Mohini Vanam Ch 9 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in
மோகினி வனம் – சாண்டில்யன்
அத்தியாயம் – 9 விளைவு நாளை தெரியும்!
Mohini Vanam Ch 9 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in
புஷ்பாவதி தனது சகோதரி அல்ல என்று தீப்சந்த் சொன்னதைக் கேட்ட மருத்துவர் மலைத்தார் என்றால் அதற்குக் காரணம் இருக்கவே செய்தது.
ராஜபுதனத்தின் கெடுபிடியான சமுதாய பழக்கத்தின் படி சம்பந்தம் இல்லாத ஒரு பெண்ணைத் தூக்கி வருவதே குற்றம். அவளுடன் தனியறையில் இருப்பது பெரும் குற்றம். இப்பேர்ப்பட்ட குற்றத்தை எந்த வீரனும் செய்யத்
துணியமாட்டான் என்பதையும், அதுவும் மகாராணாவின் அரண்மனையிலேயே இத்தகைய அசம்பாவிதம் நடப்பது என்றால் நினைக்கவும் முடியாத விசித்திரம் என்பதையும் மருத்துவர் உணர்ந்தே இருந்தார். ஆகையால் தான்
தீப்சந்தையும் புஷ்பாவதியையும் அண்ணன் தங்கையென்று மருத்துவர் நினைத்தார். கணவன் மனைவியாக அவர்கள் இருக்க முடியாது என்பதற்கு அத்தாட்சி இருந்தது.
க்ஷத்திரியர்கள் முறைப்படி தீப்சந்த் பிரம்மச்சாரிகள் அணியும் ஒற்றைப் பூணூலையே அணிந்திருந்தான். இந்த நிலையில் அந்த இருவரையும் ஒரே அறையில் இருக்க மகாராணி எப்படி அனுமதித்தாள் என்று சிந்தை வசப்பட்ட
மருத்துவர், பெரிய இடத்து விவகாரங்களை அதிகமாக ஆராய்வதில் ஆபத்து இருப்பதை உணர்ந்து ஏதும் பேசாமல் புறப்பட்டார்.
மிகுந்த சந்தேகத்துடனும் சலனத்துடனும் புறப்பட்ட மருத்துவரை நோக்கி தீப்சந்த், “மருத்துவரே! நாங்கள் இங்கு இருப்பதைப் பற்றிச் சந்தேகப்பட அவசியம் இல்லை” என்று சொன்னான்.
“இல்லை இல்லை” என்று துரிதமாக ஒப்புக் கொண்டார் மருத்துவர்,
“ஒன்று நீர் புரிந்து கொள்ள வேண்டும்” என்ற தீப்சந்த் மருத்துவரை உற்று நோக்கினான்.
“என்ன?” மருத்துவர் கேள்வியில் திகில் இருந்தது.
புஷ்பாவதியை தீப்சந்த் கையால் சுட்டிக் காட்டி, “எங்கள் உறவில் தவறு இருந்தால் மகாராணி எங்களை இங்குத் தங்கவிட மாட்டார்கள்” என்று அறிவித்தான்.
“ஒருக்காலும் தங்கவிட மாட்டார்கள். மகாராணியின் கட்டு திட்டங்களை ராஜஸ்தானமே அறியும்.” என்றார் மருத்துவர்.
அவர் உண்மையாகத்தான் பேசுகிறாரா நகைக்கிறாரா என்பதைப் புரிந்து கொள்ள முடியாத தீப்சந்த், “ஆகையால் இந்தச் சிறு நிகழ்ச்சியைப் பற்றி நீர் பேசாதிருப்பது நல்லது” என்று சொன்னான்.
“ஏன் பேசுகிறேன்? எனக்குப் பைத்தியமா என்ன?” என்றார் மருத்துவர்.
“இதில் இன்னொருவரும் சம்பந்தப்பட்டிருக்கிறார்.”
“யாரது?”
“ராவுத் சலூம்பிரா”
“ஐயோ…சலூம்பிராவா?”
“ஆம்.”
அதற்கு மேல் மருத்துவர் எந்தத் தகவலையும் கேட்கவில்லை. தமது மருந்துப் பைகளை எடுத்துக் கொண்டு வெகு துரிதமாக விரைந்து விட்டார்.
அவருடைய வேகத்தைக் கண்ட புஷ்பாவதி புன்முறுவல் செய்தாள். “ஆம் ; எதற்காக மருத்துவரை அப்படிப் பயமுறுத்தினீர்கள்?” என்று தீப்சந்தை நோக்கி வினவவும் செய்தாள்.
