Naga Deepam Ch6 | Naga Deepam Sandilyan | TamilNovel.in
நாகதீபம் – சாண்டில்யன்
அத்தியாயம் – 6. ஜயன் சந்தாவத்
Naga Deepam Ch6 | Naga Deepam Sandilyan | TamilNovel.in
பாலைவனச் சோலையில் தனது பையிலிருந்த ஹரிதாஸ் ஜாலா எடுத்துக் காட்டிய பொருளைக் கண்டதும், ராஜபுத்திரியின் இதயத்தில் கோபம் குமுறிக் கொண்டு எழுந்து அவள் செவ்விய உதடுகளிலிருந்து கனல் கக்கும் சொற்கள்
உதிர்ந்தன வென்றால், அதற்குக் காரணம் இருக்கத்தான் செய்தது. பையிலிருந்து அந்த வாலிப வீரன் எடுத்துக் காட்டியது அல்ப சொற்பமான பொருளல்லவென்றாலும், அந்தப் பொருள் ராஜபுத்திரியின் கண்களில் ஹரிதாஸ் ஜாலாவை
மிக அற்பனாக அடித்து விட்டதென்பதில் அணுவளவும் சந்தேகமில்லையென்றால், அதற்கு அந்த ராஜபுத்திரி மீது அதிக குற்றமும் யாரும் கற்பிக்க முடியாது. ஹரிதாஸ் ஜாலா பையிலிருந்து மோதிரத்தை எடுத்துக் கொடுத்ததும், அது
விலை மதிக்க முடியாத மோதிரமென்பதை மட்டுமே அறிந்த அந்த ராஜபுத்திரி, அதை ஒருமுறை திருப்பிப் பார்த்ததும் பெரும் திகைப்பை அடைந்தாள். ஜஹாங்கீரின் முத்திரை மோதிரங்களில் அதுவும் ஒன்று எனச் சுட்டிக்
காட்டுவதற்கான அரசாங்க அமைப்புகள் மோதிரத்தின் அடிப் புறத்தில் தெளிவாகப் பொறிக்கப்பட்டிருந்தன. தயமூர் வம்சத்தின் சின்னங்கள் பொறிக்கப்பட்டிருந்த அந்த முத்திரை மோதிரம் அவள் கையைத் தணலெனச் சுட்டது. அது
மட்டுமா சுட்டது! அதுவரை இன்பத்தில் திளைத்திருந்த அவள் இதயத்தை எத்தனை எத்தனை துன்பத்தணல்கள் சுட்டன!
அந்த முத்திரை மோதிரம் அவள் கையிலிருந்தது இரண்டொரு விநாடிகளேயானாலும், அந்த இரண்டொரு விநாடிகளில் அவள் இதயத்தில் எழுந்த எத்தனை பெரிய கற்பனைக் கோபுரங்கள் இடிந்து விழுந்து விட்டன வென்பதை
அவளாலேயே முழுதும் ஊகித்துப் பார்க்க முடியவில்லை. ராஜபுதனத்தின் வீரனாகவும் பெரும் படைத்தலைவனாகவும் அவள் மனதில் எழுந்திருந்த ஹரிதாஸ் ஜாலா எனும் லட்சியக் கோபுரம் அரைவி நாடியில் படுதூளாக இடிந்து
மண்ணோடு மண்ணாகி விட்டது. அவன் வாலிபன் என்று அறிந்ததும் ஏற்பட்ட இன்ப நினைவு எனும் கோபுரமும் அக்பரின் பீரங்கிக்கு இரையான சித்தூரின் கோட்டை மதில்போல் படுதூளாகியது. எதிரே நின்ற அவன் பேச்சு ,
பார்வை, நடை, கோலம், அத்தனையும் எழுப்பிய ஏதேதோ எண்ணங்கள் எனும் பெரும் ஸ்தூபிகளும் அவள் இதய மேடையில் தடாலென விழுந்தன. இத்தனை பெரிய கட்டடங்களின் வீழ்ச்சிகள் விளைவித்த அதிர்ச்சி அவள் முகத்திலும்
கண்களிலும் தெரிந்தது.
