Naga Deepam Ch9 | Naga Deepam Sandilyan | TamilNovel.in
நாகதீபம் – சாண்டில்யன்
அத்தியாயம் – 9. வழியும் வசதியும்
Naga Deepam Ch9 | Naga Deepam Sandilyan | TamilNovel.in
உனது ஐந்தாம் வயதில் இவர் வாளுக்கு நீ மாலையிட்டு விட்டாய்; ராஜபுதனத்தின் சம்பிரதாயப் படி நீ இவர் மனைவி” என்று ராஜபுத்திரியை நோக்கி ராஜபுதனப் பிதாமகர் எடுத்து வீசிய பெருவெடி ராஜபுத்திரியை மட்டுமின்றி
ஹரிதாஸ் ஜாலாவையும் திணற அடித்து அவன் சிந்தையைப் பெரிதும் கலக்கி விடவே, அவன் பெரும் பிரமை பிடித்து நீண்ட நேரம் மௌனமாக நின்றான். எப்பேர்ப்பட்ட சந்தர்ப்பத்திலும் சிறிதும் நிதானத்தை இழக்காத நெஞ்சுரம் பிடித்த
மகாவீரனான ஹரிதாஸ் ஜாலா, சென்ற இரண்டு மூன்று தினங்களில் தனக்கு ஏற்படாத பெரும் திகைப்பு அந்தச் சில விநாடிகளில் ஏற்பட்டு விட்டதை நினைத்து “எந்த வல்லவனையும் வாட்டும் நிலைகள் மனித வாழ்வில் நிச்சயமாக
உண்டு” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டான். ராஜபுதனத்தின் தலைசிறந்த ரத்தினமான நாகதீபத்தைக் கொண்டுவர ஜஹாங்கீர் சொன்னபோது கூட சலிக்காத தன் மனம் ஜயன் சந்தாவத் சோலைவனத்தில் தோன்றிய அந்தச்
சில நிமிஷங்களில் பெரிதும் குழம்பிவிட்டதை எண்ணிப் பார்த்தான். அப்படி எண்ணிப் பார்த்ததில் குழம்பாத தன் மனம் குழம்பியதற்குக் காரணமிருந்ததையும் புரிந்து கொண்டான். என்று ஜஹாங்கீரின் தூதனாக புறப்படத்
தீர்மானித்தானோ அன்றே வாழ்வின் சுக அம்சங்களுக்கும் தனக்கும் சம்பந்தமில்லையென்பதை ஹரிதாஸ் தீர்மானித்துக் கொண்டானாகையால் கண்ணைக் கவரும் அந்த ராஜபுத்திரியைச் சந்தித்த பின்பு தன் மனத்தையும்
உணர்ச்சிகளையும் பெரிதும் அடக்கிக் கொள்ளவே முயன்றான். அந்த முயற்சி ஜயன் சந்தாவத்தின் சொற்களால் திடீரென உடைந்து விட்டதாலும். அதுவும் பெரும் விபரீதமான வழியில் அது உடைக்கப்பட்டதாலும், பெரும் குழப்பம்
தன்னைச் சூழ்ந்து கொண்டது என்ற உண்மையைப் புரிந்து கொண்ட அந்த வாலிபவீரன் ராஜபுத்திரியையோ ஜயன் சந்தாவத்தையோ கண்ணெடுத்தும் பார்க்கக் கூட சக்தியற்றவனாகி நிலத்தில் கண்களைத் தாழ்த்தினான்.
