Mohini Vanam Ch3 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in
மோகினி வனம் – சாண்டில்யன்
அத்தியாயம் – 3. நீதி கேட்டவன் நிலை!
Mohini Vanam Ch3 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in
இருபத்திரண்டு வயதைக்கூட எட்டாத தீப்சந்த் ஆறடிக்கும் மேற்பட்ட உயரத்துடனும் மிக ஒல்லியாயும் இருந்ததால், அந்த ஒற்றை நாடி உடம்பு வஜ்ரம் போலிருந்தது.
அவன் முகத்தை மிக அழகான முகமென்று சொல்ல முடியாவிட்டாலும், அதில் ஒரு கம்பீரமும் அசட்டையும் இருந்ததால் ஒரு தனிக் கவர்ச்சி இருக்கவே செய்தது. அவன் நீண்ட கைகளும் உரமாக நின்ற கால்களும் அவன் திடத்துக்கும்
வீரத்துக்கும் சான்று கூறின. அவன் இடையில் அணிந்திருந்த நீண்ட வாள் கணுக்கால் வரையில் தொங்கிக் கொண்டிருந்ததாலும், அதுவரை சுமந்து வந்த பெண்ணை அவன் கீழே கிடத்திய பிறகு அவன் வலதுகை வாளின் பிடி அருகில்
பதிந்துவிட்டதாலும் எந்த விநாடியிலும் அவன் போருக்குத் தயாராயிருக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்தது.
அவனது நீண்ட நாசியும் கூர்மையான கண்களும் வலிய உதடுகளும் அவற்றுக்கு மேலே லேசாக வளர்ந்திருந்த மீசையும் அவன் எதற்கும் துணிந்தவன் என்பதை வலியுறுத்தின.
இதையெல்லாம் அணு அணுவாகக் கவனித்த ராஜ மாதா ராம்பியாரி, சோம்ஜி அவனைப்பற்றிப் போட்ட எடை தவறில்லை என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள். அத்துடன் அவன் தோளில் தூக்கி வந்த பெண்ணைத் தரையில்
கிடத்தி, “உங்கள் அரசு இந்த லட்சணத்தில் இருக்கிறது” என்று குற்றம் சாட்டியதை யும், குற்றம் சாட்டிய குரலில் மரியாதை சிறிதேனும் இல்லாததையும் கவனித்த ராம்பியாரி, அவன் மிகவும் கர்வம் பிடித்தவன் என்ற முடிவுக்கும் வந்ததால்,
“இவ னிடம் எந்தப் பொறுப்பை ஒப்படைப்பதும் அபாயம்” எள்ற முடிவுக்கும் வந்தாள்.
இப்படி தீப்சந்தை ஆராய்ந்து அவனை வேலைக்கு வைத்துக்கொள்வதால் ஏற்படக்கூடிய பலாபலன்களை ராம்பியாரி எடை போட்டுக்கொண்டிருந்த சமயத்தில், ராணா பீம்ஸிங், தீப்சந்தை விட்டுத் தரையில் கிடந்த தாமரையை
அலசலானார்.
தீப்சந்தால் கீழே கிடத்தப்பட்ட நிலையில் அந்தப் பெண் ஒருக்களித்து விழுந்து, கால்களை அரைகுறையாக மடக்கியும், கையொன்றைத் தலைக்குமேல் வளைத்தும் கிடந்ததே ஏதோ ஒரு நாட்டிய பாவம் போலிருந்தது மகாராணாவுக்கு.
அவள் உடல்களின் வளைவுகளிலும் வளைவுகளை அடுத்த எழுச்சிகளிலும் வனப்பின் வசீகரம் சர்ச்சைக்கு அப்பாற்பட்டதாயிருந்ததை ராணா கவனித் தார். இடையை அடுத்த பின்னெழில்களின் அளவான எழுச்சியும், ஒருபுறம்
மட்டுமே தெரிந்த மார்பின் பங்கஜ மொட்டின் அமைப்பும், ராணாவின் மனதைப் பெரிதும் அலைக்கழித்தன. செந்தாமரையின் நிறத்தையொத்த முகமும், கார்மேகத் தலைக்குழலும் சிற்ப சாஸ்திரப்படி அமைந்த அவள் முழுத் தோற்றமும்
ஏதோ தேவ மகள் ஒருத்தி தரையில் விழுந்துவிட்ட பிரமையை அளித்ததால் ராணா உணர்ச்சி மிகுதியால் பெருமூச்செறிந்தார்.