அவன் ஜஹாங்கீரின் தூதன் எனச் சொன்னது முழுதும் உண்மை என அப்பொழுது தான் அறிந்த அந்த ராஜபுத்திரி, பழைய ஹரிதாஸ் ஜாலா இறந்து விட்டான் என்று அவன் சொன்னதில் லவலேசமும் சந்தேகமில்லையென்பதை
அறிந்தாள். ஆனால்,
அந்த ஹரிதாஸ் ஜாலா மறைந்து விட்டான்’ என அந்த வாலிபன் சொன்னது குணங்களின் மறைவைத்தான் என்றறிந்த அவள், அந்த குணங்களின் மறைவைவிட அவன் பூதவுடல் மறைந்திருந்தால் ராஜபுதனத்துக்கு எத்தனை
பெருமையாயிருந்திருக்கும் என்று எண்ணி னாள். அப்படி அவன் ஒழியாமல் குணங்களை மட்டும் ஒழித்துக் கொண்டு தன் முன் நிற்பதைப் பார்த்ததும் அவள் உள்ளம் குமுறிக் கொண்டு எழுந்தது. உடலும் துடித்தது.
இப்பேர்ப்பட்டவன், தான் அவமானத்துக் குட்பட்டது போதாதென்று தன்னையும் மனைவி யென்று குறிப்பிட்டதை எண்ணிப் பெரும் சீற்றம் கொண்டாள் அந்தப் பெருங்குடி மகள்.
கோபம் யார் கண்ணையும் மறைக்கவல்ல ஒரு பெரும் திரை. அந்தத் திரையைச் சரேல் சரேலென மனிதன் தன் மனத்துக்கு முன்புவிடப் பழகிக் கொண்டு விட்டால் உலகத்தில் பல சிக்கல்களுக்குப் பரிகாரமேற்படும். ராஜபுத்திரி மட்டும்
திடீரென அத்தனை சீற்றத்துக்கு உட்படாமல், சற்று நிதானித்து விஷயங்களைச் சீர்தூக்கிப் பார்த்திருந்தால், பல உண்மைகளை அறிந்திருப்பாள். ஆனால் கோபம் கண்ணை மறைத்தது. ஆகவே உண்மையையும் மறைத்தது. ஹரிதாஸ் ஜாலா
எதற்காக அந்த உண்மையைத் தன்னிடம் சொல்லியிருக்க வேண்டும் என்பதை அவள் சற்று ஆராய்ந்திருந்தால், எதிரே நின்ற அந்த வாலிபனின் கண்ணியத் தையும் சத்தியத்தையும் சத்தியத்தில் விளைந்த நெஞ்சுறுதியையும் உணர்ந்து
கொண்டிருப்பாள். ஹரிதாஸ் ஜாலாவென்று அவன் தன் பெயரைச் சொல்லியிருக்க வேண்டியதில்லை. சொல்லியிருந்தாலும் தன் மொகலாய வீரரை விரட்டியடித்த முறையைச் சொல்லத் தேவையில்லை. தன் பெயரை மாற்றிச்
சொல்லியிருக்கலாம். பெயரைச் சொல்லியிருந்தாலும், மொகலாயச் சிறையிலிருந்து தப்பி வந்து விட்டதாகச் சொன்னானே அதை மட்டும் சொல்லி, அவளிடம் அந்த மோதிரத்தைக் காட்டாதிருக்கலாம். ஆனால் அப்படியெல்லாம் அவன்
ஏன் செய்யவில்லை? ராஜபுத்திரப் பெருங்குடி மகளொருத்தியின் முன்பு தன் மதிப்பை எத்தனை தூரம் குறைத்துக் கொள்ள முடியுமோ அத்தனை தூரம் ஏன் குறைத்துக் கொண்டான்? இதையெல்லாம் அவள் இதயம் கேட்டுப்
பார்க்கவில்லை கேட்டுப் பார்த்திருந்தால் உண்மை தெரிந்திருக்கும். முழு உண்மை தெரியாவிட்டாலும் எதிரே உள்ள வாலிபன் இதயத்தில் ஏமாற்றும் உணர்ச்சிகள் ஓடவில்லை. தூய்மையான சத்தியத்தின் சக்தி ஓடுகிறது என்ற
உண்மையாவது தெரிந்திருக்கும்.
