Naga Deepam Ch16 | Naga Deepam Sandilyan | TamilNovel.in
நாகதீபம் – சாண்டில்யன்
அத்தியாயம் – 16. ஆணை
Naga Deepam Ch16 | Naga Deepam Sandilyan | TamilNovel.in
மலர்ச் சோலையில் எழிலரசியின் கயல்விழிகளுக் கெதிரில் தன் மன இல்லத்தின் இரும்புக் கதவுகளைத் திறந்து காட்டிவிட்டதால், ஓரளவு தன்னைப் பற்றிய வெறுப்புடனேயே மறுநாட் காலைப் பயணத்தைத் துவக்கிய ஹரிதாஸ் ஜாலா,
“பெரும் போர்களிலும் ராஜதந்திரிகளின் முன்னிலையிலும்கூட மனத்தைத் தளரவிடாத நான், கேவலம் இந்தப் பெண்ணுக் கெதிரில் எத்தனை பலவீனத்தைக் காட்டிவிட்டேன்!” என்று மீண்டும் மீண்டும் அலுத்துக் கொண்டே புரவியை
நடத்தினான். அப்படிப் புரவியை நடத்தியபோது அவன் பக்கத்திலேயே புரவியில் வந்து கொண்டிருந்த ராஜபுத்திரி சைகையினாலேயே காவல் வீரர்களைப் பின்னடையச் செய்து, தன்னிடம் விஷமமாகப் பேசத் துவங்கியதைக் கூட
அதிகமாக ரசிக்க அவனால் முடிய வில்லை. பக்கத்தில் வந்து கொண்டு தன்னுடன் தனிமையை நாடிய ராஜபுத்திரி தன் பேச்சுக்கும், பேச்சில் தொனித்த இச்சைக்கும்தான் சிறிது இணக்கம் காட்டினாலும், அவள் வாழ்வு தீராத புயலில்
சிக்கி விடுமென்பதை உணர்ந்த அந்த வாலிப வீரன், அவள் பேச்சுக்கு முதலில் இடம் கொடுத்தானானாலும் நாழிகைகள் செல்லச் செல்ல தன் இதயக் கதவுகளை அடியோடு மூடவும், உதடுகளுக்குப் பூட்டுப் போட்டு மௌனம்
சாதிக்கவும் முயன்றான். ஆனால் அந்த முயற்சி அத்தனை எளிதில் பலனளிக்கவில்லை ஹரிதாஸ் ஜாலாவுக்கும்.
புரவியின் நடையில் அசைந்த அவள் அங்க லாவண்யங்களைப் பற்றிய நினைப்பு அடிக்கடி மூட முயன்ற அவன் இதயக் கதவுகளுக்குக் குறுக்கே பாய்ந்ததால் கதவுகளை மூடப் பெரிதும் தத்தளித்தான் ஹரிதாஸ் ஜாலா. அவள் திடீர்
திடீரெனக் கோபத்தின் வசப்பட்டும் வாய்விட்டு நகைத்தும் மாறிமாறி வீசிய மன்மத பாணங்கள், அடைத்த அவன் உதடுகளையும் அடிக்கடி திறக்கவே வைத்தன. ஆகவே ஓரளவு பதில் சொல்லியும் மறுபடியும் மௌனம் சாதித்துப்
பலவித இம்சைகளுக்குட்பட்டே பயணம் செய்தான் அந்த வாலிபன்.
புவனா நதியின் சலசலத்த நீரோட்டத்தை அடுத்து நின்ற கரையோரமே பயணம் செய்துவந்த ஹரிதாஸ் ஜாலா, மீண்டும் மீண்டும் பக்கத்திலிருந்த நீரோட்டத்தைப் பார்த்து தன் மனத்தின் சலசலப்பு அதிகமல்ல வென்று நகைக்கவே,
திடீரெனப் புரவியிலிருந்தபடியே அவளை நோக்கித் திரும்பிய அந்த வாலிபனைப் பார்த்த ராஜபுத்திரி, “ஏன் அப்படி எரித்துவிடுவது போல் பார்க்கிறீர்கள்? சிரிப்புக்குக்கூட தடை விதிக் கிறீர்களா?” என்று கேட்டாள் புரவியில் அசைந்த
படியே.
ஹரிதாஸ் ஜாலாவின் கோபக் கண்கள் அவளையும் நோக்கி வெகுதூரம் பின்னடைந்து வந்து கொண்டிருந்த வீரர்களையும் கவனித்தன.
அவன் விழிகளின் ஓட்டத்தைக் கவனித்த ராஜபுத்திரி கேட்டாள் : “ஏன் பயமாயிருக்கிறதா?” என்று.
