Nagadevi Ch 12 | Nagadevi Sandilyan | TamilNovel.in
நாகதேவி – சாண்டில்யன்
அத்தியாயம் – 12. நாடகம்
Nagadevi Ch 12 | Nagadevi Sandilyan | TamilNovel.in
எந்த அறிவாளிக்கும் உணர்ச்சிகள் தடுமாறும் சமயம் உண்டு. அந்த சமயத்தில் அவன் நிலை குலைந்து உளறுவதும் இயற்கை. அறைகுறையாகக் கட்டப்பட்டிருந்த சூடாமணி விஹாரப் படியில் உட் கார்ந்திருந்த குருநாதர்
சுத்தானந்தரும் அன்றிரவு அந்த நிலையில் தானிருந்தார். ஆகையால் நாகதேவியையும் உபேந்திரனையும் கடுமையாக நோக்கினார் சில விநாடிகள் மௌனமாக. பிறகு மௌனத்தை உடைத்து, “உங்களிருவருக்கும் இங்கென்ன வேலை?
இந்த நேரத்தில்?” என்று குரலிலும் கடுமை ஒலிக்க இரு வரையும் நோக்கிக் கேட்டார்.
இதற்கு நாகதேவி பதிலேதும் சொல்லவில்லை. உபேந்திரனே கேட்டான் “வேறெங்கு வேலை?” என்று.
சுவாமிகள் நிதானத்தை அடியோடு இழந்துவிட்டிருந்ததால் மீண்டும் உளற முற்பட்டு, “காந்தருவ மணம் நடுத்தெருவிலா நடக்கும்?” என்று சீறினார்.
காந்தருவ மணமா!” என்று வியப்புடன் வினவினான் உபேந்திரன்.
“நீதானே கூறினாய், நீயும் இவளும் இன்றிரவே” என்று துவங்கி அதற்குமேல் ஏதும் பேச முடியாததால் மென்று விழுங்கினார் துறவியார்.
“நானும் இவளும் இன்றிரவே?” என்று வினவினான் உபேந்திரன் ஏதும் அறியாதவன்போல.
“இருவரும் இன்றிரவு உன் மாளிகை அறையிலேயே…” என்று குருநாதர் தமது முட்டாள் தனத்தை முதன் முதலாக உணர்ந்ததால் சட்டென்று தமது கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து எழுந்து நின்றார்.
இருவர் உரையாடலையும் கேட்டுக்கொண்டிருந்த மாணிக்க சிற்பி அடியோடு பிரமை தட்டிப்போய், “சுவாமி! சுவாமி! நீங்கள் இப்படியெல்லாம் பேசுவது அழகல்ல” என்றான் மெதுவாக.
சுத்தானந்தர் தமது கோபத்தை ஸ்தபதிமீது திருப்பினார். “ஸ்தபதி நான் எப்படிப் பேசவேண்டும் என்று உம்மைக் கேட்கும்போது நீர் சொல்லிக் கொடுக்கலாம்” என்று கடிந்து கொண்டார்.
மாணிக்க ஸ்தபதியின் முகத்தில் விஷமச்சாயை பூராவாகப் படர்ந்தது. “சரி ஸ்வாமி, தங்களிஷ்டம் ஆண் பெண் உறவைப்பற்றித் தாங்கள் பேசுவது தங்கள் ஆசிரமத்துக்குப் பொருத்தமாயில்லை” என்று கூறினார், குரலில் லேசாக
விஷமத்தைக் காட்டி.
இந்த சமயத்தில் மாணிக்க ஸ்தபதிமீது கண்களைத் திருப்பிய உபேந்திரன், “ஸ்தபதி, சுவாமிக்குட் பொருந்தாத விஷயம் ஏதுமில்லை. ஸ்வாமி சகலமும் அறிந்தவர். எங்கள் இருவரைப் பற்றியோ, சூடாமணி விஹார நிர்மாண விஷயத்தைப்
பற்றியோ, அரசியலைப் பற்றியோ, எதுவும் சொல்ல சுவாமிக்கு உரிமை உண்டு” என்று கூறிவிட்டு, ஸ்தபதி, நிலவறை அமைப்புப்பற்றி திட்டமிட்டுவிட்டீரா?” என்று வினவி னான்.
