Mohini Vanam Ch 7 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in
மோகினி வனம் – சாண்டில்யன்
அத்தியாயம் – 7 ருத்திராட்சப் பூனை
Mohini Vanam Ch 7 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in
கட்டிலில் கிடந்த கட்டழகி புஷ்பாவதி, பக்கத்தில் நின்றிருந்த அந்தக் கட்டிளங்காளையின் கையைப் பிடித்துத் தனது மார்புமீது வைத்துக் காய்ச்சலைப் பார்க்கும்படி கூறியபோதே சிறிது நிதானத்தை இழந்து விட்ட மகாவீரனான
தீப்சந்த், அவள் கால்களின் இணைப்பு நீங்கி சேலையின் கிழிந்த பகுதியின் மூலம் அவள் தொடையும் செவேலெனத் தெரியவே கொந்தளித்த உணர்ச்சிகளில் சுழன்றான்.
மார்பில் புதைந்திருந்த அவன் கையில் அவள் உடலின் சூடு அதிகமாகத் தெரிந்தாலும், அதைவிட மார்பின் எழுச்சி அவன் கையின் பக்கமாகத் திருப்பப்படவே, காய்ச்சல் சூட்டைவிட மோகச் சூடு அதிகமாகித் திண்டாடினான் தீப்சந்த்,
போதாக்குறைக்கு அவள் சேலைக் கிழிசலும் கால் அழகையும் திண்மையையும் வழவழப்பையும் கண்ணுக்குத் தோற்றுவித்ததால் சித்தம் லேசாக சிதற மார்பிலிருந்த கையை எடுத்து அவள் சேலையின் கிழிந்த பகுதியை மூடினான்.
அப்பொழுது அவள் தொடைப் பகுதியிலும் கை படவே அது நெருப்பை வாரிக் கொட்டுவது போலிருக்கவே, “ஆம், காய்ச்சல் சற்று அதிகமாகத்தான் இருக்கிறது” என்று வாய்விட்டுச் சொன்னான்.
அவனது ஒவ்வொரு சங்கடத்தையும் சித்தத்தின் சுழற்சியையும் கவனிக்கவே செய்த புஷ்பாவதி மெள்ள புன்முறுவல் ஒன்றைப் படரவிட்டுக்கொண்டு “எதற்கும் நெற்றியையும் தொட்டுப் பாருங்கள்” என்று சொன்னாள்.
“எதற்கு?” எரிச்சலுடன் கேட்டான் தீப்சந்த்.
“காய்ச்சல் எப்படியிருக்கிறது என்று பார்க்க” என்று சாக்கு சொன்னாள் அவள்.
அவன் கண்களில் கோபச் சாயை படர்ந்தது லேசாக. “காய்ச்சலை அறிய உன் உடம்பு முழுவதையும் தொட்டுப் பார்க்க வேண்டுமா? காய்ச்சல் இடத்துக்கு இடம் மாறுமா?” என்று வினவினான் சினம் சிறிது குரலிலும் ஒலிக்க.
புஷ்பாவதி அவனது கோபத்துக்கு காரணத்தைப் புரிந்துகொண்டாள். பிரம்மச்சாரி விரதம் பூண்டிருக்கும் அவன் உணர்ச்சிகள் தன்னைத் தொட்டுப் பார்த்ததால் சிதற முற்படுவதுதான் காரணம் என்பதை உணர்ந்த அந்தப்
பருவமகள், “ஏன் மாறக்கூடாது?” என்று வினவினாள்.
“சுத்த முட்டாளாக இருக்கிறாய். உடலில் காய்ச்சல் ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு விதமாயிருக்காது.” என்றான் தீப்சந்த்.
“இருக்கும். சில வேளைகளில் எனது நெற்றி மாத்திரம் சுடும். அப்பொழுது தலைவலி மட்டும் இருக்கும். சில வேளைகளில் காலில் குடைச்சல் இருக்கும். அப்பொழுது கால் மட்டும் சுடும்…” என்று மேலும் விளக்கப்போன
புஷ்பாவதியை, “போதும் வாயை மூடு. நீ சொல்வதெல் லாம் வீண் பிரமை. காய்ச்சல் தனித்தனி இடங்களில் வராது” என்று கூறிவிட்டு, “பெண்ணே! இரவு ஓடிக் கொண்டிருக்கிறது. கண்களை மூடி உறங்கு. இரவு முழுவதும் பேசி என்
பிராணனை வாங்காதே” என்று சொற்களால் அடக்க முயன்றான்.
