Naga Deepam Ch15 | Naga Deepam Sandilyan | TamilNovel.in
நாகதீபம் – சாண்டில்யன்
அத்தியாயம் – 15. சீற்றம்
Naga Deepam Ch15 | Naga Deepam Sandilyan | TamilNovel.in
அவள் தண்டனை அத்தனை துணிகரமாகவும் திடீரென்று ஏற்படும் என்பதை எதிர்பாராததால் ஹரிதாஸ் ஜாலா சில விநாடிகள் திகைத்துப் போனான். திகைப்பு நீங்கிய பின்பும் நீண்ட நேரம் உட்கார்ந்த இடத்தை விட்டு நகராமலே
ஆழ்ந்த சிந்தனைக்கு உள்ளானான். அவள் தண்டித்தது அத்தனை இன்பமாகவும் துன்பமாகவும் இருக்குமென்பதை நினைத்துக் கூடப் பார்க்காத அந்த வாலிப வீரன், ராஜபுத்திரியின் உணர்ச்சி வேகத்தையும் துடிப்பையும் எண்ணிப்
பெரிதும் வியப்பை அடைந்தான். ‘இதோ தண்டனை’ என்று கூறி இமைப்பொழுதில் அவன் தலையை இழுத்துக் கன்னத்தில் இதழ்களை உணர்ச்சி வேகத்தில் புதைத்து விட்ட ராஜபுத்திரி, திடீரென எழுந்து தன் கூடாரத்தை நோக்கி
ஓடினாள். முதலில் சந்தித்தபோது கடுங்கோபத்தையும், தான் எதிரியின் தூதன் என்றறிந்த போது கடும் வெறுப்பையும், கணவனென்று அறிந்த பின்பு, அதுவும் தான் அவளைக் காதலிப்பதாகக் கூறிய பிறகு கடும் இன்பத்தையும்
அள்ளி விடத் தக்க ராஜபுத்திரியின் சுபாவத்தை மிக எளிதில் புரிந்து கொண்டான் ஹரிதாஸ் ஜாலா. சாதாரணமாக எந்தப் புருஷனையும் எட்டடி தள்ளியே நிற்க வைக்கும் உறுதியைக் காட்டிய அந்த உத்தமியின் கொவ்வையிதழ்கள்
செவ்வையாகத் தன் கன்னத்தில் புதைந்ததற்குக் காரணம், மனைவியென்ற சொல்லளித்த உரிமையும். இருவரும் இருக்க நேரிட்ட தனிமையும், அந்தத் தனிமையை அளித்த ஜயன் சந்தாவத் கையாண்ட முறையும் உரைத்த உண்மையுமே
என்பதையும் நினைத்துப் பார்த்த ஹரிதாஸ் ஜாலா, அந்தச் சமயத்தில் இன்பத்தைவிடப் பெரும் துன்பத்தையே அடைந்தான். அவள் அழகு. அருகாமை துள்ளியெழுந்த உணர்ச்சிகள் எல்லாம் இன்பத்தை அள்ளிக் கொட்டினாலும், தான்
எடுத்துக் கொண்டிருக்கும் பணியும் தனது பிற்காலமும் அவள் வாழ்வை எந்த விதத்திலும் வளப்படுத்த முடியாதென்பதை எண்ணிப் பெருமூச்சு விட்டான் அந்த வாலிபன். அவள் எழுந்து கூடாரத்தை நோக்கி ஓடிய பின்பும் அவள்
தன் பக்கத்தில் அமர்ந் திருப்பது போன்ற பிரமையே இருந்து கொண்டிருந்தது அவனுக்கு. அவள் தலைமலரின் சுகந்தமும், வாசனைத் தைலத்தின் நறுமணமும், கழுத்தின் இன்ப மணமும் அப்பொழுது கூடத் தன்னை வட்டமிட்டுக்
கொண்டிருப் பதாக நினைத்தான் ஹரிதாஸ் ஜாலா. அவளை ஏன் சந்தித்தோம் என்று பெரும் துயரப்பட்டான் அவன். அந்தச் சில விநாடிகளில், மொகலாயர் பாசறை அருகிலிருக்கும் ஒண்டாலா சமவெளிக்கருகில் இவள் எதற்காக வந்தாள்?