ஆனால் தீப்சந்தின் ஒரு பார்வை ராணாவின் பெரு மூச்சைச் சட்டென்று அடக்கியதாலும், அவன் கண்கள் ராணியையும் நோக்கியதால் மகனும் மாதாவும் அதிர்ச்சியே அடைந்தார்கள் என்றால், அந்த நாடகத்தைப்
பார்த்துக்கொண்டிருந்த சோம்ஜிக்கு பிராணனே போய் விடும் போலிருந்தது. இருப்பினும் அவர் சமாளித்துக் கொண்டு “தீப்சந்த்! ராஜமாதாவையும் மகாராணாவையும் பார்த்து நீ பேசிய முறை சரியல்ல” என்று தமது
ஆட்சேபணையைத் தெரிவித்தார்.
தீப்சந்த் தனது பார்வையை சோம்ஜிமீது திருப்பினான். “நீ யார்?” என்று முரட்டுத்தனமாகக் கேட்கவும் செய்தான்.
தம்மைத் தெரியாத ஒருவன் மேவாரில் இருக்கிறான் என்பதை நினைக்கவும் சக்தியற்ற சோம்ஜி, “என்னைத் தெரியாதவர் யாரும் மேவாரில் கிடையாது” என்று உள் ளத்தில் இருந்ததை வெளிப்படையாகவே சொன்னார்.
தீப்சந்த் அதற்கெல்லாம் மசியாமல், “இதோ நான் இருக்கிறேன். உம்மை எனக்குத் தெரியாது” என்று மூர்க்கத்தனமாகப் பதில் சொன்னான்.
சோம்ஜியின் முகத்தில் அசடு தட்டியது. “நான் தான் சோம்ஜி” என்று தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டார்.
“யார், மகாமந்திரி சோம்ஜி நீர்தானா?” தீப்சந்தின் கேள்வியில் வெறுப்பு இருந்தது.
“ஆம், நானேதான்” சோம்ஜி தமது பதவியை வலியுறுத்தினார்.
“அமர் சந்த் பரூவாவின் இடத்தில் நீர் இருக்கிறீர்?” தீப்சந்தின் குரலில் வெறுப்பு அதிகமாக ஒலித்தது.
“ஆம்.” மந்திரி மென்று விழுங்கினார்.
“அதற்கு நீர் தகுதிதானா என்பதை யோசித்தீரா?”
“தகுதியென்றுதான் ராஜமாதா என்னை நியமித்திருக்கிறார்கள்.”
“அமர்சந்த் செல்வமிழந்த ராஜ்யத்துக்குப் பணம் சேர்த்தார். படை சேர்த்தார். நீர் என்ன சேர்த்தீர்?”
சோம்ஜி ஏதும் பதில் சொல்ல இயலாமல் நின்றார். இந்த மூர்க்கனைப்பற்றித் தாம் ராஜமாதாவிடமும் ராணாவிடமும் ஏற்கெனவே பாராட்டியதைப்பற்றிமனம் நொந்து கொண்டார். அந்தச் சமயத்தில் ராஜமாதா குறுக்கிட்டு, “தீப்சந்த்!
மகாவீரர்கள்கூட நடந்து கொள்ளும் முறை இருக்கிறது…” என்றாள் சற்று அதிகாரக் குரலில்.