மனம் சாதாரண நிலையிலிருந்தால் அந்தச் சொற்களில் தொனித்த ஏளனத்தை ஹரிதாஸ் ஜாலா கவனித்திருப்பான். ஆனால் குழம்பிக் கிடந்த மனத்தின் விளைவாகக் கோபத்துடன் உதிர்ந்தன அவன் சொற்கள், “எனக்கா! பயமா” என்று
சீறினான் அந்த வாபலின்.
“வேறு யாருக்கு?” வேடிக்கையுடன் கேட்டாள் ராஜபுத்திரி.
“ஹரிதாஸ் ஜாலாவுக்குப் பயமிருப்பதாகச் சொல்லி அடுத்த விநாடி உயிர் வாழ்ந்த வீரன் எவனுமில்லை” என்றான் கடுங்கோபத்துடன் அவன் மீண்டும்.
“வீராங்கனைகள் இருக்கலாம்…” என்று விஷமத்துடன் இழுத்தாள் ராஜபுத்திரி.
“வீராங்கனைகள்! பன்மையிலிருக்கிறதே பேச்சு!” இதைச் சொன்ன போதும், அவன் குரலில் குரோதமே இருந்தது.
“ஒருமையில் இருந்தால் ஒப்புக் கொள்வீர்களாகக்கும்?” என்ற ராஜபுத்திரி இதழ்களில் இளநகையொன்றைப் படரவிட்டாள்.
“அப்பொழுது மட்டும் ஏன் ஒப்புக்கொள்ள வேண்டும்” என்று சீறினான் ஹரிதாஸ் ஜாலா.
“உண்மையை ஒப்புக்கொள்வது ஜாலா வம்சத்தினர் வழக்கமாயிற்றே.”
“ஆமாம்.”
“அதனால் தான் ஒப்புக் கொள்வீர்கள் என்று சொல்கிறேன்.”
“எதை?”
“பயத்தை.”
“யாரிடம் பயம்.”
“ஒரு பெண்ணிடம்.”
“எந்தப் பெண் அவள்?”
“இதோ இருக்கிறாள்?” என்று கூறிய ராஜபுத்திரி, சட்டென்று புரவியை அவன் புரவியுடன் மோதிக் கடிவாளம் பிடித்த அவன் கரத்தை இழுத்துத் தன் மார்பில் வைத்துக் கொண்டாள்.
கடிவாளத்தைப் பிடித்திருந்ததால் முஷ்டி பிடித்தது போலிருந்த கரத்தை அவள் திடீரென இழுத்துத் தன் மார்பகத்தில் வைத்துக் கொண்டதால், ஹரிதாஸ் ஜாலா பெரிதும் நிலைகுலைந்து போனான், அவன் மனம் பெரிதாக அடித்துக்
கொண்டது. அந்தப் பெண் சம்பந்தப்பட்ட வரையில் தான் பெரும் பயங்கொள்ளியென்பதைச் சந்தேகமற உணர்ந்து கொண்டான் ஹரிதாஸ் ஜாலா. அந்தத் திடீர் செய்கையால் சங்கடமடைந்தது ஹரிதாஸ் ஜாலா மட்டுமல்ல. ஏதோ
விளையாட்டுக்கு அவனை விஷமம் செய்ய ஆரம்பித்து அவன் கையை வலுவில் இழுத்துத் தன் இதயத்தைக் காட்ட முயன்ற ராஜபுத்திரி, இதயத்தைக் காத்து நின்ற எழிலின் திண்மையில் அவன் கை பட்டு விட்டதும் சற்று அதிர்ச்சிக்கே
உள்ளானாள். அந்தச் செய்கை அந்த வாலிபனுக்குத் தன் மீது தவறான எண்ணத்தைக் கொடுத்து விட்டால் என்ன செய்வது என்றும், அந்த அதிர்ச்சியின் விளைவாக ஏங்கவும் செய்தாள் அவள். ஆகவே அதற்குப் பின் இரு முறை
அவனையும் பின்னடைந்து வந்து கொண்டிருந்த காவலர் குழாத்தையும் மிரள மிரள நோக்கிவிட்டுத் திடீரெனக் குதிரையை வேகமாக நடத்தினாள். ஹரிதாஸ் ஜாலாவும் காரணமின்றிப் புரவியின் வயிற்றில் செருப்பை உந்த அவன்
புரவியும் பெருநடையிலிருந்து ஓட்டத்தைக் காட்டத் தொடங்கியது.
