Mohini Vanam Ch 8 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in
மோகினி வனம் – சாண்டில்யன்
அத்தியாயம் – 8 வைத்தியர் என்ன செய்வார்?
Mohini Vanam Ch 8 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in
புஷ்பாவதியைக் தூக்கிக்கொண்டு பஞ்சணைக்குச் சென்றதைப் பணிப்பெண் சொல்லக் கேட்டு, அந்த அறைக்கு விரைந்த மகாராணி, ஜெபமாலையை உருட்டிக் கொண்டிருந்த தீப்சந்தைப் பார்த்ததாலோ, தனது கேள்விகளுக்கு
அவன் சொன்ன பதில்களாலோ சிறிதளவும் ஏமாறவில்லை.
அவன் சொன்னபடி நியதிக்கு மாறாக எதுவும் நடக்காவிட்டாலும் ஒரு பெண்ணைத் தொட்ட பின்பு எந்த மனிதனும் மாறுவான் என்பதை உணர்ந்திருந்த மகாராணி, ‘இந்த பிரம்மச்சாரி மட்டும் பொதுவிதிக்கு எப்படி விலக்காக
முடியும்?’ என்று எண்ணவே செய்தாள். ஆகவே அவனை எப்படியும் புஷ்பாவதியின் வலையில் சிக்கவைத்து அவனை ராணாவின் வலதுகரமாக ஏற் படுத்திவிட்டால் ராணாவுக்கு உயிர் பயம் ஏதுமிருக்காது என்று நிச்சயமாக நம்பினாள்.
அதற்குத் தகுந்தபடி தனது திட்டத்தையும் உருவாக்கிக் கொண்டாள்,
ஆகவே பொழுது விடிந்ததும் தீப்சந்த் என்ன செய்கிறான் என்று பார்த்து வரும்படி பணிப்பெண்ணை அனுப்பியதும், அவன் அறையில் காணவில்லை என்று பணிப்பெண் சொல்லவே, “எங்கு போயிருக்கிறான். விசாரி” என்று
கடிந்துகொண்டாள்.
சூரியன் உதயமாகும் வரை தீப்சந்தின் இருப்பிடம் தெரியாததால், “ஒருவேளை சொல்லாமல் போய் விட்டானா?” என்ற சிந்தனையிலும் இறங்கிய மகாராணி ராம்பியாரி, தனது சாளரத்து அருகே சென்று வெளியே எட்டிப் பார்த்தவள்
புன்முறுவல் கொண்டாள். அரண்மனை அந்தப்புரத்தை அடுத்த நந்தவன குளத்தின் படிகளில் நின்ற வண்ணம் கைகளைக் கூப்பிக்கொண்டு சூரிய நமஸ்காரம் செய்துகொண்டிருந்த தீப்சந்தை வியப்பு ததும்பிய விழிகளுடன்
மகாராணி பார்த்தாள்.
தீப்சந்த் அன்று காலை அந்தக் குளத்தில் தான் நீராடி யிருக்க வேண்டும் என்பது அவன் உடைகளும் வாளும் குளக்கரையில் இருந்ததன் விளைவாக சந்தேகமறத் தெரிந்ததால், “இத்தனைக் குளிரில் இவன் எப்படி இந்தப் பனி நீரில்
நீராடினான்?” என்று மகாராணி தன்னைத் தானே வினவிக்கொண்டாள். அத்துடன் இடுப்பில் மட்டும் ஈர ஆடை அணிந்து நெற்றியில் கோபி சந்தனத்துடன் அவன் நின்ற நிலையையும், திறந்த பாதி உடலையும் கைகளைத் தலைக்குமேலே
அவன் கூப்பியிருந்ததால் இளம் முனிவர் போலவே விளங்கிய அவன் தோற்றத்தையும் பார்த்து, “இத்தனை உறுதியுள்ளவன் தன் திட்டத்தில் சிக்குவானா?” என்று வினா ஒன்றைத் தன்னுள் எழுப்பிக்கொண்டாள். ஆனால் தனது
திட்டத்தில் சிக்காதவன் அன்றுவரை கிடையாது என்ற உறுதியால் மனதைத் திடப்படுத்தியும் கொண்டாள்.
