Moongil Kottai Ch1 | Moongil Kottai Sandilyan | TamilNovel.in
மூங்கில் கோட்டை – சாண்டில்யன்
அத்தியாயம் – 1. கதவு திறந்தது! நிலவு தெரித்தது!
Moongil Kottai Ch1 | Moongil Kottai Sandilyan |TamilNovel.in
பார் புகழும் புலவருக்கெல்லாம் புகலிடமாகவும் சீர்மிகு கவிதைகளைச் சீர்தூக்கித் தகுதி சொல்லும் சங்கப் பலகை மிதக்கும் பொற்றாமரைப் பொய்கையைப் பெற்றெடுத்த புண்ணிய பூமியாகவும், அங்கயற் கண்ணியின்
அருள்விழி நோக்கால் அபரிமிதமான செல்வம் பெற்ற சிறப்புத்தலமாகவும், கிறிஸ்து தோன்றி இருநூற்றுப்பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் அரசர் எழுவரின் புறமுகுது கண்ட இளங்கோமானொருவனை அரியணையில்
கொண்டதால் அவனியிலே பெரும் வீரத்தளம் எனப் போற்றப்பட்டதுமான மதுரை மாநகரை எல்லையிலிருந்தே ஏறெடுத்து நோக்கிய வீரனான இளமாறனின் கூரிய விழிகளில் வியப்பு மிதமிஞ்சி மண்டிக் கிடந்தது.
தொலை தூரத்திலேயே பெரியதாகத் தெரிந்த அந்த மாநகரத்தின் மாளிகை மகுடங்கள் கிட்ட நெருங்க நெருங்க ஆகாயத்தை அளாவி நின்றதையும், தொலைவிலிருந்த பாதுகாப்பைவிட நகர எல்லைப் பாதுகாப்பு அதிக பலத்துடன்
இருந்ததையும் பார்த்த இளமாறன், பத்தொன்பது ஆண்டுகள் பூர்த்தி பெற்ற பாண்டியன் நெடுஞ்செழியன் அத்தனை சிறுவயதில் பாராளும் வித்தையை எப்படிப் பயின்றான் என்று தன்னைத்தானே பலமுறை கேட்டுக் கொண்டாலும்
விடை காணாததால், தான் ஊர்ந்து வந்த புரவியைச் சரேலென நிறுத்தி மதுரை மாநகரின் அழகைக் கண்களால் பருகலானான்.
அப்பொழுது அந்திவேளை நெருங்கிவிட்டதால் காதலனின் முதல் முத்தம் பெற்ற கன்னிப் பெண்ணின் கன்னம்போல் வானம் சிவந்து கிடந்தது. அப்படி அடைந்த நாணத்தை மறைக்க இஷ்டப்படும் பருவப் பெண் தாயிடம் சென்று
முகத்தை மறைத்துக் கொள்ளுவது போல வானத்தின் சிவந்த பகுதி தூரததே மதுரையன்னையின் மடிக்குள் இணைந்து கிடந்தது. அந்தக் கன்னியின் நாணத்தைக் கண்டு எள்ளி நகையாடுவன போல மாளிகை மகுடங்களின்
பொந்துகளிலிருந்து தலை நீட்டிய பட்சி ஜாலங்கள் சப்தித்தன. அந்த நகைப்பில் பங்குகொள்ள இஷ்டப்பட்ட மற்றும் சில பறவைகள் வானில் கூட்டமாய்ப் பறந்து திடீரென ஜில் லென்று மாளிகைகளின் உச்சிகளில் இறங்கி தங்கள் சிவந்த
வாய்களைத் திறந்து பலப்பல விதமாகக் கூவத் தொடங்கின.
