Nagadevi Ch 11 | Nagadevi Sandilyan | TamilNovel.in
நாகதேவி – சாண்டில்யன்
அத்தியாயம் – 11. சிற்பியும் சிற்பமும்
Nagadevi Ch 11 | Nagadevi Sandilyan | TamilNovel.in
உபேந்திரன் இல்லத்தைவிட்டு வெளிப்போந்த குருநாதர் மனம் பலவிதத்திலும் குழம்பியிருந்ததால் அவர் நேராகத் தமது ஆசிரமத்தை நோக்கிச் செல்லாமல் கால் போன வழிப்படி நடக்கலானார். அப்படி நடந்தபோது தமது மூளை
கூர்மையிழந்து மங்கி விட்டதை அடிக்கடி நினைத்துத் தம்மை மிகவும் நொந்து கொண்டார். நாகதேவியும் உபேந்திரனும் ஒன்றாயிருக்கும் சமயத்தில் பக்கத்து அறையில் அடி யுண்டு கிடந்த சாவகத்தின் மாலுமியைப்பற்றி தாம் ஏதும்
பிரஸ்தாபிக்காதது ஏன் என்று தம்மைத்தாமே வினவிக் கொண்டார். முதலில் உபேந்திரன் சீனத்துக் கப்பலை சோதிக்கப் போவதாகச் சொன்னதும் ஏதோ சிலாம்பில் அங்கி மாட்டிக் கிழிந்ததாகச் சொன்னதும் சுத்தப் பொய் என்பதையும்,
வாட்போர் நடந்ததை மாலுமி சொன்ன பிறகும் தாம் ஏன் அதைக் குறிப்பிட்டு நாகர் தலைவனை மடக்கவில்லை என்றும் கேட்டுக் கொண்டார். எல்லாவற்றுக்கும் தமது மூளை கெட்டுப் போய்விட்டது தான் காரணம் என்று முடிவு
கட்டினார். என் மூளை மட்டுமென்ன? நாகதேவியின் மூளையும் களிமண்ணாகிவிட்டது” என்று அவளையும் கடிந்து கொண்டார். “காமத்தால் கண்ணிழந்து விட்டாள் நாகதேவி. இதற்குத்தான் பெண்களை நம்பி அரசியலில்
புகக்கூடாது” என்ற தத்துவத்தையும் எடுத்துச் சொல்லி நாகதேவியைப் பெரிதும் சபித்தார். அத்துடன் நாகதேவியும் உபேந்திரனும் எந்த நிலையில் இருப்பார்கள் என்றும் எண்ணி, “சே! இது துறவி எண்ணக்கூடிய எண்ணமா?” என்று
தம்மை வெறுத்தும் கொண்டார்.
இத்தனைக்கும் உபேந்திரன் மீது அவருக்கிருந்த நம்பிக்கை போகவில்லை. ‘உபேந்திரனை நான் சில ஆண்டுகளாக அறிவேன். பெண் வலையில் அவன் அத்தனை சீக்கிரம் விழுபவனல்லவே? அப்படியானால் காந்தருவத்தைப் பற்றிப்
பேசினானே, அது உண்மைதானா?’ என்றும் நினைத்தார். ஆனால் நாகதேவியின் இணையிலா அழகில் எந்த ஆடவனும் மயங்குவான். அவனாக மயங்காவிட்டால் மயக்க வைக்கும் திறன் நாகதேவிக்கு உண்டு’ என்றும் சொல்லிக் கொண்டார்
உள்ளத்துள். தம் மனத்துள் எழும் இந்த ஆட்சேபனை சமாதானங்களுக்கு உபேந்திரன் அறையில் அந்த சமயத்தில் நடக்கும் காந்தருவம் அல்லது சாம நாடகம் எத்தன்மையானதென்பதற்கு ஆண்டவன் தான் பதில் சொல்ல முடியும் என்ற
தீர்மானத்தின் விளைவாகப் பெருமூச்சொன்றும் விட்டார்.
