“ஏன்?”
“உங்கள் கோலத்தைப் பாருங்கள். ஒரு அறையில் ஒரு பருவப் பெண்ணுடன் தனித்து இருக்கிறீர்கள். கையில் ஜெபமாலையை உருட்டுகிறீர்கள். உங்களைப் பார்த்தால்…”
“என்னைப் பார்த்தால்?”
“ருத்திராட்சப் பூனை மாதிரி இருக்கிறது” என்று கூறி அவள் சற்று பெரிதாகவே நகைத்தாள்.
தீப்சந்தின் கோபம் உச்சத்துக்குச் சென்றது. அவள் அருகில் நின்றவண்ணம்”வாயை மூடுகிறாயா இல்லையா?” என்று சூடாகக் கேட்டான்.
“மூடாவிட்டால் என்ன செய்வீர்கள்?” என்று அவள் கேட்டாள்.
அவன் சட்டென்று ஜெபமாலையுடன் இருந்த கையால் அவள் வாயை மூடினான். ஜெபமாலை அவள் இதழ்களில் உறுத்தியது. அந்த உறுத்தலும் இன்பமாயிருந்தது ஜெபமாலையுடன் அழுந்திய அவன் உள்ளங்கையில் தனது
உதடுகளைக் குவித்துப் பொருத்தினாள் புஷ்பாவதி.
அவன் சட்டென்று கையை எடுத்துக்கொண்டான். அப்பொழுது புஷ்பாவதி லேசாக முறுவல் செய்து, “வீரரே! எனக்குக் காய்ச்சல் அதிகரித்திருக்கிறது. இதய வேகம் அதிகமாயிருக்கிறது. வேண்டுமானால் பாருங்கள்” என்று கூறி அவன்
ஜெபமாலைக் கையைப் பிடித்து தனது மார்பில் வைத்தாள். அவள் மார்பில் கைபட்டவுடன் அவள் மார்பைவிட அவன் மார்பு படபடவென்று அதிக மாக அடித்துக்கொண்டது. அதே சமயத்தில் அவள் இணைந்திருந்த கால்களைப்
புரட்டினாள். அவள் தொடையை மறைத்திருந்த கிழிந்த துணிப்பகுதி விலகவே அந்தப் பகுதி செவேலென அவன் கண்களுக்குப் புலனாகியது.
மேனகையைச் சந்தித்த விசுவாமித்திரன் நிலையை தீப்சந்த் வேகமாக எய்திக்கொண்டிருந்தான்.