காதல் கொண்ட கன்னியரை எள்ளி நகையாடுவது அவர்கள் நாணத்தையும், சங்கடத்தையும், மிகைப்படுத்தி வேதனையையும் அளிக்குமாகையால், அத்தகைய செயல்களில் ஈடுபடுவதை எச்சரிக்க முற்பட்டனபோல் பாண்டிய
மன்னனின் மாளிகையிலிருந்து இசைக் கருவிகள் சில கம்பீரமான இசையொலிகளைக் கிளப்பின. காலத்தால் அழியும் காதலுக்கும் மேற்பட்ட காதலொன்றுண்டு என்பதை பறையறைவிப்பனபோல் அங்கயற்கண்ணியின்
ஆலயத்திலிருந்து புலவர்கள் இசைத்த தெய்வ கீதமும் பெரிதாகக் கிளம்பி மதுரை யம்பதியின் வானத்திலே தவழ்ந்து திசையெங்கும் பரவியது.
அந்தத் தெய்வ கீதத்துக்குத் தாளம் போடுவது போல் சலசலப்புடன் மண்ணை அரித்து ஓடிக்கொண்டிருந்த வைகை மாநதியில் மறையவர் பலர் மாலைக் கடன்களை முடித்துக் கைகளில் நீரை எடுத்து மறையும் ஆதவனை
அசுரர்களிடமிருந்து விடுவிக்க மந்திர வாளிகளை வீசிக் கொண்டிருந்தனர். ஆற்று நீரின் மேல் பகுதியில் மறையவர்களிடமிருந்து பெரும்பாலும் தள்ளி நிராடிக் கொண்டிருந்த பருவ மங்கையர்கள் தங்கள் பொன்னிற மேனிகளுக்கு
மஞ்சள் பூசியதால் ஏற்பட்ட கைவளை ஒலிகளும், மார்பில் ஆடிய அணி மணியாரங்களின் ஒலிகளும் கலந்து மறையவரின் மந்திரோச்சாடனத்தைச் சிறிதும் காதில் விழாமல் அடிக்கவே செய்தன. இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டே
மதுரையின் எல்லையாகிய வைகையாற்றங் கரையில் நின்ற இளமாறன் இருடிகளின் தவத்தைக் கெடுக்க இந்திரன் ஏன் மங்கையரை ஏவினான் என்பதைப் புரிந்து கொண்டான்.
நீராடிய அந்த மங்கையர் அரித்து ஓடிய நீரில் முழுதும் முழுக முடியாததால் சிலர் தரையிலேயே உட்கார்ந்து வெண்கலக் கிண்ணங்களால் நீரை எடுத்துத் தலையில் ஊற்றிக் கொண்டதால் ஆடைகள் பாதி நனைந்தும்
நனையாமலிருந்ததையும், இரண்டாவது கிண்ணம் ஊற்றப்படுமுன் அந்த மங்கையர் ஒடுங்கி உட்கார்ந்து சீலைகளை மெல்லக் கசக்கி நனைத்துக் கொண்டதையும் கண்ட இளமாறனின் உணர்ச்சிகள் கட்டுக் கடங்காமல் போய்க்
கொண்டிருந்தன.
பருவத்தை அடையாமல் பருவத்தை எட்டிப் பர்த்துக் கொண்டிருந்த சிறுமிகள் பலர் அரித்து ஓடிய நீரில் மல்லாந்து படுத்துக்கொண்டு வைகையின் குளிர்ந்த நீரை அனுபவித்ததன்றி வாயிலும் நீரை உறிஞ்சி வானம்போல் மேலே ஊதி
இன்பநகை நகைத் தார்களானாலும் பருவத்தைத் தாண்டிய சில நாரிமணி ள் அந்தப் பெண்கள் ஊதிய நீர்த்திவலைகள் அவர்கள் மார்புகளின் மீதே மீண்டும் விழுவது கண்டு ‘சே! சே! எத்தனை சுத்தக் குறைவு!’ என்று அலுத்துக்
கொண்டனர். ஆனால், சுத்தக்குறைவை எண்ணிப் பார்க்கும் வயதை எட்டாத அந்த இளம்பெண்கள் பெரியவர்களின் அலுப்பை லட்சியம் செய்யாமலே வைகையின் மடியிலே படுத்து விளையாடினர். அந்த விளையாடலைக் கண்டு மகிழ்ந்த
வைகைத் தாய் மீண்டும் மீண்டும் தனது தண்புணலை அந்தப் பெண்கள் மீது பாய்ச்சிக் கொண்டிருந்தாள். இப்படி அந்தப் பலதரப்பட்ட பெண்களின் நீரோட்டத்தின் போது களையப்பட்ட நறுமலர்கள் பல, நீரோட்டத்தில் கலந்து ஓடிய
வைனக நீரோட்டத்தைப் பூ ஓட்டமாகச் செய்திருந்தது. அந்தப் பூ ஒட்டத்தின் விளைவாக மறையவர் கையில் எடுத்த மந்திர நீரிலும் இரண்டொரு புஷ்பங்கள் இருந்தாலும் கண்மூடி மந்திர மோதிய மறையவர் அந்த அநாசாரத்தைப்
பார்க்காமலே ஆதவனை நோக்கி நீர் வீசிவிட்டதைக் கவனித்த இளமாறனின் இதழ்கள் இளநகை கொண்டன. அசுரரைக் கொன்று ஆதவனை விடுவிக்கப் போவது. அந்தணர் ஓதிய மந்திர நீரா, அந்த நீருடன் சென்ற மலர்க்கணைகளா?”
