Nagadevi Ch 14 | Nagadevi Sandilyan | TamilNovel.in
நாகதேவி – சாண்டில்யன்
அத்தியாயம் – 14. ஆரம்பக் காட்சி
Nagadevi Ch 14 | Nagadevi Sandilyan | TamilNovel.in
சூடாமணி விஹாரத்தின் அருகாமையில் இருந்த தோப்பிலிருந்து அரவமேதும் செய்யாமல் மெதுவாக நடந்து வந்த அந்த உருவம், விஹாரத்தை அடைந்ததும் சிறிது நின்று விஹார முன் மண்டபத்தை உற்று நோக்கியது. என்ன
காரணத்தாலோ தனது காதை ஒரு கையால் சிறிது திருப்பி எதையோ உற்றுக் கேட்கவும் முயன்றது. அதன் வதனத்தில் திடீரென ஏற்பட்ட சினத்தை அத்தனை இருளிலும் ஒளி வீசிய விழிகள் நன்றாக எடுத்துக்காட்டவே செய்தன. அதன்
விளைவாகவோ என்னவோ அந்த உருவம் தனது வலது கையை விஹாரத்தின் இடது பக்கத்தை நோக்கி அசைத்து ஏதோ சைகையும் செய்தது. பிறகு மெல்ல விஹாரத்தின் மண்டபப் படியில் காலை வைத்து ஏறி விஹாரத்தில்
நுழைந்தது.
விஹாரத்தின் அகலமான தூண்கள் அந்த உருவத்துக்கு மறைவிடம் கொடுத்ததால், அந்த தூண்களில் ஒன்றின் மறைவில் மறைந்து கொண்ட உருவம் நிதானித்து நின்றது. மீண்டும் விஹாரத்தின் மூலையிலிருந்த சார்புமணைத்
திண்ணையிலிருந்து “உஸ் உஸ்” என்று கிளம்பிய இருவர் மூச்சும் அதன் காதில் நன்றாக விழுந்தது. பிறகு உடைகள் சலசலக்கும் ஒலிகளும் விழுந்தன. அதுவரை பொறுத்த அந்த உருவம் தனது கையிலிருந்த சிறு கல்லை எடுத்துத் தான்
மறைந்து நின்ற தூணில் தட்டவே மேற்படி ஒலிகள் திடீரென நின்றன. யாரங்கே?” என்று எழுந்தது உபேந்திரன் குரல்.
அந்த உருவம் பதிலேதும் சொல்லாமலும் எந்த வித அரவமும் செய்யாமலும் அப்படியே நின்று கொண்டிருந்தது காதைத் தீட்டிக் கொண்டு. “ஐயோ! யாரோ வந்துவிட்டார்கள்” என்று ஒலித்தது மருதியின் குரல் தீனமாக.
“யாருமில்லை,வீண் பிரமை. சும்மா இரு” என்று உபேந்திரன் செல்லமாக அதட்டியது அந்த உருவத்தின் காதில் விழவே செய்தது.
மருதி சட்டென்று எழுந்து உட்கார்ந்து உடைகளை சரிப்படுத்திக் கொண்டாள்.
“இல்லை. யாரோ இருக்கிறார்கள். எதற்கும் போய்ப் பாருங்கள்” என்றாள் மருதி அச்சம் ஒலித்த குரலில்.
உபேந்திரன் திண்ணையிலிருந்து எழுந்து நின்று கொண்டு “இரு. விளக்கைக் கொளுத்துகிறேன்” என்றான்.
“ஐயோ! விளக்கைக் கொளுத்தாதீர்கள். என் நிலை மிகவும் கேவலமாயிருக்கிறது” என்று மிருதுவாக அலறினாள் மருதி.
“இதில் கேவலத்துக்கு என்ன இருக்கிறது? எல்லோருக்கும் ஏற்படும் நிலைதான் இது” என்று உபேந்திரன் தத்துவம் பேசினான்.
“எல்லோருக்கும் ஏற்படும் நிலை அல்ல இது.”
“வேறென்ன?”
“திருட்டு நிலை!”
இதைக் கேட்டு மெல்ல நகைத்த உபேந்திரன், பதிருட்டு நிலை இருக்கட்டும். இருட்டில் எப்படித் தேடுவது?” என்று கேட்டான்.
