Naga Deepam Ch12 | Naga Deepam Sandilyan | TamilNovel.in
நாகதீபம் – சாண்டில்யன்
அத்தியாயம் – 12. கண்களின் கதை
Naga Deepam Ch12 | Naga Deepam Sandilyan | TamilNovel.in
வாழ்வின் இனிப்பான காலங்களில் யாரும் நகைக்கலாம். வாழ்வின் கசப்பான காலங்களில் ஞானியோ அல்லது வீரனோதான் நகைக்க முடியும். இனிப்பான நகைப்பில் உல்லாசமிருக்கும். ஆழமிருக்காது. கசப்பான நகைப்பில்
பொருளிருக்கும். ஆழமிருக்கும். அந்தச் சிரிப்பின் தன்மையிலே ஒரு புதுமையிருக்கும். அத்தகைய ஒரு புதுமையை கண்டு தான் ராஜபுத்திரி, “ஏன் நகைக்கிறீர்கள்?” என்று ஹரிதாஸ் ஜாலாவை அந்தச் சோலையின் முகப்பில் உட்கார்ந்த
பண்ணம் வினவினாள்.
அவன் எதிரேயிருந்த பாலைவன மணலை வெறித்துப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தது, திரும்பிப் பாராமலே தான் பின்னால் வந்ததை அறிந்து “நில் அப்படியே” என உத்தரவிட்டது, பிறகு தன்னை அருகில் உடகாரச் சொல்லி இடம்
காட்டியது, எல்லாமே அவளுக்கு விசித்திரமாயிருந்தது. அந்த வீரன் அருகில் உட்கார்ந்தபோது எட்டிப் பிடிக்க முடியாத, லேசில் அறிவினால் உணர முடியாத ஒரு பெரும் சக்தியின் அருகில் தான் உட்கார்ந்திருந்த உணர்வு மட்டும் ஏற்பட்டது
ராஜபுத்திரிக்கு. முநதின மாலையில் அந்த வாலிபனைச் சந்தித்ததிலிருந்து அவன்மீது கோபமும் தாபமும் வெறுப்பும் தனக்கு ஏற்பட்டாலும், அவனைப் பற்றிப் பூரணமாக ஏதும் தன்னால் தெரிந்து கொள்ள முடியவில்லையென்பதை
மட்டும் உணர்ந்து கொண்ட ராஜபுத்திரி, வியப்பும் குழப்பமும் கலந்த பார்வையை அவன் மீது வீசினாள். ஆனால் அவனோ பக்கத்தில் உட்கார்ந்த பின்னும் அவளைத் திரும்பிப் பார்க்கவில்லை. பாலைவன மணலையே வெறித்து
நோக்கிக் கொண்டிருந்தான்.
அவள் தான் அவனைப் பேசத் தூண்டி “நான் சற்று முன்பே கேட்டேனே-” என்று ஏதோ சொல்ல முற்பட்டாள்.
“என்ன கேட்டீர்கள்?” என்று வினவினான் ஹரிதாஸ், மணல் மீதிருந்த கண்களை எப்புறமும் அகற்றரமலே.
“உங்களுக்குப் பின்னாலும் கண் உண்டா என்று கேட்டேனே” என்றாள் ராஜபுத்திரி.
“ஆம். கேட்டாய்” அவசியத்தை முன்னிட்டுப் பதில் சொல்வதுபோல் சொன்னான் ஹரிதாஸ்.
“என் உடலின் ஒவ்வோர் இடத்திலும் கண் உண்டு என்று பதில் சொன்னீர்களல்லவா?” என்று மறுபடியும் வினவினாள் ராஜபுத்திரி.
“ஆம் சொன்னேன்” சம்பிரதாயமான பதிலே வெளி வந்தது அந்த வாலிபனிடமிருந்து.
“பிறகு நகைத்தீர்களே?”
“ஆம் நகைத்தேன்.”
“ஏன் நகைக்கிறீர்கள் என்று கேட்கவில்லையா?”
“கேட்டீர்கள்.”