என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டே இளமாறன் வைகை நதியின் அந்த அந்திக் காட்சியைக் கண்டு பெரும் பிரமிப்புக்குள்ளாகி நின்றான்,
மதுரையை அணைத்தோடிய அந்த வைகையில் அத்தனை அழகிருந்ததன்றி அந்த அழகின் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததைக் கவனித்தான் இளமாறன். வைகை ஆறங்கரை ஓரமாகவும், அதன் மீது இரண்டோர்
இடங்களில் நிறுவப்பட்டிருந்த மூங்கில் பாலங்கள் மீதும் வீரர்கள் பலர் காவல் புரிந்திருந்ததைக் கண்ட இளமாறன் இங்கு அரச நீதிக்குப் புறம்பாக எதுவும் நடக்க இயலாதென்ற முடிவுக்கும் வந்தான். வைகை மீது கிழக்கிலும் மேற்கிலும்
நிறுவப்பட்டிருந்த இரண்டு மூங்கிற் பாலங்களின் கீழ் பகுதியில் பெரு மூங்கில்கள் வெளிப்படையாகத் தெரிந்தனவே யொழிய மேல் பகுதியில் களிமண்ணடைத்துச் செம்மண் நிறுவிச் சாணமும் மெழுகப்பட்டிருந்ததால் பாலம் கல்
கட்டடத்தைவிடக் கெட்டிப்பட்டு ஆயுதவண்டிகளும் புரவி வீரர் கூட்டமும் இரதங்களும் செல்லக் கூடிய முறையில் இருந்ததைப் பார்த்த இளமாறன், அந்த இரண்டு பாலங்களையும் தாண்டி நகருக்குள் நுழைவது அத்தனை
எளிதல்லவென்பதை பாலங்களைக் கண்ணுக்குக் கண் காவல் செய்து கொண் டிருந்த வீரர் கூட்டத்திலிருந்து புரிந்து கொண்டான். தவிர பாலத்தைத் தாண்டி வெளியிலிருந்து ஊருக் குள்ளும், ஊரிலிருந்து வெளியேயும் சென்று
கொண் டிருந்த அணிவகுத்த காலாட் படையினர் வரிசை களும் நகரத்தைத் திடீரெனத் தாக்குவதோ அசப்பில் வீழ்த்த முயலுவதோ, பெரும் விபரீதத்தையே விளைவிக்கும் என்பதை அறிவுறுத்தின.