இப்படி அரை ஓட்டமாகப் புரவிகளை விட்டுக் கொண்டு அதற்கு மேல் பெரும் மௌனமாக பயணத்தை நடத்திய ஹரிதாஸ் ஜாலா, சரியாக உச்சி வேளையில் ராஜபுத்திரிக்குக் கூடாரமமைக்கக் காவலருக்கு உத்தரவிட்டான். காவலர்
கூடாரமமைக்கும் போதும் தன் பக்கத்தில் நின்றிருந்த ராஜபுத்திரியிடம் ஏதும் பேசாமலேயிருந்த ஹரிதாஸ் ஜாலா, கூடாரம் உருவான பிறகுங்கூட ராஜபுத்திரியை நோக்கி ஏதும் சொல்லாமல், “சீக்கிரம் ஸ்நானத்தை முடித்துக் கொண்டு
உணவருந்துங்கள். இன்னும் ஒரு நாழிகைக்குள் பயணத்தைத் தொடங்க வேண்டும்” என்று காவலருக்கு உத்தரவிட்டுத், தன் புரவியை இழுத்துக் கொண்டு புவனாவின் சலசலத்த நீரோட்டத்தை நோக்கி நடந்தான். –
ராஜபுத்திரி அவன் போவதைப் புன்முறுவலுடன் பார்த்துக் கொண்டு நின்றாள். அவன் இதய நெகிழ்ச்சி அவளுக்கு நன்றாகப் புரிந்திருந்தது. தன்னிடம் மையலில் சிக்கி அவன் திண்டாடுகிறான் என்பதை அவள் நன்றாகப் புரிந்து
கொண்டிருந்தாள். அவன் கோபம், தாபம், மௌனம், சீறல் அத்தனைக்கும் காரணம் அவள் மீது கொண்ட காதலேயென்று அவ ளுக்குப் புரிந்திருந்ததால், அவள் விழிகளில் கருணை பாய்ந்து நின்றது. அந்தச் சமயத்தில் ராஜபுத்திரி
அடியோடு குணங்களில் மாறுபட்டு நின்றாள். அவள் சீற்றமெல்லாம் பழைய கதையாகி விட்டதை உணர்ந்தாள். ஆண் ஸ்பரிசம் பெற்ற பெண் எத்தனை எளிதில் மாறு படுகிறாள் என்ற புது அறிவு அவளை வியப்பில் சிக்க வைத்தது.
அந்த வியப்பு அகலாமலே அவள் கூடாரத்துக்குள் நுழைந்தாள். பிறகு ஸ்நான உடைகளை எடுத்துக்கொண்டு புவனா நதியின் கரை சற்று உயர்ந்த இடமாகப் பார்த்து மறைவில் நீராடத் துவங்கினாள். நீராடத் துவங்கிய போதும் சரி,
நீராடி முடித்துத் தன்னை நன்றாகப் போர்த்துக் கொண்டு கூடாரத்துக்குச் சென்றபோதும் சரி, கூடாரத்துக்குள் ஆடை களைந்து மாற்றாடை அணிந்தபோதும் சரி, சொல்ல வொண்ணா வெட்கத்துக்கும் சங்கடத்துக்கும் உள்ளானாள்
ராஜபுத்திரி. ஒவ்வொரு சமயத்திலும் ஹரிதாஸ் ஜாலா பக்கத்திலிருப்பது போலும், அவன் கண்கள் தன் அழகையெல்லாம் கூர்ந்து நோக்குவது போலுமிருந்ததால் ராஜபுத்திரி கூடாரத்தின் மறைவிலும் ஓர் உடையை மற்றோர்
உடையால் மறைத்த வண்ணமே மாற்றாடை புனைந்தாள். முதலிரவின் நான் காம் ஜாமத்தில் மலர்ச் சோலையில் ஹரிதாஸ் ஜாலாவின் கன்னத்தில் தைரியத்துடன் புதைந்த அவள் இதழ்கள் அதை நினைத்ததும் பயத்தால் துடித்தன. ‘பயம்
யாருக்கு என்னைப் பார்த்து அவருக்கா? அவரைப் பார்த்து எனக்கா?’ என்று மீண்டும் மீண்டும் ராஜபுத்திரி தன்னைக் கேட்டுக் கொண்டாள். ‘பயம் அவருக்குத்தான். என்னைப் பார்த்து அவருக்குப் பயம். இந்தப் பயம் காதலின் போர்வை.
பயத்தை உதறினால் காதல் சுவை கைகூடிவிடும். ஆனால் உதற முடியவில்லையே!” என்றும், நினைத்துப் பெருமூச்சு விட்டுக் கொண்டாள் ராஜபுத்திரி.
