Nagadevi Ch 15 | Nagadevi Sandilyan | TamilNovel.in
நாகதேவி – சாண்டில்யன்
அத்தியாயம் – 15. நாகதேவியின் தந்திரம்
Nagadevi Ch 15 | Nagadevi Sandilyan | TamilNovel.in
சாவகத்தின் மரக்கலத்துக்கு அருகில் வந்ததும் அதன் தளத்தில் குருநாதர் சுதந்தரமாக உலாவிக் கொண்டிருந்ததையும், மாலுமிகள் அவர் உத்தரவுகளை ஏற்று அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்ததையும் கண்ட உபேந்திரன் தனது
திட்டத்தில் ஏதோ ஓர் இடம் உடைந்து விட்டதைப் புரிந்து கொண்டான். அதனால் படகைத் திருப்ப முயன்ற படைத்தலை வனை நாகதேவி தடுத்து மரக்கலத்துக்கு வரும்படி அழைத்தாலும், தனது படகைக் கண்டதும் குருநாதர் இரண்டு
மாலுமிகளை அழைத்து ஈட்டிகளைத் தனது மார்புக்காகக் குறிவைக்கும்படி கட்டளையிட்டதாலும், வேறு வழியின்றிக் கப்பல் தளத்திலிருந்து தொங்க விடப்பட்ட நூலேணியில் ஏறிச் சென்றான். நாகதேவியும் நிதானமாக அவனைத்
தொடர்ந்து ஏறினாள்.
மரக்கல தளத்தை அடைந்ததும், “சோழர் படைத்தலைவரே! வரவேண்டும். தங்கள் வரவால் இந்தக் கப்பல் புனிதமடைகிறது” என்ற ஏளனக் குரலில் முகமன் கூறி வரவேற்றார் குருநாதர்.
தளத்தில் காலை வைத்து உபேந்திரன் அவர் ஏளன வரவேற்புக்குப் பதிலேதும் சொல்லவில்லை. கப்பலை சுற்று முற்றும் நோக்கினான். நாலா பக்கத்திலும் போருக்கு சன்னத்தமாயிருப்பவர்கள் போல் மாலுமிகள் ஆயுதங்களைத்
தாங்கி நின்றனர். ஆனால் குருநாதர் காட்டிய குதூகலம் யார் முகத்திலும் இல்லை. எல்லோரும் பதுமைகள் போல் நின்றிருந்தனர். பணிபுரிந்து கொண்டிருந்த சிலர்கூட நாகதேவி மரக்கலத்தில் காலை வைத்ததும் சட்டென்று
உறைந்துபோய் நின்ற இடத்தில் சிலையென நின்று விட்டனர். நாகதேவியைக் கண்டதும் யந்திரத்தால் இயக்கப்பட்டவர்கள் போல் ஒரே மாதிரி தலைவணங்கினார்கள்.
நாகதேவி அவர்கள் அனைவர் மீதும் ஒருமுறை கண்களை ஓட்டினாள். பிறகு உபேந்திரனைத் தன்னுடன் வரும்படி சைகை செய்து கீழ்த்தளம் செல்லும் படிகளில் இறங்கிச் சென்றாள். அங்கிருந்த தனது அறையை அடைந்ததும்
பழையபடி உல்லாசமாகத் தனது பஞ்சணையில் படுத்துக் கால்களை நீட்டிக் கொண்டாள். தனது அருகில் வந்து உட்காரும்படி உபேந்திரனை நோக்கி சைகையும் செய்தாள்.
ஆனால் உபேந்திரன் நின்ற இடத்தைவிட்டு நகர வில்லை. அறையின் நட்ட நடுவில் நின்ற வண்ணம் முதன் முதலாக தேவியைச் சந்தித்தபோது ஏற்பட்ட நிகழ்ச்சிகளை எண்ணிப் பார்த்தான். அன்றிலிருந்து விளைந்த பல
விந்தைகளையும் கொடூரங்களையும் எண்ணி, “இந்தப் பேய் எதற்காக வந்தது இந்த நாட்டுக்கு?” என்று உள்ளூரக் கேட்டு அவளிடம் விவரிக்க இயலாத வெறுப்புக் கொண்டான்…
பஞ்சணையில் கிடந்த அஞ்சுகம் மெல்லத் தலையை நிமிர்த்தித் தனது வலது கையை முட்டுக் கொடுத்து ஒருக்களித்த நிலையில் உபேந்திரனை நோக்கி, “ஏன் சிலைபோல் நிற்கிறீர்கள், வாருங்கள் இப்படி” என்று வாய்விட்டு
அழைக்கவும் செய்தாள்.