என்னை ஏன் சந்தித்தாள்? என்று திரும்பத் திரும்ப நொந்து கொண்ட அந்த ராஜபுதனப் படைத்தலைவன், விதியின் கொடிய தன்மை யைப் பற்றிப் பெரிதும் நிந்தித்தான்.
இப்படிப் பலப்பல வேதனைக்குட்பட்ட ஹரிதாஸ் ஜாலா, நீண்ட நேரத்திற்குப் பிறகு ஆகாயத்தை நோக்கினான். சுக்ரோதயம் ஆகிக் கொண்டிருந்தது. அதை முன்னிட்டு ஆகாயம் மெள்ள வெளுக்கத் தொடங்கிக் கொண்டிருந்தது.
அதுவரை தோப்பில் சப்தித்த பல்லி, சின்னஞ்சிறு குருவிகள், மைனா, சாதகம் முதலிய பட்சி ஜாலங்களின் இன்பக் கூச்சல்கள் எழுந்து கொண்டிருந்தன. ஆங்காங்கு கட்டப் பட்டிருந்த ஓரிரண்டு புரவிகள் கூட விடிய அதிக நேரமில்லை
என்பதை நிரூபிக்கக் கனைத்தன. பட்சிகளின் ‘கலகலா’ சப்தங்கள் அதுவரை அவன் கண்ட துன்பக் கனவைக்கண்டு நகைப்பனபோல் தோன்றியது ஹரிதாஸ் ஜாலாவுக்கு. “இந்த மரங்கள் ஏன் இப்படிப் பல்லை இளிக்கின்றன?” என்று
மரத்தில் விகசித்த மலர்களையும் கோபத்துடன் பார்த்தான் அவன். என் ஊடே ஓடும் இந்த புவனா நதியில் கூட எப்பொழுதாவது தண்ணீர் வரும்; அது நிரந்தரம் என்று நான் நினைப்பதில்லை. நீர்போல உன் வாழ்வில் வந்த
ராஜபுத்திரியையும் சதமென்று நினைக்காதே, உன் வாழ்வும் என் வாழ்வும் வறண்டு போனவை. நம்மை வளப்படுத்த இயற்கையின் சக்திகளும் பயனற்றவை, உன்னையும் என்னையும் வளப்படுத்த வேறு ஒரு பகீரதன் பிறந்து ஆகாய
கங்கைதான் வரவேண்டும், என்று பாலைவனம் கூட தன்னை பரிகசிப்பதாகத் தோன்றியது ஹரிதாஸ் ஜாலாவுக்கு.
தன்னை எள்ளி நகையாடும் அத்தனை சுற்றுப்புற சாதனங்களை எழுந்து நின்று ஒருமுறை கோபப் பார்வையாகப் பார்த்தான் ஹரிதாஸ் ஜாலா. பிறகு எழுந்து மெள்ள நடந்து காவலர் இருந்த இடத்தை நோக்கி நடந்தான். இருந்த
இடத்துக்கும் பாலைவன முகப்புக்கும் இடையே இருந்த ராஜபுத்திரியின் கூடாரத்தைத் தாண்டியே அவன் செல்ல வேண்டியிருந்ததால் அந்த இடத்தை அடைந்ததும், அவன் கால்கள் தாமாகவே தடைப்பட்டு நின்றன. கூடாரவாயிலிலிருந்த
திரையை ஊடுருவி உள்ளே பார்க்க இஷ்டப்பட்டன போல் அவன் கண்கள் ஜொலித்தன. மெள்ள திரையை அணுகின கால்கள். திரையைத் தள்ளிக் கொண்டு உள்ளே செல்ல உள்ளம் துடித்தது. கால்கள் மட்டும் அதற்கு இஷ்டப்படாமல்
சத்தியாக்கிரகம் செய்தன. அப்படி வெளியிலேயே நிற்க நேரிட்டதால் கண்களின் பணியைக் காதுகள் ஏற்றுக் கொண்டன. கண்கள் பார்த்துப் புத்திக்கு அனுப்ப வேண்டிய பணியைக் காதுகள் செய்யத் தொடங்கியதால், உள்ளே ஏற்பட்டுக்
கொண்டிருந்த சின்னஞ்சிறு அசைவின் ஒலியைக்கூட அவை கிரகித்தன.