நிலத்தில் கண்களைத் தாழ்த்திப் பழக்கமில்லாதவன் தாழ்த்தினான். சங்கடமான நிலைகளில் நிலத்தில் கண்களைத் தாழ்த்தும் பண்பும் நாணமும் வாய்ந்த வளான ராஜபுத்திரியும் தனது இயற்கைக்கு மாறாகவே அந்தச் சூழ்நிலையில்
நடந்து கொண்டாள். எந்த ஹரிதாஸ் ஜாலாவை ஜஹாங்கீரின் தூதன் என்பதற்காக அவள் வெறுத்தாளோ அந்த ஹரிதாஸ் ஜாலா தன் கணவன் என்பதை உணர்ந்ததால் பெரும் அதிர்ச்சிக்கு மட்டுமின்றி சீற்றத்துக்கும் உள்ளான
ராஜபுத்திரி, தன் கமல விழிகளால் ஹரிதாஸ் ஜாலாவை மட்டுமின்றி ஜயன் சந்தாவத்தையும் வெறித்து நோக்கினாள். வெறித்த அந்தப் பார்வையில் வெறுப்பு இருந்தது. சீற்றம் இருந்தது, திகைப்பும் இருந்தது. இத்தனையும் தன்
பார்வையிலிருந்ததை அவள் உணர்ந்தாள். மற்ற இருவருங்கூட உணர்ந்தார்கள். ஆனால் இத்தனையையும் மீறிய ஓர் அடிப்படை உணர்ச்சியும் அவள் இதய ஆழத்தில் புதைந்து கிடந்ததை மட்டும் அவள் உணரவில்லை. கண்ணை மட்டும்
அவள் சற்று உட்புறம் திருப்பியிருந்தால் அத்தனை ஆத்திரத்துக்கும் அடியில் கணவன் என்ற ஒரு புதுப்பாசமும் புதைந்து கிடப்பதை அவள் உணர்ந்திருப்பாள். உணர்ந்திருந்தால் இந்தக் கதையின் போக்கும் வேறாயிருந்திருக்கும்.
ஆனால் சீற்றமாகிய மேகம் அந்த அடிப்படைப் பாசத்துக்கு திரையிட்டிருந்தது. வெறியெனும நீறு அந்த நெருப்பிள் மீது பாலமாகப் படர்ந்து கிடந்தது. ஆகவே உள்ளத்தின் உண்மையை உணராமலே அவள் இருவரையும் தன் விழிகளால்
வெறித்து நோக்கினாள்.
ஹரிதாஸ் ஜாலா தலைகுனிந்து நின்றதைக் கண்ட அவள் அப்பொழுதும் அவனைப் பற்றித் தவறான எடை போட்டாள். அவன் ராஜபுதனத்தின் துரோகியாதலால்தான், மனைவியென்று அறிந்த பின்பும் தன்னை ஏறெடுத்துப்
பார்க்கத் துணிவில்லாமல் நிற்கிறான் எனத் தீர்மானித்த ராஜபுத்திரி, ஜயன் சந்தாவததின் மீது தன் கண்களைச் சில விநாடிகள் ஓட்டினாள். ராஜபுதனத்தின் எத்தனையோ சிக்கல்களை மிகத் துணிவுடன் அவிழ்த்திருக்கும் ஜயன்
சந்தாவத்தின் முகத்தில் அப்பொழுது ஏளனப் புன் முறுவல் படர்ந்து நிற்பதைக் கண்ட ராஜபுத்திரியின் சீற்றம் பன்மடங்காகவே, “உங்கள் இதயத்தில் மகிழ்ச்சி நிரம்பிக் கிடக்கிறது போல் தெரிகிறது” என்று சொற்களைச் சுடச் சுட
உதிர்த்தாள்.
“ஆம்” என்றார் ஜயன் சந்தாவத், சர்வசாதாரணமாக.
“எதனால் மகிழ்ச்சி?” என்று அவள் மீண்டும் கேட்டு அவரைச் சுட்டுவிடுவதுபோல் பார்த்தாள்.
“நல்ல காரியங்களைச் செய்வதில் எனக்கு. எப்பொழுதும் மகிழ்ச்சி உண்டு. நல்லவர்களின் குணம் அப்படிப்பட்டது” என்று சொல்லி பிதாமகர் நகைத் தார்.
“நீங்கள் நல்லவராக்கும்?” ராஜபுத்திரி இந்தக் கேள்வியில் கோபத்துடன் இகழ்ச்சியையும் கலந்து கொண்டாள்.
“அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்” என்றார் பிதாமகர்.
“சுய ஸ்தோத்திரம் பலமாயிருக்கிறது” என்றாள் ராஜபுத்திரி.
“பிறர் பாராட்டாதபோது சுய பாராட்டு அவசியமாகிறது.”
“அப்படிப் பாராட்டிக் கொள்ளவேண்டிய பெரும் காரியத்தைச் சாதித்து விட்டீர்கள்! அப்படித்தானே உங்கள் எண்ணம்?”
“ஆம்; கணவனையும் மனைவியையும் சேர்த்து வைப்பது பெரும் காரியமல்லவா? சாதாரணமாகவே அது சிறப்பான பணி. உங்கள் விஷயத்தில் அந்தக் காரியம் பன்மடங்கு சிறப்படைகிறது” என்று சொல்லி வாய்விட்டு நகைத்த ஜயன்
சந்தாவத், “கணவன் மனைவி என்று தெரியாத இருவரைத் திடீரெனச் சேர்த்து வைப்பது யாருக்கும் கிடைக்காத பெரும் பாக்கியம்” என்றார்.