இதே காட்சியைத் தனது அறைச் சாளரத்தின் மூலம் பார்த்த புஷ்பாவதியின் எண்ணங்கள் வேறு திசையில் ஓடிக்கொண்டிருந்தன.
காலைக் கதிரவன் வெயிலில் தங்கம்போல் ஜொலித்த அவன் தேகத்தைக் கண்டு, “ அப்பா! என்ன அழகு, என்ன நிறம்!” என்று வியந்தாள், “என்ன வீர உடல்! எத்தனை திண்மையான கைகள்! என்ன பரந்த மார்பு! இரும்பு போன்ற
கால்களின் திடம்தான் என்ன?” என்று பலவாறு எண்ணினாள். அத்துடன் கண்களை மூடிக்கொண்டிருந்த அவன் நிலையையும் சாந்தம் நிலவிய விசால நெற்றியையும் கண்டு அவன் செய்யும் ஜெபம் உண்மையானதுதான் என்று
தீர்மானித்தாள்.”இத்தனை உறுதியான மனமுள்ளவன் என்னை எங்கே கவனிக்கப் போகிறான்!” என்று மன ஏக்கமும் கொண்டு பெருமூச் செறிந்தாள்.
இப்படி அரண்மனை அந்தப்புரத்தில் இருந்து இரு மாதர்கள் தன்னை எடைபோடுவதை அறியாமலே சுமார் இரண்டரை நாழிகை நேரம் சூரிய நமஸ்காரம் செய்து முடித்துக்கொண்ட தீப்சந்த், நந்தவனத்தில் இருந்த ஒரு பெரிய செடியின்
மறைவுக்குச் சென்று ஈர உடையைக் களைந்து தனது பழைய உடைகளை அணிந்து வாளைக் கையில் பிடித்தவண்ணம் வெளியே வந்தான். வாளை இரு கைகளாலும் சூரிய பகவானுக்கு முதலில் அர்ப்பணம் செய்தபிறகு, இடையில்
அணிந்துகொண்டு அந்தப்புர பின்வாசற்படி வழியாக உப்பரிகைக்கு ஏறிச் சென்று புஷ்பாவதி இருந்த அறையை அடைந்தான். அப்பொழுது அவள் சாளரத்தின் மூலம் வெளியே பார்த்துக்கொண்டிருப்பதைக் கண்டு, “நான் இங்கு
வந்துவிட்டேன்” என்று கூறிப் புன்முறுவலும் செய்தான்.
அவன் குரல் கேட்டுச் சரேலெனத் திரும்பிய புஷ்பாவதியின் முகம் குங்குமம் எனச் சிவந்தது.”உங்களை நான் பார்ப்பதாக யார் சொன்னது?” என்று சீற்றத்துடன் வினவவும் செய்தாள் அவள்.
“உங்கள் கோபமும் கேள்வியுமே சொல்கின்றன” என்ற தீப்சந்தின் புன்முறுவல் மேலும் விரிந்தது.
அதற்கு புஷ்பாவதிக்குப் பதில் சொல்லத் தெரியாததால் சம்பந்தம் இல்லாமல் கோபத்தைக் காட்டி, உங்களை யார் நந்தவனத்துக் குளத்தில் நீராடச் சொன்னது?” என்று வினவினாள்.
“எனக்கு என் விருப்பப்படி நீராடக்கூட உரிமை கிடையாதா?” என்று தீட்சந்த் வினவினான் வாயிற்படியில் சாய்ந்து நின்று.
“இல்லையென்று யார் சொன்னது?”
“நீதானே கேட்டாய் யார் அந்தக் குளத்தில் நீராடச் சொன்னதென்று?”
“சொன்னேன். அந்தப்புரத்து நந்தவனக் குளம் பெண்கள் நீராட ஏற்பட்டது.”
“இல்லை.”
“எப்படித் தெரியும் உங்களுக்கு?”
“நீரில் நறுமணப் பொடிகளின் சுகந்தமோ தைலங்களின் நறுமணமோ இல்லை.”
இதைக் கேட்ட அவள் நகைத்தாள். “பெண்கள் நீராடும் இடங்களில் நீங்கள் நீராடிப் பழக்கம் போலிருக்கிறது!” என்று வினவினாள் நகைப்பின் ஊடே.
