Naga Deepam Ch7 | Naga Deepam Sandilyan | TamilNovel.in
நாகதீபம் – சாண்டில்யன்
அத்தியாயம் – 7. ஐந்து வயதுக் கதை
Naga Deepam Ch7 | Naga Deepam Sandilyan | TamilNovel.in
ராணா அமரசிம்மனை அத்தனை படைத்தலைவர்கள் மூன்னிலையிலும் கையைப் பிடித்துப் பலவந்தமாக அரியணையிலிருந்து இறக்கியதால் சரித்திரத்தில் அழியா இடம் பெற்றுவிட்ட ஜயன் சந்தாவத்தின் துணிவுக் கரங்கள்
ஒன்றையொன்று பின்னிக்கொண்ட தன்றி அவர் உதடுகளும் “நல்லவேளை, காளிதாஸன் காலமாகி விட்டான்” என்று சொல்லிச் சிரித்ததைக் கேட்ட ராஜபுத்திரியும் ஹரிதாஸ் ஜாலாவும் மிகவும் சங்கடமடைந்தாலும், ஹரிதாஸ் ஜாலாவே
அந்தச் சங்கட நிலையை உடைக்க உரையாடலைத் தொடங்கி “எந்தக் காளிதாஸனைக் குறிப்பிடுகிறீர்கள்” என்று கேட்டான்.
“இங்கு எந்தக் காளிதாஸனைக் குறிப்பிட்டால் பொருத்தமாயிருக்கும்?” என்று சர்வசாதாரணமாகக் கேட்டார் ஜயன சந்தாவத்.
“விடுகதை விடுத்தவர் தாங்கள். தாங்கள் தான் பதிலும் சொல்லவேண்டும்” என்று பணிவுடன் சொன்னான் ஹரிதாஸ் ஜாலா.
ரம்புதனத்தின் பிரதான படைத் தலைவரின் கண்கள் மீண்டும் சிரிப்பைக் கக்கின. “இதில் விடுகதை ஏதுமில்லையே. உள்ள நிலையைத் தானே சொன்னேன்” என்றார் அந்தப் பெருங்குடிமகன்.
“உள்ள நிலையும் புரியவில்லை எனக்கு!” என்று மெள்ள வார்த்தைகளை விட்டான் ஹரிதாஸ் ஜாலா.
“நீங்கள் இருவருமே உள்ள நிலையை அறியாத குழந்தைகளாகத் தானிருக்கிறீர்கள்” என்று மீண்டும் சிரித்தார் அவர்.
“சந்தாவதர்களின் தலைவருக்கு முன்னால் எந்த ராஜபுத்திரனும் குழந்தைக்கு இணைதான். அவர் வாள் வீரம்…” என்று ஏதோ சொல்லத் துவங்கிய அந்த. வாலிபனைத் தடுத்த ஜயன் சந்தாவத், “அதிருக்கட்டும். இங்குள்ள நிலையைப்
பாருங்கள்” என்றார்.
“என்ன நிலை?” புரியாமல் கேட்டான் ஹரிதாஸ் ஜாலா.
“பெரும் தோப்பு இது” என்றார் ஜயன் சந்தாவத்.
“ஆம்.”
“மலருள்ள மரங்களும் இருக்கின்றன.”
“இருக்கின்றன.”
“எதிரே ஒரு சிறு பொழில்”
“ஆம்.”
“முழுமதியின் நிலவு விழுந்துள்ள ஒரு கூடாரம்.”
“உம்.”
“அதன் வாயிலில் குறுவாளேந்தி நிற்கிறாள் ஒரு கன்னி. எதிரே மார்பை திறந்து, உம் பாய்ச்சி விடு” என்கிறான் ஒரு வாலிபன்.
இதற்கு ஹரிதாஸ் ஜாலா பதில் ஏதும் சொல்லவில்லை. ஜயன் சந்தாவத்தே பேசினார். “முதல் தரமான நாடகக் கட்டம். இங்கு மட்டும் மகாகவி காளிதாஸன் இருந்தால் முதல் தரமான நாடகம் உரு வாகியிருக்கும். ரஸமான கவிதைகள்
பெருக்கெடுத்துப் பிரவகித்திருக்கும்” என்று சொல்லிப் பெரிதாகச் சிரித்தார்.