தீப்சந்தின் அழகிய முகத்தில் கவலை விரிந்தது. “பெண்ணே! அவரை நான் அச்சுறுத்தியது உன்னை உத்தேசித்து மட்டுமல்ல. மகாராணாவின் பெயர் ஏற்கெனவே ராஜஸ்தானத்தில் கெட்டுக் கிடக்கிறது. அவர் உனக்கு அடைக்கலம்
கொடுத்தது வெளியில் தெரிந்தால், இந்த ராஜவம்சத்தின் பெயர் கெடும். அப்படிக் கெட்டால் ஏற்கெனவே பலவீனப்பட்டிருக்கும் மகாராணாவின் கட்சி இன்னும் பலவீனப்படும். இதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் விபரீதமானவை”
என்றான் கவலை அபரிமிதமாக ஒலித்த சொற்களில்.
புஷ்பாவதியின் முகத்திலும் கவலையின் சாயை விரிந்தது. “நான் இங்கு வந்திருப்பது ஏற்கெனவே சலூம்பிராவுக்குத் தெரியுமே” என்று குறிப்பிட்டாள்.
தீப்சந்த் முகத்தில் அதுவரை இல்லாத பெருமை விரிந்தது. “புஷ்பாவதி! சந்தாவதர் தலைவரும், மகாராணாவின் பெயரையே உடையவருமான ராவுத் பீம்சிங் சலூம்பிரா மகாவீரர். மமதை பிடித்தவர். ஆனால் புரளியைப் பரப்பும் ஈனச்
செயலில் அவர் ஈடுபடமாட்டார். அவர் வீரர்களில் யாராவது வதந்தி கிளப்பினாலும் அவனைக் கொல்லத் தயங்கமாட்டார். அவரிடமிருந்து நமக்கு எந்தப் பயமும் இல்லை” என்று சொன்ன தீப்சந்த், “நான் மகாராணியாரைப் பார்த்து
வருகிறேன்” என்று கூறி வெளியே சென்றான்.
அறையை விட்டு அவன் வெளியே வந்ததும் அவனை அழைத்துச் செல்லப் பணிப்பெண் ஒருத்தி தயாராகக் சுாத்திருந்தாள். அவள் தீப்சந்தை அந்தப்புரத்தின் பல உட்கட்டுகள் மூலமாக அழைத்துச் சென்று, கோடி அறை ஒன்றின்
முன்பு வந்ததும் அங்கு சாத்தியிருந்த அலங்கார கதவைத் தட்டினாள்.
அடுத்த வினாடி இன்னொரு பணிப்பெண் கதவைத் திறக்க, தீப்சந்த் உள்ளே சென்றான்.
அந்த விசாலமான அறையைப் பார்த்து தீப்சந்த் பல விநாடிகள் பிரமித்து நின்றான்.
அறை விசுவகர்மாவினால் சிருஷ்டிக்கப்பட்ட சொர்க்க அறைபோல் இருந்தது. பல நாடுகளில் இருந்தும் கொண்டு வரப்பட்ட சீலைகளும், அங்கேயே தீட்டப்பட்ட ஓவியங்களும் தீப்சந்தின் கண்களைக்கவர்ந்தன. ஓவியங்கள்
அனைத்தும் வீரக்காட்சிகளையும் போர்க் களங்களையுமே விளக்கின. சீலைகள் மட்டும் சிருங்கார பிம்பங்களாயிருந்தன. அந்தச் சூழ்நிலையிலிருந்து மகாராணி சிருங்காரத்தை விட வீரத்தை அதிகமாக மதிக்கிறாள் என்பதைப் புரிந்து
கொண்ட தீப்சந்தை நோக்கி “அந்த உள்ளறையில் மகாராணி இருக்கிறார்கள்” என்று பணிப்பெண் கூற, அந்த அறை மூலையில் இருந்த உள்ளறையை நோக்கி நடந்த தீப்சந்தை, “உள் ளே வரலாம்” என்ற மகாராணியின் சொற்கள்
வரவேற்றன.
உள்ளே நுழைந்த தீப்சந்த் அந்த அறை சிறியதாயிருந்தாலும் அங்குள்ள அமைப்பு மிக அழகாக இருப்பதைக் கவனித்தான். எல்லாவற்றையும் விட அந்த அறையின் நட்டநடுவில் இருந்த பெரிய சாளரமும் அதற்குப் பக்கத் தில் இருந்த
கட்டிலும் தீப்சந்தின் கவனத்தைக் கவர்ந்தன. அவன் கண்கள் சென்ற இடங்களைக் கவனித்த மகாராணி தீப்சந்தை நோக்கி, “வீரனே! அந்தச் சாளரத்தைப் பற்றி என்ன நினைக்கிறாய்?” என்று வினவினாள்.
“அறைக்குப் பொருத்தமாக இல்லை. அளவுக்கு மீறிப் பெரியதாக இருக்கிறது. கட்டில் அதை ஒட்டி இருப்பதால் தங்கள் சித்தமும் தெரிகிறது” என்றான் தீப்சந்த். அந்தச் சாளரத்தின் மூலம் வெளியே நோக்கவும் செய்தான்.
மகாராணி முகத்தில் வியப்பைக் காட்டினாள். “என் சித்தம் தெரிகிறதா? என்ன தெரிகிறது?” என்று வினவினாள் மகாராணி வியப்பை அடக்கிக் கொண்டு.
