Nagadevi Ch 23 | Nagadevi Sandilyan | TamilNovel.in
நாகதேவி – சாண்டில்யன்
அத்தியாயம் – 23. சங்க காலத்துக்கு அழைப்பு
Nagadevi Ch 23 | Nagadevi Sandilyan | TamilNovel.in
எல்லன் சொன்ன திகைக்கத்தக்க செய்தியால் உபேந்திரன் சிறிதும் மனம் கலங்கினான் இல்லை. சிந்தனையிலும் இறங்கினான் இல்லை. “நான் கானாமற் போனது பற்றி நாகப்பட்டினத்தில் ஏதாவது விசாரணை உண்டா?” என்று முதல்
கேள்வியை தொடுத்தான்.
“இல்லை” என்றான் எல்லன்.
“நீங்கள் மறைந்திருந்தாலல்லவா கேள்வி. நீங்கள் அவசர வேலையாக உறையூர் போவதாகவும் வர நான்கு நாள்கள் ஆகுமென்றும் நகரத் தலைவரிடம் ஓலை கொடுக்கப்பட்டது” என்று விளக்கிய எல்லன் மேலும் தொடர்ந்தான்.
மறுநாள் நீங்கள் எங்கும் தென் படாது போகவே சிறிது கவலை ஏற்பட்டது எனக்கு. அத்துடன் நாகதேவியின் மரக்கலமும் மறைந்து விடவே தங்களுக்கு ஏதோ ஆபத்து நேர்ந்திருக்கிறதென்று முடிவு கட்டினேன். அதைப்பற்றி நகரத்
தலைவரிடம் முறையிட்டபோது அவர் என்னைப் பார்த்து நகைத்தார். நீ எத்தனை நாளாக படைத்தலைவரிடம் பணி புரிகிறாய்?’ என்று ஏளனமான குரலில் வினவினார். சிறு வயது முதல் பணி செய்வதாகக் கூறினேன். இவ்வளவு ஆண்டு
பணி செய்தும் நீ உன் எசமானரைப் புரிந்து கொள்ளவில்லை என்று கூறி தம்மிடமிருந்த ஓலையை எடுத்துக் காட்டினார். அதில் நான் சொன்ன செய்தி திட்டமாக எழுதப்பட்டிருந்தது” என்று எல்லன் விளக்கினான்.
“ஓலையில் என் கையொப்பமிருந்ததா?” என்று உபேந்திரன் வினவினான்.
“இல்லை.”
“வேறு யார் எழுதியிருந்தது ஓலையை?”
“சுத்ததத்தர். நமது குருநாதர்” என்றான் எல்லன். ஓலையில் தாமும் தங்களுடன் போவதாகவும், ஆகவே கவலை வேண்டாமென்றும் எழுதியிருந்தார்.
உபேந்திரன் திரும்பும்வரை துறைமுகப் பணியைக் கவனிக்கும்படி தாங்கள் நகரத் தலைவருக்கு உத்தரவிட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்” என்றான் எல்லன்.
நாகதேவியின் திறமையை நினைத்து வியந்தான் நாகையின் நாகர் தலைவன். எல்லாம் முன்கூட்டியே யோசனை செய்திருக்கிறாள் தேவி என்று முணுமுணுக்கவும் செய்தான். பிறகு வினவினான், “சாவகத்தின் மரக்கலத்தின் திடீர்ப்
புறப்பாட்டுக்கு சுங்க அதிகாரிகளோ நகரத்தலைவரோ காரணம் கேட்கவில்லையா? என்று.
“இல்லை.” எல்லன் பதில் திட்டமாயிருந்தது.
“காரணம்?”
“சாவக மரக்கலத்தில் இருந்த வணிகப் பொருள்களுக்கு தாங்கள் அதிக வரி விதித்ததால் இங்கு வர்த்தகம் தேவையில்லை என்று பொருள்களை இறக்காமலே மரக்கலம் நங்கூரம் எடுத்துவிட்டதாம். இதைப் பற்றி நாகதேவியே ஓர் ஓலை
எழுதியிருந்தாள் நகரத் தலைவருக்கு.”