ஆனால் ராஜபுத்திரிகளுக்கு மொகலாயர் பெயர்களையோ அவர்களின் கையாட்களின் பெயர்களையோ கேட்கும்போது, இயற்கையாக எழுந்து வந்த முன் கேயம் அந்தப் பெண்ணின் இதயத்திலும் மண்டிக் கிடந்தது. கையில் இரு
விநாடிகளே அவள் தாங்கி நின்ற ஜஹாங்கீரின் மோதிரம் கையைத் தணலெனச் சுட்டது. ஆகையால் தான் அவள் அதை அவன் மீது வீசியெறிந்தாள். உன்னை வெட்டிப் போடுவேன் என்று கையில் குறுவாளையும் ஏந்தினாள். அந்தச்
சீற்றத்துக்கும் குறு வாளேந்திய கோலத்துக்கும் காரணம் அவள் உள்ளத்தில் தன்மீது எழுந்துவிட்ட வெறுப்பேயென்பதை ஹரிதாஸ் ஜாலா உணர்ந்தான். சற்று முன்பு தன் மீது எழுந்த விருப்பு திடீரென வெறுப்பாக மாறிவிட்டதை
அறிந்தான். அதனால் அவன் இதயத்தில் சாந்தியே ஏற்பட்டது. அவள் அவனிடம் கொண்ட வெறுப்பைக் காட்டிலும் அவனுக்குத் தன்னிடமிருந்த வெறுப்பு அதிகமாதலாலும், தன்னைப் போன்ற ஒரு மனிதனிடம் அத்தகைய ஓர் உயர்
குடிமகள் எந்தவித அன்போ பாசமோ காட்டக்கூடாதென்ற நினைப்பாலும் எப்படியும் அவளிடம் உண்மையை மறைக்கக்கூடாதென்ற சிறத்த புத்தியாலுமே ஹரிதாஸ் ஜாலா உண்மையை உரைத்தானாகையால், அவள் அவன் மீது
முத்திரைக் கணையாழியைச் சுழற்றி எறிந்தபோதும், கடும் சொற்களைக் கொட்டியபோதும், அவன் சீற்றத்துக்குப் பதில் சாந்தமே அடைந்தான். அந்த ராஜபுத்திரியின் கரத்தால் மாண்டால், தான் செய்த பாவங்களும், செய்ய இருந்த
அவப்பணியும போய்விடும் என்ற நினைப்பாலேயே அவன் தன் மார்பை அவள் முன்பு திறந்து காட்டி, “உன் கையிலிருக்கும் கத்தியை என் மார்பில் பாய்ச்சிவிடு. இங்கு நம் இருவரைத் தவிர வேறு யாருமில்லை “ என்றான்.
அவள் கத்தியைப் பாய்ச்சிவிடும் மனப் பக்குவத்திலிருந்தாள். அவனும் அதை வாங்கிக் கொள்ளும் உள்ளப்போக்கில் இருந்தான். இடைஞ்சலாயிருந்தது விதியெனும் விசித்திரக்கரம். அந்தக் கரம் திடீசொக் குறுக்கே புகவிட
இடைஞ்சல், விதியின் வாய் உதிர்த்த சொற்கள், இரண்டும் கூடாரத்தின் வாயிலில் எதிரும் புதிருமாக நின்றிருந்த அந்த இருவர் இதயத்திலும் பெரும் பிரமிப்பை ஏற்படுத்தியதால், இருவரும் செயலற்று நின்றபடியே நின்று விட்டார்கள்.
இருவரும் எதிர்பாராத அந்தக் குரலால் ஏற்பட்ட பிரமை அவர்களுக்கு நீங்கு முன்பாகவே, பக்கத்து மரங்களின் மறைவிலிருந்து வெளிவந்த அக்குரலுக்குடையவன் அவர்களிரு வரும் நின்றிருந்த கோலத்தைக் கண்டு சற்றுப்
புன்முறுவலும் கொண்டான். நிலவில் பளபளத்த கத்தியைக் கையில் பிடித்துக் கூடார வாயிலில் ராஜபுத்திரி நிற்க, அவள் வீசியெறிந்த ஜஹாங்கீரின் முத்திரை மோதிரம் எதிரேயிருந்த வாலிபன் காலுக் கெதிரே மணலில் செக்கச்
செவேலென்று ஒளிவிட, அதைச் சிறிதும் கவனிக்காமல் அந்த வாலிபன் மார்பைத் திறந்து காட்டிக்கொண்டு நிற்க, இத்தகைய ஒரு காட்சியைக் கண்டதும் அந்த மனிதன் மெள்ளச் சிரிக்கவும் செய்தான்.
வந்தவன் குரலைக் கேட்டதுமே மற்ற உணர்ச்சிகளைக் கைவிட்டு மலைப்புக்கு இடங்கொடுத்த அந்தப் பருவ பைங்கிளியும் வாலிப வீரனும் அந்த மனிதன் எதிரே வந்ததும், பெரும் குழப்பத்தை அடைந்து தலைகளைத் தாழ்த்தினர்.
