Nagadevi Ch 25 | Nagadevi Sandilyan | TamilNovel.in
நாகதேவி – சாண்டில்யன்
அத்தியாயம் – 25. சுத்ததத்தர் வைத்தியம்
Nagadevi Ch 25 | Nagadevi Sandilyan | TamilNovel.in
உபேந்திரன் குரலைக் கேட்டதும் கிலியின் விளைவாக சப்தநாடியும் அடங்கிவிட்டதால் பதில் சொல்லும் நிலையில் இல்லை குருநாதர். தன்னைப் பற்றியிருந்த கைகளின் வலுவால் நகரவும் முடியாமலிருந்த குருநாதர் பின்னால்
இழுக்கப்பட்டு சாய்ந்தபோது, உள்ளே நுழைந்து கதவை முக்கால்வாசி மட்டுமே மூடிய படைத்தலைவன் கட்டிலை நோக்கி நிதானமாக நடந்து வந்தான். குருநாதருக்கு எதிரில் நின்றுகொண்டு அவரை சினம் கொட்டிய கண்களுடன்
நோக்கி, “சுத்ததத்தரே, உம்மை இன்றுவரை அரசியல் அயோக்கியர் என்று தான் நினைத்தேன். காமப்பித்துப் பிடித்தவரென்று தெரியாது. அதுவும் மயக்க நிலையில் இருக்கும் மருதியிடம் இப்படி நடந்து கொள்வீரென்று நான்
சொப்பனத்தில்கூட நினைக்கவில்லை?” என்று சொன்னான் வெறுப்பும் சினமும் கலந்தொலித்த குரலில்.
அந்த நிலையிலும் சுத்ததத்தர் எரிச்சலைக் காட்டினார். “உபேந்திரா, நானிருக்கும் நிலைக்கு நீ வருவதைப்பற்றி எனக்கு ஆட்சேபணை ஏதுமில்லை?” என்று கூறினார்.
“அப்படியானால் எழுந்திருப்பது தானே?என்னைப் பார்த்ததும் அவள் மீது அதிகமாக ஏன் சாய்ந்து கொண்டீர்?” என வினவினான் உபேந்திரன்.
“சாய்ந்தது நானில்லை” என்றார் குருநாதர் எரிச்சல் அதிகமாகத் தெரிந்த குரலில்.
உபேந்திரன் முகத்தில் கடுமையின் சாயை அதிகமாக விரிந்தது. “அப்புறம் இந்த உடல் உம்முடைய தல்லவென்று சொல்வீர்?” என்று கேட்டான், கடுமை பூர்ணமாக தொனித்த குரலில்.
“தவறாக நினைக்கிறாய் உபேந்திரா! சாய்ந்தது நானல்ல; சாய வைக்கப்பட்டேன்” என்று குருநாதர் மன்றாடினார்.
“யாரால்?” உபேந்திரன் கேள்வி உஷ்ணமாகப் பிறந்தது.
“இந்தப் போர்வைக்குள்ளிருப்பவரால்.”
“மருதியே உம்மை தன் மீது சாய்த்துக் கொண்டாளா?
“ஆம் என்று சொன்னால் நீ நம்பமாட்டாய்.”
“கண்ணெதிரே பார்ப்பதை எப்படி நம்பாதிருக்க முடியும்? மருதியின் மீது நீர் சாய்ந்திருக்கிறீர். நான் வந்த பின்பும் எழுந்திருக்க மறுக்கிறீர். என்ன துணிவு உமக்கு?”
“துணிவுக்கும் நான் இருக்கும் நிலைக்கும் வெகு தூரம்?”
உபேந்திரன் தனது இதழ்களில் கொடூரமான புன்முறுவலைப் படரவிட்டுக் கொண்டான், “சுத்த தத்தரே!” என்று அழைத்தான் படைத்தலைவன் புன்முறுவலின் ஊடே.