பஞ்சணை அடிக்கடி அசைவது காதுகளுக்குக் கேட்டதால், ராஜபுத்திரி படுக்கையில் புரண்டு படுக்கிறாள் என்பதை உணர்ந்து கொண்டான் அந்த வாலிபன். அவள் இரண்டொரு தடவை விட்ட பெருமூச்சு அவள் சஞ்சலத்தை
நன்றாக புலப்படுத்தியது அந்த வீரனுக்கு. அந்தத் திரையைத் தள்ளி உள்ளே சென்று ராஜபுத்திரி ஏன் கஷ்டப்படுகிறாள் என்பதை விசாரிக்கலாமா என்று நினைத்தான் ஹரிதாஸ் ஜாலா. அந்த ஜாலா வம்சத்தவனைத் தவிர வேறு யாராவது
அந்த நிலையில் இருந்தால் அப்படித்தான் விசாரிப்பார்கள். ஆனால் சத்திய சந்தனான அவன் விசாரிக்கவில்லை. ராஜபுத்திரியின் கஷ்டம் என்னவென்று எனக்குத் தெரியும். அப்படியிருக்க ஒரு பொய்க் காரணத்தையும் பொய்க்
கேள்வியையும் துணை கொண்டு உள்ளே செல்வானேன்? பொய் எனது மரபுக்கே உதவாது. ஏன் ராஜபுத்திரி மரபுக்கே உதவாது. ராஜபுத்திரியை அடைய இஷ்டமிருந்தால் வலிய அடைவதே க்ஷத்திரிய தர்மம். அதை உலகம் பாராட்டவும்
செய்யும். சம்யுக்தையைத் தூக்கி வந்ததை ராஜபுதனம் பாராட்டவில்லையா? ஆகவே பொய் எதற்கு? என்று அந்த யோசனையை உதறித் தள்ளிய அவன், திடீரென்று கூடாரத்தின் வாயிலை விட்டுச் சட்டென்று பாதரட்சைகள் ஓசைப்பட
நடந்து காவலர் இருக்குமிடம் சென்றான். அந்த பாதரட்சை சத்தம் கேட்டு கூடாரத்துத் திரையை விலக்கிக் கொண்டு வெளியே வந்த ராஜபுத்திரி, அவன் வேக மாகப் போவதைக் கவனித்தாள். பிறகு திரைக்குக் கீழே தரையைப் பார்த்தாள்.
அவள் முகத்தில் மந்தகாசம் விரிந்தது.
திரைக்குக் கீழே பூமியில் அவன் பாதக்குறடுகள் பதிந்து கிடந்தன. அவன் அங்கு சில விநாடிகள் நின்றிருக்க வேண்டுமென்பதைச் சந்தேகமற புரிந்து கொண்ட ராஜபுத்திரி, அவன் உள்ளப் போராட்டத்தை நன்றாகத் தெரிந்து
கொண்டாள். ‘எத்தனை சிறந்த மனிதர் இவர்! இவரை ராஜபுதனம் இழந்துவிட்டதே. அட துரதிர்ஷ்டம் பிடித்த நாடே! உன் துரதிர்ஷ்ட மல்லவா இவரை எதிரிகளிடம் சிறைப்படுத்தியது’ என்று நாட்டைக்கூட வெறுத்தாள் அவள். இந்தப்
பைத்தியக்காரர் எதற்காக வாயிலில் நிற்க வேண்டும்? உள்ளே வந்தாலென்ன? நான் பிடித்துக் கொண்டு விடுவேனா! என்றும் நினைத்து இன்ப நகை இதழ்களில் கூட்டினாள். இன்பமும், இன்பம் தூண்டிய வேதனை உணர்ச்சிகளும் அவள்
உடலெங்கும் வியா பித்ததால் அவள் பரவசப்பட்டு நீண்ட நேரம் நின்று கொண்டேயிருந்தாள். பிறகு பொழுது புலருவதைக் கண்டு பிரயாணத்துக்கு சித்தம் செய்ய உள்ளே சென்றாள்.