வைகையிலிருந்தும் வைகையின் இரு மூங்கிற் பாலங்களிலிருந்தும், கண்களை மதுரை மாநகரின் பெரும் கட்டடங்களை நோக்கித் தூக்கிய இளமாறன், வான வழியாக வரும் வசதி வாய்ந்த தெய்வக் கூட்டங்கள் கூட, பாண்டியன்
நெடுஞ்செழியன் அறியாமல் அந்த நகருக்குள் தலைகாட்ட முடியாதென்பதை சந்தேகமற உணர்ந்து கொண்டான். நகரமெங்கணும் எழுந்து நின்ற பெரும் மாளிகைகளின் மகுடங்களையும் மீறி வானத்தைத் தொடுவனபோல் நின்ற சுமார்
பன்னிரண்டு காவற்கூட உப்பரிகைகள் வரிசையாக மேலிருந்து கீழாக மும்மூன்று பெரும் பிறைகளை உடையவனாக இருந்ததையும், அந்தப் பிறைகளில் காவலர் பலர் மதுரையின் எல்லைகளில் கண் வைத்து காவல் செய்து வந்ததையும்
புள்ளி புள்ளிகளாகத் தெரிந்த உருவங்களிலிருந்து ஊகித்துக்கொண்டான் இளமாறன்.
அந்தக் காவற் கூட உப்பரிகைகளின் உச்சியிலிருந்து கண்காணித்து வரும் வீரர்களின் பார்வையிலிருந்து அரைக்காதத்திற்கு அப்புறம் வரும் எந்த எதிரிப் படையும் தப்ப முடியாதென்பதையும் உணர்ந்து கொண்ட அந்த வாலிபன்,
அப்படி எதிரிப் படை ஏதாவது தென்பட்டால் நிமிட மாத்திரத்தில் மதுரையின் பெரும் வாயில்களை அடைத்துவிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததையும், தூரத்தே தெரிந்த முதல் வாயிலிலிருந்தே தெரிந்து கொண்டான். அப்படி ஏதாவது
எதிரிகள் வரும் பட்சத்தில் வைகையின் மூங்கில் பாலங்களை உடைத்துவிட முடியுமென்றும், மணலில் ஓட முடியாத எதிரி வீரர்களை மதிற்சுவர்களில் இருந்து வேலும், அம்பும் வீசி மாய்த்துவிட முடியுமென்றும் அப்படியும் மாய்த்து
விடாமல் மீறி எதிர்க்கரையை யடைபவர்கள் மதில் முனையில் காவல் புரியும் வீரர்களால் எதிர்க்கப்படுவார்கள் என்பதையும் மதிலின் மேல்புறத்தையும் கீழ்ப்புறத்தையும் பார்த்துப் புரித்து கொண்ட இளமாறன், ‘இத்தனை
பாதுகாப்புள்ள நகரத்தில் நான் என்ன செய்ய முடியும்? எதற்காக என்னை இங்கு வரச் சொன்னார்கள்?’ என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டான்.
அத்துடன் தனக்கு வந்த ஓலையையும், கச்சையிலிருந்து எடுத்து புரவியில் உட்கார்ந்தபடியே படித்து பார்த்தான். ‘அரச வீதிக்கு முன்னாலுள்ள வணிகர் வீதியில் மகர மாளிகைக்கு வரவும், விஷயம் முக்கியம்’ என்ற இரண்டே வரிகள்
அந்த ஓலையில் இருந்தது. சாதாரண ஓலையாய் இருந்தால் அதைக் கிழிததெறிந்திருப்பான் இளமாறன். ஆனால், அதில் சேர நாட்டு அரச முத்திரை பொறிக்கப்பட்டிருந்தது. வில்லும் வேலும் பொறிக்கப்பட்டிருந்த முறையை மீண்டும் அந்த
அந்தி வேளையின் மங்கிய ஒளியில் ஆராய்ந்த இளமாறன், “சந்தேகமில்லை, இது அரச முத்திரை தான். அப்படியானால் அரசர்…” என்று ஏதோ தனக்குள் சொல்லிக் கொள்ளப் போன இளமாறன். ‘இருக்காது. இருக்க முடியாது. அரசர்
இருக்குமிடந்தான் யாருக்கும் தெரியவில்லையே’ என்று தானாக ஏதோ தீர்மானம் செய்து கொண்டு மதுரையின் மூங்கிற் பாலத்தை நோக்கித் தன் புரவியை நடத்தினான்.