“என்ன உபேந்திரா! என்று வினவிய குருநாதரை எல்லன் சற்று அதிகமாக இறுக்கிப் பிடிக்கவே ‘ஆ’ என்று அலற முற்பட்ட குருநாதர் வாயை சட்டென்று பொத்திய உபேந்திரன், “ குருநாதரே! இன்னும் ஒரு முறை கூவி துணைக்கு
உங்கள் நாட்டு மாலுமிகளை அழைக்க முற்பட்டீர், உன் கழுத்தை நெறித்து இந்தக் கட்டிலிலேயே போட்டுவிடுவேன்” என்று எச்சரித்தான்.
“அந்த சிரமம் உமக்கு வேண்டாம். இன்னும் சற்று நேரம் நீ வெளியிலிருந்தால் அந்தப் பணியை இந்தப் பிசாசே செய்து முடித்துவிடும்” என்று கூறினார் சுத்ததத்தர்.
“சுத்ததத்தரோ” படைத்தலைவன் எச்சரிக்கைக் குரல் மீண்டும் ஒலித்தது.
“உபேந்திரா!” குருநாதர் பரிதாபமாக பதில் சொன்னார்.
“மருதியை பிசாசென்று இன்னொரு முறை அழைத்தீர் உம்மைக் கொல்லமாட்டேன்.
“வேறு என்ன செய்வாயோ?” –
“முதலில் இந்தக் குறுவாளால் உமது நாவைத் துண்டிப்பேன். அடுத்து உமது கண் களைத் தோண்டியெடுப்பேன்! அடுத்து…”
“ஏன் இந்த இரண்டே போதாதா?”
“போதாது. பெண்கள் உறங்கும்போது சரசம் செய்ய முயலும் உமது கைகளை முழங்கை வரையில் வெட்டுவேன். இத்தனையும் செய்வேன். ஆனால் உமது உயிரை எடுக்கமாட்டேன்.”
“என் உயிரிடம் அத்தனை கருணை உனக்கு?”
“ஆம்! என்ன இருந்தாலும் நீர் எனது குருநாதர்! உம்மைக் கொல்வது பாவம்” என்ற உபேந்திரன் தனது குரலில் சிறிது கருணையைக் காட்டினான்.
குருநாதருக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. “உபேந்திரா! உன் கருணையே கருணை! குருநாதர் நாவை அறுத்து கண்களைத் தோண்டி கைகளை மட்டும் வெட்டுவாய், இந்த மாதிரி சீடன் கிடைப் பதற்கு நான் பாக்கியம்
செய்திருக்க வேண்டும்” என்று சொன்னார் வெறுப்பும் நகைப்பும் இணைந்த குரலில்.
இதற்கு பதில் சொல்லவில்லை படைத்தலைவன். சிறிது சிந்தித்தான். “குருநாதரே! சற்று இப்படி இரும். நான் போய் நாகதேவியை அழைத்து வருகிறேன்” என்று கூறிவிட்டுத் திரும்பினான்.
“உபேந்திரா! பொறு. ஒரு பிசாசிடம் நான் அகப்பட்டுத் திண்டாடுவது போதும். அந்த பிசாசும் வந்தால் குருநாதன் யமலோகத்துக்கு உடனடியாகப் பயணப் படும்படியாயிருக்கும்” என்று கிலி மிகுந்த குரலில் கூறினார்.
“நாகர்குலத் தலைவியையும் பிசாசு என்கிறீரா?” என்று சற்று இரைந்து கேட்டான் படைத்தலைவன்.
“உபேந்திரா! மெதுவாகப் பேசு. அவள் காதில் எது விழுந்தாலும் அனர்த்தத்தில் முடியும். ஓர் உதவி எனக்குச் செய். நான் உனக்கு ஓர் உதவி செய்கிறேன்” என்று கூறியதன்றி “மெல்ல என்னை இந்தப் பிசா… இல்லை மருதியிடமிருந்து
விடுவித்து விடு” என்று கெஞ்சினார்.
“என்ன உதவியை நீர் செய்ய முடியும்?” என்று படைத்தலைவன் வினவினான்.