வந்த மனிதன் எதிரேயிருந்த காட்சியைக் கண்டு நகைத்த பின்னர், “நல்லவேளை, காளிதாஸன் காலமாகி விட்டான்” என்று வேடிக்கையாகப் பேசவும் முற்பட்டான். அவனுக்குப் பதில் சொல்லத் துணிவில்லாத ராஜபுத்திரி, தலையைப்
போலவே தனது குறுவாளையும் தாழ்த்தி இடையில் செருகிக் கொண்டாள். தலையைத் தாழ்த்திய ஹரிதாஸ் ஜாலா மட்டும் சில விநாடிகளுக்குப் பிறகு தலையை மெள்ள நிமிர்த்தி எதிரே சிரித்துக் கொண்டு நின்ற ஜயன் சந்தாவத்தை
ஏறெடுத்துப் பார்த்தான்.
சுமார் அறுபது ஆண்டுகளைத் தாண்டி விட்ட ஜயன் சந்தாவத்தின் கண்கள் வாலிபர் கண்களைப் போலவே வீரச் சுடர் விடுவதையும், சிற்சில திரைகள் விழுந்த முகத்தில் சாந்தமும் நிதானமும் பெரிதும் பரவிக் கிடந்ததையும்
கவனித்தான், ஹரிதாஸ் ஜாலா. அறுபது வயது தாண்டியதால் சற்றே நரைத்து முகத்தில் தாறுமாறாகத் தொங்கிக் கொண்ட தலைமுடி யிழைகள் கூட அந்த முகத்துக்குப் பெரும் கம்பீரத்தைக் கொடுத்ததைக் கண்ட ஹரிதாஸ் ஜாலா,
“இத்தகைய ஒரு பெருமகன் இருக்கும் வரையில் ராஜபுதனத்துக்குக் குறைவு ஏதுமில்லை” என்று தனக்குள் சொல்லிக் கொண்டான். ஜயன் சந்தாவத் ஆறடி உயரத்துக்கு மேலிருந்தார். உடலில் அதிகச் சதைப்பிடிப்பு இல்லாமல்
ஒல்லியாகத் தோற்றமளித்தாலும், அது வயிரம் பாய்ந்த மரம்போல் தோன்றியது. நீண்ட கை களி ரண்டும் மிகவும் சிவந்து காயத்தின் வடுக்களே இல்லாதிருந்ததையும், அவர் இடுப்பில் தொங்கிய நீண்ட வாளையும் கண்ட அந்த வாலிப
வீரன், ‘ஜயன் சந்தா வத்தின் வாள் வீச்சைத் தாண்டி அவர் கையைத் தொட்டவன் இதுவரை யாருமில்லை’ என்று தீர்மானித்துக் கொண்டான். அவர் மேலங்கி சற்றே திறந்த தால் தெரிந்த மார்பிலும் கழுத்திலுமிருந்த பயங்கரக் காய வடுக்கள்,
அவர் கையில் காயமில்லாததைப் பார்த்து அவரை அணுகுவது எத்தனை அபாயமென்பதை அறிவுறுத்தின. அவர் சிரிப்பில் அசாத்திய தைரியத்தின் ஒளி கலந்திருந்தது. சிரிப்பைக் கக்கிய விழிகளில் பயங்கர எச்சரிக்கையொன்றும் பரவிக்
கிடந்தது. முகம் பார்வைக்கு சாந்தந்தான். ஆனால் அவசியமேற்படும்போது அது பெரும் எரிமலையாக மாறும் என்ப தற்குக் கண்களில் அத்தாட்சியிருந்தது. உதடுகளின் மீது அசைந்த பெரிய மீசை அவர் தைரியத்தைச் சந்தேகித்தவரை
மிரட்டும் வகையில் அமைந்திருந்தது. அந்த அத்தாட்சிகளால் மட்டுமல்ல, அவரிடம் ஊழியம் புரிந்த நாட்கள் முதலே ஏற்பட்ட மிகுந்த மதிப்பால் தலையை மீண்டும் வணங்கினான் ஹரிதாஸ் ஜாலா. அப்படி வணங்கிய சமயத்தில் ஜயன்
சந்தாவத் தனது இரு கைகளையும் ஒன்று சேர்த்துக் கொண்டு அவனை மட்டுமின்றி ராஜபுத்திரியையும் நோக்கினார். அந்த ராஜபுதனப் பிதாமஹனை ராஜபுத்திரியும் திரும்பி நோக்கினாள்.