அவள் அதற்கு மசியவில்லை. மறுபுறம் புரண்டு அவனைப் பார்த்த நிலையில் ஒருக்களித்துப் படுத்தாள்
“வீரரே! கண்களை மூடினால் மட்டும் தூக்கம் வருமா?” என்று கேட்டாள்.
“ஏன் வராது?”
“மண்டைக் காயம் வலிக்கிறது.”
“வாயாடினால் மட்டும் வலி தீர்ந்துவிடுமா?”
“பொழுதுபோக்காகப் பேசிக்கொண்டு இருந்தால் வலி தெரியாது.”
“உனக்கு வலி தெரியா திருப்பதற்காக நானும் விடியும் வரை விழித்திருக்க வேண்டுமா?” என்று கேட்ட தீப்சந்த் கையில் இருந்த மாலையை உருட்டலானான்.
புஷ்பாவதி, அவனது அலட்சியத்தைக் கண்டு உள்ளூர சினந்தாள் மனத்துள். சினந்து நகைக்கவும் செய்தாள். ‘என்ன மனிதர் இவர்? கேவலம் மரக்கட்டையா?’ என்றும் கேட்டுக்கொண்டாள்.
ஜெபமாலையை உருட்டிக்கொண்டே தீப்சந்த் சொன்னான் : “கிருஷ்ணன் நாமத்தை உச்சரி. நாளைக்குக் காய்ச்சல் சரியாகப் போய்விடும்” என்று.
“இப்பொழுது தலை வலிக்கிறது” என்றாள் புஷ்பாவதி.
“அதற்கும் கிருஷ்ண ஜெபம் தான் மருந்து.” என்று சுட்டிக்காட்டினான் தீப்சந்த்.
“அப்படியானால் மருத்துவரை வரவழைப்பானேன்?” என்று கேட்டாள் புஷ்பாவதி.
“உன்னைப்போல் நம்பிக்கையற்றவர்களுக்கு மருத்துவர் தேவை” என்று சுட்டிக்காட்டிய தீப்சந்த், “கிருஷ்ணஜெபம் செய். காலையில் காய்ச்சல் இருக்கிறதா பார்” என்று திட்டமாக அறிவித்தான்.
அவன் திட நம்பிக்கையைக் கண்ட புஷ்பாவதி பிரமித்தாள். இந்த வாலிப வயதில் இத்தனை பக்தி எப்படி அவனுக்கு வந்தது என்று வியந்தாள். அதனால் கேட்டாள்: “கிருஷ்ண ஜெபத்தால் சகல சங்கடங்களும் தீரும் என்று நீங்கள்
உண்மையாக நம்புகிறீர்களா?” என்று வினவினாள் வியப்பு குரலிலும் ஒலிக்க.
“உண்மையாக நம்புகிறேன். அந்த நம்பிக்கையில் தான் சாப்பிடுகிறேன். வாளைச் சுழற்றுகிறேன். இது வரை தோல்வியைப் பார்த்ததில்லை.” என்ற தீப்சந்தின் முகத்தில் நம்பிக்கையின் ஒளி சுடர்விட்டது.
ஏற்கெனவே கம்பீரத்துடன் அழகுடன் விளங்கிய தீப்சந்தின் முகம் நம்பிக்கையின் சுடரால் பெரிதும் பிரகாசித்ததைக் கண்ட புஷ்பாவதி அவனிடம் ஏதோ தெய்விக சக்தி இருக்கிறது என்றே நினைத்தாள்.”அந்த மந்திரத்தை எனக்கும்
சொல்லிக் கொடுங்கள்” என்று வினயத்துடன் கேட்டாள்.
தீப்சந்தின் முகத்தில் மகிழ்ச்சி நிலவியது. “புஷ்பாவதி!” என்று அன்புடன் அழைத்தான்.