கண்களை நினைத்து நகைப்பதாகச் சொன்னீர்கள்! பிறகு அதில் வாழ்வும் இருக்கிறது, நாசமும் இருக்கிறது என்றீர்கள். உங்கள் வாழ்வும் அத் தன்மையது என்று கூறினீர்கள், எல்லாம் ஒரே புதிராக இருக்கிறது எனக்கு, கண்களுக்கும்
வாழ்வுக்கும் நாசத்துக்கும் என்ன தொடர்பு? எனக்கு எதுவுமே புரியவில்லையே!” என்றாள் ராஜபுத்திரி. அவள் பெரிதும் குழம்பியிருந்தது அவள் குரலிலிருந்தே தெரிந்தது அந்த வாலிப வீரனுக்கு. தெரிந்தும் அவன் உடனே பதிலேதும்
சொல்லவில்லை. நீண்ட நேரம் மௌனமாகவே உட்கார்ந்திருத்தான். பிறகு அவன் பேச முற்பட்ட போதும் எதிரேயிருந்த பால் மணலை வெறித்துப் பார்த்துக்கொண்டே பேசினான். அவன் குரலில் தீவிரமான உறுதியிருந்தது. அந்த
உறுதியுடன் துயரமும் கலந்திருந்தது. அத்தனை துயரத்திலும் ஓர் அலட்சியமும் ஊடுருவி நின்றது, “ராஜபுத்திரி கண்களுக்கும் வாழ்வுக்கும் நாசத்துக்கும் என்ன சம்பந்தமிருக்கிறது என்று கேட்கிறீர்களல்லவா? பெரும் சம்பந்தமிருக்
கிறது. இதை சாஸ்திரமும் ஒப்புக் கொள்கிறது. வாழ்வின் அனுபவமும் ஒப்புக் கொள்கிறது. போயும் போயும் சாஸ்திரம் என்பது என்ன? அறிவாளிகள் வாழ்க்கை அனுபவங்களின் கோப்புதானே சாஸ்திரம்…” என்று ஏதோ
பேசிக்கொண்டே போனான் ஹரிதாஸ் ஜாலா. அவனை ராஜபுத்திரி – தடையேதும் செய்யவில்லை. அவன் பேச்சில் ஆழ்ந்த பொருளிருந்ததைக் கவனித்தாள் அவள். அவன் குரல் அவள் இதயத்தருகே சென்று ஒலித்தது. இதயத்தை மெள்ள
மெள்ளத் தொட்டுக் கொண்டும் இருந்தது.
ஹரிதாஸ் ஜாலா மேலும் சொன்னான்: “நான் வேதாந்தமாகவே பேசவில்லை ராஜபுத்திரி! பேச எனக்கு உரிமையும் இல்லை. வாழ்வின் நாசகாலத்தில் வேதாந்தம் உருவாகிறது. உண்மைதான். ஆனால் புறவாழ்வை மட்டுமின்றி அக
வாழ்வையும் நாசப்படுத்திக் கொண்டவன் வேதாந்தம் பேசுவதில் பொருளில்லை! ஆகையால் உண்மையைச் சொல் கிறேன் கண்கள் தாம் வாழ்வுக்கும் நாசத்துக்கும் காரணம், கண்களின் சந்திப்பில் காதல் பிறக்கிறது. கோபம்
பிறக்கிறது. இன்னும் நல்லவை பலவும் கெட்டவையும் பிறக்கின்றன. மனிதர்களின் தராதரத்துக்கும் உள்ளக் கிடக்கைக்கும் தக்கபடி. என் கண்களைப் பற்றி நான் என்ன சொல்லட்டும்? அவற்றைப் பற்றிப் பல கதைகள் உண்டு! என் சிறிய
வயதில் என் தாய் அதைப்பற்றி அதிகமாகப் புகழ்ந்தாள். என் கண்களில் அழகு சொட்டுவதாகச் சொன்னாள். ‘அந்தக் குழந்தையின் கண்களைப் பார். எத்தனை குறுகுறு வென்று இருக்கின்றன’ என்று பக்கத்து மாளிகைப் பெண்கள்
சொன்னார்கள். மாலையில் என் தாய் திருஷ்டி கழித்தாள் எனக்கு. தாய்ப்பாசம் அப்படிச் செய்யச் சொல்கிறது என்று நினைத்தேன். ஆனால் வயது வந்தபிறகு என் வாளாசிரியரும் வில்லைப் பயில் வித்தவரும் அதையே சொன்னார்கள்.