விடிவதற்கு முன்பாகவே புறப்பட்டுவிடக் காவலருக்கு உத்தரவு பிறப்பித்த ஹரிதாஸ் ஜாலா, தன் குதிரையை இழுத்துக் கொண்டு புவனா நதியின் கரைக்குச் சென்றான். புவனா நதியில் நீர் சிறிதே ஓடிக் கொண்டிருந்தது. அந்த நீரில்
பல் துலக்கி முகம் கழுவிக் குதிரையின் முகத்திலும் நீரை வாரியடித்தான் அந்த வாலிப வீரன். பிறகு அதன் கால்களையும் முதுகையும் தானே வருடிவிட்டுக் கூடாரத்துக்கு அருகில் சேணத்தைப் பூட்டினான். அதற்குள் ராஜ புத்திரியும்
பிரயாணத்துக்குத் தயாராகிப் புது உடை உடுத்தி, அந்தச் சோலையிலிருந்த பெருமலர் ஒன்றைத் தலையில் செருகிக் கொண்டு, உதய கால தேவதை போல் கூடாரத்தின் திரையை விலக்கிக் கொண்டு வந்ததும், ஒருமுறை மட்டுமே
அவளைப் பார்த்த ஹரிதாஸ் ஜாலா, மேற்கொண்டு தன் பார் வையை புரவி மீது நாட்டிக் கொண்டான். அவன் சங்கடத்தை அறிந்து அவள் மெள்ள நகைத்தாள், அதை கவனித்ததும் கவனிக்காதவன் போல், “உம். கிளம்புங்கள், எத்தனை
நேரம்” என்று சீற்றத்துடன் காவலரை நோக்கிக் கூவினான் ஹரிதாஸ் ஜாலா.
அவன் கோபத்துக்குக் காரணம் காவலருக்குப் புரியாவிட்டாலும் ராஜபுத்திரிக்குப் புரிந்தது. ஆண்களின் பலவீனத்தை நினைத்து உள்ளூர நகைத்துக் கொண்ட அவள், வீரர்கள் பயணத்துக்கு முனைந்து விட்டதைக் கண்டு
கூடாரத்தை விட்டு சில அடி தூரம் நடந்து வந்து நின்று கொண்டாள். சில நாழிகைகளில் கூடாரம் வரிக்கப்பட்டுக் கட்டப்பட்டதும் ராஜபுத்திரியையும் புரவியிலேறச் சொல்லி தானும் புரவிமீது தாவி உட்கார்ந்து பயணத்துக்கு
உத்தரவளித்தான் ஹரிதாஸ். காவலர் புரவிகள் பின் தொடர ஒட்டகம் அம்பாரியுடன் பெருநடை போட, பாலைவனத்தில் புவனா நதிக்கரை யோரமாகவே பயணம் செய்த ஹரிதாஸ் ஜாலா, பயணம் தொடங்கிய நீண்ட நேரத்துக்குப்
பின்பும் ராஜபுத்திரியைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. கண்களைத் தூரத்தில் நாட்டி பாலைவனத்தைப் பார்த்தபடியே பயணம் செய்து கொண்டிருந்தவன், சட்டென்று குதிரையை நிறுத்தித் திரும்பிப் பார்த்தான்.