அந்த அழைப்புக்குப் பின்னும் கல்லுப்பிள்ளையார் மாதிரி நின்று கொண்டிருந்த உபேந்திரனை நோக்கி மரியாதையைக் கைவிட்டு, உபேந்திரா! சொல்வதைக் கேள்! வா இப்படி! இருவரும் சேர்ந்து பெரிய சாம்ராஜ் யத்தை
அமைப்போம்” என்று கூறினாள்.
உபேந்திரன் ஒரு விநாடி சிந்தித்தான். பிறகு கட்டிலை நோக்கி நடந்து அதன் முகப்பில் உட்கார்ந் தான். “மருதியை என்ன செய்தாய்?” என்று வின வினான். வினவியதோடு நில்லாமல் தனது வலது கையால் அவள் இடையையும்
வளைத்தான்.
அதைக் கண்டு நாகதேவி சிறிதளவும் ஏமாறவில்லை. இந்த சாகசமெல்லாம் மருதியை விடுவிக்க என்பதை உணர்ந்திருந்ததால் அவள் சர்வசாதாரணமாகவே படுத்துக் கிடந்தாள். அந்த நிலையில் மெது வாக அழைத்தாள். “உபேந்திரா?”
என்று.
“என்ன தேவி?” என்று அன்புடன் கேட்ட உபேந்திரன் அவளை நோக்கி குனிந்து அவள் கன்னத்தில் தனது இதழ்களைப் பொருத்தினான்.
அப்பொழுது தேவி சொன்னாள் : உபேந்திரா! எதுவும் சிந்தனையைப் பொறுத்தது” என்று.
“ஆம்” என்றான் உபேந்திரன் ஏதோ சொல்ல வேண்டுமென்பதற்காக.
“நேற்று இரவு விஹாரத்தின் சார்புமணையில் கிடந்தது மருதியென்று எண்ணினாய்; அதனால் என்னை அணைத்தாய்; இதழ்களைச் சுவைத்தாய்; படாத பாடு படுத்தினாய். மருதியல்ல என்று தெரிந்ததும் விலகி நிற்கிறாய். போலி
அணைப்பு! போலி முத்தம்! சகலமும் போலி! ஆகையால் மருதிக்கும் எனக்குமுள்ள வித்தியாசம் அழகில் இல்லை ; அழகின் அனுபவத்தில் இல்லை. உன் சிந்தையில் இருக்கிறது. அதைச் சிறிது மாற்றிக் கொண்டால் தானென்ன? அல்லது
நினைத்துக்கொள்ளேன் எண்ணம் இனிக்கும்” என்றாள் நாகதேவி.
இதற்கு உபேந்திரன் பதிலேதும் சொல்லவில்லை. அவள் இடையில் தவழ்ந்திருந்த தனது கையை நீக்கி நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டான். “மருதி எங்கே?” என்று மட்டும் கேட்டான்.
“இந்தக் கப்பலில் தானிருக்கிறாள்.”
“நான் பார்க்க வேண்டும் அவளை.”
“அதற்கு ஏதும் தடையில்லை.”
“அவளிருக்குமிடத்துக்கு என்னை அழைத்துப்போ. அல்லது இங்கு வரவழை.”
“இன்னும் இரண்டு நாழிகைகள் போகட்டும்.”
“ஏன்?”
“முதலில் நீங்கள் நீராடிப் புத்தாடை புனையுங்கள். நானும் நீராட்டத்தை முடித்துக் கொள்கிறேன்” என்று மரியாதையுடன் பேசிய நாகதேவி தனது கைகளைத் தட்டவே இரு மாலுமிகள் உள்ளே நுழைந்தனர். “படைத்தலைவரை
அழைத்துப்போய் நீராடச் செய்யுங்கள்; பட்டாடைகளைக் கொடுங்கள். நானும் நீராடுகிறேன்” என்று உத்தரவிட மாலுமிகள் இருவரும் படைத்தலைவனுக்கு தலைவணங்கி வழிகாட்டி முன்னே நடந்தார்கள்.
