Naga Deepam Ch4 | Naga Deepam Sandilyan | TamilNovel.in
நாகதீபம் – சாண்டில்யன்
அத்தியாயம் – 4. பழைய நிகழ்ச்சி! புதிய நினைப்பு!
Naga Deepam Ch4 | Naga Deepam Sandilyan | TamilNovel.in
நிலைத்தவை நிலைத்தபடி நின்ற நான்கு கண்களில் முதன் முதலாகச் சலனப்பட்டு. அச்சத்தின் அடையாளமாகவும், அப்படிப் பார்ப்பது கண்ணியக் குறைவென்ற நினைப்பினாலும் நிலத்தில் தாழ்ந்தவை அந்த வாலிபனின்
வீரக்கண்களே. தனக்கு முப்பது வயது முற்றிவிட்டதென்பதும் அந்த முப்பது வருட காலத்தில் எந்தப் பெண்ணையும் தான் சரியாக ஏறெடுத்துப் பார்த்தது கிடையாதென்பதும் அவனுடைய மனத்தில் எழவே, எத்தனை நாகரிகமற்ற
காரியத்தைச் செய்துவிட்டோம் என்ற நினைப்பினால் அவன் மீண்டும் தலையைக் குனிந்து கொண்டான். அப்படி அவன் தலையைக் குனிந்து கொண்ட காரணத்தைப் புரிந்து கொண்டதால் அவள் பெரும் சங்கடத்துக்கும், ஆண் மகன்
காட்டும் அடக்கத்தைக் கூட தான் காட்டாததைப் பற்றி வெட்கத்துக்கும் உள்ளாகி, ஏது சொல்வதென்று அறியாமல் சில விநாடிகள் நின்ற நிலையிலேயே இருந்தாள். அப்படி நின்ற சமயத்திலும் அவள் சலனத்துக்கு அறிகுறியாக அவள்
பெருவிரல் மணலில் சக்கரமாகக் கோடு கிழித்துக் கொண்டிருந்தது. இலைகளைப் பிரித்துச் சாப்பிட முஸ்தீபு செய்து கொண்ட அந்த வாலிபன், தலை குனிந்த காரணத்தினாலேயே தன் கண்ணெதிரே கோடிட்ட அந்த விரலையும்
பாதத்தின் பொது அமைப்பையும் கண்டு பெரிதும் வியந்தான். பாதம் பங்கய மலர்போல் மிகவும் மென்மையாய் இருந்தது. வெண்மையான பாதத்துக்கு மேலோடிய கணுக்காலும் வெண்மையும், சிவப்பும் கலந்து மனோகரமாகக்
காட்சியளித்தது. மீதியை ஊகிக்கவும் பயமாயிருந்தது அந்த வாலிபனுக்கு. ஊகித்தால் ஏற்படக்கூடிய உள்ளக் கிளர்ச்சி நன்றாகப் புரிந்திருந்தது அவனுக்கு.
மேலும் அவளைப் பற்றிய எண்ணங்களுக்கு இடம் கொடுப்பது அபாயம் என்று எண்ணிய ஹரிதாஸ் ஜாலா, எண்ணங்களை அறுக்கத் தன் மௌனத்தை உடைத்து “ஏன் நிற்கீறீர்கள்? உட்காருங்கள்” என்று அவளைச் சற்றே ஏறெடுத்து
நோக்கிக் கூறினான்.
அவன் வேண்டுகோளுக்கு இணங்கிக் கூடாரத்தின் வாயிலேயே அவன் எதிரில் உட்கார்ந்து, ஒரு காலை குத்திட்ட வண்ணம் ஒரு கையை நிலத்தில் ஊன்றி மற்றொரு கையை மடியில் வைத்துக் கொண்டாள் அந்த ராஜபுத்திரி. அப்படி
எதிரும் புதிருமாக இருவரும் உட்கார்ந்ததாலும், உட்கார்ந்ததால் ஏற்பட்ட அருகாமையாலும், மீண்டும் இருவர் நிதானமும் காற்றில் பறக்கும் தன்மையை அடையவே, அதிலிருந்து விடுபட உரையாடலைத் தொடங்கிய அந்த ராஜபுத்திரி
கேட்டாள், “உங்களுக்குப் பசி அதிகம் போலிருக்கிறது.”
“ஆம்” என்றான் அவன்.
“மிகவும் களைத்திருக்கிறீர்கள்” என்றாள் அவள்.
“ஆமாம்” என்றான் அவன்.
இப்படி எதற்கெடுத்தாலும் ‘ஆம்’ போட்டது அவளுக்கு வெறுப்பாகவே, “எனக்குக் களைப்பில்லை பசியுமில்லை” என்றாள் சற்றுக் கடுமையுடன்.