“இத்தனை நாழி விளக்கா வைத்திருந்தது?” என்றாள் மருதி.
“அது வேறு.”
“எது வேறு?”
“நீ சொன்னது” என்று கூறிய உபேந்திரன். “சரி. நீ அப்படியே படுத்திரு. நான் வந்திருப்பது யாரென்று பார்த்துவிட்டு வருகிறேன்” என்று கூறிவிட்டு சூடாமணி விஹாரத்தின் முன் மண்டபப் படிகளை நோக்கி நடந்தான். அவன் நடந்து
வந்ததும் அந்த உருவம் வேறு திசையை நோக்கி அரவம் கேட்காமல் நகர்ந்து சென்று விட்டது.
சூடாமணி விஹாரத்துக்கு வெளியே வந்து விண்ணை நோக்கிய உபேந்திரன், “அடடா? நீண்ட நேரம் ஓடிவிட்டதே. விடிய இன்னும் ஆறு நாழிகை களுக்குமேல் இராது” என்று தனக்குத்தானே பேசிக் கொண்டான். பிறகு தோப்பிலும்
விஹார மண்டபத்துக்கு முன் பகுதியிலும் சிறிது நேரம் நடந்து அப்புறமும் இப்புறமும் பார்த்தான். திடீரென வீஹாரத்துக்கு உட்புறம் ஏதோ சப்தம் கேட்டது போலிருக்கவே மண்டபப் படிகளில் ஏறி உள்ளே புகுந்தான்.
முதலில் கேட்ட அரவம் திடீரென நின்றுவிட்டாலும் சந்தேகம் மிக்கவனாய் சார்புமணைத் திண்ணை இருந்த இடத்துக்குச் சற்று வேகமாகவே சென்று அந்தத் திண்ணை மீது உட்கார்ந்து கொண்டான். அவன் இடுப்பைச் சுற்றி அழகிய
கையொன்று தவழ்ந்தது. அதனால் இன்பப் புன்முறுவல் கொண்ட உபேந்திரன், ““அப்பா! ஆசைக்கு அளவில்லை போலிருக்கிறது” என்று சொல்லிக் கொண்டு சற்றே திரும்பி சார்பு மணையில் கிடந்த பைங்கிளியின் முகத்தோடு
தனது முகத்தைப் பொருத்தினான்.
அவன் முகம் அழகிய இரு கரங்களால் திருப்பப்பட்டு பூவிதழ்கள் இரண்டு அவன் வலிய இதழ்களுடன் இணைந்தன. அவற்றின் அழைப்புக்கு அவனும் இசைந்து அவள் பூவுடலை இறுக அணைத்து, “மருதி இன்று போதும். விடிய
அதிக நேரமில்லை. நாம் இத்தனை நேரம் இங்கிருந்ததே தவறு. வா போவோம்” என்று சொன்னானே தவிர காம ஜாலம் அவனை விலக விடவில்லை. அவனைப் போலவே அவளும் அவனை வலிய அணைத்தாள்.
அந்த அணைப்பில் முன்னைவிட அதிக வேகமும் வெறியும் இருந்ததைக் கவனித்த உபேந்திரன், “மருதி நீ நாழிகைக்கு நாழி முரடாகிக் கொண்டிருக்கிறாய்” என்று சொன்னான் அவள் காதில்.
அவள் பதிலேதும் சொல்லவில்லை. அவள் முரட்டுத்தனம் எல்லை மீறிக்கொண்டிருந்தது. உபேந்திரன். “மருதி விடு. இன்னும் அதிக நேரம் கழித்துச் சென்றால் எல்லன்கூட என்மீது சந்தேகப்படுவான்” என்றான்.
பதிலுக்கு சிரிப்பு ஒன்றுதான் உதிர்ந்தது. மேலும் அவள் சரசம் தொடர்ந்தது. மோகலாகிரி உபேந்திரனையும் சூழ்ந்து கொள்ளவே அவன் சுயநிலையை அடியோடு இழந்தான். இம்முறை அவள் நெறிகளை அறவே உடைக்க
முயன்றதால் சட்டென்று எழுந்து உட்கார்ந்துவிட்ட சோழர் படைத்தலைவன், “மருதி! முன்னமே சொன்னேன் உனக்கு. நமக்குள் காந்தருவம் வேண்டாம். முறைப்படி திருமணம் வைத்துக்கொள்வோம் என்று. வரம்பை மீறுவது நமக்குள்
அனாவசியம். நீயும் எனக்கு எட்டாக் கனியல்ல. நானும் உன்னை உதறித் தள்ளும் ஆண் மகனல்லன். ஆகவே பொறுப்போம். சோழர் படைத்தலைவன் திருமணம் நாடறிய நடக்கும். மக்கள் வீர விளையாட்டுக்கள் விளையாடுவார்கள்.