அந்த மரக்கலத்தின் குளிக்கும் அறை பெரிய சக்கரவர்த்திகளின் நீராட்ட அறை போலிருந்தது. பெரிய மண் ஜாடிகளில் சுத்த நீர் நிரப்பப்பட்டிருந்ததோடு வாசனைத் திரவியங்களும் ஒருபுறத்தில் வைக்கப்பட்டிருந்தன. அங்கிருந்த ஒரு
பலகையில் உபேந் திரனை உட்காரச் செய்த மாலுமிகள் அவனுக்கு நீரூற்றி உடல் தேய்த்து ஸ்நானம் செய்வித்தார்கள். பிறகு அவர்கள் இருவரில் ஒருவன் உபேந்திரனை அழைத்துக் கொண்டு வேறு ஓர் அறைக்குச் சென்று அங்கிருந்த
பெரிய மரப்பெட்டியைக் காட்டி, “இதில் வீரர்களின் ஆடைகள் இருக்கின்றன. இஷ்டப்பட்டதை எடுத்துக் கொள்ளலாம்” என்று கூறி வெளியே சென்று விட்டான்.
பெட்டியைத் திறந்த உபேந்திரன் பிரமித்து நின்றான். பல நாட்டுப் பட்டாடைகள் விதவிதமான வண்ணங்களில் பற்பல அளவுகளில் தைக்கப்பட்டிருந்தன. ஏதோ கொள்ளைக்காரக் கப்பலில் காணப்படும் கொள்ளையடித்த
உடைகளைப்போல இருந்த அத்தனை ஆடைகளையும் பார்த்த உபேந்திரன் “சாவகத்திலிருந்து வரும் வழியில் நாகதேவி ஏதாவது ஒரு கப்பலை வளைத்துச் சூறையாடியிருப்பாளோ?” என்று கூட நினைத்தான். ‘சே! அப்படி இருக்காது
நாகர்களால் தலைவியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பெண் அத்தகைய செயலில் இறங்க முடியாது’ என்று தனக்குத்தானே சமாதானமும் செய்து கொண்டான். அதன் விளைவாக தனக்குச் சரியாயிருந்த ஓர் அங்கியையும் சல்லடத்தையும்
அணிந்து சாட்சாத் அரசகுமாரன் போல் விளங்கினான். தனது அழகைக் கண்ணாடியிலும் பார்த்துக்கொண்ட உபேந்திரன் கண் திடீரென அந்தப் பெட்டிக்குள் நிலைத்தது மீண்டும். அதில் தெரிந்த ஏதோ ஓர் உலோகப் பிடியை எடுக்க அது
நவரத்தினங்கள் இழைத்த பிடியுடன் கூடிய நீண்ட வாளாக வெளியில் வந்தது. அந்த வாளை எடுத்துப் பார்த்த உபேந்திரன் அதன் பிடியிலிருந்த வேலைப்பாட்டையும் முத்திரையையும் கவனித்தான். ‘இது சாவக மன்னனின் வாட்களில்
ஒன்றாக இருக்க வேண்டும்’ என்று சொல்லிக்கொண்டு… இந்த வாள் இவளுக்கு ஏது?’ என்று நினைத்தான். ‘ ஒருவேளை இவள் அரசனின்…’ என்று ஏதோ எண்ணத் தொடங்கி, “சே! சே! ஒருக்காலும் இருக்காது. நாகதேவி ஆயிரம்
துஷ்டையாயிருந்தாலும் நெறி தவறாதவள். இல்லையேல் நாகர் குலத்தார் இவளைத் தலைவியாகத் தேர்ந் தெடுத்திருக்கமாட்டார்கள்’ என்று தனது எண்ணத் தைத் திருத்தியும் கொண்டான்.
அத்துடன் ஆடை அறையைவிட்டு வெளியே வந்த உபேந்திரனை மாலுமி ஒருவன் மீண்டும் நாகதேவியின் அறைக்கு அழைத்து வந்தான்.