அவன் மறுபடியும் தன் கண்களை உயரத் தூக்கிப் பார்த்தான். அவன் இதழ்களில் விஷமப் புன்னகையொன்று அரும்பி நின்றது. அதைத் தொடர்ந்து பேச்சிலும் விஷமம் இருந்தது. “தங்களுக்கு இருக்கும் சௌகரியங்கள் இருந்தால்
எனக்கும் களைப்பிருக்காது. பசியுமிருக்காது” என்றான்.
“என்ன சௌகரியங்களா?”
“ஆம்! புடைசூழ்ந்து வர பத்து வீரர்கள், அவர்களில் உணவு தாங்க இருவர், ஒட்டகம் செலுத்த ஒருவர், கூடாரமடிக்க ஒருவர், பஞ்சணை விரிக்க இருவர், உங்கள் பணிகளில் பாதி பிறரால் செய்யப்படுகிறது. உங்களுக்கு உழைப்பில்லை.
உழைக்காதவர்களுக்குக் களைப்பில்லை; களைப்பில்லையேல் பசியில்லை.”
“நீங்கள் அதிகம் உழைக்கிறீர்களாக்கும்?”
“ஆம்”
“என்ன உழைப்போ?”
“எம் தொழில் போர் செய்தல்”
“குதிரை குளிப்பாட்டலும் உண்டு. அது சேவகர் வேலை.”
“வேலையில் சேவகர் வேலையென்பது கிடையாது. தன் குதிரையையும் வாளையும் சரியான பதத்தில் வைத்துக் கொள்வது வீரரின் கடமை. அது இருந்தவரை ராஜபுதனத்தை மொகலாயர் அணுக முடியவில்லை. அது குறைந்து, சுகம்
தலை தூக்கியது. அடிமை வாழ்வும் மெள்ள மெள்ளத் தலைகாட்டுகிறது.”
அவன் தன்னை இடித்துப் பேசுகிறானென்பதை ராஜபுத்திரி உணர்ந்தாலும், அவன் சொல்வதில் உண்மை அதிகமிருப்பதை அவள் அறிந்தாள். ராணா பிரதாப் இறந்ததும், அவன் மகன் ராணா அமரசிம்மன் சில நாட்கள் சுகவாசத்தில்
இருந்து துன்மந்திரிகளின் போதனையைக் கேட்டு மொகலாயர் ராஜபுதனத்தில் காலடி வைக்க இடங்கொடுத்திராவிட்டால், ராஜ புதனத்தின் எல்லையில் இன்று எதிரிகளின் நடமாட்டம் இருக்காது என்று அவள் நினைத்தாள்.
இருப்பினும் பிறகாவது ஸ்லூம்ப்ரா வம்சத்தலைவனின் சொற்கேட்டு அமரசிம்மன் போர்க்கோலம் பூண்டதை நினைத்து அவள் மனச்சாந்தி அடைந்தாள். அவள் மனச் சாந்திக்கு அடையாளமாக அவளிடமிருந்து பெருமூச் சொன்று
வெளி வந்தது.
அதைக் கண்ட ஹரிதாஸ் ஜாலா புன்முறுவலொன்றை வெளியிட்டான். அதைப் பார்த்து அவள் கேட்டாள், “ஏன் சிரிக்கிறீர்கள்?” என்று.
“உங்கள் மனச்சாந்தியைக் கண்டு சிரித்தேன்” என்றான் அவன்.
“ஏன்? சாந்தியில்லாமல் என்ன வந்துவிட்டது இப்பொழுது?” என்று அவள் கோபத்துடன் வினவினாள்.
“ஒரு நாள் பயணத்தில் மொகலாயர்கள் இருக்கிறார்கள்…”
“ஆம். தெரியும்.”
“உங்களை அவர்கள் துரத்தி வந்த நாழிகைகள் அதிகமாக ஓடவில்லை.”
“ஆம்”
“மீண்டும் அவர்கள், ஏன் இங்கு வரக்கூடாது?”
“வரலாம்”
“வந்தால்?”
“காப்பதற்கு ஒரு மகாவீரர் இருக்கிறார்”- இதைச் சொல்லி அவள் மகிழ்ச்சி ததும்ப நகைத்தாள். அவள் நகைப்பைக் கண்டு அவன் கோபமே அடைந்தான். தன்னை அவள் ஏளனம் செய்ததாகவே நினைத்தான். ஆகவே சினத்துடன்
கேட்கவும் கேட்டான். ‘அந்த மாவீரனை நம்பித்தான் நீங்கள் பாலைவனப் பகுதிக்கு வந்தீர்களா?”