இப்படிப் பலப்பல எண்ணங்களுக்கிடையே, இன்ப வேதனைகளுக்கிடையே, பெருமூச்சுகளுக் கிடையே, உடை உடுத்தி அலங்காரத்தை முடித்துக் கொண்ட ராஜபுத்திரி அருகே அடுத்த நாழிகை ஆகாரம் கொண்டு வரப்பட்டது. எதிரே
மஞ்சத்தில் தங்கத் தாம்பாளத்தில் வைக்கப்பட்ட அறுசுவை உண்டியையும் கனி வர்க்கங்களையும் பல விநாடிகள் , தொட்டுப் பார்க்காத ராஜபுத்திரி காவலனை நோக்கி, “ அவர் சாப்பிட்டாகி விட்டதா?” என்று வினவினாள்.
“இல்லை” என்றான் காவலன்.
“அவர் சாப்பிடாமலிருக்க எனக்கு மாத்திரம் என்ன அவ்வளவு அவசரம்?” என்று வினவினாள் ராஜபுத்திரி கோபத்துடன்.
“அவர் உத்தரவு!” என்றான் காவலன்.
“உத்தரவா; என்ன உத்தரவு?” என்று சீறினாள் அவள்.
“உணவு கொண்டு வர உத்தரவு”
“உத்தரவிட்டவர் என்ன செய்கிறார்?”
“புரவியைக் குளிப்பாட்டுகிறார்.”
“இந்தப் பதிலைக் காவலன் சொன்னதும் திடீரெனத் தூக்கிவாரிப் போட்டது ராஜபுத்திரிக்கு. முதல் நாளிரவு சுனையில் அவன் வேஷ்டியை இழுத்துக் கட்டி முப்புரி நூல் துலங்க வாளிப்பான சரீரத்துடன் குதிரையைக் குளிப்பாட்டிய
காட்சி அவள் கண் முன் எழுந்தது. அந்த சரீரவாகிலேயே, அதிலிருந்து வீசிய ஒளியிலேயே வீரம் ததும்பி நின்றதை அந்தச் சமயத்திலும் அவள் மனக் கண்ணால் கண்டாள். இப்படி அந்தக் காட்சி மனத்தில் எழுந்ததால் எதிரேயிருந்த உணவை
வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த ராஜபுத்திரி, “சரி சரி; சீக்கிரம் போய் அவரையும் இங்கே உணவருந்த வரச் சொல்” என்று காவலனுக்கு உத்தர விடவே, காவலன் வெளியில் பறந்தான்.
அடுத்து சில நிமிடங்கள் தான் ஓடியிருக்கும். ஆனால் சில வருஷங்கள் ஓடிவிட்டதாகத் தோன்றியது ராஜபுத்திரிக்கு. புத்தாடை புனைந்து இடையில் வாள் துலங்க வந்த ஹரிதாஸ் ஜாலாவைக் கண்டதும் கேட் டாள் ராஜபுத்திரி : “ஏன்
இத்தனை நேரம்” என்று.
“புரவியைக் குளிப்பாட்டினேன்” என்றான் ஹரிதாஸ் ஜாலா எதிரே நின்றுகொண்டே. இதைக் கேட்ட ராஜபுத்திரி மஞ்சத்தில் சற்று நகர்ந்து தன் பக்கத்தில் உட்கார அவனுக்கு இடமளித்து, “புரவியிடம் அத்தனை அன்பா உங்களுக்கு?”
என்றாள் சற்று அலுப்புடன்.
“அதைவிட என் உயிரிடம் எனக்கு அன்பா என்று கேட்கலாமே” என்று சொல்லிக் கொண்டே, அவள் பக்கத்தில் சற்று ஒதுங்கியே உட்கார்ந்து கொண்டான் ஹரிதாஸ் ஜாலா.
“புரவியும் உயிரும் உங்கள் மனத்தட்டில் சரி சமானம் போலிருக்கிறது?” என்று கேட்டாள் ராஜ புத்திரி.
“ஆம்”
“வேறு எதற்கும் அங்கு இடம் கிடையாதா?”
“இருக்கிறது.”
“எதற்கு?”
“என் வாளுக்கு?”
“வேறு எதற்கும் இடமில்லையா?”
இந்தக் கேள்விக்கு உடனே பதில் சொல்ல முடியாமல் தயங்கினான் ஹரிதாஸ் ஜாலா. பிறகு, “உம்… உம். இருக்கிறது” என்று தட்டுத் தடுமாறிச் சொன்னான்..