இவன் கண்களிலிருந்து எதுவும் தப்பாது! என்ன குறி என்ன குறி என்று வியந்தார்கள். இப்படி எல்லோரும் சொல்லிச் சொல்லிக் கண்களைப் பற்றிய பெருமையுடன் வளர்ந்தேன். அதனால் அகங்காரம் ஏற்பட்டது எனக்கு. அகங்காரம்
என் கண் களுக்கு அலட்சியப் பார்வையை அளித்தது. பிறகு நான் ராணாவின் தளபதிகளிலே ஒருவனான பின்பு, அந்த அலட்சியப் பார்வையையும் எல்லோரும் புகழ்ந்தார்கள். அதை வீரனின் லட்சியம் என்று ராஜபுதனக் கவிகள்
கவிதை புனைந்தார்கள். இப்படி எல்லோரும் சொல்லச் சொல்லக் கண்களைப் பெரிதும் சாணை பிடித்துக் கொண்டேன் நான். உணர்ச்சிகள் கூர்மையுற்றன. என் பின்னால் புல்லசைந்தாலும் உணர்ச்சிகளின் மூலம் அறியும் சக்தியைப்
பெற்றேன். அதைப் பல போர்களில் நிரூபிக்கவும் செய்தேன். என்னைப் பின்னால் அணுகும் வீரர்களின் ஆயுத அசைவைக்கூட என்னால் பார்க்க முடிந்தது. அப்படி உடலெங்கும் கண்களை உண்டாக்கிக் கொண்டேன். அந்த உணர்ச்சிக்
கண்கள் என் வாழ்வை வளப்படுத்தின. வீரத்தைப் பறை சாற்றின. வாலிபப் பருவத்துக்குள் யாரும் எட்ட முடியாத ராஜ புதனப் படைத்தலைவன் பதவியையும் பெற்றேன். பதவியும் புகழும் என்னை வந்தடைந்தன. எல்லாம் கண்களால்
தான். ஆனால் எந்தக் கண்ணுக்கும் ஓர் ஊனமும் துர்பாக்கியமும் உண்டு…?” இந்த இடத்தில் ஹரிதாஸ் ஜாலா பேச்சை நிறுத்திப் பெருமூச்செறிந்தான்.
“எந்த ஊனத்தைச் சொல்கிறீர்கள்?” என்று கேட்டாள் ராஜபுத்திரி,
“என் தாயை என் கண்கள் பார்த்திருக்கின்றன. ஆனால் அவள் என் சிறு வயதில் போய்விட்டாள். அவள் முகம் திட்டமாக என் நினைப்பிலில்லை. தாயைப் படம் பிடித்து மனத்திலிருத்த முடியாத கண்கள் என்ன கண்கள் ராஜபுத்திரி!
அவள் எத்தனை ஆசையுடன் என்னை வளர்த்தாள். எத்தனை ஆசையுடன் இந்தக் கண்களைப் பார்த்திருப்பாள்! அவளை இவை நிறுத்தவில்லையே. நினைப்பில் நன்றிகெட்ட கண்கள், துர்பாக்கிய கண்கள்” என்று வெறுப்புடன்
சொன்னான் ஹரிதாஸ் ஜாலா. –
அவன் உணர்ச்சி வேகத்தை ராஜபுத்திரி புரிந்து கொண்டாள். அவன் தாய் அவன் கண்களைப் பற்றிப் புகழ்ந்தது. திருஷ்டி கழித்தது முதலியவற்றைக்கூட பிற்காலத்தில் பிறர் சொல்லித்தான் அவன் தெரிந்து கொண்டிருக்க
வேண்டுமென்பதையும் உணர்ந்து கொண்டாள். தாயை அதிகமாக அறியாதவன் தாயைப் பற்றிக் கொண்டுள்ள பாசத்தைப் பற்றியும் நினைத்துப் பார்த்தாள். தாய்ப்பாசம் எப்படித் தள்ள முடியாதது என்பதையும் புரிந்து கொண்ட
ராஜபுத்திரி, தனக்கு ஒரு வேளை அப்படி ஒரு மகன் பிறந்தால் –என்பதை எண்ணி, என்ன காரணத்தாலோ சரேலென எண்ணத்தை மாற்றிக் கொண்டாள். அந்தச் சமயத்தில் அவள் மனதில் ஏதேதோ எண்ணங்கள் எழுந்து ஓடிக்
கொண்டிருந்தன. எல்லாவற்றையும் விட தாயை நினைத்து ஏங்கிய அந்த வாலிபனைப் பற்றிய அனுதாபம் அவள் இதயத்தை அதிகமாக ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. தாய் உணர்ச்சியால் அவள் துடித்தாள். அந்த வாலிபனைக்