“இல்லை” என்றாள், அவள் அவனைத் தைரியத்துடன் ஏறெடுத்து நோக்கி.
“பின் யாரை நம்பி வந்தீர்கள்?” உங்கள் பாட்டனையா?” என்றான் அவன் சீற்றத்துடன்.
“ஆம் பாட்டனையேதான்” என்று அவள் அழுத்திச் சொன்னாள்.
“யார் அந்தப் பாட்டன்” இகழ்ச்சி தொனித்த குரலில் கேட்டான் ஹரிதாஸ் ஜாலா.
அவள் சிரித்துக்கொண்டுதான் பதில் சொன்னாள். பதிலைக் கேட்ட ஹரிதாஸ் ஜாலா மந்திரத்தைக் கேட்ட அரவமென அடங்கினான். அவன் கண்கள் மிகுந்த பிரமிப்புடனும் மரியாதையுடனும் அந்த ராஜபுத்திரியை நோக்கின.
பேச்சுக்கு இடையிடையே அன்னக் கவளத்தை வாய்க்குள் அனுப்பிக் கொண்டிருந்த வலது கை, ஒரு கவளம் அன்னத்துடன் பாதி தூரமெழுந்து ஸ்தம்பித்து நின்றுவிட்டது. அப்படி ஸ்தம்பித்ததற்குக் காரணமிருந்தது. ராஜபுத்திர வீரன்
ஒவ்வொருவனும் காதில் விழுந்ததும் தலை வணங்க வேண்டிய பெயர் அது. அடிமைத் தலையில் விழ இருந்த மேவாரை அதில் விழவொட்டாமல் தடுத்த பிரசித்தி பெற்ற பெயர் அது. ஜயன் சந்தாவத் என்ற பெயரை மெல்லத்தான் அந்த
ராஜபுத்திரி சொன்னாள். ஆனால் ஏதோ பெரும் மந்திரம் காதில் விழுவது போலிருந்தது ஹரிதாஸ் ஜாலாவுக்கு.
சந்தாவதர்கள் கிளையைச் சேர்ந்த அந்த ஸ்லூம்ப்ரா வம்சத் தலைவனின் செயல் அன்று தான் நடப்பது போல் ஹரிதாஸ் ஜாலாவின் கண் முன்னால் எழுந்தது. அவன் கண் முன்னால் அந்தப் பழம்பெரும் சம்பவம், அது நடந்த முறை
அனைத்துமே எழுந்தன.
ராணா பிரதாப் சிம்மன் அமர வாழ்வு எய்தியபின் இரண்டொரு வருஷங்களுக்குப் பின்பு நடந்தது அந்தச் சம்பவம். வாழ்நாள் முழுவதும் காடுகளிலும் மலைகளிலும் ஓடி ஓடிப் போரிட்டு மேவாரின் சுதந்தரத்தைக் காத்த ராணா
பிரதாப்பின் மகன் ராணா அமரசிம்மன் சுகவாழ்வை நாடினான். உதயபுரி ஏரிக்கரையில் தனக்கென பெரிய மாளிகை கட்டி அதற்கு அமர மஹால் என்று தன் பெயரையும் சூட்டினான். அந்த மஹாலில் ஐரோப்பிய
நிலைக்கண்ணாடிகளையும் கம்பளங்களை யும் வாங்கி நிரப்பி அலங்கரித்தான். அப்படி அலங்கரித்த இடங்களில் மிகப் பிரமாதமாக விளங்கியது அந்த மாளிகையின் மந்திராலோசனை மண்டபம். அதை அழகின் இருப்பிடமென்றும்
ஐசுவரியத்தின் களஞ்சியமென்றும் துன்மந்திரிகள் சிலர் சிலாகிக்தார்கள்
அதன் நடுவிலிருந்த அரியணையில் அமர்ந்திருந்தான் அமரசிம்மன். மேவாரின் பிரதான படைத் தலைவர்களும் சில துன்மந்திரிகளும் புடை சூழ அந்த மண்டபத்தில் கீழே விரிந்து கிடந்தது பெரும் சிவப்புக் கம்பளமொன்று. அதன்
மூலைகள் சுருங்காதிருக்க தங்கக் கட்டிகள் பாரமாக வைக்கப்பட்டிருந்தன. அரியணைக்கு பின்னால் கூரையை அடுத்து ஐரோப்பாவிலிருந்து வந்த பெரும் நிலைக்கண்ணாடி காட்சி யளித்தது. அதில் சபை முழுவதும் அற்புதமாகப்
பிரதிபலித்தது.
