Mohini Vanam Ch2 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in
மோகினி வனம் – சாண்டில்யன்
அத்தியாயம் – 2. தரையில் கிடந்த தாமரை
Mohini Vanam Ch2 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in
ராஜமாதா ராம்பியாரிக்கு வயது நாற்பத்திஐந்தை எட்டிக்கொண்டு இருந்தாலும் அவள் இளமை மாறாத இருபத்தி ஐந்து வயது பெண்ணைப்போலவே காணப்பட்டாள். மேவாரைப்போல ஒரே சண்டையும் சச்சரவும் உள்ள ராஜ்யத்தையே
ஆளும் வன்மை பெற்ற ராம்பியாரி, தன் மகனும் மகாமந்திரியும் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டுக்கொண்டே உள்ளே வாயிற்படியில் நின்றபோதும் எந்தவித கோபத்தையோ தாபத்தையோ காட்டினாள் இல்லை.
இடையை ஒடித்து வாயிற்படியில் இடது கையை இடுப்பில் வைத்துக்கொண்டு நின்ற ராஜமாதாவின் செவ்விய உதடுகளில் அப்பொழுதும் புன்சிரிப்பு தவழ்ந்து கொண்டிருந்ததைக் கண்ட மகாமந்திரி சோம்ஜி, அந்தப் புன்சிரிப்பு
நன்மைக்கு அல்ல என்று புரிந்துகொண்டார். ராம்பியாரியின் கட்டுக்குலையாத உடலின் அழகைக் கண்டு பிரமித்துப்போன மகாமந்திரி, ‘இந்த அழகும் வலுவும் மேவாரின் நன்மைக்கு உபயோகப்படுத்தப்பட்டால் எத்தனை
நன்றாயிருக்கும்?’ என்று தமக்குள் கேட்டுக்கொண்டார். இருப்பினும் அச்சத்தின் காரணமாக மாதாவை நோக்கிக் குனிந்த தலையை நிமிரவில்லை.
ராஜமாதா தனது கமல முகத்தின்மீது தவழ்ந்த இரண்டு மயிரிழைகளை விரல்களால் நீக்கியபோது தாழம்பூவில் இருக்கும் சிறு நாகங்கள் இரண்டு நெளிவது போன்ற பிரமையை ஏற்படுத்தியது மகாமந்திரிக்கு. இத்தனைக்கும்
ராம்பியாரி தேவி தனது புன்முறுவலை நன்றாக விரியவிட்டுக் கொண்டாள் உதடுகளில் செங்கமல விழிகளால் தனது மகனையும் மந்திரியையும் மாறி மாறிப் பார்த்தாள் ஒருமுறை. மந்திரிமீது கடைசியாகத் தனது விழிகளை
நிலைக்கவிட்டாள். ஏதோ இரு வேல்கள் இதயத்தில் பாய்ந்துவிட்டது போலிருந்த அந்த விழிகளின் பார்வையால் நின்ற இடத்திலேயே சங்கடப்பட்டுச் சிறிது அசைந்தார் மகாமந்திரி.
மூவரும் பேசாமடந்தைகளாய் நின்றிருந்த காரணத்தினால் ராணாவின் பள்ளியறையில் நீண்ட நேரம் மௌனம் நிரவி நின்றதை ராஜமாதாவே உணர்ந்தாள். “இத்தனை காலையில் எங்கு வந்தீர்கள் மந்திரி?” என்று வினவினாள் ராம்பியாரி
தேவி.
மந்திரி சோம்ஜி, “அரசாங்க விஷயமாய் பேச வந்தேன்” என்று பணிவுடன் சொன்னார்.
ராம்பியாரியின் அழகிய கண்கள் சிரித்தன மந்திரியை நோக்கி. “மன்னரிடம் அரசாங்க விஷயம் பேச வந்தீரா?” என்று வினவினாள் சர்வ சாதாரணமாக.
“இல்லை, இல்லை, தங்களிடம்தான் பேச வந்தேன்” என்றார் சோம்ஜி.
“என்னிடம் பேச வந்தீரா, என்னைப் பற்றிப் பேச வந்தீரா?” என்று ராஜமாதா வினவினாள்.