“என்ன பார்க்கிறீர்கள்?” என்று கேட்டாள், பக்கத்தில் புரவியில் வந்து கொண்டிருந்த ராஜபுத்திரி.
“வீரர்கள் வெகுதூரம் பின்னடைந்து விட்டார்களேயென்று பார்க்கிறேன்” என்றான் ஹரி தாஸ்ஜாலா, சற்று தூரத்தில் மெல்ல வந்த வீரர்களைப் பார்த்து.
“உங்களுக்கு எப்படித் தெரிந்தது அது? அடடே! ஆம் ஆம்; மறந்து விட்டேனே உங்களுக்குப் பின்னால் கண் உண்டு என்பதை” என்று சொல்லி அவள் சிரித்தாள்.
“ஹும்” என்று உறுமினான் அவன்.
“நான் தான் அவர்களைப் பின்னால் வரும்படி உத்தரவிட்டேன்” என்றாள் ராஜபுத்திரி.
“எனக்குக் கேட்கவில்லையே உத்தரவு!”
“எப்படிக் கேட்கும். கையால் சைகை செய்தேன்.”
“சரி சரி” என்று சொல்லி ஹரிதாஸ் ஜாலா குதிரையை நடத்தினான். சற்று நேரத்திற்குப் பிறகு கேட்டான் அவளை, “ஏன் அவர்கள் பின்னால் தள்ளி வரவேண்டும்?” என்று.
“உங்கள் ரசனையைக் கெடுக்காதிருக்க” என்றாள் ராஜபுத்திரி. –
“எதை ரசிக்கிறேன் நான்.”
“உங்கள் புரவியை.”
“புரவியையா!”
“இல்லை; பாலைவனத்தை.”
“பாலைவனத்தையா!”
“ஆமாம், இரண்டையுந்தான் திரும்பித் திரும்பிப் பார்க்கிறீர்கள்.”
“வேறு எதைப் பார்ப்பது?”
“வேறு எதுவுமில்லையா அக்கம் பக்கத்தில்?”
ஹரிதாஸ் ஜாலா சிறிது நேரம் பேசவில்லை. பிறகு மெள்ளச் சொன்னான்; “பார்க்கலாம். பார்ப்பது தவறு என்று தோன்றியது.”
“எது தவறு?”
“பார்ப்பது.”
“கண்ணால் பார்ப்பதா?”
“ஆம்.”
“புறக் கண்ணைத்தானே சொல்கிறீர்கள்?”
“வேறு ஏது கண்?”
“உள்ளக் கண் இருக்கிறது. காதுகள் இருக்கின்றன.”
“இருந்தாலென்ன?”
“திரையெதிரில் இருந்தாலும் உள்ளே நடப்பதை ஊகிக்கலாம். அசைவுகளின் ஒலியைக் காதில் வாங்கலாம். கண்ட கற்பனைகளைச் செய்யலாம். அவையெல்லாம் நேர்மை, நேராக, உண்மையாகப் பார்க்கக் கூடாது. இது தான் ஜாலா
வம்சத்தின் சத்தியமார்க்கம்!” என்று சொல்லிக் கலகலவென நகைத்தாள் ராஜபுத்திரி.
ஹரிதாஸ் ஜாலா அவளை ஏறிட்டு நோக்கினான். “நான் திரைக்கு முன்பு நின்றது உனக்கெப்படித் தெரியும்?”
“உங்கள் பாதக் குறடுகள் வாயிலில் அழுந்திக் கிடந்தன” என்றாள் ராஜபுத்திரி. காதலையெல்லாம் கொட்டும் பார்வையொன்றை அவன் மீது வீசி.
“ராஜபுத்திரி! ஒற்றுப் பார்க்கும் என் வேலையை நீ மேற்கொண்டுவிடு” என்றான் ஹரிதாஸ் ஜாலா.
“மொகலாயருக்கா?”
.
“ஆம்.”
“ஏன் அத்தனை மட்டமானவளா நான்?” இம்முறை ராஜபுத்திரி சீறினாள்.