அவர் சிரிப்பும் பேச்சும் சகிக்க முடியாத அளவுக்கு எரிச்சலைத் தந்தது ராஜபுத்திரிக்கு. “போதும் நிறுத்துங்கள் உங்கள் பேச்சை” என்றாள் ராஜபுத்திரி அந்த எரிச்சல் குரலிலும் அலைபாய…
“ஏன்? உண்மை கசப்பாயிருக்கிறதா?” என்று விஷமத்துடன் வினவினார் ஜயன் சந்தாவத்.
“சில உண்மைகள் விரும்பத்தகாதவை” என்று பதில் சொன்னாள் ராஜபுத்திரி.
“இது அப்படியல்ல. கசப்புமல்ல. விரும்பத்தகாததுமல்ல”‘ என்ற ஜயன் சந்தாவத் குரல் திடீரென மாறுபட்டதைக் கண்ட ராஜபுத்திரியும் ஹரிதாஸ் ஜாலாவும் அவர் மீது கண்களை நாட்டினார்கள்.
ஜயன் சந்தாவத் கடைசியாகச் சொன்ன சொற்களைச் சற்று அழுத்தியும் பெரும் உறுதியுடனும் உச்சரித்தார். அவர் முகத்தில் அதுவரையிருந்த விஷமமும் நகைப்பும் மாறி, முதலிலிருந்த உறுதி முகத்திலும் பிரதி பலித்தது. உறுதி மிக்க
வார்த்தைகளை அவர் மேற்கொண்டும் உதிர்க்கத் தொடங்கி ராஜபுத்திரியை நோக்கி, “பெண்ணே! இவர் ஜஹாங்கீரின் தூதர் எள்பதால் தான் உன் புத்தி புரண்டுவிட்டது. கணவனுக்கு மனைவி காட்ட வேண்டிய மரியாதையைக் கூடக்
காட்ட மறுக்கிறாய்,இது சுத்த தவறு. ஹிந்து மதத்தின் பண்பாட்டுக்கும் தர்மத்துக்கும் முற்றும் முரண்பட்டது. கயவரானாலும் கணவன் என்பதை உணர வேண்டும் நீ” என்று சுட்டிக் காட்டினார்.
“கயவர்களை வெறுத்து வாழ்விலிருந்து விரட்டிய ராஜபத்தினிகளின் கதைகளை நான் கேட்டிருக்கிறேன்” என்றாள் ராஜபுத்திரி.
“கேட்டிருக்கலாம். ஆனால் அப்படி விரட்டியதால் ராஜபுதனம் பயனடையவில்லை. விரட்டப்பட்ட வீரர்கள் மொகலாயர் வசம் சென்று விட்டார்கள். ராஜபுதனம் பலவீனப்பட்டு விட்டது. ராஜபுதனத்துக்கு இன்று வீரர்கள் தேவை,
இருக்கும் ஓரிருவரும் விரட்டப்பட்டால் ராஜபுதனம் நாளையே மொகலாயர் வசமாகிவிடும் பெண்ணே! எனக்கு அடுத்தபடி ராஜபுதனப் படைகளை நடத்தவல்ல ஒரே படைத்தலைவர் இந்த ஹரிதாஸ் ஜாலா தான் என்பது தெரியுமா?” என்று
வினவினார் ஜயன் சந்தாவத்.
ராஜபுத்திரியின் இதயம் பட்பட்டென்று அடித்துக் கொண்டது. ஹரிதாஸ் ஜாலா பெரும் வீரனென்றும், படைத் தலைவனென்றும் கேள்விப்பட்டிருந்தாள் அவள். ஆனால் யுத்தத் தந்திரத்தில் ராஜபுதனம் பிதாமஹருக்கு அடுத்தபடி
திறனுள்ளவன் அந்த வாலிபன் தானென்பதை அறியாததால் அவள் திகைத்தாள். அந்தத் திகைப்புடன் சொன்னாள், “எனக்குத் தெரியாது…” என்று.
“இப்பொழுதாவது தெரிந்து கொள்” என்றார் ஜயன் சந்தாவத், சற்றுக் கோபத்துடன்.
“தெரிந்து கொண்டேன்.” ராஜபுத்திரியின் பதிலில் இகழ்ச்சி தொனித்தது.