இத்தகைய நினைப்புகளுடன் போகும் திசையை எண்ணாமல் நடந்த சுத்தானந்தர் மெல்ல ஆசிரம பாதையிலிருந்து விலகி முக்கால்வாசி முடிந்து நின்ற சூடாமணி விஹாரத்துக்கு வந்து சேர்ந்து அங்கிருந்த பாறாங்கல் படியொன்றில்
உட்கார்ந்து கொண்டார். சில விநாடிகள் கழித்து அண்ணாந்து பார்த்தார். விஹாரத்தின் தூண்களின் வேலை முடிந்துவிட்டதையும் கூரை வேலை முடிந்துவிட்டால் பிறகு உள் வேலை யைக் கவனிக்கலாமென்றும் எண்ணினார். அந்த
எண்ணத்தால் அவர் முகம் மலர்ந்தது. “உள்வேலை துவங்கியதும் இராக்காலங்களில் நிலவறை வேலையைத் துவங்கலாம். விஹாரத்தின் நிலவறையில் அரண்மனையைத் தோற்கடிக்கும் கூட மும் அறைகளுமிருக்கும். சாவகத்தின் மன்னர்
யாரும் தெரியாமல் இங்கு தங்கலாம்” என்று எண்ணிய சுத்தானந்தர் உண்மையில் சுத்தராக இல்லாவிட்டாலும் ஆனந்தமயமாகக் காட்சியளித்தார். அவர் முகமலர்ச்சியை நீண்ட நேரமாக அவன் எதிரே நின்ற மனிதனும் கவனித்தாலும் அவன்
ஏதும் பேசவில்லை
சுத்தானந்தர் தமது கனவு நிலையிலிருந்து சுயநிலைக்கு வந்த பிறகு தான் எதிரே நிற்கும் மனிதனைக் கவனித்தார். அவனைக் கண்டதும் அவர் முகம் மூன்னைவிட அதிகமாக மலர்ந்தது. அவன் வரவு சுபசூசகம் என்று எண்ணியதால்
என்ன சொல்கிறோம் என்பதை அறியாமல், “மாணிக்க ஸ்தபதி! நீர் உண்மையில் மாணிக்கந்தான். இப்படி வாரும் என் பக்கத்தில் அமரும்” என்று அழைத்தார்.
வயோதிகரான மாணிக்க ஸ்தபதி பிரமித்தார். “சுவாமி! என்னை பரீட்சை செய்கிறீர்களா?” என்று பிரமிப்புடன் கேட்டார்.
“பரீட்சையா! என்ன பரீட்சை?” என்று குருநாதர் வினவினார்.
“தங்களுக்கு சமமாக நான் என்று உட்கார்ந்திருக்கிறேன்?” என்று வினவினார் ஸ்தபதி.
அப்பொழுது தான் விழித்துக் கொண்ட சுத்தானந்தர் “உம்மிடமுள்ள மரியாதையால் மறதியாகச் சொல்லி விட்டேன். ஆனால் உட்கார்ந்தாலும் தவறில்லை” என்று சொன்னார்.
மேலும் பிரமித்த ஸ்தபதி “நான் வெறும் சிற்பி, கல்லைச் செதுக்குபவன்…” என்று கூறினார்,
“நீ கால வெள்ளத்தில் நிற்பாய் நாங்கள் மறைந்து விடுவோம்” என்றார் சுத்தானந்தர்.
“குருநாதர் பெயர் மட்டும் எப்படி மறையும்? எந்த முனிவரின் பெயர் இதுவரை மறைந்திருக்கிறது?” என்று கேட்டார் ஸ்தபதி.
ஸ்தபதி கேட்டது மிகவும் திருப்தியாயிருந்ததால் குருநாதர் உடனடியாகப் பதில் சொல்லவில்லை. பதில் சொன்னபோது யார் பெயர் வரலாற்றில் நிலைக்கும் என்பதைப் பற்றியும் பேசவில்லை. “ இந்த விஹாரத்தின் கூரை எப்பொழுது
முடியும்?” என்று வினவினார்.
“ மூன்று மாதங்களில் முடியும்” என்றார் ஸ்தபதி.
“அதற்குள் முடிந்துவிடுமா?”
“முடிந்துவிடும்.”
“எப்படி? எத்தனை கருங்கற்கள் மேலே ஏற்றப்படும்?”