திட்டமிட்டுத்தான் வேலை செய்திருக்கிறாள் நாகதேவி.”
“அதுமட்டுமல்ல எஜமான். தங்களுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதாக இன்று மாலையில் புகார் பரதவர் பேசிக்கொண்டார்கள்” என்றும் உணர்த்தினான் எல்லன்.
உபேந்திரன் நகைத்தான் மெதுவாக. “எல்லா! அவர்களில் பத்து பேர் இங்கு வந்து என் கைகால்களைக் கட்டிப் போட்டார்கள்” என்றும் சொன்னான நகைப்பின் ஊடே.
எல்லன் சினம் கரை கடந்ததால் அவன் உதடுகள் மடிந்தன ஒருமுறை பயங்கரமாக, “எஜமான்! இந்தப் பிசாசை ஒரு வழியாக ஒழித்துவிடட்டுமா?” என்று கேட்டான் சீற்றம் மிகுந்த குரலில்.
“கரை எத்தனை தூரம் இருக்கும்?”
“அதிக தூரமில்லை. அரைக்கால் காதம் இருக்கலாம்.
“எளிதில் நீந்திப் போக முடியுமா?”
“ஏன் முடியாது! இதைவிட நான்கு மடங்கு தூரமிருந்தாலும் நானே நீந்துவேன்.”
“அப்படியானால் உன் நீச்சல் வலு அதிகந்தான்.”
இதைக் கேட்ட மாலுமி சிறிது பெருமையைக் காட்டினான் முகத்தில். “சாவகத்தின் மாலுமிகள் எல்லோருக்குமே நீச்சல் பழக்கமுண்டு. ஆகை யால் தான் நீந்த முடியும் என்று சொன்னதை ஒரு பெரிய விஷயமாக நீங்கள்
எடுத்துக்கொள்ள வேண்டாம்” என்று பெருமையைக் குரலிலும் காட்டினான் மாலுமி.
“மாலுமி!” உபேந்திரன் குரல், கட்டளையென உதிர்ந்தது.
“எசமான்.”
“என் அறைக்குப் போ.”
“போய்”
“அங்கிருக்கும் எனது பணியாளனை அழைத்து வா…
“பணியாளா!” மாலுமி வியப்பையும் திகிலையும் ஒருங்கே அடைந்தான்.
“ஆம். எல்லன் என்று பெயர்.”
“இங்கு எப்படி வந்தான்? எப்பொழுது வந்தான்?”
“அநாவசியக் கேள்வி. போய் அவனை அழைத்து வா” என்று உபேந்திரன் உத்தரவிட கீழே ஓடினான் மாலுமி.
கீழ்த்தளத்தை அடைந்ததும் இன்னும் ஒரு மாலுமியையும் அழைத்துக் கொண்டு உபேந்திரன் அறையை அடைந்து கதவைத் தட்டினான் இருமுறை. கதவு திறக்கப்படவில்லை. பிறகு கதவை அழுத்த அது தானாகவே திறந்தது. உள்ளே
இரு மாலுமிகளும் வேகமாக நுழைந்ததாலும் இருவர் தலைகளிலும் பலமான குறுவாளின் பிடியொன்று தாக்கவே இருவரும் தரையில் சாய்ந்தனர்.
அடுத்து வெகு துரிதமாக இயங்கினான் கதவு மறைவில் நின்றிருந்த எல்லன். இருவர் கைகால்கனை அறையிலிருந்த கயிறொன்றால் பிணைத்தான். பிறகு அறையைச் சாத்திக் கொண்டு தளத்துக்கு ஓடினான். அங்கு நின்றிருந்த
படைத்தலைவனைக் கண்டதும், “எசமான்! தாங்களனுப்பிய இருவரும் இன்னும் சில நாழிகைகளுக்குத் தொந்தரவு செய்யமாட்டார்கள்” என்றான்.