“என்ன தெரிந்து கொண்டாய்?”
“உங்களுக்கடுத்த பெரும் படைத்தலைவர் இவர் என்று. அது மட்டுமல்ல…”
“வேறென்ன?”
“அத்தகைய பெரும் படைத்தலைவர்…”
“சொல்.”
“எதிரியின் கையாள், இனிமேல் ராஜபுதனத்துக்கு எதிராகப் படைகளை நடத்துவார் என்பதையும் தெரிந்து கொண்டேன்.
இதைக் கேட்ட ஜயன் சந்தாவத் பெரிதும் வெகுண்டார். “எதிரிப் படைகளை நடத்தப் போவதாக இவர் உன்னிடம் சொன்னாரா?” என்று வினவினார் கோபத்துடன்.
“இல்லை; சொல்லவில்லை; சொல்ல வேண்டுமா?” இதைச் சொன்ன ராஜபுத்திரி இகழ்ச்சியுடன் நோக்கினாள், ஹரிதாஸ் ஜாலாவை.
“சொல்லாமலேயே புரிந்து கொண்டாயா?”
“எதிரியின் பக்கத்திலிருப்பவர் எதிரிப் படைகளை நடத்துவாரென்பது சொல்லித்தான் தெரிய வேண்டுமா?
“எங்களுக்குச் சொல்லித்தான் தெரிய வேண்டும். உனக்குத் தேவையில்லை.”
“ஆம், தேவையில்லை.”
“புரிந்து கொண்டேன், புரிந்து கொண்டேன்.”
“என்ன புரிந்து கொண்டீர்கள்?”
“கணவன் மனத்தை புரிந்து கொள்ளும் சக்தி மனைவிக்கில்லாமல் வேறு யாருக்கு இருக்கும்? இதைத் தான் புரிந்து கொண்டேன்.” இதைச் சொன்ன ஜயன் சந்தாவத் பழைய ஜயன் சந்தாவத்தாகி, விஷமத்துடன் சிரிக்கவும் செய்தார்.
“உங்கள் பேச்சும் சிரிப்பும் எனக்குப் பிடிக்க வில்லை” என்று கூறினாள் ராஜபுத்திரி. அத்துடன் தரையில் காலையும் கோபத்துடன் உதைத்தாள்.
“ஆகா!” என்று சிரித்தார் ஜயன் சந்தாவத்.
“என்ன ஆகா!” என்று அதே கோபத்துடன் கேட்டாள் ராஜபுத்திரி.
“ராணா அமரசிம்மன் செய்யத் துணியாததை நீ செய்கிறாய்” என்றார் அவர்.
“நீ உதைத்ததுபோல் பூமியில் காலை என்னெதிரில் உதைக்கும் துணிவு மேவார் ராணாவுக்குக் கிடையாது” என்று சுட்டிக் காட்டிய ஜயன் சந்தாவத், “பெண்ணே! நீ கோபத்திலிருக்கிறாய். கோபத்திலிருப்பவர்களுக்கு நிதானம்
கிடையாது. நிதானமிழந்தவர்கள் நிலையைச் சரியானபடி ஆராய முடியாது. நிலையை ஆராய முடியாதவர்கள் சாதாரண மனிதர்களையே எடை போட முடியாது. ஹரிதாஸ் போன்ற தலைவரையா எடை போட முடியும்? முடியாது.
ஹரிதாஸ் ஒருநாளும் மொகலாயர் கையாளாக மாற முடியாது” என்றார் திட்டவட்டமாக.
“உங்களுக்கு எப்படித் தெரியும் அது?” என்று ராஜபுத்திரி கேட்டாள், சற்றுக் கோபம் தணிந்து.
“அவன் உடலில் ஓடும் இரத்தம் அத்தன்மையானது. ஜாலா வம்சத்தை நான் அறிவேன்.
“குலத்தில் தவறிப் பிறப்பவர்கள் இல்லையா?”
“அந்தக் குலத்தில் கிடையாது.”
“ஜஹாங்கீரின் தூதர் என்று அவரே ஒப்புக் கொள்ளுகிறார்.”
“ஆம்.”
“அது எதைக் காட்டுகிறது?”
“சத்தியசந்தர், ஜாலா வம்சத்திற்கேற்ற வீரர் என்பதைக் காட்டுகிறது.”.
“உங்கள் முடிவு அப்படி!”