புரவியில் மிக அலட்சியமாகவும் கடிவாளக் கயிற்றைக் கூடச் சரியாகப் பிடிக்காமலும் உட்கார்ந்து சென்ற அந்த வாலிபனைக் கண்டு, நீராடிவிட்டுக் கரையோரமாகச் சென்ற மங்கையர் பலரும் தங்களுக்குள் பலப்பல விதமாகப் பேசிக்
கொண்டனர். ‘எத்தகைய இளைஞன்! என்ன அழகு இவனுக்கு’ என்றாள் ஒருத்தி. ‘ஊருக்குப் புதியவன் போலிருக்கிறது!’ என்றாள் மற்றொருத்தி, ‘ஊருக்கென்ன? பாண்டிய நாட்டுக்கே புதியவனாயிருக்க வேண்டும்’ என்றாள்
இன்னொருத்தி. ‘இல்லாவிட்டால் மதுரையில் நுழைவது சுலபமென்று நினைத்து ஆணவத்துடன் புரவியில் அமர்ந்திருப்பானா இவன்?’ என்று கேட்டாள் வேறொருத்தி. இப்படி கேள்விகள் பலபடி அவர்களிடமிருந்து வந்தாலும், அவர்கள்
அனைவர் மனத்திலும் அந்த வாலிபனின் அழகும் கம்பீரமும் ஊடுருவி நின்றன.
சேர நாட்டவனான இளமாறனுக்கு வயது இருபது ஆகியிருந்தும் முகத்தில் அந்த வயதுக்குண்டான அத்தாட்சி இல்லாமல் குழந்தையின் பால் முகம்போல அவன் வதனம் காட்சி அளித்தது. அவனுடைய செவ்விய இதழ்கள் பெண்களின்
இதழ்கள் போல மென்மையாகவே இருந்ததன்றி மேல் உதட்டின் மேல் உதயமாகிக் கொண்டிருந்த அரும்பு மீசையும் அதிக வீரத்தைக் காட்டவில்லை. இருப்பினும் இதழ்களின் கோடியில் சதா தவழ்ந்து கொண்டிருந்த ஏளன நகையும்,
கண்களில் விளையாடிக் கொண்டிருந்த விஷமச் சிரிப்பும் அவன் அப்படி ஒன்றும் சாதாரணமாக வசப்பட்டுவிடக் கூடியவனல்லன் என்பதை நிரூபித்தன. அவனது சிறிய இடையில் தொங்கிக் குதிரையின் இடப் பக்கத்தில் அடிக்கடி
உராய்ந்த நீண்ட பெரும் வாளும் சற்று அச்சத்தையே தந்தது. குதிரையில் எந்தச் சமயத்திலும் வீழ்ந்துவிடக் கூடிய நிலையில் உட்கார்ந்திருப்பவன் போல் அந்த வாலிபன் தோன்றினாலும் அவன் கால்களிரண்டும் புரவியின் வயிற்றுப்
புடைப்பில் அணைத்திருந்த விதத்தைப் பார்த்த வழிப்போக்கர்கள் அவன் புரவிச் சவாரிக்குப் புதியவனல்லன் என்பதைப் புரிந்து கொண்டார்கள்.
இப்படியாகப் பலரிடை பல கருத்துக்களைக் கிளப்பிவிட்டுக் கொண்டும், நாற்புறமும் சுழன்ற தன் பார்வையால் மதுரை மாநகரின் அருள் பலத்தையும், பொருள் பலத்தையும், படை பலத்தையும் எடை போட்டுக் கொண்டும்
புரவியில் சென்ற இளமாறன், மெள்ள மெள்ள வைகை ஆற்றின் மேற்பகுதியிலிருந்த மூங்கில் பாலத்தை நெருங்கியதும் காவல் வீரர்களால் நிறுத்தப்பட்டான். அங்கிருந்த காவலர் தலைவன் இளமாறன் ஊர், பெயர் முதலியவற்றை
விசாரித்துக் கொண்டதும் மேலே செல்ல உத்தரவிட்டான். இளமாறனும் பொய்யேதும் சொல்லாமல் உண்மையே சொன்னான். ‘நான் சேர நாட்டவன். என் பெயர் இளமாறன். அழைப்பின் மேல் வணிகர் வீதியில் உள்ள மகர மாளிகைக்குப்
போகிறேன்’ என்று காவலரிடம் கூறியதும் காவலர் அவனுக்கு மிகுந்த மரியாதையுடன் வழிவிட்டதைக் கண்ட இளமாறன், ‘இத்தனை கெடுபிடியிலும் காவல் பலத்திலும் மதுரை வீரர்கள் மரியாதையை மட்டும் இழக்கவில்லை.