“மேலே கருங்கல் ஏற்றும் வழக்கமில்லை. கண்டி பிடித்து கூரையை வளைத்து வண்ணச் சித்திரங்களை எழுத வேண்டும். போதிசத்தரின் வாழ்க்கையை எழுதுவதுதான் வழக்கம் புத்த விஹாரங்களில்.”
“ஆம், ஆம்” என்று சொன்ன சுத்தானந்தர், “ஏன் கூரையை இன்னும் சற்று துரிதமாக முடிக்க முடியாதா?” என்று வினவினார்.
ஸ்தபதி வியப்பை முகத்தில் காட்டினார். “தங்களுக்குத் தெரியாதது ஏதுமில்லை. கண்டி பிடித்து இறுகுவதற்கே ஒரு மாதமாகும். பிறகு வெள்ளை வைக்க இன்னொரு மாதம். மூன்றாம் மாதத்தில் சித்திரம் தீட்டலாம். அதற்கு முன்பு
எதைச் செய்தாலும் கூரை தரையில் இறங்கும்” என்று விளக்கினார் ஸ்தபதி. அத்துடன் வினவினார்: “ஏன் குருநாதரே? என்றுமில்லாத விந்தையாக ஏதேதோ கேட்கிறீர்களே, மாணிக்க ஸ்தபதியிடம் தங்களுக்கு நம்பிக்கை இல்லையா” என்று.
“நம்பிக்கையில்லாமலில்லை ஸ்தபதி. சாவக மன்னர் அடிக்கடி ஓலை விடுக்கிறார் முடிந்ததா என்று, அதனால் கேட்டேன். தவிர கூரை முடிந்து தானே நிலவறை கட்ட வேண்டும்?” என்றார் சுத்தானந்தர்.
“அதற்குத்தான் இடம் விட்டிருக்கிறோம். அப்படி நிலவறையில் என்ன பெரிய வேலை. சாவகத்திலிருந்து வரும் பொருள்களை அடைத்து வைக்கத்தானே கட்டுகிறோம்?” என்று ஸ்தபதி சொன்னதும் சுத்தானந்தர் சிறிது மென்று
விழுங்கினார்.
“என்ன ஸ்வாமி?” என்று மாணிக்க ஸ்தபதி வினவினார் குருநாதரின் சங்கடத்தைப் பார்த்து.
குருநாதர் சமாளித்துக் கொண்டு பேசினார். “இல்லை ஸ்தபதி நிலவறை கட்டத்தான் கட்டுகிறோம். அதை கிடங்காகக் கட்டுவானேன்? ஏன் அரசு விருந்தினர் தங்குமாறும் கட்டினால் என்ன என்று யோசித்தேன்” என்றார் சுத்தானந்தர்
மெதுவாக.
“அரசு விருந்தினர் மாளிகையைத்தான் இராஜேந்திர சோழதேவர் நாகையில் பெரிதாக நிர்மாணித்திருக்கிறாரே. அதிருக்க நிலவறையில் எதற்காகத் தங்க வேண்டும்?” என்று ஸ்தபதி கேட்டார்.
“தங்கப் போவதில்லை. ஆனால் நமது சிற்பத்திறன் கண்டு சாவகத்தார் பிரமிக்க வேண்டாமா?” என்றார் குருநாதர்.
“சுவாமி” என்று மரியாதையுடனும் மெதுவாகவும் ஸ்தபதி அழைத்தார்.
“என்ன ஸ்தபதி?” குருநாதர் குரலில் குழைவும் இருந்தது. பயமும் இருந்தது.
“மாணிக்க ஸ்தபதி இன்றுவரை பெருமைக்காக வேலை செய்யவில்லை. யாரும் மெச்சுவதற்காகச் செய்யவில்லை.”
“உமக்கு வேண்டாம் பெருமை. ஆனால் எங்களுக்கு?”
“துறவியான குருநாதருக்கு மட்டும் எதற்குப் பெருமை?”
இதைக் கேட்ட குருநாதர் சிறிது தயங்கினார். “ஸ்தபதி! உம்மிடம் ஒன்றைச் சொல்லக்கூடாதென இருந்தேன். ஆனால் மறைப்பதில் பயனில்லை. சாவக மன்னர் புத்த மதத்தில் தீவிர அக்கறை உள்ளவர்…” என்று சிறிது பேச்சை நிறுத்தினார்.