தீப்சந்த் இந்தக் கேள்வியால் சங்கடப்படவில்லை. “அந்தமாதிரி அசந்தர்ப்பம் என்னை அறியாமலே சில சமயங்களில் ஏற்பட்டு இருக்கிறது.” என்றான் சர்வ சாதாரணமாக.
“நீங்கள் அறியாமலே பெண்களுடன் சேர்ந்து நீராடும் சந்தர்ப்பங்களும் ஏற்பட்டிருக்கின்றனவா!” இகழ்ச்சியுடனும் சினத்துடனும் பேசினாள் புஷபாவதி.
தீப்சந்த் அப்பொழுதும் இடித்த புளிபோல் நின்றிருந்தான். “அந்தச் சந்தர்ப்பம் இன்னும் கிடைக்கவில்லை. கிடைக்காதிருக்க கிருஷ்ணன் அனுக்கிரகம் செய்வான்” என்றான்.
“கிருஷ்ணனா!” ஏளனத்துடன் கேட்டாள் புஷ்பாவதி.
“ஆம்.”
“அது நடவாது.”
“ஏன்?”
“அவன் ஆயிரக்கணக்கான பெண்களுடன் நீராடியவன். அவன் உங்களுக்கு எப்படி அருள் புரிவான்?”
“பெண்ணே!”
“உம்.”
“கிருஷ்ண தத்துவத்தை நீ அறியவில்லை.”
“என்ன அறியவில்லை?”
“கிருஷ்ணன் பிரம்மச்சாரி.”
“என்ன உளறுகிறீர்கள்?”
“உளறவில்லை. அவன் விளையாடிய கோபிஸ்திரீகள் ரிஷிகள். நீ நினைக்கிற முறையில் பெண்கள் அல்ல. தத்துவத்தைச் சரியாகப் புரிந்துகொண்டு பேசு. ஏதோ விவரமறியாதவர்கள் கிருஷ்ணனை இகழ்வதுபோல் நீயும் இகழாதே.
உன் அறியாமையைக் காட்டாதே!” என்று சற்றுக் கோபமாகவே கூறினான் தீப்சந்த். சட்டென்று ஜெபமாலையையும் இடைக் கச்சையில் இருந்து எடுத்துக் கொண்டான்.
புஷ்பாவதியின் முகம் எரிமலைபோல் ஜொலித்தது. “முதலில் அந்த மாலையை மறுபடியும் கச்சையில் வைத்து விடுங்கள்” என்று சொற்களை உதிர்த்தாள் கடுமையாக
“அது என்ன செய்தது உன்னை?” என்று வினவினான் தீப்சந்த்.
“அதைப் பார்த்தாலே எனக்கு எரிச்சலாய் வருகிறது” என்று சொல்லிக்கொண்டே அவனை அணுகி அந்த மாலையை அவன் கையில் இருந்து பிடுங்க எத்தனித்தாள்.
அவன் கையைத் தலைக்கு மேலே தூக்கிக்கொண்ட தால் போன வேகத்தில் அவன் மார்புமேல் விழுந்தாள், மேலும் சரிந்துவிடப் போகிறாளே என்ற பயத்தால் அவன் ஜெபமாலைக் கையால் அவளைச் சுற்றிப் பிடித்தான்.
அந்த சமயத்தில் அறை அருகில் வந்த ராஜமாதா ராம்பியாரிதேவி சட்டென்று நின்று, “தீப்சந்த்! புஷ்பாவதி!” என்று இருவரையும் அதட்டிக் குரல் கொடுத்தாள்.
மகாராணியைத் திரும்பிப் பார்த்த இருவரில் தீப்சந்தின் முகத்தில் எந்தவித உணர்ச்சியும் இல்லாவிட்டாலும் புஷ்பாவதியின் முகத்தில் அவமான உணர்ச்சி விரிந்தது. அதனால் அவள் உடலும் லேசாக நடுங்கவே அவளைப்
பிடித்தவண்ணம் அழைத்துக்கொண்டு போய் படுக்கையில் உட்கார வைத்த தீப்சந்த், “மகாராணி! தாங்கள் ஏன் இங்கு வரவேண்டும்? என்னை அழைத்திருந்தால் நானே வந்திருப்பேனே” என்று மிகுத்த பணிவுடன் சொன்னான்.