நாகதேவி அந்த சமயத்தில் மோகனா காரமாகக் காட்சியளித்தாள். தலைக்கும் நீராடியதால் விரித்து விடப்பட்ட அழகிய அடர்ந்த குழல் அவள் இரு தோள்களிலும் பிரிந்து தொங்கியது. பஞ்சணையில் உட் கார்ந்தவண்ணம் தனது
குழல்களை விரல்களால் பிரித்துக் கொண்டிருந்த நாகதேவி உபேந்திரன் வந்ததும் தனது கண்களை லேசாக உயர்த்தினாள். அப்படி உயர்த்திய தோரணையில் அழகிருந்தது. ஆணையிருந்தது. ஏளனமும் உதிர்ந்து கொண்டிருந்தது.
ஆனால் அந்த ஏளனம் அவள் செவ்விய இதழ்களை அணுகவில்லை. இதழ்கள் இன்பமான புன் முறுவலையே உதிரவிட்டுக் கொண்டிருந்தன.
அன்று அவள் தேய்த்திருந்த நீராட்டப் பொடியின் நறுமணம் அறை முழுவதையும் ஆக்ரமித்துக் கொண்டிருந்தது. அது போதாதென்று மாலுமி யொருவன் துவாரங்கள் கொண்ட மண் குடும்பத்தில் கொண்டு வந்த அகிற்புகையில்
தனது குழல்களைப் படிய வைத்து நாகதேவி ஆற்றியது அழகின் எல்லையைத் தொட்டது.
அகிற்புகையில் சிறிது நேரமே குழல்களை ஆற்றிய நாகதேவி மாலுமியைச் செல்லும்படி பணித்து, “வாருங்கள், இனி மருதியைப் பார்ப்போம்” என்று அலட்சியமாகக் கூறியவண்ணம் பஞ்சணையிலிருந்து இறங்கி நடக்கலானாள்.
அவளை ஏதும் பேசாமல் தொடர்ந்தான் உபேந்திரன். அந்த அறையிலிருந்து பல சின்னஞ்சிறு அறைகளைத் தாண்டிக் கடைசியிலிருந்த ஓர் அறைக்குள் நுழைந்த நாகதேவி உபேந்திரனையும் உடன்வர சைகை செய்தாள்.
அவளைத் தொடர்ந்து உள்ளே நுழைந்த உபேந்திரன் பிரமிப்பின் எல்லையை அடைந்தான். நாகதேவியின் அறையைப் போலவே அந்த அறையும் படாடோபமாக இருந்தது. அதேமாதிரி பஞ்சணையில் மருதி உட்கார்ந்திருந்தாள்
இன்னொரு நாகதேவியைப் போல். ஏதோ சிறைப்பட்டவளாகக் கை கால்கள் கட்டப்பட்டு மருதி இருப்பாள் என்று நினைத்த உபேந்திரனுக்கு மருதியின் நிலைக்குக் காரணம் புரியவில்லை ஆகவே தனது பக்கத்தில் நின்ற நாகதேவியை
நன்றி ததும்பும் கண்களால் நோக்கினான். “நாகதேவி. ஆயிரம் இருந்தாலும் உன்னிடம் பண்பாடு இருக் கிறது” என்று பாராட்டவும் செய்தான்.
நாகதேவி திட்டமாகப் பேசினாள். “பண்பாடல்ல இதற்குக் காரணம். மருதி என்னைப்போலவே இருக்கிறாள். அவள் உடலுக்கு ஏற்படும் ஒவ்வோர் இம்சையும் என்னை இம்சை செய்வது போலிருக்கிறது. ஆகையால் எனது நிலையை
அவளுக்கு அளித்தேன். ஆனால் ஒன்று, நீங்கள் மருதியை அணுக முடியாது” என்று கூறினாள்.
“யார் என்னைத் தடுக்க முடியும்? இப்பொழுதே மருதியைத் துறைமுகத்துக்கு அழைத்துச் செல்கிறேன்” என்று சீறி மருதியை நோக்கி ஓர் அடி எடுத்து வைத்தவன் திடீரென நின்றான். பிறகு அந்த அறையை விட்டு வெகு வேகமாக
தளத்துக்கு ஓடினான். நாகதேவியின் மரக்கலம் நங்கூரம் எடுக்கப்பட்டு நாகப்பட்டினத்திலிருந்து நீண்ட தூரம் நகர்ந்து விட்டது என்பதைப் புரிந்து கொண்டான். இனித் தனக்கோ மருதிக்கோ விமோசனமில்லை என்பது மிகத்
தெளிவாகத் தெரிந்தது உபேந்திரனுக்கு.