நமது திருமணத்தை ராஜேந்திர சோழ தேவரே முன்னின்று நடத்துவார்” என்று கூறினான் தொடர்ச்சியாக.
அவன் பேச்சின் விளைவாகவோ என்னவோ அவளும் எழுந்து நின்றாள் திண்ணையின் மறுபுறம். விளக்கை மீண்டும் கொளுத்தினான் உபேந்திரன். திண்ணைக்கு அப்புறம் தலைகவிழ்ந்து நின்றிருந்த மருதியிடம், “மருதி இந்தா!
உன் ஆபரணத்தை அணிந்து கொள். நீ மீண்டும் அந்த மாயக்காரியாக மாற வேண்டும்” என்று கூறித் தனது அங்கியிலிருந்த நாகாபரணத்தை எடுத்து அவளிடம் அளித்தான். பிறகு ஏதோ நினைத்துக்கொண்டு அவளிருந்த புறம்
சென்று அவள் குழலைத் திருத்தி ஆபரணத்தைத் தனது கையாலேயே அணிவித்தான். பிறகு ஏதும் பேசாமல் விஹாரத்தைவிட்டு வெளியே நடந்தான்.
அவளும் அவனைப் பின் தொடர்ந்தாள். மாளிகைக் கதவைத் தட்டியதும் எல்லனே வந்து கதவைத் திறந்தான். எசமானுடன் நாகதேவியும் நிற்பதையும் அவள் கலைந்த உடையையும் பார்த்து எல்லன் மெல்ல தனது பற்களைக்
காட்டினான்.
“என்னடா இளிக்கிறாய்!” என்று சினத்துடன் வினவினான் உபேந்திரன்.
“ஒன்றுமில்லை எசமான்” என்ற எல்லன் வழி விட்டு நின்றான்.
இருவரும் உள்ளே நுழைந்ததும் முன் கூடத்தில் அமர்ந்து கொண்ட படைத்தலைவன், “எல்லா!” என்று அழைத்தான் தனது பணியாளை.
“எசமான்!” என்று அதிகப் பணிவைக் காட்டினான் எல்லன்.
“அவள் என்ன செய்கிறாள்?” என்று உபேந்திரன் வினவினான்.
“யார் எசமான்?”
“அவள் தானடா, அந்த மாயக்காரி.”
“தேவிகளா?”
“தேவிகள் ஏதடா. முட்டாள். தேவிதான்.”
“சரி எசமான்.”
“என்னடா சரி.”
“தேவிதான்.”
“எங்கேயிருக்கிறாள்?”
“நீங்கள் படுக்க வைத்த இடத்தில்தான்.”
உபேந்திரன் பாடு சங்கடமாயிருந்தது. பக்கத்திலிருந்த மருதியைப் பார்த்தான் பக்கப் பார்வையாக, அவள் முகத்தில் கோபத்திற்குப் பதில் ஏளனச் சிரிப்பே விரிந்து கிடந்தது. “ நான் எங்கேடா படுக்க வைத்தேன்?” என்று எரிச்சலுடன்
வினவினான் எல்லனை நோக்கி.
“இல்லை.”
“என்ன இல்லை.”
“நீங்கள் படுக்க வைக்கவில்லை. அவர்களாகப் படுத்துக் கொண்டார்கள்.
“நீங்கள் மயக்கத் துளிகளைத்தான் துணியில் தெளித்து அவர்களை உறங்க வைத்தீர்கள்” என்று எல்லன் சொன்னதும் உபேந்திரன் மருதியை வெற்றிப் பார்வையாகப் பார்த்தான். “மருதி! அவளைப் பார்ப்போம் வா” என்று கூறிக்
கொண்டு எழுந்திருந்தான் தனது ஆசனத்திலிருந்து.