காரணமில்லா மலா பண்டைத் தமிழ் மொழி இங்கு வளர்ந்தது?’ என்று பாராட்டிக்கொண்டே தன்னை அழைத்தவர்கள் கூறிய மாளிகையைத் தேடிச் சென்றான்.
மதுரைக்கழைத்தது யாரென்று அவனுக்குத் தெரியாது. ஓலையை அளித்தவன் கருவூர் வஞ்சியில் இருந்த இளமாறன் இல்லத்துக்கு இரவில் வந்தான். திண்ணையில் உறங்கியவனைத் தட்டி எழுப்பினான். ஓலையைத் தந்து இரண்டே
வார்த்தைகளில் சொன்னான் ‘புறப்படு மதுரைக்கு’ என்று. உறக்கம் விழித்த இளமாறன் உள்ளே சென்று விளக்கொன்றைக் கொண்டு வந்து ஓலையைப் படித்தான். அதிலும் வாக்கியங்கள் கச்சிதமாக இருந்தன. அரச வீதிக்கு
முன்னுள்ள மகர மாளிகையில் சந்திக்கவும். விஷயம் முக்கியம்’ என்ற வரிகளை இருமுறை படித்த இளமாறன், “யாரைச் சந்திக்க வேண்டும்? எதற்கு?” என்று வினவினான் வந்தவனை. சொல்ல எனக்கு அதிகாரமில்லை” என வறட்டுக்
குரலில் வந்தது பதில்.
“அப்படியானால் நான் ஏன் இந்த ஓலைக்குப் பணிய வேண்டும்?” என்று கோபத்துடன் வினவினான் இளமாறன்,
வந்தவன் பதிலுக்கு ஓலையின் அடியில் இருந்த சேரநாட்டு அரச முத்திரையைச் சுட்டிக் காட்டினான்.
‘நான் போகாவிட்டால்” இளமாறன் எரிச்சலுடன் கேட்டான்.
“அரசனுக்குத் துரோகம் செய்த குற்றத்திற்கு ஆளாவாய்” என்றான் வந்தவன்.
கடமையின் வழி இளமாறனுக்குத் தெளிவாகத் தெரிந்தது. சரி, போகிறேன். அரச முத்திரையின் ஆணையை மீற முடியாது” என்று முடிவில் ஒப்புக்கொண்டான்.
“இந்த ஓலையுடன் நேராக மதுரை வணிகர் வீதியை அடைந்ததும், அந்த வீதியின் கோடியில் பெரிய மாளிகை இருக்கும். அதன் மகுடம் பெரும் கடல் மீனைப்போல் அமைக்கப்பட்டிருக்கும். அத்தகைய மீன் மகுடமுள்ள மாளிகைகள்
மதுரையில் இரண்டே தான் உண்டு. ஒன்று அரச வீதியில் உள்ள நெடுஞ்செழியன் மாளிகை. இன்னொன்று வணிகர் வீதியிலுள்ள இந்த மாளிகை” என்று விளக்கினான் வந்தவன்.
“இந்த மாளிகையில் யார் இருப்பது?”
“சொல்வதற்கில்லை”
“நீ யார்?”.
“அதையும் சொல்வதற்கில்லை.”
“சொல்வதற்கு வேறு ஏதாவது இருக்கிறதா?”