“புத்திக்கேற்ற முடிவு கிடைக்கிறது. பெண்ணே! எதையும் திடீரென முடிவு செய்யாதே. ஹரிதாஸ் ஜாலா ஜஹாங்கீரின் தூதனாயிருந்தாலும் அதனால் ராஜ புதனத்தின் கௌரவம் பாதிக்கப்படாது. அந்த வம்சத்தின் போக்கே அப்படி.
எத்தனை அழுக்கு நீர் கலந்திருந்தாலும் கடல் எப்படிக் கெடுவதில்லையோ அப்படி இவர் வம்சமும் எந்த இணைப்பினாலும் கெடாது. என்ன எண்ணத்தினால் இவர் ஜஹாங்கீரின் தூதரானார்; என்ன பணியை மேற்கொண்டிருக்கிறார்
என்பது எனக்குத் தெரியாது. அதை எப்படி நிறை வேற்றுவார் என்பதும் எனக்குத் தெரியாது. அதை ஆராய இப்பொழுது சமயமுமில்லை. ஒண்டாலா கோட்டையில் அதை ஆராய்வோம். ஆராய்ந்து குற்ற வாளியானால் மன்னர் அவரைத்
தண்டிப்பார். அது வரை நீ இவர் மனைவியென்பதை நினைப்பில் வைத்துக் கொள். ஐந்து வயதில் இட்ட மாலையே உங்களிருவரையும் கணவன் மனைவியாகப் பிணைத்து விட்டது. ஒண்டாலாவில் அந்தப் பிணைப்பை இன்னும்
பலப்படுத்துவோம். உங்கள் திருமணத்தை அரசரே முன்னின்று நடத்த ஏற்பாடு செய்கிறேன். நான் அங்கு வர இன்னும் சில நாட்களாகும்” என்று கூறிய ஜயன் சந்தாவத், “ஹரிதாஸ்!” என்று எதிரே மீண்டும் தலையைக் கவிழ்த்துக் கொண்ட
அந்த வாலிபனை விளித்தார்.
ஹரிதாஸ் தலையை நிமிர்த்தி அவரைப் பார்த்தான். “ஹரிதாஸ்! உன் வாளை இப்படிக் கொடு” என்றார் ஜயன் சந்தாவத். கீழேயிருந்த வாளை எடுத்து அவரிடம் நீட்டினான் ஹரிதாஸ். அதைக் கையில் வாங்கிக் கொண்டு அவனை
நோக்கி வாளின் முனையைத் திருப்பிய ஜயன் சந்தாவத், “ஹரிதாஸ்! ஒண்டாலாவுக்கு நான் திரும்பிவரை ராஜபுதனத்திற்கு எதிரான பணியில் எதிலும் ஈடுபடுவதில்லை யென வாளின்மீது ஆணை வை” என்றார்.
அவர் சொன்னபடி ஹரிதாஸ் ஜாலா ஆணை வைத்ததும் ஜயன் சந்தாவத் வாளை அவனிடமே திருப்பிக் கொடுத்துவிட்டு அவனைச் சில விநாடிகள் உற்று நோக்கிவிட்டுப் பிறகு சொன்னார் : ‘ஹரிதாஸ்! உன் வாளுக்கு இவள்
மாலையிட்டது இன்னும் என் கண் முன் நிற்கிறது. ராணா பிரதாபசிம்மன் முன்னிலையிலேயே அந்தப் பெரும் வைபவம் நடந்தது. அன்று வரை அரச மரியாதைகளுக்கும் போர் மரியாதை களுக்கும் போரிட்டு வந்த சந்தாவதர்களையும்
ஜாலா வம்சத்தினரையும் இணைக்க ராஜபுதனத்தின் இணையில்லாத் திலகம் பிரதாபசிம்மன் செய்த ஏற்பாடு அது. அரசரின் வலது கைப் புறத்தில் யார் அமருவது, அவரது படையில் முன்னணியில் சென்று உயிர் துறக்கும் மரியாதை
யாருக்கு உரியது என்பதற்காகவே சண்டையிட்டு வந்த அந்த இரண்டு வீரக் கூட்டங் களையும் உங்கள் விவாகத்தால் இணைத்தார் அவர். அப்பொழுது நான் உட்பட ராஜபுதனத்தின் பெரும் வீரரெல்லாம் இருந்தோம். பிரதாபசிம்மனுடன்
நாட்டுச் சுதந்தரத்துக்காக, ராஜபுத்திர கௌரவத்துக்காக மலையிலும் காடுகளிலும் வாழ்ந்து மொகலாயரிடம் பெரும் போரிட்டு வந்த பிரபல படைத்தலைவர் அனைவரும் இருந்தார்கள். அன்று முதல் இரண்டு வம்சங்களும்
ஒன்றுபட்டன; நீங்கள் மட்டும் ஒன்றுபடவில்லை.”