அவன் தொடர சற்று தூரத்திலிருந்த தன் அறைக்குள் நுழைந்த உபேந்திரன் சட்டென்று நின்றுவிட்டான். அங்கிருந்த பஞ்சணையில் யாருமில்லை. அதனால் சினத்தின் வசப்பட்ட உபேந்திரன் சரேலெனத் திரும்பி வெளியே நடக்க
முற்பட்டவன் சட்டென்று கால்கள் தரையில் சிக்குண்டவன் போல் நின்றான். கதவை மூடித் தாளிட்டுக் கொண்டு நின்றிருந்த அழகி மும்முறை லேசாக நகைத்தாள்.
மெல்ல மெல்ல உண்மை விளங்கவே குழப்பமும் பிரமிப்பும் அடைந்த உபேந்திரன், “நீ மருதியல்ல, நாகதேவி. அந்தச் சிரிப்பு எனக்கு நன்றாகத் தெரியும்” என்று கூறிக் கொண்டு அவளை அணுகித் தூக்கி பஞ்ச ணையில் எறிந்தான்.
“அடீ! மருதியை என்ன செய்தாய்? எப்படி நீ மாறினாய்? சொல் உண்மையை” என்று கூறிக்கொண்டு அவள் அழகிய கழுத்தில் தனது கைகளை வைத்து முறிக்க முயன்றான்.
நாகதேவி அசையாமல் படுத்திருந்தாள். சட்டென்று அவன் கைகள் அகன்றன. “உன்னைக் கொலை செய்யலாம். தவறில்லை. நீ பெண்ணலல. இந்த நாட்டைப் பிடிக்க வந்த பிசாசு. இருப்பினும் சோழநாட்டு மக்கள் ஒப்புக்கொள்ள
மாட்டார்கள்” என்று கூறிக்கொண்டே எழுந்த உபேந்திரன், “நாகதேவி! உண்மையைச் சொல். எங்கே மருதி? எப்படி அவளிருந்த இடத்துக்கு வந்தாய்?” என்று சீறினான்.
நாகதேவி பஞ்சணையில் எழுந்து உட்கார்ந்தாள். “உபேந்திரா! இன்றும் நேற்றும் நாகர்களுக்கு நீ புரிந்திருக்கும் துரோகம் மகத்தானது. உன்னைக் கொல்ல நமது இனத்தின் சட்ட திட்டங்கள் இடம் கொடுக்கின்றன. இருப்பினும்
உன்னைக் கொல்ல நான் விரும்பவில்லை. உன்னால் நாகர்களுக்கு ஆகவேண்டிய வேலை இருக்கிறது” என்றாள்.
உபேந்திரன் பதிலேதும் சொல்லவில்லை. அவளை வெறுத்து நோக்கினான். அவள் பஞ்சணையிலிருந்து இறங்கி வந்தாள். “நான் போகிறேன் என் மரக்கலத்துக்கு. நீ வருவதானால் வரலாம்” என்று கூறிவிட்டு வெளியே நடந்தாள்.
மந்திரத்தால் கட்டுண்டவன் போல் அவள் பின்னாலேயே அவனும் நடந்தான். இருவரும் கடற்கரையை அடைந்ததும் அங்கிருந்த படகொன்றை அவிழ்த்து அதில் நாகதேவியை ஏறச் சைகை காட்டிய உபேந்திரன் அவள் ஏறியதும் தானும் ஏறி
உட்கார்ந்து துடுப்புகளைத் துழாவிப் படகை சாவகத்தின் மரக்கலத்தை நோக்கிச் செலுத்தினான்.
மரக்கலத்தை அடைந்ததும் அவன் கண்ட முதல் காட்சி அவனை விவரிக்க இயலாத திகைப்புக்கு இலக்காக்கியது. அவன் கண்களில் ஏற்பட்ட திகைப்புக்கு மிதமிஞ்சிய சினத்துக்கு இடம் கொடுத்ததால் சட் டென்று படகைத் திருப்ப.
முயன்றான் மீண்டும் கரையை நோக்கி. அவன் உறுதியை நாகதேவியின் விஷச் சொற்கள் குலைத்தன. “மரக்கலத்துக்கு வாருங்கள். நீங்கள் காணவேண்டியது நிரம்ப இருக்கிறது. நீங்கள் இப்பொழுது கண்டது ஆரம்பக் காட்சிதான்”
என்றாள் நாகதேவி.