அவர் சிரிப்பை மற்ற இருவரும் ரசிக்கவில்லை. வேதனை நிறைந்த தங்கள் உள்ளங்களை அவர் புரிந்து கொள்ளவில்லையென்றே இருவரும் நினைத்தார்கள். ஹரிதாஸ் ஜாலாவின் இதயத்தை விட ராஜபுத்திரியின் இதயத்தில் கோபம்
அபரிமிதமாக எழுந்தது. அவர் அப்படிப் பேசுவதும் சிரிப்பதும் முறையல்ல என்று அவள் கருதினாள். தவிர ஹரிதாஸ் ஜாலா போன்ற மொகலாயர் கையாளையும் தன்னையும் சமப்படுத்திப் பேசுவதும் அவளுக்குச் சீற்றத்தை
அளித்தது. ஆகவே கோபத்துடன் கேட்டாள்: “காளிதாஸ் மகாகவி இத்தகைய நாடகக் கட்டத்தை விரும்புவாரா?” என்று.
“ஏன் விரும்பமாட்டார்?” சர்வ சாதாரணமாகக் கேட்டார் ஜயன் சந்தாவத்.
“அவர் சரச கவி. அவர்…” மேலே சொல்ல முடியாமல் தவித்தாள் அவள்.
“இன்பமூட்டும் காதற்சுவைக் கட்டங்களைத்தான் சிருஷ்டிப்பார் என்கிறாய்?” என்றார் ராஜபுதனத்தின் பிதாமஹர்.
“நான் அப்படிச் சொல்லவில்லை.
“உன் நா சொல்லவில்லை.”
“பின்?”
“இதயம் சொல்கிறது சரி, அப்படியே வைத்துக் கொண்டாலும்…” என்று இழுத்தார் ஜயன் சந்தாவத்.
ராஜபுத்திரியின் கண்களில் சொல்லவொண்ணாக் கோபம் துளிர்த்தது. “ஏன் நிறுத்திவிட்டீர்கள்? சொல்லுங்கள். அப்படியே வைத்துக் கொண்டாலும் என்ன? ‘ என்று பேசிய அவள் உதடுகள் கோபத்தால் துடித்தன.
சிஜயன் சந்தாவத் தமது கருத்தைப் பூர்த்தி செய்தார். அந்தப் பூர்த்தி அவளை மட்டுமல்ல, ஹரிதாஸ் ஜாலாவையும் பெரும் சங்கடத்துக்குள் ஆழ்த்தியது. அதைக் கேட்ட இருவருமே திகைத்தனர். ஆனால் ராஜபுத்திரியின் திகைப்பு
எல்லைக் கடந்தது. வயதான பாட்டனார் தனது பேத்தி முன்பாக பேசும் பேச்சா அது என்று எண்ணியதால் அவள் வாயடைந்து நின்றாள்.
“அப்படியே வைத்துக் கொண்டாலும் அந்த சரஸத்துக்கும் இங்கு குறைவில்லை” என்றார் ஜயன் சந்தாவத்.
ராஜபுத்திரி அதற்கு ஏதும் பதில் சொல்லவில்லை. ஹரிதாஸ் ஜாலா மட்டும் அங்கிருந்த சங்கட நிலைமையை நிவர்த்திக்கப் பேசினான். “தளபதியவர்கள் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் நிலைமையை” என்று ஏதோ சொல்ல
முயன்றான்.
ஜயன் சந்தாவத் அவனைக் கையமர்த்தி அடக்கி “இல்லை இல்லை. சரியாகத்தான் புரிந்து கொண்டேன். இங்கு நீங்கள் வனபோஜனத்தைப் பற்றியும், நிலவைப் பற்றியும், அள்ளிப்பருக இருக்கும் அமுதசுனை பற்றியும், மலர்களைப்
பற்றியும் பேசியதைக் கேட்டுக் கொண்டு தானிருந்தேன் அவற்றுடன் ஒரு கன்னியுமிருப்பதாகக் கூற நினைத்து மழுப்பியதையும் கவனித்தேன். பிறகு கண்களின் சந்திப்பு. உம்…” என்று சிரித்தார் அவர்.
“நிறுத்துங்கள் சிரிப்பை” ராஜபுத்திரியின் குரல் கடுமையாக ஊடுவியது.
“சிரிப்பில் என்ன தவறு?” என்று விஷமமாகக் கேட்ட அவர், தனது பெருமீசையை வேடிக்கையாக அசைத்தார்.
“பேச்சில் இருக்கும் தவறு சிரிப்பிலும் இருக்கிறது” என்று அவள் எள்ளும் கொள்ளும் முகத்தில் வெடிக்க, உதடுகள் துடிக்கச் சொன்னாள்.
“பேச்சில் என்ன குறை இருக்கிறது?”
“வயதினால் ஏற்பட்ட குறை, சித்தத்தின் கலக்கம்.”
“இதுவரை அப்படி யாரும் என்னைச் சொன்னதில்லை.
“இப்படி நீங்கள் பேசி இதுவரை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள்.”
“தவறாக என்ன சொல்லிவிட்டேன்?”
“வன போஜனம். சந்தித்த கண்கள் இதெல்லாம் என்ன?”
“நடக்காததைச் சொல்லவில்லை.”
