Mohini Vanam Ch1 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in
மோகினி வனம் – சாண்டில்யன்
அத்தியாயம் – 1. கொல்லும் விழிகள்
Mohini Vanam Ch1 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in
அரசனாயிருப்பதில் எந்தவித சுகமும் இல்லை என்பதைச் சிறுவயதிலேயே புரிந்துகொண்ட மேவார் ராணாபீம்சிங், வாலிப வயதை அடைந்த பின்பும் அந்தச் சித்தாந்தத்தை மாற்றிக்கொண்டாரில்லை. ஆகவே, உதயபூர் அரண்மனையில்
தமது பள்ளியறையில் திண்டு திவாசுகள் போடப்பட்ட பஞ்சணையில் சாய்ந்துகொண்டிருந்த சமயத்திலும் அவரது அழகிய முகத்தில் ஒரு வெறுப்பும், உதடுகளில் உலகத்தைப் பற்றிய கசப்பைக் காட்டும் புன்புறுவலும் விரவி நின்றன.
பஞ்சணை மிக மிருதுவாக இருந்தாலும், உடலுக்குச் சுகமளிக்க முயன்றாலும், மனதில் இருந்த வேதனை அந்தச் சுகத்துக்கு இடம் கொடுக்காததை ராணா புரிந்து கொண்டார். மிகவும் வேதனை நிரம்பிய நேரங்களில் தத்துவம் தலை
காட்டும் சுபாவம் உடையது! தத்துவத்தை என்றும் எண்ணிப் பார்க்காத ராணா கூட அன்று தத்துவரீதியில் தமது வாலிப மனதை ஓடவிட்டார்.
பாலநாயகம், பகுநாயகம், ஸ்திரீ நாயகம், அநாயகம் (குழந்தையின் அரசு, பலபேர் சேர்ந்து நடத்தும் அரசு, பெண் அரசு) இந்த மூன்றும் அராஜகத்தில், அதாவது அரசின் அழிவில் கொண்டுவிடும் என்ற வடமொழி வரி களை எண்ணிப்
பார்த்த ராணா, அந்தப் பழமொழி தமது விஷயத்தில் எத்தனை உண்மையாகிவிட்டது என்று நினைத்ததால், லேசாக நகைக்கவும் செய்தார். எட்டு வயதில் தாம் அரியணை ஏறியதால் தமக்குப் பதில் தம் முடைய தாயார் ராஜமாதா ராம்பியாரி
அரசின் கடிவாளங்களைக் கையில் பிடித்துக்கொண்டதும், மேவாரின் இரு பெரிய வீரக் கூட்டங்களான சந்தாவத் கூட்டமும், சக்தாவத் கூட்டமும் யார் ராஜாங்கத்தை நடத்துவது என்று போரிட்டுக் கொண்டதும், பழைய வடமொழி
சுலோகத்துக்கு ஒரு பூர்த்தியை அளித்துவிட்ட தால் நாட்டின் கதி அதோகதி என்றும் ராணா சொல்லிக் கொண்டார் நகைப்பின் ஊடே.
ராஜமாதா தம்மை கைப்பொம்மையாக வைத்துக் கொண்டிருக்கும் வரையில் தம்மால் ஏதும் செய்ய இயலாதென்று முடிவு கட்டியபடியால் பெருமூச்சும் விட்டார், பஞ்சணையில் சாய்ந்தபடியே. ராஜமாதாவை அடக்க அமர்சந்த் பரூவா
இப்பொழுது இல்லையே என்று தமக்குள் கேட்டுக்கொண்டு வருத்தமும் அடைந்தார் ராணா. அமர்சந்த்பரூவா வணிகர் வம்சத்தைச் சேர்ந்தவர் என்றாலும் தம்முடைய தந்தை அர்சி ராணாவையும் மேவாரையும் எப்படிக் காப்பாற்றினார்
என்று நினைத்துப் பெருமிதம் கொண்டார். அந்தக் கதையை பலர் சொல்லிக் கேட்டும் இருந்த ராணா, அதைப்பற்றி அந்தச் சமயத்தில் எண்ணவும் முற்பட்டார்.
ராணா அர்சி இறந்தும் இறவாததுமாக நிர்வாகத்தை ஏற்ற ராம்பியாரி தேவி, கணவன் இறந்த மூன்றாவது மாதமே உதயபூர் தெருக்களில் பவனி வந்தாள், தன்னந் தனியாக ஒரு புரவியில், அதைக் கேட்ட அமர்சந்த் பரூவா புரவியை
மறித்து, ராணியை அரண்மனைக்குத் திரும்பும்படி கட்டளையிட்டார். அந்தக் கட்டளையை மீற முடியாத ராம்பியாரி அரண்மனை திரும்பினாள். அவளைத் கொடர்ந்து வந்த அமர்சந்த், அரண்மனை வாயிலில் அவளைக் கடிந்து
கொண்டார். தேவி! கணவன் இறந்து ஓராண்டுக்குள் பெண்கள் வெளியில் வரக்கூடாது என்ற வழக்கத்தை நீ உணரவில்லையா? இது உன் பதவிக்குத் தகுமா? நீ ராணி என்பதை மறந்து விட்டாயா! போ உள்ளே. இனிமேல் அரண்மனையை
விட்டு வெளியே வராதே” என்று சினத்துடன் பேசினார்.