புரிந்து கொண்டதற்கு அடையாளமாகத் தலை யசைத்த உபேந்திரன், “எல்லா! நீ கரைக்குப் போய் அங்குள்ள துறைமுகத் தலைவனை நான்கு படகுகளுடன் அழைத்து வா. நான் இங்கிருந்து சைகை செய்த பிறகு கிளம்பு” என்றான்.
எல்லன் பதிலேதும் சொல்லவில்லை. எசமான் இறக்கிவிட்ட நூலேணியின் வழியாக மெதுவாக இறங்கினான். கடைசிப் படிக்கு இறங்கியவன் பெரு வியப்படைந்து, “எசமான்! விசித்திரம்! அற்புதம்!” என்று மகிழ்ச்சியுடன் பேசினான்
மெதுவாக.
“என்ன எல்லா? என்ன விசித்திரம்?” என்று வினவினான் உபேந்திரன்.
“என் படகு.”
“அதற்கென்ன?”
“இங்கு இருக்கிறது. மரக்கலத்தின் பக்கம் பலகையின் இரும்பு வளையத்தில் பிணைக்கப்பட்டிருக்கிறது.”
“சரி, மேலே ஏறி வா” என்று உத்தரவிட்டான் உபேந்திரன்.
“என்ன எசமான்?” என்று பெருவியப்பை காட்டினான் எல்லன் குரலில்.
பதிலுக்கு நகைத்தான் உபேந்திரன். “எல்லா! உன்னை உண்மையாகவே கரைக்குப் போகச் சொன்னதாக நினைத்தாயா?” என்று கேட்டான்.
திடீரென உபேந்திரன் மாறிவிட்டதைக் கண்ட எல்லன் பிரமையுடன் உபேந்திரனை நோக்கினான் கீழிருந்தவண்ணம். “என்ன சொல்கிறீர்கள் எசமான்?” என்று ஆத்திரத்துடன் கேட்டான்.
“எல்லா! உன்னை இந்த இரவில் நீந்தச் சொல்ல எனக்கென்ன பைத்தியமா?” என்று ஒரு கேள்வியை வீசினான் படைத்தலைவன்.
“முன்பின் முரணாக உத்தரவிடுகிறாரே எசமான்? ஒருவேளை நிஜமாகவே பைத்தியம் பிடித்திருக்குமோ?” என்று எண்ணிய எல்லன் அடுத்து செய்வது தெரியாமல் நின்றான்.
அந்த சமயத்தில் ஒலித்தது நாகதேவியின் குரல். “எல்லா, மேலே ஏறிவா. நாளை மாலையில் போவோம் புகாருக்குள். அதற்கு ஏற்பாடும் செய்திருக்கிறேன்” என்று.
எல்லன் மேலே நோக்கினான், நாகதேவி தனது தலையை உபேந்திரன் தோள் மீது சாய்த்துக்கொண்டு இருந்தாள்.
எல்லன் பிரமிப்பால் விழித்தான். “ஏன் எல்லா! நான் சொன்னால் கேட்கமாட்டாயா? சரி உன் தலைவரிடமே கேட்டுக்கொள்” என்றாள்.
“எல்லா! மேலே ஏறிவா” என்று ஆக்ஞைக் குரல் எழுந்தது உபேந்திரனிடமிருந்து.
எல்லன் மீண்டும் நூலேணியில் ஏறி தளத்தை அடைந்தான். நாளைக்குப் பார் எல்லா! புகாரின் கடற்கரை சங்க காலத்துக்குச் செல்லும்” என்று நாக தேவி அவனுக்கு உற்சாக மூட்டினாள்.
எல்லன் அவள் சொல்லியதை அப்பொழுது நம்பவில்லை. மறுநாள் சங்க காலத்தை வரவழைத்தாள் நாகதேவி. அந்த வரவழைப்பில் அனர்த்தங்களும் கலத்திருந்தன. அது மருதியின் நிலையை அடியோடு பாதித்துவிட்டது.