“ஆகா! ஒரு படம் வரைந்திருக்கிறேன். அதை வைத்து சின்னஞ்சிறு மரத்துண்டுகளால் மாதிரி ஒன்று முதலில் செய்யவேண்டும். ஆசாரி வெளி ஊர் போயிருக்கிறார். வந்ததும் மாதிரி அறையை முடித்துவிடு கிறேன்” என்றார் ஸ்தபதி.
“படத்தை எப்பொழுதும் பார்க்கலாம்?” என்று வினவினான் உபேந்திரன்.
“இப்பொழுது கூடப் பார்க்கலாம்”
“தேவியை அழைத்துக் கொண்டு இப்பொழுது வருவதற்கில்லை. நாளைக் காலையில் நீரே என் மாளிகைக்குக் கொண்டு வந்து விடலாமே?”
“கொண்டு வருகிறேன், எத்தனை நாழிகைக்குக் கொண்டு வரலாம்?”
“சுமார் பத்து நாழிகைக்கு.”
“சரி படைத்தலைவரே” என்ற ஸ்தபதி குருநாதரூக்கும் தலைவணங்கி அந்த இடத்திலிருந்து நகரப் பார்த்தான்.
“சற்று இருங்கள் ஸ்தபதி” என்று அவனைத் தேக்கிய உபேந்திரன், “நான்கூடப் பார்க்க வேண்டுமென்பதில்லை; தேவியும் குருநாதரும் பார்த்தாலே போதும். அவ்விருவர் இஷ்டப்படி அறையை அமைத்து விடுங்கள்” என்றும்
சொன்னான்.
“உத்தரவு” என்றான் ஸ்தபதி.
“ஸ்தபதி” என்று அழைத்தான் உபேந்திரன் மெதுவாக.
“என்ன படைத்தலைவரே?” என்று வினவினார் ஸ்தபதி.
“நீங்கள் நினைத்தது போல் நாகதேவி மாயக்காரி அல்லள்” என்று சுட்டிக்காட்டிப் பக்கத்திலிருந்த நாகதேவியைப் பார்த்துப் புன்முறுவல் செய்தான்.
ஸ்தபதி சிறிது சங்கடத்துக்குள்ளானார். “ஊரில் பேசிக் கொண்டதைத்தான் சொன்னேன். என் சொந்த அபிப்பிராயமல்ல அது” என்றார் ஸ்தபதி.
“ஊர் அபிப்பிராயத்தை திருத்த வேண்டியது உமது கடமை. வெளிநாட்டு தூதர் ஒருவரைப் பற்றி வீண் வம்பு எதையும் இராஜேந்திர சோழதேவர் விரும்பமாட்டார்” என்று சற்று வலியுறுத்தியே சொன்னான் உபேந்திரன். அத்துடன்
நாகதேவியின் இடையில் தனது இடது கையைச் செலுத்திச் சிறிது அழுத்தியும் கொடுத்தான்.
ஸ்தபதியின் கண்களிலிருந்து அந்த இன்பநிலை தப்பாததால், “படைத்தலைவரே! உலைவாயை மூடினாலும் ஊர் வாயை மூட முடியாது என்ற பழமொழி தங்களுக்குத் தெரியாததல்ல” என்ற ஸ்தபதி “அநாவசிய வதந்திகளுக்குப் பெரிய
இடங்கள் கொடுக்காதிருப்பது கூட நல்லது” என்றார்.