“ஏன்?” என்று வினவினான் ஹரிதாஸ் ஜாலா.
“இவள் சிறு வயது, நீயும் சிறு வயது. இவள் தந்தை வயது வந்ததும் பெண்ணை அனுப்புவதாகக் கூறி, மலைப் பிரதேசத்துக்கு அழைத்துச் சென்றுவிட்டார். வயது வந்த பிறகு குடும்பத்தின் தலைவன் என்ற முறை யில் என்னிடம்
அழைத்து வந்து ஒப்படைத்தார். அப்பொழுது நீ இல்லை. ராஜபுதனப் படைகளின் முன்னிலையில் போயிருந்தாய். பிறகு மொசலாயரிடம் சிறைப்பட்டாய். ஆகவே நீங்கள் சந்திக்க வசதியில்லை. உன் மனைவியை உன்னிடம் ஒப்படைக்க
எனக்கு வழியில்லை. வசதியும் வழியும் இன்று தான் ஏற்பட்டன. இதோ உன் மனைவியை ஒப்படைக்கி றேன். அவளைக் காத்து ஒண்டாலா அழைத்துச் செல். அங்கு வந்ததும் உங்கள் திருமணம் நடக்கும்” என்று கூறிய ஜயன் சந்தாவத்
வீரர்கள் வந்ததும் அவர்களைப் புறப்படச் சொல்லித் தானும் புறப்பட, ஆயத்தமானார்.
ஹரிதாஸ் ஜாலாவின் புத்தி பெரிதும் குழம்பியிருந்தது. மனைவியைத் தானடைய வசதியும் வழியும் அந்த இடத்தில் அந்த முறையில் தானிருந்த அந்த கதியிலா ஏற்பட வேண்டும் என்று எண்ணினான். இப்படி எண்ணிக் கூடாரத்தைப்
பிரிக்கவும் கட்டளையிட்டான். கூடாரம் பிரிபடுவதற்கும் மற்ற வீரர்கள் பாலைவனத்திலிருந்து வருவதற்கும் சரியாயிருக்கவே, அவர்களையும் புறப்பட அவன் உத்தரவிட்டான். புறப்பட அதிக ஆயத்தம் தேவையில்லா திருந்தது. மற்ற
வீரர்கள் பயண முறையிலேயே வந்திருந்ததால் கூடாரம் பிரித்துச் சுற்றப்பட்டதும் அம்பாரி ஒட்டகத்தை தனியாகப் பிடித்து வரச் சொல்லிவிட்டு அரச குமாரியையும் ஒரே புரவியில் அமர்த்தி அழைத்துக் கொண்டு ஒண்டா லாவை
நோக்கிப் பயணமானான் ஹரிதாஸ் ஜாலா. அவர்களுடன் அன்றிரவு முழுவதும் பயணம் செய்த ஜயன் சந்தாவத், விடிவதற்கு முன்பே அவர்களிடமிருந்து பிரிந்து வீரர் இருவருடன் வேறு மார்க்கத்தில் சென்றார். ஒண்டாலா கோட்டைக்கு
அடுத்து ஒரு நாள் பயணம் இருந்தது. அந்த ஒரு நாளில் ஹரிதாஸ் ஜாலா ஜயன் சந்தாவத் குறிப்பிட்ட வசதியையும் வழியையும் பற்றித் தீர்க்காலோசனைவில் இறங்கினான். அந்த வசதியும் வழியும் தன்னை எத்தனை இக்கட்டான
நிலையில் நிறுத்திவிட்டன என்பதை நினைத்துப் பெருமூச்செறிந்தான்! சென்றவழியில் வசதி கிடைத்தது; ராஜபுத்திரியுடன் தனித்திருக்க வசதியும் கிடைத்தது. பிறகு ஒண்டாலா கோட்டையிலும் அந்தச் சந்தர்ப்பங்கள் கிடைத்தன.
ஆனால் அந்த வசதிகளும் வழிகளும் அவனுக்குச் சிறிதும் உதவாமல் மீள முடியாத பெரும் ஆழத்தில் அந்த வீரனை ஆழ்த்திக் கொண்டே சென்றன.