குழந்தையைப் பார்ப்பது போல் பார்த்தாள் அவள். புருஷனை பராமரிப்பதில் மனைவி தாயின் ஸ்தானத்தை வகிக்க வேண்டுமென்ற பழமொழி அனுபவத்தை யொட்டியது தான் என்பதை அந்தத் தருணத்தில் சந்தேகமற புரிந்து
கொண்டாள் அவள். அவள் தேகம் துடித்தது. குனிந்த அந்த வாலிபன் சரீர நிலை அவளை வாட்டி வதைத்தது. தாய் குழந்தையை அணைப்பதுபோல அவனை அணைத்து விடவேண்டும் போலிருந்தது அவளுக்கு. அவன் ஜஹாங்கீரின்
தூதன் என்பதை அறவே மறந்தாள். அவன் தாயற்ற குழந்தை என்பது மட்டுமே அவள் இதயததைச் சூழ்ந்து கிடந்தது. அதனால் லேசாகப் பெருமூச்சும் விட்டாள் அவள்.
அந்தப் பெருமூச்சு சொல்லிய பெரும் கதையை ஹரிதாஸ் புரிந்து கொண்டான், புரிந்து கொண்டதால் சொன்னான் : “அனுதாபப்படாதே ராஜபுத்திரி! எந்த நல்ல பெண்ணின் அனுதாபத்தையும் பெற அருகதை யில்லாதவன் நான்”
என்று. அத்துடன் மேலும் தொடர்ந்தான். “கண்களின் வாழ்வுக் கதையை கேட்டாய்; இனி நாசக் கதையைக் கேள். கண்களின் தீட்சண்யத்தால் வீரனானேன், புகழ் பெற்றேன். வாழ்வு இணையற்றதாக விளங்கிய சமயத்தில் மொகலாயர்
சிறையில் சிக்கினேன், அங்கும் என் கண்களுக்கு வரவேற்புக் கிடைத்தது. என் அலட்சியப் பார்வை காவலாளிகளுக்குப் பிடிக்கவில்லை. அலட்சியமாகப் பார்த்ததற்கே இருமுறை கசையடிப்பட்டிருக்கிறேன், சிறைச்சாலைத்
தலைவனொருவன், ‘இன்னொரு முறை அப்படிப் பார்த்தால் அந்தக் கண்களைத் தோண்டி விடுவேன், என்றும் மிரட்டினான். இது என் சிறை வாசத்தின் கடைசிப் பகுதியில் நடந்தது. இன்னும் சில நாட்கள் நான் சிறையிலிருந்திருந்தால்
சிறைச்சாலைத் தலைவன் என் கண்களை அழித்திருப்பான். மொகலாயர் சிறைச் சாலையில் கண்களை அழிப்பது சர்வ சகஜமான காரியம். அப்படி நடந்திருந்தாலும் நல்ல தாயிருக்கும். கண்கள் நாசமாயிருந்திருக்கும், வாழ்வு
நாசப்பட்டிருக்காது. ஆனால் என் கண்களைப் பிடித்த நல்ல காலமோ, கெட்ட காலமோ அந்த வேலை நடக்கவில்லை. அதற்குப் பிறகு என் கண்கள் புதுப் பணியைத் தேடிக் கொடுத்தன. சிறைச்சாலையைப் பார்வையிட வந்த ஜஹாங்கீர்
என் கண்களைச் சில விநாடிகள் தான் பார்த்தார். பிறகு ஏதோ யோசித்தார். சிறைச்சாலைத் தலைவனிடம் ஏதோ சொல்லிவிட்டுப் போனார். அன்று முதல் சிறை எனக்கு அரண்மனையாக மாறியது. கண்களில் இரும்பைச் சொருக
நினைத்த காவலர் பன்னீர் சட்டினார்கள். புது ஆடைகளைக் கொடுத்தார்கள். ஒரே வார காலத்தில் நான் பார்வைக்குப்பழைய படைத்தலைவனானேன். ஜஹாங்கீரிடம் அனுப்பப்பட்டேன். பிறகு தூது கிடைத்தது, பதவி, கிடைத்தது
எதிரியின் படையாக. பணி சரியாக நிறைவேறப் பணமும் இருக்கிறது. ஆனால்…”
“சொல்லுங்கள்” துயரத்துடன் தூண்டியது ராஜ புத்திரியின் குரல். –
“வாழ்வில்லை. வாழ்வு நாசப்பட்டு விட்டது எதிரியின் பணியாள் நான்.”