“நாட்டை எப்படி நிர்வாகம் செய்வது?” என்று கேட்டாள் ராஜமாதா.
“வெளியே வரும் பெண்களைவிட வீட்டுக்குள் இருக்கும் பெண்களின் சக்தி அதிகம். அரண்மனைக்குள் இருந்தே அரசை நடத்த முடியும்” என்று சுட்டிக் காட்டினார் அமைச்சர் அமர்சந்த்.
ராம்பியாரியின் அழகிய முகம் அந்திவானமெனச் சிவந்தது சினத்தின் மிகுதியால் பதில் சொல்லாமல் அவள் அரண்மனைக்குள் சென்றாள். அந்த தினத்திலிருந்து பதினைந்தாவது நாள் அமர்சந்த் காலமானார். அவரது மரணத்துக்கு
நஞ்சு காரணம் என்று வதந்தி இருந்தது. அமர்சந்த் சக மந்திரிகளைப்போல் அல்லாமல் மிக ஏழையாக இறந்து போனார். அவரது பூத உடலை எடுக்கப் பிச்சை வசூலித்தார்கள்.
இந்த நிகழ்ச்சிகளையெல்லாம் மனக்கண்ணில் ஓட்டிப் பார்த்த ராணா பீம்சிங், ‘கண்ணியமான அமைச்சராயிருப்பதில் எத்தனை ஆபத்து இருக்கிறது!’ என்று தம்மைத்தாமே கேட்டுக் கொண்டு, பஞ்சணையிலிருந்து எழுந்து தமது சயன
அறை சாளரத்தின் வழியே வெளியே எட்டிப் பார்த்தார். கதிரவன் நன்றாக எழுந்து விட்டதால், உதயபூர் மிக அழகாக இருந்ததைக் கவனித்தார். தூரத்தே தெரிந்த உதயசாகரத்தின் பளபளத்த நீர்ப்பரப்பில் தவழ்ந்து வந்த காலை நேர இன்பக்
காற்றை நன்றாக முகர்ந்தார். அந்த அரண்மனைக்கு எதிரே தெரிந்த ராஜ வீதியில் இரு பக்கங்களிலும் இரண்டு வரிசைகளாக வீரர்கள் சென்றுகொண்டு இருந்ததையும், ஒரு கூட்டம் இன்னொரு கூட்டத்தைக் கவனிக்காததையும்
நோக்கிய ராணா, “இந்த இரு கட்சியே போதுமே, மேவாரைக் குலைக்க” என்று சொல்லிக் கொண்டார்.
“இப்பொழுது அமர்சந்த் மட்டும் இருந்தால்…” என்று கேட்டு வாசகத்தை முடிக்காமல் விட்டார்.
அந்தச் சமயத்தில் ராணாவின் அறைக்குள் புகுந்த பணிமகள், “அமைச்சர் தங்களைக் காண வந்திருக்கிறார்” என்றாள் தலைவணங்கி.
பழைய நினைவுகளில் இருந்த ராணா, “அமைச்சர் தான் போய்விட்டாரே” என்றார்.
பணிமகள் தலைவணங்கினாள். மீண்டும், “இல்லை மகாராணா!வாயிலில் காத்திருக்கிறார்” என்றாள்.
ராணா அனுமதி கொடுப்பதற்கு முன்பாகவே உள்ளே நுழைந்த மகாமந்திரி சோம்ஜி, “மகாராணா!” என்று அழைத்துத் தலை தாழ்த்தினார்.
“என்ன மகாமந்திரி?” ராணாவின் குரலில் இடக்கு இருந்தது.
பா நான் போகவில்லை ராணா, உயிரோடுதான் இருக்கிறேன்.” மந்திரியின் குரலில் வருத்தம் ஒலித்தது.
“மகிழ்ச்சி” என்ற ராணா, புன்முறுவலும் செய்தார்.
சோம்ஜிக்கு ராணாவின் இதயம் தெரிந்ததால் மேற்கொண்டு பேசு புன்பு ஓரிரு முறை தொண்டையைக் கனைத்துக்கொண்டார். “ஒரு முக்கிய விஷயம் மகாராணாவின் காதில் போட வந்தேன்” என்றார், சிறிது அச்சத்துடன்.
மந்திரியை உற்றுப் பார்த்தார் ராணா. “ஆமாம், என் காதில் போடுவதால் ஏதாவது பயன் உண்டு என்று நினைக்கிறீரா?” என்று கேட்டார்.
“தாங்கள் ராணா அல்லவா?” மென்று விழுங்கினார் மந்திரி.
“என்ன கேட்டீர் மந்திரி?”
“தாங்கள் தானே ராணா?”