“இருக்கிறது கேள். மகர மாளிகையையடைந்ததும் அதன் பிரதான வாயிலுக்குள் நுழையாதே. பக்க வாட்டில் சென்று திட்டி வாயிலை இருமுறை தட்டிக் காத்திரு. கதவு திறந்ததும் அழைப்பவரைத் தொடர்ந்து செல்” என்று முடித்த அந்த
மனிதன் திடீரென ஏதோ யோசித்துவிட்டு, “இதோ பார்! விளக்கு வைத்து ஆறு நாழிகைக்குப் பிறகு அந்த மாளிகைக்குப் போ. அதற்கு முன்பு போகாதே” என்று எச்சரிக்கையும் செய்து போனான்.
மதுரையை அடைந்த இளமாறன் அந்த மனிதன் கூறியபடியே நடந்து கொண்டான். அவன் பல காவல்களுக்குப் பதில் சொல்லி மதுரைக்கு உள்ளே நுழைந்த போது விளக்குகள் வைத்து இரண்டு நாழிகைகளே ஆகியிருந்ததால்
ஆரம்ப வீதியிலிருந்த சத்திர மொன்றில் தங்கிய இளமாறன், சத்திரத்திலேயே நீராடி உடை மாற்றிக் கொண்டு நெற்றியில் வீரசந்தனம் அணிந்து சிறிது ஆகாரமும் உட்கொண்டு புரவியை சத்திரக்காரனிடமே ஒப்படைத்துக் கால்நடையாகவே
புறப்பட்டு வணிகர் வீதியை அடைந்தான். வணிகர் வீதியில் மகர மாளிகையை அடைவதில் எவ்விதக் கஷ்டமும் ஏற்படவில்லை அந்த வாலிபனுக்கு. முதல் வீதியில் வரும்போதே அடுத்த வீதியில் பெரிதாகத் தெரிந்தது கடல் மச்ச மகுடம்.
அந்த அடையாளத்தைப் பார்த்துக்கொண்டு அந்த மாளிகையை அடைந்த இளமாறன் அந்த மாளிகையில் பெரும் கதவுகள் மூடப்பட்டு இருப்பதையும், அந்த மாளிகையில் ஆளரவம் ஏதுமே இல்லாததையும் கவனித்து ஆச்சரியப்பட்டான்.
‘நகரம் முழுவதும் அல்லோலகல்லோலப்படும் இந்தச் சமயத்தில் இந்த மாளிகையில் ஏன் இத்தனை அமைதி’ என்று எண்ணினான். அந்த எண்ணத்தினாலும் மாளிகையில் நிலவிக் கிடந்த விபரீத நிசப்தத்தினாலும் பலத்த சந்தேகத்துடன்
பக்கத்திலிருந்த திட்டி வாசலை நோக்கிச் சென்றான். வழக்கப்படி சிறிதாக இருக்க வேண்டிய திட்டி வாயில் பெரிதாக இருப்பதும் அவனுக்கு அவநம்பிக்கையை விளைவித்தது.
இருப்பினும் தனக்குக் கருவூரில் கிடைத்த கட்டளைப்படி அந்த வாயிலின் கதவை இருமுறை தட்டிவிட்டு நின்றான். சில விநாடிகளே பறந்ததும் அந்த வாயிற்கதவு திறந்தது. அதைக் கண்டு இள மாறன் கண்கள் மிதமிஞ்சிய வியப்பால்
மலர்ந்தன. *இத்தகைய மர்ம மாளிகையில் இப்படியும் ஒரு தோற்றமா?’ என்று பிரமித்தான் பல விநாடிகள் அந்தச் சேர நாட்டு வாலிபன்.
அழகெலாம் திரண்டது போலும் இருளைக் கிழித்துக் கொண்டு வந்த நிலவு போலும் நின்றாள் ஒரு காரிகை. இளமாறன் கண்களைக் கவர்ந்தது அந்த நிலவு! நாசியைக் கவர்ந்து மயக்கத்தை விளைவித்தது அவள் முன்
கொண்டையில் சுருண்டு கிடந்த மல்லிகைச் சரம். அது தான் அவர்கள் முதல் சந்திப்பு. ஆனால் அந்தச் சந்திப்பு பிற்காலத்தில் அவனை ஆழ்த்தி விட்ட ஆபத்துக்கள் எத்தனை! எத்தனை!