“அந்தப் பணியை உதறி விட்டால்”
“உதற முடியாது.”
“ஏன்?”
“ஆணை கட்டுப்படுத்துகிறது.”
இதற்கு ராஜபுத்திரி பதில் சொல்லவில்லை. துன்பப் பெருமூச்செறிந்தாள். –
அதைக் கவனித்துவிட்டே அவன் சொன்னான்: “ஆம் ராஜபுத்திரி! வாழ்வு நாசப்பட்டு விட்டது. என் உடலெங்கும் கண்கள், அவை இனி எதிரிக்குப் பயன்படும். அவை ராஜபுதனத்தில் எதையும் பார்க்கச் சக்தியை இழந்து கிடக்கின்றன.
கட்டின மனைவியைப் பார்க்கும் உரிமைகூட அவற்றுக்குக் கிடையாது. அவை துரோகியின் கண்கள். அந்தக் கண்களை உடையவன் ராஜபுதனம் சம்பந்தப்பட்டவரை ஓர் அநாதை” என்று.
இதைச் சொன்ன அவன் குரலில் வெறுப்பு மண்டிக் கிடந்தது. ராஜபுத்திரியின் உள்ளமோ வெந்து உருகிக் கொண்டிருந்தது. எத்தனையோ சக்திகளிலிருந்தும் தன்னை அநாதையென நினைத்து மனமுடைந்து. உட்கார்ந்திருந்த
ஹரிதாஸ் ஜாலாவை மீண்டுமொரு முறை பார்த்தாள் அவள். அவன் தன் இரு முழந்தாள்களையும் பற்றிக் கொண்டு உட்கார்ந்திருந்தான். அநாதை உட்கார்ந்திருப்பது போலவே இருந்தது அந்த நிலை. அதைக் கண்ட ராஜபுத்திரியின்
கண்களில் நீர்த் துளிகள் ததும்பி எழுந்தன. அவள் கரமொன்றும் எழுந்து அவன் தோளைத் தொட்டது.
அவள் தனக்கு அருகில் நகர்ந்து உட்கார்ந்து விட்டதை அறிந்தான் ஹரிதாஸ் ஜாலா. அவள் கரத்தின் ஸ்பரிசத்தை அடுத்து அவள் உடலும் அவன் மீது நெருங்கிப் படவே அவன் சற்றே நிலைகுலைந்து போனான். “இது சரியல்ல
ராஜபுத்திரி!” என்று குழைந்த குரலில் மெதுவாகச் சொல்லவும் சொன்னான்.
பதிலுக்கு அவள் வலது கை தோளில் தவழ்ந்து கழுத்தைச் சுற்றிச் சென்றது. ஏதோ புஷ்பமாலை கழுத்தைச் சுற்றி வளைப்பது போன்ற உணர்ச்சியைப் பெற்ற ஹரிதாஸ், “வேண்டாம் ராஜபுத்திரி, வேண்டாம்” என்றான் தழுதழுத்த
குரலில். அவன் மட்டும் சிறிது பக்கவாட்டில் திரும்பிப் பார்த்திருந்தால் நிலைமை என்ன ஆயிருக்குமோ தெரியாது, பக்கப் பகுதியில் திரும்பாமலே அவன் அந்த வார்த்தைகளைச் சொன்னாலும், அவள் கன்னம் தன் கன்னத்துக்கருகில்
நெருங்குவதை அவன் உணரவே செய்தான். “எதை வேண்டாமென்கிறீர்கள்?” என்று அவன் காதுக்கருகில் ஒலித்தன இன்பமான சொற்கள்.