“என்ன?” என்று மெதுவாகப் பேசினாள் அவள்.
“உனக்கும் கிருஷ்ணன் அருள் வந்துவிட்டது. உனது மனமும் மாறிவிட்டது. இனி யாரும் உன்னை எதுவும் செய்ய முடியாது” என்ற தீப்சந்த், “நன்றாக திரும்பிப்படு” என்றான்.
“எதற்கு?” என்று வினவினாள் புஷ்பாவதி.
“உனக்கு மந்திர உபதேசம் செய்யப்போகிறேன்.”
“அதற்கு நான் திரும்பிப் படுப்பானேன்?”
“உன் வலது காதில் தான் சொல்ல வேண்டும்” என்று கூறியதோடு அவளை நெருங்கி அவள் உடலில் கையைக் கொடுத்து நன்றாகத் திருப்பினான். மேற்புறம் வந்து விட்ட வலது கன்னத்தையும் சங்கு மலர் போலிருந்த காதையும்
உற்றுப் பார்த்தான். நிலவொளியில் இரண்டுமே பள பளத்தன. அதுவும் கன்னத்தின் வழவழப்பு அவனுக்கு உணர்வை அளித்தாலும் மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டான். மெள்ள அவள் காதுக்கு அருகில் குனிந்து உதடுகளைத்
தாழ்த்தியபோது அவள் முகத்தை லேசாகப் புரட்டவே அவள் கன்னத்தில் அவன் உதடுகள் உராய்ந்தன.
மலரின் மென்மையைப் பெற்றிருந்த அந்தக் கன்னத்தில் உதடுகளைப் புரட்டிய வண்ணம் காதுக்கருகில் சென்ற தீப்சந்த் “பெண்ணே! நன்றாக மனதில் வாங்கிக் கொள்” என்று சொல்லி கிருஷ்ண மந்திரத்தை அவள் காதில் மும்முறை
ஓதினான். அப்பொழுது அவன் உதடுகள் அடுத்தடுத்து காதிலும் படவே, அவள் கிருஷ்ண மந்திரத்தைவிட தீப்சந்தின் பெயரையே மனதில் ஏற்றாள். இப்படி அவளுக்கு மந்திர உபதேசம் செய்த தீப்சந்த் திருப்தியடைந்த மனதுடன் எழுந்து
நின்றான், “புஷ்பாவதி! நான் சொன்ன மத்திரத்தை ஜெபித்துக் கொண்டே கண்களை மூடிவிடு. உறக்கம் தானாக வரும். காலையில் காய்ச்சலும் இருக்காது.” என்று கூறி மீண்டும் கதவிடம் சென்று உட்கார்ந்துகொண்டவன் அப்படியே
கதவில் சாய்ந்து கண்களை மூடினான். அன்று பூராவும் ஏற்பட்ட அதிர்ச்சியால் உறக்கத்துக்கும் ஆட்பட்டான்.
ஆனால் புஷ்பாவதிக்கு உறக்கம் அணுவளவும் வராததால் அவள் புரண்டு புரண்டு கட்டிலில் படுத்தாள். தீப்சந்தின் பணிவிடையும் அதனால் தனது புஷ்ப உடலை அவன் கை தீண்டிய இடங்களையும் நினைத்து உணர்ச்சி களில்
சிக்கித் தவித்தாள் புஷ்பாவதி.”இவர் என்னைத் தோள்மீது தூக்கிப் போட்டுக்கொண்டு வந்தபோது நான் சுரணையற்று இருந்ததால் பிழைத்தேன்” என்றும் தனக்குள் சொல்லிக் கொண்டாள்.
புஷ்பாவதி கட்டிலில் இருந்தபடியே கதவில் சாய்ந்திருந்த தீப்சந்தைக் கவனித்தாள். உறக்கத்திலும் அவன் முகம் மிக அழகாயிருந்தது. உதடுகள் சற்றே மூடியிருந்த தால் வாலிப மீசை லேசாக இழுக்கப்பட்டதில் வீரமும், உறுதியும்
தெரிந்தது. அவன் தனது பக்கத்தில் படுக்க வைத்திருந்த நீண்ட வாளைப் பார்த்த அவள், அதைச் சுழற்றும் அவன் நீண்ட கைகளையும் பார்த்தாள். “வாளுக்குத் தகுந்த கைகள். கைகளும் இரும்பைப் போலத்தான் இருக்கின்றன” என்று
சொல்லிக்கொண்டாள் உள்ளூர.