“மருதியின் மயக்கம் தீர அவள் சுயசிந்தனைக்கு வர மாற்று மருந்து இருக்கும் இடம் எனக்குத் தெரியும்” என்று ரகசியமாகச் சொன்னார் சுத்ததத்தர்.
“உண்மையாகவா!” உபேந்திரன் கேள்வியில் ஆவல் இருந்தது.
“போதிசத்வர் சாட்சியாக” என்று ஆணையிட்டார் குருநாதர்.
“சரி, சொல்லும் மருந்து இருக்கும் இடத்தை” என்றான் படைத்தலைவன்.
“முதலில் என்னை இந்த உம்… மருதியிடமிருந்து விடுவித்துவிடு” என்று குருநாதர் கெஞ்சினார்.
“முதலில் மருந்து இருக்குமிடத்தைக் காட்டும்.” உபேந்திரன் உத்தரவு கண்டிப்பாய் இருந்தது.
குருநாதர் கைகளை எடுக்க முடியாததால் தலையாலேயே அடையாளம் காட்டி, “அதோ ஒரு பெட்டியிருக்கிறதல்லவா?’ என்று அறை மூலையிலிருந்த பெட்டியைக் காட்டினார்.
“ஆம்” படைத்தலைவன் குரலில் ஆவல் தெரிந்தது.
“அதில் பத்து மண் குப்பிகள் இருக்கின்றன.”
“உம்.”
“அவற்றில் மூடிக்கு பச்சை சாயம் தடவப்பட்ட மண் குப்பியிருக்கும்.”
“உம்.”
“அதில்தானிருக்கிறது மாற்று மருந்து.”
இதைக் கேட்டதும் அறை மூலையில் கண்ணைச் செலுத்திய உபேந்திரன், “சரி; அதை எப்படி உபயோகிப்பது?” என்று வினவினான்,
“இரண்டு துளி நாக்கில் ஒவ்வொரு கண்ணில் ஒவ்வொரு துளி விட்டு சற்று காத்திருந்து பார். தூங்கி விழித்த மாதிரி மருதி கண்ணை விழிப்பாள். இப்பொழுதுள்ள இந்தப் பிசாசுத் தன்மையும் போய்விடும்” என்று விளக்கினார்.
அதைக் கேட்டுக் கொண்ட உபேந்திரன் நேராக அந்தப் பெட்டியிடம் சென்று அந்த மண் குப்பியை எடுத்துப் பார்த்தான். “குருநாதரே! நீர் இங்கேயே இரும். நான் போய் மருதியை எடுத்து வருகிறேன்” என்றான்.
சுத்ததத்தர் பிரமிப்பின் எல்லையை எய்தினார். உண்மை மெதுவாக அவர் புத்தியிலும் உதயமாகத் துவங்கவே”நீ போய்…” என்று இழுத்தார்.
“மருதியை எடுத்து வருகிறேன். நீரே அவளுக்கு மருந்தைப் புகட்டலாம்” என்ற உபேந்திரன் வெளியே நடக்கத் துவங்கினான்.
தான் மாற்று மருந்தைக் காட்டிக் கொடுத்தது நாக தேவிக்குத் தெரிந்தால் தனது உயிர் அரைக்காசு பெறாதென்பதை உணர்ந்து கொண்டதால் குருநாதர் உடல் நடுக்கம் கண்டது.
ஆனால் அவர் வாய் பலமாகப் பொத்தப்பட்டது. போர்வையை விலக்கிக் கொண்டு எழுந்த எல்லன் குருநாதரை இழுத்துப் படுக்கையில் தள்ளிவிட்டுக் கட்டிலிலிருந்து இறங்கி நின்று தனது ஆடையை சரிசெய்து கொண்டான்.
“குருநாதரே! என்னை சரசத்துக்கா இழுத்தீர்?” என்று கறுவினான் அவர் எதிரில் நின்று.
“அடப்பாவி! நான் எங்கே இழுத்தேன்? நீயல்லவா இழுத்தாய் என்னை?” என்று சீற்றத்தைக் காட்டினார் குருநாதர்.