அவன் பணிவையும் துணிவையும் கண்ட மகாராணி சிறிது அசந்து போனாலும் அதை வெளிக்குக்காட்டாமல், “தீப்சந்த்! இங்கு என்ன நடக்கிறது? கிருஷ்ண ஜெபமா அல்லது ராதா கிருஷ்ண நாடகமா?” என்று வினவினாள் போலி
கோபம் குரலில் ஒலிக்க.
தீப்சந்த் முகத்தில் முறுவலின் சாயை நன்றாகவே விரிந்தது. “மகாராணி! ஒன்றுக்கொன்று சம்பந்த முடையதுதான். இருந்தாலும் பெண்களைப்போல் சமயத்துக்குத் தகுந்த நாடகம் ஆட எனக்குத் தெரியாது’ என்றான் புன்முறுவல்
இதழ்களிலும் பரவ.
“அப்படியானால் அவள் நாடகமாடினாளா?”
“இல்லை.”
“ஏன் உன் மார்புமேல் விழுந்து கிடந்தாள்?”
“என் கையிலிருந்த ஜெபமாலையைப் பிடுங்க வந்தாள். சற்று நகர்ந்தேன். தவறி விழுந்துவிட்டாள்.”
மகாராணிக்கு உள்ளூர சிரிப்பு வந்தாலும் அதை வெளியில் காட்டவில்லை அவள். ஆகவே அந்தப் பேச்சை விட்டு, “தீப்சந்த்! மருத்துவர் வந்து போனதும் நீ என் அறைக்கு வா. உன்னுடன் பேச வேண்டியது இருக்கிறது” என்றாள்.
“ஏன் இப்பொழுதே வருகிறேன் மகாராணி.” என்றான்.
“வேண்டாம். மருத்துவர் வந்தபின் வரலாம். புஷ்பாவதியின் காய்ச்சலைப் பார்த்துவிட்டு அவர் என்ன சொல்கிறார் என்பதையும் கேட்டுக்கொண்டு வா” என்ற மகாராணி திரும்பிச் செல்ல முயன்றாள்.
“மகாராணி! சற்று இருங்கள்” என்றாள் புஷ்பாவதி.
“என்ன புஷ்பாவதி?” என்று வினவினாள் மகாராணி.
“எனக்குக் காய்ச்சல் இல்லை மகாராணி. வேண்டுமானால் பாருங்கள்.” என்றாள் புஷ்பாவதி.
ராம்பியாரிதேவி கட்டில் அருகே சென்று அவள் உடம்பைத் தொட்டுப் பார்த்துவிட்டுக் குனிந்து அவள் காதுக்கருகில், “ இந்தக் காய்ச்சலைச் சொல்லவில்லையடி திருடி. மோகக்காய்ச்சலைச் சொன்னேன்.” என்று கூறினாள்.
“அதற்கு வைத்தியர் என்ன செய்வார்?” என்று கேட்ட புஷ்பாவதி மகாராணியின் கண்களுடன் தனது கண்களைக் கலந்தாள். நான்கு கண்களும் சிரித்தன.
மகாராணி அப்புறம் நிற்கவில்லை அங்கு. வேகமாக விரைந்தாள் அறையில் இருந்து. சிறிது நேரத்தில் வைத்தியரும் வந்தார். புஷ்பாவதியின் நாடிகளைப் பரிசோதித்து மண்டைக் காயத்தையும் பார்த்து, “இனி ஒன்றும் பயமில்லை”
என்று கூறிவிட்டு எழுந்தார். போகும் போது, “இனி நீங்கள் உங்கள் சகோதரியை அழைத்துச் செல்லலாம்” என்றார்.
.
“இவள் என் சகோதரி அல்ல.” என்றான் தீப்சந்த்.
“வேறு எப்படி…?” என்று வைத்தியர் குளறினார். சந்தேகத்துடன் இருவரையும் மாறி மாறிப் பார்த்தார்.