“கை…என் மேல்” என்று குழறினான் ஹரிதாஸ் ஜாலா..
“ஆம்! உங்கள் மேல் தானிருக்கிறது” என்று அவள் மீண்டும் ரகசியமாகச் சொன்னாள்.
அந்த ரகசியம் அவன் சங்கடத்தை அதிகப்படுத்தியது. உட்கார்ந்திருந்தபடியே தத்தளித்தான் அவன். பிறகு சங்கடத்துடனேயே சொன்னான். “இருக்கக் கூடாது” என்று.
“எது இருக்கக் கூடாது?”
“உங்கள் கை…என் மேல்”
“ஏன்?”
“முறை…முறையல்ல.”
அவள் அவன் காதுக்கருகில் நகைத்தாள். அந்த மகாவீரன் பேச முடியாமல் திகைத்து, உளறியது எல்லாமே அவளுக்கு இன்பமாயிருந்தது. பெண்ணுக் கருகில் வரும்போது எப்பேர்ப்பட்ட வீரனும் உளறுகிறான் என்பதைப் புரிந்து
கொண்ட அவள், இரண்டாம் முறை நகைத்தாள்.
“ஏன் சிரிக்கிறாய்’ என்று கேட்டான் அவன், உணர்ச்சிகள் பெரும் குழப்பத்தை விளைவிக்க.
“அப்படி வாருங்கள் வழிக்கு” என்றாள் அவள்.
“என்ன வழிக்கு வந்துவிட்டேன்?” என்று வினவினான் அவன் ஏதும் புரியாமல்.
“ஏன் சிரிக்கிறாய் என்று கேட்டீர்களே?”
“கேட்டாலென்ன?”
“முறைப்படி அழைத்தீர்கள். என்னை நீங்கள் தாங்கள் என்ற பன்மையெல்லாம் இல்லை, அந்த அழைப்பில் மரியாதை இல்லை.”
“தவறு தவறு! மன்னிக்க வேண்டும்.”
“தவறு ஏதுமில்லை, மன்னிக்க அவசியமுமில்லை அதில்.”
“ஏன்?”
“முறைப்படி அழைத்தீர்கள்? கணவன் மனைவியை அழைக்கும் முறை அது.”
“நான்…”
“என் கணவரல்லவா?”
“ஆம்; ஆம்.”
“ஏன் அதிலும் சந்தேகமா!”
“இல்லை. பிதாமஹரே சொல்லிவிட்டாரே.”
“அப்படியானால் இன்னும் என்ன தயக்கம்?”
“எதற்கு?”
“மனைவியை முறைப்படி அழைக்க…முறைப்படி…”
“சொல் ராஜபுத்திரி!”
“உரிமை கொண்டாட.”
“அதைத் தன் சொல்ல வந்தாயா?”
“இல்லை.”
“வேறு என்ன சொல்ல வந்தாய்?”
அவன் காதுக்கருகே : சொன்னாள் – சொல்ல வந்ததை. அதுவரை மணலைப் பார்த்த கண்கள் சரேலென அந்தப் பெண்ணை நோக்கித் திரும்பின. அடுத்த விநாடி அவள் செய்கையில் எத்தனை விபரீதம்! அதற்கும் அவன் கண்கள் தான்
காரணமா! அப்படித்தானிருக்கும், இல்லாவிட்டால் எத்தனை மாற்றம் அவளிடம்! அவன் கண்களின் சாதனையா! அல்லது வாழ்வின் சோதனையா! இரண்டுமிருக்கலாம். ஆனால் அவள் செய்கையால் அவன் இரண்டையும் யோசிக்க
வில்லை. சிந்திக்கும் சக்தியை அறவே இழந்துவிட்டான். சிந்திக்கும்-ஏன் உடலெங்குமிகுந்த கண்களின் பார்வையையே-அழித்து விட்டாள் ராஜபுத்திரி.