“முதலில் போர்வைக்குள் கைவிட்டது யார்?” எல்லன் கேள்வி கடுமையாயிருந்தது.
“நான்தான்” சுத்ததத்தர் வெறுப்புடன் பதில் சொன்னார்.
“போர்வையை முடிப் படுத்திருக்கும் பெண்ணைத் தொட முயலலாமா நீர்?” எல்லன் கேள்வி உஷ்ணமாயிருந்தது. பார்வை கொலைப் பார்வையாயிருந்தது.
“தாதுவைப் பார்க்க முயன்றேன்?” –
“நீ எதற்காக என் தாதுவைப் பார்க்க வேண்டும்?”
“உன் தாதுவைப் பார்க்கவா வந்தேன்?”
“இல்லை. மருதியின் தாதுவைப் பார்க்கத்தான் வந்தீர். எதற்காக?”
“அவளுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் விஷம் கடுமையானது. இன்றிரவுக்குள் மாற்று மருந்து கொடுக்காவிட்டால் இறந்து விடுவாள்.”
“அதைப் படைத்தலைவரிடம் சொல்வதுதானே?”
எல்லனின் இந்தச் சொல்லைக் கேட்ட குருநாதர் எரிமலையானார். “எல்லா! நீ சர்வ முட்டாள். இந்த மரக்கலத்தில் நாம் அனைவரும் பலமாகக் கண்காணிக் கப்படுகிறோம். நம்மை சதா பல கண்கள் நாமறியாமலே பார்த்துக்
கொண்டிருக்கின்றன. நான் ரகசியத்தை வெளியிடுவது பற்றி நாகதேவிக்கு சந்தேகம் கடுகளவு ஏற்பட்டாலும் நாம் கொல்லப்படுவோம். இப்பொழுது கூட நாம் அவள் கண் காணிப்பில்தான் இருக்கிறோம்” என்று சினத்தின்
கடுமையால் உந்தப்பட்டுப் பேசிய சுத்ததத்தருக்கு எல்லன் பதில் சொல்லுமுன்பு படைத் தலைவன் மருதியைக் கையில் ஏந்திக்கொண்டு உள்ளே நுழைந்தான். நுழைந்ததும் தனது இடது காலால் கதவை மெல்ல உதைத்து சாத்தினான்.
மிக மெதுவாக நடந்து வந்து கட்டிலில் மருதியைப் படுக்க விட்டான். “சுத்ததத்தரே! போய் மாற்று மருந்தை எடுத்து வாரும்” என்று ஆணையிட்டான் படைத்தலைவன்.
அந்த ஆணைக்குப் பணிந்து அறை மூலைக்குச் சென்று பெட்டியைத் திறந்து மாற்று மருந்தை எடுத்து வந்த குருநாதர், எல்லனையும் படைத்தலைவனையும் நோக்கி, “உபேந்திரா! எல்லா! இருவரும் சற்றுத் தள்ளி இருங்கள். நான்
அழைக்கும்போது வாருங்கள்” என்று சொன்னார்.
அவர் உத்தரவுப்படி இருவரும் விலகியதும் மருதியைப் புரட்டி மல்லாந்த நிலையில் படுக்கவிட்ட சுத்த தத்தர் குப்பியைக் கட்டிலின் மீது எச்சரிக்கையுடன் வைத்தார். பிறகு குனிந்து மருதியின் இரப்பைகளைத் திறந்து கண்களைப்
.
பரிசோதிக்க முற்பட்டார்.
அதிக சிரம மெதையும் வைக்கவில்லை. கட்டிலில் கிடந்தவள் கண்கள் இரைப்பையில் அவர் கைவைக்கு முன்பு கண்கள் தாமாகவே திறந்தன. சுத்ததத்தரை நோக்கி நகைக்கவும் செய்தன.
“சுத்ததத்தர் பிரமை பிடித்து நின்றார். ஒரு விநாடி. அடுத்த விநாடி அந்த அறையைவிட்டு ஓட முயன்றார்.