தீப்சந்த் ராஜமாதாவை அச்சம் சிறிதுமற்ற கண்களால் நோக்கினான். “ராஜமாதா! எதுவுமே அரசு நடக்கும் முறையிலிருக்கிறது. இதோ இந்தப் பெண்ணைப் பல வீரர்கள் சேர்ந்து தூக்கிச் செல்ல முயன்றார்கள். அவள் போரிட
முயன்றதால் ஒருவன் அவளை வாள் பிடியால் தலையில் அடித்தான். அவள் புரவியிலிருந்து சுரணையற்று விழுந்தாள். அவளை அப்படியும் தூக்கிச் செல்ல முயன்றார்கள். அந்தச் சண்டையில் இவள் ஆடையும் கிழிக்கப்பட்டது. இவள்
நிலையைப் பாருங்கள். இது தங்கள் அரசில் ஏற்பட்டிருக்கிறது” என்றான் தீப்சந்த்.
மகாராணி அந்தப் பெண்ணை உற்றுப் பார்த்தாள். அவள் கிடந்த இடத்தில் சென்று அவள் ஆடையையும் ஆராய்ந்தாள். இடைக்குக் கீழே இருந்த ஆடையின் ஒரு பகுதி கிழிந்திருந்தது. அதை யாரோ புரட்டி சாமர்த்திய மாகக் கிழிசல்
தெரியாமலும் அந்தப் பெண்ணின் உள்ளழகு தெரியாமலும் மறைத்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்ட ராஜமாதா, அந்த மனிதன் தீப்சந்தாகத்தான் இருக்க வேண்டும் என்ற முடிவுக்கும் வந்தாள். ராஜமாதா அந்தப் பெண்ணின்
அருகில் உட்கார்ந்து தலையின் குழலைப் பிரித்து சோதித்தாள்.
அத்தனை அடர்த்தியான கரிய குழலைக் கண்டு ராஜமாதா சிறிது பொறாமைகூட கொண்டாள். ஆனால் அந்தக் குழலுக்கு இடையில் கசிந்திருந்த ரத்தக் கரையைக் கண்டதும் சினத்தின் பிம்பமாகத் திகழ்ந்தாள், “ தீப்சந்த்! இந்த
அக்கிரமத்தைச் செய்தவர்கள் யார்? எங்கு இந்தச் சம்பவம் நடந்தது?” என்று வினவினாள்.
“அந்த இழிச்செயலில் வேறு யார் இறங்குவார்கள்? ராணாவின் வீரர்கள் தான்.” என்றான் தீப்சந்த் சினம் குரலில் துலங்க.
“யார் சந்தாவதர்களா, சக்தாவதர்களா!” என்று ராம்பியாரி வினவினாள்.
“சந்தாவதர்கள் தான். ராணாவின் மெய்க்காவலர்கள்” என்றான் தீப்சந்த். –
மகாராணி பிரமை பிடித்து நின்றாள். சந்தாவதர்களை விசாரிக்கும் திறன் தனக்கோ தன் மகனுக்கோ இல்லாததை உணர்ந்தாள். மகன் அரியணையைக் காத்து நிற்கும் சந்தாவதர்களில் யாரைத் தொட்டாலும் விபரீதம் ஏற்படும்
என்பதைப் புரிந்து கொண்ட மகாராணி பேசவும் முடியாமல் திகைத்தாள்.
தீப்சந்த் அவள் சிந்தனையைக் கண்டான்; முகத்தில் ஏற்பட்ட மருட்சியைக் கண்டான்; ராணாவின் முகத்தில் விரிந்த கிலியையும் கண்டான்; சோம்ஜியின் முகத்தில் விளைந்த பிணக்குகளையும் கண்டான். அந்த இடத்தில் இந்தப்
பெண்ணுக்கு நியாயம் கிடைக்காது என்ற முடிவுக்கும் வந்து, “மகாராணி! மொகலாயர்கள் தான் பெண்களைத் தூக்கிச் செல்லும் பழக்கமென்று கேள்விப்பட்டிருக்கிறேன். இப்பொழுது ராஜபுத்திரர் பண்பாடும் அந்த லட்சணத்துக்கு
வந்திருக்கிறது. நீதிக்கும் வீரத்துக்கும் பெயர்போன மேவாரில் இரண்டுக்கும் இடமில்லை போலிருக்கிறது. சரி நான் வருகிறேன்” என்று கூறி விட்டுக் கீழே கிடந்த பெண்ணை எடுக்க முயன்றான்.