அதுவரை பஞ்சணையில் சாய்ந்து கொண்டிருந்த ராணா பீம்சிங் தனது சொரூபத்தைக் காட்டி, “அம்மா! தங்களிடம் பேசுவதற்கும் தங்களைப் பற்றிப் பேசுவதற்கும் அரசாங்கத்தைப் பற்றிப் பேசுவதற்கும் அதிக வித்தியாசமில்லை
என்று மந்திரி நினைக்கிறார்” என்று மந்திரியின் எண்ணத்துக்கு விளக்கம் தந்தார்.
அதுவரை சாதாரணமாயிருந்த ராஜமாதாவின் முகத்தில் சிறிதே கோபம் உதயமாகவே, “பீம்! வரவர உன் இடக்கு அதிகமாகிறது. பேச்சிலுள்ள கெட்டிக்காரத் தனத்தை அரசு நிர்வாகத்தில் காட்டினால் எவ்வளவு நல்லதாயிருக்கும்?” என்று
கேட்டாள் குரலிலும் கோபம் ஒலிக்க.
ராணா பீம்சிங் லேசாகப் புன்முறுவல் செய்தார். “அம்மா! தலையிருக்கும்போது வால் ஆடுமா? நீ இருக்கும்போது நான் அரசாள வேண்டிய அவசிய மென்ன?” என்று வினவினார்.
மகன் தன்னைப் பாராட்டுகிறானா ஏளனம் செய்கிறானா என்பதைப் புரிந்து கொள்ள முடியாததால் ராம்பியாரிதேவி, “என்னடா சொல்கிறாய்?” என்று வினவினாள்.
“அதைப் பற்றித்தான் பேச வந்தேன்” என்றார் மந்திரி.
“சொல்லும்” ராணியின் குரலில் அதிகாரத்துடன் கவலையும் ஒலித்தது.
“இப்பொழுதுள்ள குழப்பத்தைச் சமாளிக்க வல்லவன் ஒருவன் இருக்கிறான்…” மந்திரி வாசகத்தை முடிக்க வில்லை. எதையோ சொல்லத் தயங்கினார்.
“யாரது?” என்று கேட்டாள் ராஜமாதா.
“தீப்சந்த். யாருக்கும் அஞ்சாதவன்” என்றார் அமைச்சர்.
அவனைப் பற்றி ராஜமாதாவும் கேள்விப்பட்டிருந்தாள். “தீப்சந்த் மகாவீரன் தான், ஆனால் யாருக்கும் அடங்கமாட்டான் என்று கேள்வி” என்றாள் ராஜமாதா.
“தங்களுக்கு அடங்காத வீரன் உலகத்தில் கிடையாது” என்ற ராணாவும் உரையாடலில் கலந்து கொண்டார்.
அரண்மனைக்கு வெளியே மீண்டும் கூச்சல் கேட்டது. கூச்சல் பிறந்த நேரத்தில் அடங்கியது. அதற்குக் காரணம் என்ன என்று ராஜமாதா கேட்க எத்தனித்த சமயத்தில் பணிமகன் உள்ளே வந்து, “ராஜமாதா! தீப்சந்த் தங்களைக் காண
வந்திருக்கிறார்” என்று அறிவித்தான்
அதைத் தொடர்ந்து மாடிப்படிகளில் யாரோ முரட்டுத்தனமாக ஏறி வரும் சத்தம் கேட்டது. இருபத்திரண்டு வயதைக்கூட எட்டாத ஒரு வாலிபன் அறைக்குள்ளே அலட்சியமாக நுழைந்தான். அவன் தோளில் ஒரு பெண்ணையும்
சுமந்திருந்தான். அந்தப் பெண்ணைத் தரையில் கிடத்தி, “ராணா! ராஜமாதா! உங்கள் அரசு இந்த லட்சணத்தில் நடக்கிறது” என்று சீற்றத்துடன் பேசினான்.
தரையில் கிடந்த எழில் தாமரையைக் கண்டு ராணா, ராஜமாதா இருவருமே திகைத்தார்கள்.