அந்த மண்டபத்தில் அந்த நிலையில் மெள்ள மெள்ள மொகலாயர்களுடன் சமரசம் செய்து கொள்ளும் யோசனையை வெளியிட்டான் அமரசிம்மன். அரசனுடைய தலையாட்டிகள் தலைகளை ஆட்டினார்கள். ஆனால் திடீரென நிகழ்ந்தது
பயங்கர சம்பவமொன்று. அரசன் உரையைக் கேட்டதும் திடீரென ஆசனத்திலிருந்து புலி போல் கீழே குதித்தான் ஸ்லூம்ப்ரா வம்சத் தலைவன். கீழே விரிக்கப்பட்ட கம்பளத்தின் மூலையொன்றிலிருந்த தங்கக் கட்டி யொன்றை எடுத்து
மேலேயிருந்த ஐரோப்பிய நிலைக் கண்ணாடி மீது விசிறியடித்தான். கண்ணாடி உடைந்து சிதறியது. சபையில் நிசப்தம் குடி கொண்டது. பல உள்ளங்களைப் பயம் கௌவிக் கொண்டது. ஆனால் நிசப்தத்தை உடைத்து ஸ்லூமப்ரா வம்சத்
தலைவனின் கர்ஜனை.
“இந்த நிலைக் கண்ணாடிகளும் பட்டுப் பீதாம் பரங்களும் படாடோபச் சின்னங்களும் அழியட்டும். இந்தப் போகப் பொருள்களை அனுபவிக்கும் தருணமல்ல இது. பிரதாப் முடிக்காது போய்விட்ட போர் மிகுதியிருக்கிறது. மேவார்
வாயிலில் காத்திருக்கிறார்கள் மொகலாயர்கள். சுக வாழ்வு ஒழியட்டும். வீரவாழ்வு மிளிரட்டும். ராஜபுதனம் பிழைக்கட்டும்.” என்று கூவிய அவன் திடுதிடுவென்று அரியணையை நோக்கி ஓடி அமரசிம்மனைக் கையைப் பிடித்துக்
கரகர வென்று இழுத்துக் கீழே இறக்கி, “வாருங்கள் வீரர்களே! கிளம்புங்கள் போருக்கு! ராணா பிரதாப் சிம்மன் மகனை அவப்பெயரிலிருந்து காப்பாற்றுங்கள்” என்று மற்ற படைத் தலைவர்களையும் பார்த்து இறைந்து விட்டு,
அமரசிம்மனை இழுத்தவாறே வாயிலுக்குச் சென்று அவனைப் புரவியிலேற்றித் தானும் புரவி மீது ஏறினான். அன்று புரவி ஏறிய அமரசிம் மன் போரில் மும்முரமாக இறங்கினான். அவனைப் போரிடத் தூண்டி மேவாரின் வீரப் பெயரைச்
சரித்திரத்தில் இடம் பெறச் செய்த ஸ்லூம்ப்ராத் தலைவனின் பெயர் ராஜபுதனத்தில் இன்றும் போற்றப்படுகிறது. அன்று அது பெரும் தாரக மந்திரமாயிருந்தது ராஜபுத்திர வீரர்களுக்கு. ஆகவே ஹரிதாஸ் ஜாலா அந்தப் பெயரைக் கேட்டதும்
ஸ்தம்பித்ததில் வியப்பேதுமில்லையல்லவா?
அந்தப் பழைய நிகழ்ச்சி அப்படியே கண் முன் எழவே, கையிலிருந்த கவளத்தை மீண்டும் இலையில் போட்டான் ஹரிதாஸ் ஜாலா. எழுந்து ராஜபுத்திரிக்குத் தலைவணங்கவும் செய்தான்.
“உட்காருங்கள்” என்று அவள் கட்டளையிட்டாள்.
“இல்லை, நிற்கிறேன்” என்றான் அவன்.
.
“ஏன்?”
“நான் உங்கள் முன்பு உட்காரத் தகுதியற்றவன்.”
“ஏன்??”
“நீங்கள் பெருங்குடி மகள்.”
“நீங்கள்?”
“தற்சமயம்”
“சொல்லுங்கள்.”
“வேண்டாம்”
“பாதகமில்லை. சொல்லுங்கள்.” அவள் மீண்டும் வற்புறுத்தினாள்.
அவன் சொன்னான். அவன் பதிலைக் கேட்ட அவள் பெரும் திகைப்படைந்தாள். அவன் சொன்ன விவரங்கள் உண்மையாயிருக்க முடியும் என்று அவளால் நம்பவே முடியவில்லை.