“வேடிக்கைக்கு ஏதாவது பேசியிருப்போம்.”
“நானும் வேடிக்கைக்குத்தான் பேசினேன்.”
“சில வேடிக்கைப் பேச்சுகளைப் பெரியவர்கள் பேசக் கூடாது.”
“சிறியவர்களுக்குத்தான் அந்த உரிமை உண்டு போலிருக்கிறது.”
“எதற்கும் வயது உண்டு, காலம் உண்டு, இருக்கும் நிலை உண்டு.”
“அந்த மூன்றுக்கும் இப்பொழுது எந்தக் குறைவு ஏற்பட்டு விட்டது?”
“வயதான நீங்கள் உங்கள் பேத்தியைப் பற்றியும் காதலைப் பற்றியும் பிறர் முன்பு பேசுவது தவறு.
“பிறர் என்பது இவரா?” ஹரிதாஸ் ஜாலாவைச் சுட்டிக் காட்டினார்.
“ஆம்” என்று தலையை அசைத்தாள்,
இதைக் கேட்ட ஜயன் சந்தாவத் மீண்டும் நகைத்தார். ராஜபுத்திரியின் கோபம் எல்லை கடக்கவே, அவள் மட்டு மரியாதைகளைக் கைவிட்டுப் பேசினாள் “ராஜபுதனத்தின் பிதா மஹரே! இவரை உமக்குத் தெரியாது. இவர் உங்களிடம்
ஊழியம் புரிந்த பழைய படைத்தலைவர் அல்லர். ஜஹாங்கீரின் தூதர். இப்பொழுதாவது உமது புத்தியில் விஷயம் விளக்கமாக ஏறட்டும்” என்றாள்.
அதைத்தான் இவரே உன்னிடம் சொன்னாரே!” என்றார் ஜயன் சந்தாவத்.
நீண்டநேரம் தங்கள் சம்பாஷணையை மறைவிடத்திலிருந்தே ஜயன் சந்தாவத் கேட்டுக் கொண்டிருந்திருக்கிறார் என்பதைப் புரிந்து கொண்ட ராஜபுத்திரி “நீங்கள் வந்து வெகுநேரம் ஆகியிருக்க வேண்டும்” என்று கூறினாள்.
பேசியதை முழுவதும் கேட்டீர்களா?”
“ஆம்; கேட்டேன்.”
“அப்படியானால் இவரை இன்னும் ஏன் கொல்லவில்லை.”
“எதற்காகக் கொல்ல வேண்டும்? ஜஹாங்கீரின் தூதர் என்பதற்காகவா?”
“அப்படித்தான் வைத்துக் கொள்ளுங்களேன்.”
“தூதர்களைக் கொல்லும் வழக்கம் ராஜபுதனத்தில் கிடையாது. அது க்ஷத்திரிய தர்மம் அல்ல.”
“அதில்லாவிட்டாலும் வேறு பிழையிருக்கிறது.”
“என்ன பிழை?”
“என்னை மனைவியென்று கூறியிருக்கிறார்” இதை மிகுந்த உஷ்ணத்துடன் உச்சரித்தாள் ராஜபுத்திரி. இதைக் கேட்டதும் ஜயன் சந்தாவத் கொதித்தெழுவார் என்று எதிர்பார்த்தாள். நேர் விரோதமாக நடந்தது விஷயம்.
“சொன்னாலென்ன?” என்று கேட்ட ஜயன் சந்தாவத் தான் ஏதோ பெரிய ஹாஸ்யத்தைக் கண்டு பிடித்து விட்டவர்போல் இடி இடி என்று தகைத்தார். அவருக்கு ஒருவேளை புத்தி பிசகியிருக்கிறதோவென்று ராஜபுத்திரி அவரைப் பெரும்
சந்தேகத்துடனும் பிரமிப்புடனும் நோக்கினாள். ஹரிதாஸின் நிலை விவரிக்க இயலாததாயிருந்தது. “வாருங்கள் மருகரே!” என்று ஜயன் சந்தாவத் அவனை விளித்துத் தோளிலும் தட்டிக் கொடுத்தார்.
.
அவர் சித்த சுவாதீனத்தைப் பற்றி ஹரிதாஸ் ஜாலாவுக்கும் பெரும் சந்தேகம் உண்டாயிற்று. அதை வலுப்படுத்தவோ என்னவோ, “ஐந்து வயதுக் கதை உங்கள் இரண்டு பேரில் யாருக்குத் தெரியும்?” என்று கேட் டார் ஜயன் சந்தாவத்.
இருவரும் ஏதும் புரியாமல் திகைப்படைந்து நின்றார்கள். அடுத்தபடி ஜயன் சந்தாவத் ஐந்து வயதுக் கதையைச் சொல்லத் தொடங்கினார்.