இதைக் கேட்டதும் அதுவரை மௌனம் சாதித்த சுத்தானந்தர் கொதித்து எழுந்தார். “ஸ்தபதி படைத்தலைவரை எதிர்த்துப் பேசும் அளவுக்கு உமது நிலைமை உயர்ந்து விட்டதா?” என்று வினவினார்.
“குருநாதரே? நானோ சிற்பி. இந்தக் கட்டடத்தைக் கட்டுவது தான் என் வேலை. ஊரைத் திருத்துவது என் வேலையல்ல. அதைத் தங்களைப்போன்ற பெரியவர்கள்தான் செய்யவேண்டும். உத்தரவு கொடுத்தால் நான் வருகிறேன்” என்ற
ஸ்தபதி திரும்ப முயன்றார்.
அந்த சமயத்தில் நாகதேவியின் இனிமையான குரல் எழுந்தது. “ஸ்தபதி நீர் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. ஆனால் திருமணமாகதிருக்கும் இரு வரைப்பற்றி ஏற்படும் ஊர் வம்புக்கு தாங்கள் செவி மடுக்காதிருக்கலாம்” என்று
கூறியதோடு நில்லாமல் ஸ்தபதியை நோக்கி நடந்தும் வந்தாள். அவள் நடையே படமெடுத்த சர்ப்பம் அசைந்து வருவது போலிருந்ததை ஸ்தபதி கவனித்தார். அந்த அசைவுகளில் பயங்கரத்துடன் பெரும் அழகும் கலந்திருந்ததையும்
பார்த்தார். அதிலிருந்து அவருக்கு ஏதோ யோசனை தோன்றியிருக்க வேண்டும். ஆகவே, நாகதேவி தமக்கு அருகில் வந்து நின்றுவிட்டதைக் கூட அவர் கவனிக்கவில்லை. ஏதோ தீவிர சிந்தனையிலிருந்ததால் பேசவில்லை அவர். நாகதேவி
அவர் சிந்தனையைக் கவனித்தாள். “ஸ்தபதி உங்கள் எண்ணம் புரிகிறது எனக்கு” என்றாள்.
“என் எண்ணமா தேவி?” என்று வியப்புடன் வினவினார் ஸ்தபதி.
“ஆம் நிலவறை அமைப்புப்பற்றி யோசிக்கிறீர்” என்றாள் நாகதேவி.
மேலும் பிரமையடைந்தார் மாணிக்க ஸ்தபதி. “நிலவறை அமைப்பு பற்றியா” என்று கேட்டார் பிரமை குரலிலும் விரிய.
“ஆம் ஸ்தபதி, முதலில் நிலவறைப் பாதையைக் கருங்கல் சூத்திரத்தால் திறந்து விடலாமென்று நினைத்தீர்கள். இப்பொழுது மாறி மாறி நான்கு இடங்களில் சூத்திரங்களை அமைத்தால் நான்கு காறைகள் மாறி மாறி திறக்கும் மூடும்.
அந்த அமைப்பை சீக்கிரம் உணருவதும் கஷ்டம். தவிர பெண்களின் நடையைப் போல் அசைந்து அசைந்து நகரும் பாறாங்கல் மூடிகள்” என்று விளக்கிய நாகதேவி மந்தகாசம் செய்தாள்.
அஸ்தபதியின் மூச்சு நின்றுவிடும் போலாயிற்று. பிறர் மனத்தை நிமிஷ நேரத்தில் அறியக்கூடிய பயங்கரமான ஒரு பெண் முன்பு தானிருப்பதைப் புரிந்து கொண்டார். மாயக்காரியென்று மக்கள் அழைப்பதில் தவறில்லை என்று
உள்ளூர எண்ணவும் செய்தார். இருப்பினும் எதையும் வெளிக்குக் காட்டாமல், “தேவி, தங்களுக்கு மனோதத்துவ சாஸ்திரம் தெரியுமா?” என்று வினவினார்.
“தெரியாது” என்றாள் நாகதேவி.