அப்பொழுது ஒலித்தது ராஜமாதாவின் குரல், “நில் தீப்சந்த்” என்று.
பெண்ணை எடுக்கக் குனிந்த தீப்சந்த் எழுந்து நின்று ராஜமாதாவை ஏறிட்டு நோக்கினான். “மகாராணி! என்ன சொல்கிறீர்கள்? நியாயம் வழங்கப்போகிறீர்களா?” என்று வினவினான்.
மேவாரில் நியாயமில்லையென்று யார் சொன்னது?” என்று ராஜ தோரணையில் பேசிய ராஜமாதா, “இவளைப் பிடிக்க முயன்றவர்களை உன்னால் காட்ட முடியுமா?” என்று வினவினாள்.
“இருவரைக் காட்ட முடியும்” என்றான் தீப்சந்த்.
“மொத்தம் எத்தனை பேர்?”
“நான்கு பேர்.”
“மற்றவர்கள்?”
“இருவரை நான் கொன்றுவிட்டேன். மற்ற இருவரைக் கொல்ல முடியவில்லை.”
“ஏன்?”
“ஓடி விட்டார்கள்.”
இதைக் கேட்ட ராஜமாதா சினத்தின் வசப்பட்டு, “அவர்களை யார் உன்னைத் தப்பவிடச் சொன்னது?” என்று சீறினாள்.
“புரவியிலிருந்து மயக்கமாகிச் சரிந்துவிட்ட இந்தப் பெண்ணைப் பார்க்க வேண்டியதாயிருந்தது…” என்றான் தீப்சந்த்.
ராஜமாதாவின் முகத்தில் கவலை விரிந்தது. “தீப்சந்த் முட்டாள்! உன்னிடமிருந்து தப்பிய இருவரும் சந்தாவதர்களின் தலைவரிடம் விஷயத்தைச் சொல்லியிருப்பார்கள். சந்தாவதர்களின் தலைவர் சலூம்பிரா தமது வீரர்களுக்கு
இழைக்கப்படும் தீங்கைப் பொறுக்காதவர். இந்தப் பெண்ணை நான் பார்த்துக்கொள்கிறேன். நீ ஓடிவிடு” என்று கூறினாள்.
தீப்சந்த் மகாராணியை வெறுப்புடன் நோக்கினான், “மகாராணி! உங்கள் யோசனையை மானமுள்ள எந்த ராஜபுத்திரனும் ஏற்கமாட்டான். அதுவும் தீப்சந்த் ஓடுவதா!” என்று கூறி நகைத்தான்.
மகாராணியின் முகத்தில் திகில் விரிந்தது. “இவளைத் தூக்கிச் செல்ல முயன்ற நிகழ்ச்சி நடந்த இடம் எது?” என்று வினவினாள்.
“மோகினி வனம்” என்றான் தீப்சந்த்.
“அங்கு இருப்பது சலூம்பிராவின் தம்பி அல்லவா!” என்று வினவினாள் ராம்பியாரி.
“கவலைப்படாதீர்கள். நான் கொன்ற இருவரில் அவனும் ஒருவன்” என்றான் தீப்சந்த்.
“தீப்சந்த்! சொல்வதைக் கேள். உதயபூரை விட்டு ஓடிவிடு. சலூம்பிரா தனது தம்பியின் மரணத்துக்குப் பழிதீர்க்காமல் உறங்கமாட்டார்” என்றாள் ராஜமாதா…
“நன்று சொன்னீர்கள் மகாராணி” என்று கூறிக் கொண்டே உருவிப் பிடித்த வாளுடன் சலூம்பிராஉள்ளே நுழைந்தார். அவருக்குப் பின்னால் நான்கு வீரர்களும் உருவிய வாட்களுடன் உள்ளே நுழைந்தார்கள்.