“மகிழ்ச்சி” என்றார் ஸ்தபதி.
“அவருக்கு ஒரு தியான அறை வேண்டுமாம். அது நிலவறையாக இருந்தால் தியானத்துக்குக் குந்தகம் இருக்காதாம்” என்றார் சுத்தானந்தர்.
“அப்படிச் செய்தி ஏதாவது வந்திருக்கிறதா?”
“ஆம்.”
“ஓலை அனுப்பியிருக்கிறார்களா?”
“ஆளையே அனுப்பியிருக்கிறார்கள்.”
“தூதுவர் எப்பொழுது வந்தார்?”
“இரண்டு நாள்களாயிற்று.” –
“எனக்குத் தெரியவில்லையே?”
“சாவகத்திலிருந்து ஒரு மரக்கலம் வந்திருக்கிறது.”
“ஆமாம், அதைப்பற்றி மக்கள் பேசிக் கொண்டார்கள்.
“என்னவென்று?
“அதில் யாரோ மாயக்காரி வந்திருக்கிறாளாம்.”
“அப்படியா பேசிக் கொள்கிறார்கள்?”
“ஆம். நமது மருதியின் தாய்மாமனைக் கொலை செய்ய முயன்றாளாம். படைத்தலைவர் தான் தப்புவித் தாராம்.”
ஸ்தபதி சொற்களைக் கேட்ட குருநாதர் ஸ்தம்பித்தார். “சுத்தப் புரட்டு ஸ்தபதி. வந்திருப்பவள் சாவக நாகர் குலத்தாரின் தலைவி. நாகதேவி என்று அழைக்கப்படுகிறாள். அவள் தான் சாவக மன்னரின் தூதுவராக வந்திருக்கிறாள். அவள்
எதற்காகப் போயும் போயும் மருதியின் மாமனைக் கொல்ல வேண்டும்?” என்று குருநாதர் சொன்னார். அத்துடன் நிறுத்தவில்லை குருநாதர். “இப்பொழுது அந்த நாகதேவி நமது படைத்தலைவர் உபேந்திரன் மாளிகையில் இருக்கிறாள்”
என்றும் விளக்கினார்.
இது இன்னும் வியப்பாக இருக்கவே ஸ்தபதி கேட்டார், “ இந்த நேரத்திலா?” என்று.
“ஆம்.”
“படைத் தலைவர் பிரும்மச்சாரியாயிற்றே.”
“அதனாலென்ன?”
“நாகதேவி வயதான மூதாட்டியா?”
“சே! என்ன கேள்வி?”
“இல்லாவிட்டால் உபேந்திரர் தமது மாளிகையில் ஒரு பெண்ணை எப்படித் தங்க வைப்பார்?”
.
இதைக் கேட்டதும் பின்னாலிருந்த யாரோ நகைத்தார்கள். “ஸ்தபதி! நாகதேவியைப் பாராமலே எடை போட வேண்டாம். திரும்பிப் பாரும்” என்றான் உபேந்திரன்.
சுத்தானந்தர் ஸ்தபதி இருவருமே குரல் வந்த திசையை நோக்கினார்கள். சூடாமணி விஹாரத்தின் தூண்களிலிருந்த விளக் கொன்றை சுக்கங் கற்களைத் தட்டித் தீயுண்டாக்கிக் கொளுத்தினான் உபேந்திரன். அந்த ஒளியில் சிற்பி
செதுக்கிய சிலையென நின்றாள் நாகதேவி. அதைப் பார்த்த தமிழகச் சிற்பியும் சிலையானார். அவரே சிலையாகிவிட்டால் குருநாதரைப் பற்றி என்ன சொல்ல?
அடியோடு உணர்விழந்து நின்றார் குருநாதர். அப்பொழுது உயிர்ச் சிற்பமான நாகதேவி சொன்னாள்.”குரு நாதரே! நீர் இத்தனை நேரம் பேசிக் கொண்டிருந் ததைத் தலைவர் முழுவதும் கேட்டார்” என்று கூறினாள்.
அரைகுறை சுரணை ஏதாவது குருநாதருக்கு இருந் திருக்கும் பட்சத்தில் அதுவும் பறந்தது நாகதேவியின் சொற்களால்.