“அப்படியானால் என் உள்ளத்தில் எழுந்த திட்டத்தை எப்படி அப்படியே எடை போட்டீர்கள்?” என்று ஸ்தபதி வினவினார்.
“ஊகந்தான்” என்றாள் தேவி.
“தங்களைவிட யாரும் எதையும் அதிகமாக ஊகிக்க முடியாது” என்று ஸ்தபதி பாராட்டினார். “நிலவறைக்கு வழியை அப்படியே அமைத்து விடுகிறேன்” என்றும் உறுதி கூறினார்.
அதுவரை சற்று எட்ட நின்றிருந்த குருநாதர், அப்படியானால் என் யோசனை யாருக்கும் தேவை யில்லை போலிருக்கிறது” என்றார் கோபத்துடன்.
“இந்த விஹாரம் சம்பந்தப்பட்டவரை தங்களுக்கு தெரியாமல், தங்கள் யோசனையைக் கேட்காமல் எதுவும் நடக்காது” என்றார் ஸ்தபதி. பிறகு தேவியை நோக்கி, ‘தேவி! நான் வருகிறேன். இந்த ஏழையின் சிற்ப சாலைக்கு. தாங்கள்
எப்பொழுது வந்தாலும் சூடாமணி விஹாரத்தின் முமு அமைப்பைப் பார்க்கலாம்” என்று கூறிவிட்டுப் படைத்தலைவனுக்கும் தலைவணங்கிவிட்டுத் திரும்பச் சென்றார்.
ஸ்தபதி அந்த இடத்தில் இருந்து அகன்றதும் குருநாதர் படைத்தலைவனை நோக்கி, “சரி, நானும் வருகிறேன்” என்று விடை பெற்றுக்கொள்ன முயன் றார்.
“இருங்கள்” என்று தடுத்தாள் நாகதேவி.
“என்ன வேலை எனக்கு இங்கே?” என்று வினவினார் குருநாதர்.
நாகதேவியின் கண்கள் விஹாரத் தூணின் சிறு விளக்கில் கூட பளபளத்தன. “இங்கு வேலையில்லை தான்…’ என்றாள்.
“வேறெங்கு வேலை?” என்று வினவினார் குருநாதர்.
“எனது மரக்கலத்தில்” என்று சுட்டிக் காட்டிய நாகதேவி, “ குருநாதரே! வாரும். நாங்களும் அங்கு தான் போகிறோம்” என்றாள்.
குருநாதர் விழித்தார். “என்ன உளறுகிறாய்?” என்று சீற்றத்துடன் கேட்டார்.
அடுத்து அவர் சுயநிலையில் இல்லை. இரு மாலுமிகளின் பிடிப்பில் இருந்தார். “ இவரை நமது மரக்கலத்துக்கு அழைத்துச் செல்லுங்கள்” என்று உத்தரவிட்டாள் நாகதேவி.
இரு மாலுமிகளும் குரு நாதருக்குச் சிறிதும் மரியாதை காட்டாமல் கைகளைப் பிடித்துத் தர தரவென்று இழுத்துச் சென்றார்கள். “நாகதேவி உபேந்திரா! இதற்கு நீங்கள் நல்ல பலனை அனுபவிப்பீர்கள். குருநாதர் யாரென்று காட்டுகிறேன்.
பொறுங்கள்” என்று சீறினார். மாலுமிகள் அவரைத் தயை தாட்சண்யம் பார்க்காமல் இழுத்துச் சென்றார்கள்.
அவர் போனதும் தூணிலிருந்த விளக்கை அணைத்தான் உபேந்திரன். “நமது நாடகம் எப்படி” என்று பக்கத்திலிருந்த தேவியைக் கேட்டான்.
“என் நடிப்பில் மட்டும் என்ன குறைவு?” என்றாள் அவள்,
அடுத்த கணம் உபேந்திரன் அணைப்பிலிருந்தாள் அந்த அழகி.