“அதிலும் சந்தேகம் வந்துவிட்டதா?”
“இல்லை. ராணாவைக் கேட்காமல் நான் ஏதும் செய்வதற்கு இல்லை…”
“இந்த ஞானம் உமக்கு எத்தனை நாளாக ஏற்பட்டது?
“மகாராணா!” அச்சத்துடன் அழைத்தார், சோம்ஜி.
மகாராணா மந்திரியை அணுகி, அவர் தோள்மீது கையை வைத்து அவரைக் கண்களால் கூர்ந்து நோக்கினார்.
அந்தக் கண்களில் இருந்த தீட்சண்யத்தைக் கண்டு சோம்ஜி பிரமித்துப் போனார். வெளிக்கு அச்சா பிச்சமாக நடக்கும் ராணா உண்மையில் மிகக் கூரிய அறிவு உடையவர் என்பதை உணர்ந்தார். “மகாராணா நேரிட நிர்வாகத்தை
நடத்தினால் எங்களைப் போன்றவர் களுக்குத் தொந்தரவில்லை” என்று உபசாரமாகக் கூறினார்.
மகாராணா மந்திரியின் தோளின் மீதிருந்த கையை எடுத்துவிட்டு, அறையில் ஒருமுறை உலாவினார். பிறகு பீண்டும் பஞ்சணையில் அமர்ந்து, “மகாமந்திரி!” என்று அழைத்தார் ஒருமுறை.
“மகாராணா?” என்று வினவினார் மந்திரி.
“இப்பொழுது இருக்கும் நிர்வாகத்தில் தொநதரவு இருக்கிறதா?” என்று ராணா வினவினார் மெதுவாக.
மகாராணாவின் குரலில் கபடம் இருந்ததைப் புரிந்து கொண்ட மகாமந்திரி, “அப்படியொன்றும் இல்லையே” என்று சமாளித்துக் கொண்டார்.
“மந்திரி! உண்மையைச் சொல்லும். இப்பொழுது தான் நிர்வாகத்தை நான் ஏற்றால் உமக்குத் தொந்தர வில்லை என்று சொன்னீர்?”“ – என்று கேட்ட ராணா, புன்முறுவல் செய்து, “அஞ்ச வேண்டாம். தைரியமாகச் சொல்லும்.
உண்மையின் பலம் தனி” என்று ஊக்கினார்.
“அது இந்தக் காலத்தில் இல்லை” என்றார் சோம்ஜி.
“எது?” ராணா கேட்டார்.
“உண்மையின் பலம் தனி என்பது” என்று அறிவித்தார் சோம்ஜி.
*எப்படிச் சொல்கிறீர்?” என்று வினவினார் ராணா.
திரும்பத் திரும்ப ராணா கேட்ட கேள்விகளால் நிதானத்தை இழந்த மந்திரி சற்று மனம் விட்டே பேசினார். லேசாக துணிவையும் காட்டினார். “ராணா உண்மையைச் சொன்னதால் மகாமந்திரி அமர்சந்த் இறந்தார். தமது சொத்தையெல்லாம்
செலவழித்து அரசைக் காத்ததால் அவர் செத்தபின்பு பிணத்தைத் தூக்கப் பணமில்லை. தர்மம், கடமை, சத்தியம் எல்லாம் அந்தக் காலத்துத் தத்துவம். இந்தக் காலத்துக்குப் பொருந்தாது” என்ற சோம்ஜி, “மகாராணரா! தாங்கள் ஒரு வார்த்தை
ராஜமாதாவின் காதில் போட வேண்டும்” என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டார்.
“ஏன், நீங்களே போடுவதுதானே?” என்று ராணா கேட்டார்.
“என் தலை போய்விடும். உங்கள் தாயார் குணம் உலகமே அறியும்” என்றார் மந்திரி.
அப்பொழுது அந்த அறையின் பக்கத்துக் கதவு ஒன்று எந்தவித ஓசையும் இல்லாமல் மெதுவாகத் திறக்கப்பட்டது.
அந்த வாயிற்படியில், இரண்டு பிள்ளைகளைப் பெற்ற பிறகும் சிறிதும் கட்டுக்குலையாத உடலுடனும், அழகிய கண்களுடனும், ஒரு கையைச் சிற்றிடையில் கொடுத்து லேசாக வாயிற்படியில் சாய்ந்த வண்ணம் ராஜமாதா ராம்பியாரி
நின்றாள்.
அவளை அரசரும் நோக்கினார். அமைச்சரும் நோக்கினார். தூக்கு மேடைக்குச் செல்லும் குற்றவாளியின் முகம் போல இருந்தது அமைச்சரின் முகம். அரசர் மட்டும் தாயை இன்பப் புன்முறுவலுடன் நோக்கினார்.
ராஜமாதா இருவரையும் மாறி மாறிப் பார்த்தாள்.
விழிகளாலேயே கொல்லமுடியும் என்பதற்குச் சான்று அவள் அழகிய விழிகளிலேயே இருந்ததை மகாமந்திரி புரிந்து கொண்டார்.