அந்த வலிய கைகள் தன்னை இறுக அணைத்தால் எப்படியிருக்கும் என்று எண்ணிப் பார்த்தாள். அந்த எண்ணத்தால் வெட்கம் அவள் முகத்தை ஆட்கொண்டது. புன்சிரிப்பு உதடுகளை ஆட்கொண்டது. “சே சே! என்ன எண்ணம் இது?
குலமகள் எண்ணக்கூடிய எண்ணமா?” என்று தன்னைக் கடிந்தும் கொண்டாள். ஆனால் அவள் மன விகாரம் அவளை விடவில்லை. அதன் விளைவாக மெதுவாகக் கட்டிலில் இருந்து எழுந்து அவனை நோக்கி நடந்தாள். அவன்
பக்கத்தில் சிறிது நேரம் உட்கார்ந் தவள் அவன் காலடியிலேயே படுத்துவிட்டாள்.
பொழுது புலர சிறிதுநேரம் இருக்கும்போதே கண் விழித்த தீப்சந்த் தனது காலடியில் படுத்துக் கிடந்த புஷ்பாவதியைப் பார்த்து, “இவள் எப்பொழுது இங்கு வந்தாள்? ஏன் வந்தாள்? தரையில் படுத்தால் காய்ச்சல் அதிகமாகுமே!” என்று
சினந்து எழுந்து அவளை இரு கைகளாலும் தூக்கிக் கட்டிலில் கொண்டுபோய் மீண்டும் படுக்க வைக்க முயன்றான். அவன் கழுத்தை வளைத்திருந்த கைகள் அவனுக்கு விடுதலை அளிக்க மறுத்தன.
அந்தச் சமயத்தில் உள்ளே வந்த பணிப்பெண் அந்தக் காட்சியைக் கண்டு அதிர்ச்சியுற்று நின்றாள். பிறகு மகாராணியிடம் செய்தி சொல்ல ஓடினாள்.
மகாராணி புன்முறுவல் கொண்டாள். “இது எதிர் பார்த்ததுதான்” என்று கூறி அந்த அறையை நோக்கி வந்தாள்.
அவள் வந்தபோது புஷ்பாவதி கட்டிலில் கிடந்தாள். தீப்சந்த் கதவில் சாய்ந்தவண்ணம் ஜெபமாலையை உருட்டிக் கொண்டிருந்தான்.
“நல்ல ருத்திராட்சப் பூனை இவன்!” என்று சீறிய மகாராணி, “இவன் விழித்ததும் என்னிடம் இவனை அழைத்து வா.” பணிப்பெண்ணுக்கு உத்தரவிட்டாள்.
அப்பொழுது ருத்திராட்சப் பூனை லேசாகக் கண் விழித்து மகாராணியைப் பார்த்தது. “விழித்துக்கொண்டு தான் இருக்கிறேன். மகாராணி சொல்ல வேண்டியதை இங்கேயே சொல்லலாம்.” என்றான்.
“எதற்காக பிரம்மச்சாரி வேடம் போடுகிறாய்?” என்று மகாராணி வினவினாள்.
“வேடமில்லை. உண்மை.” என்றான் தீப்சந்த்.
“சற்று முன்பு இங்கு நடந்தது என்ன?” என்று மகாராணி வினவினாள்.
“நியதிக்குப் புறம்பாக எதுவும் நடக்கவில்லை” என்றான் தீப்சந்த்.
ஆனால், மகாராணி அதை நம்பவில்லை. அவனது பலவீனத்தைத் தனக்கு அனுகூலமாகத் திருப்பிக் கொள்ளத் திட்டமிட்டாள். ஏதாவது காரணத்தால் அவனை ராணாவின் மெய்க்காவலனாக ஆக்கிவிட்டால் ராணாவுக்குப் பெரும்
பாதுகாப்பு என்று நம்பினாள். அதற்கு ஒரு திட்டமும் தீட்டினாள்.