“எதற்கு?” என்று கேட்டாள் ராஜபுத்திரி.
“வேண்டாம், கேட்காதே” என்றான் ஹரிதாஸ் ஜாலா.
“கேட்கத்தான் கேட்பேன்.”
“வேண்டாம்.”
“சொல்லுங்கள். சொல்லித்தானாக வேண்டும்…”
“தர்மசங்கடத்தில் என்னைக் கொண்டு விடாதே ராஜபுத்திரி.”
“இதில் தர்மசங்கடமிருக்கிறதா? உங்கள் உயிர், புரவி, வாள் இதற்கடுத்தது என்ன என்று கேட்டேன்.”
“கேட்கவேண்டிய அவசியமென்ன?”
ராஜபுத்திரி ஹரிதாஸ் ஜாலாவை நெருங்கி உட்கார்ந்து கொண்டாள். அவள் அழகிய தோள் மிக மிருதுவாக அவன் தோளுடன் உராய்ந்தது. “நீங்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லட்டுமா?” என்று மெள்ள வினவினாள் அவள்.
“சொல்லேன்” என்றான் ஹரிதாஸ் ஜாலா தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு.
அவள் வலது கரம் கழுத்தைச் சுற்றிச் சென்றது. அவள் இடது கை குனிந்த அவன் தலையை முகவாய்க் கட்டையைப் பிடித்து நிமிர்த்தியது. விழிகள் அவனைக் கூர்ந்து நோக்கின. “அடுத்தது நானாயிருக்குமோ என்று கேட்டேன்” என்று
உதடுகள் காதலுடன் சொற்களை உதிர்த்தன.
ஹரிதாஸ் ஜாலா, “ஆம் நீ தான்! புரியவில்லையா உனக்கு?” என்று முணு முணுத்தான்.
அவள் முகம் அவனுக்கு வெகு அருகில் வந்தது. “தெரியும் எனக்கு?” என்று அவளும் ரகசியம் சொன்னாள். பிறகு சம்பாஷணை பரம ரகசியமாக நடந்தது.
“பின் எதற்குக் கேட்டாய்?” என்றான் அவன்.
“உங்கள் வாயால் கேட்டுக் கொள்ள.”
“மனம் அறிந்தால் போதாதா?”
“போதும். புலன்களைக் கொண்டு விவரிப்பதிலும் இருக்கிறது. ஆனால்…”
“என்ன ஆனால்…”
“புரவியையும் என்னையும் ஒன்றாக எடை போடுகிறீர்களே, அது சரியா?”
“ஏன் சரியில்லை?”
“அது மிருகம்.”
“ஆம்”
“அதுவும் நானும்…”
“ராஜபுத்திரர்களின் வழக்கம் உனக்குத் தெரியாதா?”
“என்ன வழக்கம்?”
“ராஜபுத்திரனுக்குப் புரவியும் மனைவியும் வாளும் சமம், இந்த மூன்றையும் பிறர் கைக் கொள்ள அவன் சம்மதிக்க மாட்டான்.”
“அப்படியானால் கையடித்துக் கொடுங்கள்.”
“பழக்கத்திற்குக் கையடித்துக் கொடுப்பானேன்?”
“கேள்வி கேட்க வேண்டாம்.”
ஹரிதாஸ் ஜாலா ஏதுமறியாமல் அவள் கேட்டபடி ஆணையிட்டான். அவள் சாந்திப் பெருமூச்சுவிட்டாள். “ஏன் ஆணையிடச் சொன்னேன் தெரிகிறதா?” என்றாள்.
“புரியவில்லை.”
“நான் உங்கள் மனைவி.”
ஹரிதாஸ் ஜாலா மௌனம் சாதித்தான். “என்னைப் பிறர் கைக்கொள்ள நீங்கள் விடக்கூடாது. பிற மாதர் என்ன, ராஜபுதனமே நகைத்தாலும் கைவிடக்கூடாது. தெரிகிறதா?” என்றாள் ராஜபுத்திரி. அடுத்த விநாடி அவள் அவன் முரட்டு
அணைப்பிலிருந்தாள். “இல்லை, இல்லை. வேறு யாரும் உன்னைத் தொட விடமாட்டேன்” என்று உணர்ச்சி மேலிட்டு இரைந்து கூவினான் ஹரிதாஸ் ஜாலா.
உணர்ச்சி வேகம் இருவரையும் ஆட்கொண்டது அந்த வேகத்தில். காதலில், கூடாரத்தின் திரையை விலக்கிக் கொண்டு நின்ற ஓர் ஆடவனை இருவருமே கவனிக்கவில்லை.