“அந்தச் சாளரத்தின் மூலம் ஆராவலி மலைத்தொடரைப் பார்க்கலாம். தவிர அது மேவாரின் பெரிய ராணாக்கள் இருந்து அரசாண்ட தலைநகரமான சித்தூரும் அந்தப்பக்கம் இருப்பதால் அதையும் மனக் கண்ணில் பார்க்கலாம்” என்றான்
தீப்சந்த்.
அதுவரை நின்றிருந்த மகாராணி அந்தக் கட்டிலுக்குச் சென்று அதில் உட்கார்ந்துகொண்டு வெளியே நீண்ட நேரம் பார்த்துக்கொண்டே இருந்தாள். பிறகு திரும்பி தீப்சந்தை நோக்கி, “வீரனே! உன் புத்தி கற்பூர புத்தி. தீ அருகில்
வந்ததுமே கற்பூரம் பிடித்துக்கொள்வதுபோல் எதையும் வேகமாகப் பிடித்துக்கொள்கிறாய்” என்று பாராட்டினாள். “ஆம் தீப்சந்த்! தினமும் நான் சித்தூரை நோக்குகிறேன். என்றாவது ஒருநாள் நாம் மீண்டும் அங்குச் செல்லலாம்.
ராஜசிம்மனும் பிரதாபசிம்மனும் உட்கார்ந்த அரியணையில் எனது மகனும் ஒரு நாள் அமருவான் என்ற கனவில் நான் அந்தத் திக்கில் பார்க்கிறேன். கனவு காண்கிறேன்” என்று தொடர்ந்து பெருமூச்செறிந்தாள்.
சிறிது மௌனத்துக்குப் பிறகு, “தீப்சந்த்! மேவாரின் மகாராணி உன்னிடம் ஒரு வரம் கேட்கிறாள்!” என்று தீனமான குரலிலும் கூறினாள்.
தீப்சந்தின் மனம் உருகியது. “எப்பேர்ப்பட்ட வம்சத்தில் வந்தவள் எத்தனை பணிகிறாள்! இத்தனையும் உபயோகமற்ற ஒரு பிள்ளையைப் பெற்றதால்தானே” என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டாலும் அதை வெளிக்குக் காட்டாமல்,
“உத்தரவிடுங்கள் மகாராணி!” என்றான்.
குனிந்த தலையை நிமிராமலே பேசினாள் மகாராணி. “கீப்சந்த்! நீ மகாராணாவின் மெய்க் காவலனாகப் பதவி ஏற்க வேண்டும்.” என்றாள் தழுதழுத்த குரலில்.
“மகாராணி! நாளைக்குப் பதில் சொல்கிறேன்.” என்றான் தீப்சந்த்.
மகாராணி தலையை உயர்த்தி அவனைப் பார்த்தாள்’ “ஏன் தீப்சந்த்?” என்று கேட்கவும் செய்தாள்.
“இன்றிரவு நான் சலூம்பிராவின் தலைவரைச் சந்திக்க ஒப்புக்கொண்டிருக்கிறேன்.” –
“அது எனக்கும் தெரியும்.”
“அவர் என்னைக் கொல்லாவிட்டால் நாளை இதைப் பற்றிப் பேசலாம்.”
மகாராணி சிந்தனையில் இறங்கினாள். சந்தாவதர்களின் தலைவரின் வீரம் உலகமறிந்தது. அவரிடம் வாட்போரை விரும்பியவர்கள் குறைவு. தப்பித் தவறி விரும்பி அகப்பட்டுக்கொண்டால் பிழைத்தவர்களும் சொற்பம்.
இதை அறிந்திருந்த மகாராணி, இந்தச் சண்டையை நீதானே வலுவாக வரவழைத்துக் கொண்டாய்?” என்றாள் சிந்தனைக்குப் பிறகு.
“வலுவில் இந்தச் சண்டையை நான் ஏற்கவில்லை மகாராணி, தனது தம்பி மாண்டதற்கு சலூம்பிரா பழி வாங்க நினைத்ததில் தவறில்லை. அதை நான் ஏற்காவிட்டால் கோழையாவேன். கோழை என்ற பெயரை சம்பாதிக்க நான்
விரும்பவில்லை” என்ற தீப்சந்த், “எதையும் கிருஷ்ணன் தீர்மானிப்பான். விளைவு நாளை தெரியும்.” என்றான்.
ஆனால் அன்று மாலை சலூம் பிராவைச் சந்திக்க அரண்மனையை விட்டு அலட்சியமாகவே புறப்பட்டான்.
அவன் புஷ்பாவதியிடம் விடைபெற்றபோது, அவள் மிகுந்த கவலையுடன் சொன்னாள். “ஜாக்கிரதையாகப் போரிடுங்கள்” என்று. “நீங்கள் வரும்வரை நான் உறங்க மாட்டேன்” என்றும் தெரிவித்தாள். அவள் குரலில் சோகம்
ததும்பியது. கண்களில் நீர் ததும்பியது.