Nagadevi Ch 28 | Nagadevi Sandilyan | TamilNovel.in
நாகதேவி – சாண்டில்யன்
அத்தியாயம் – 28. புகார்க் கரையில் புதியவன் சங்கர்
Nagadevi Ch 28 | Nagadevi Sandilyan | TamilNovel.in
நாகையின் நாகர் தலைவனான உபேந்திரன் ஆடியதெல்லாம் வெறும் நாடகமென்பதையும், அவன் சொப்பனப் பேச்செல்லாம் வெறும் கட்டுக் கதையென்பதையும். தான் யார் என்பதை அவன் முன்னமே ஊகித்து விட்டானென்பதையும்
புரிந்து கொண்டதால் சிலையென பல விநாடிகள் கட்டிலில் உட்கார்ந்து விட்ட நாகதேவி திடீரென கோபத்தின் வசப்பட்டாள். ஆகையால் கட்டிலிலிருந்து இறங்கி மரப்பெட்டியிடம் வந்து அதிலிருந்த குப்பிகளை வாரி இறைத்தாள் அறை
முழுவதும். அந்த சந்தர்ப்பத்தில் அந்த அறைக்கதவு வெளியில் பூட்டப்பட்டதால் அவள் வெறி உச்சஸ் தாயியை அடைந்தது. கதவைத் தடதடவென்று தட்டினாள். வெளியே காவல் புரிந்து கொண்டிருந்த இரு காவலர் படைத்தலைவர்
சொன்னது சரியாகப் போய்விட்டது. இந்த நாகப்பட்டினத்துப் பெண்ணுக்கு வெறி தலைக்கு ஏறிவிட்டது” என்று சொல்லிக்கொண்டார்கள். அவர்கள் ஒருவரைப் பார்த்து ஒருவர் சிரித்துக் கொண்டார்களே தவிர கதவைத் திறக்க
எந்தவித முயற்சியையும் செய்யவில்லை.
அறையைவிட்டு வெளிப்போந்த படைத்தலைவன் மருதிக்கு வெறி பிடித்து விட்டதாக சாவகக் காவலரிடம் சொல்லிவிட்டு மருந்துக் குப்பியுடன் நாகதேவியின் அறையை நோக்கி நடந்தான். அங்கு கட்டிலில் கிடத் தப்பட்டிருந்த
உண்மை மருதியைப் பல விநாடிகள் நோக்கிக் கொண்டு நின்றான்.
“நாகதேவியின் கிரீடமும் இவளுக்கு மிக நன்றாக அமைந்திருக்கிறது” என்று சிலாகித்து விட்டு அவள் அருகில் அமர்ந்தான். பிறகு அவள் அழகிய உதடுகளை நீக்கி, கிட்டி இருந்த பற்களையும் அகற்றி கையிலிருந்த மருந்துக்
குப்பியிலிருந்து மூன்று துளிகளை உள்ளே புகட்டினான்.
சில விநாடிகள் சென்றதும் அவள் முகம் லேசாக வியர்த்தது. கண்கள் மெள்ளத் திறந்தன. அவள் ஏதோ பேச முயன்றும் முடியவில்லை. உதடுகள் அசைந்தனவேயொழிய சொற்கள் வெளியே வர வில்லை. அவளைப் பேச வேண்டாமென்று
சைகை செய்த உபேந்திரன் இன்னும் இரு சொட்டுகளைக் குப்பியிலிருந்து அவள் வாய்க்குள் சொட்டவிட்டான். அதை அருந்திய சில விநாடிகளில் பலம் உடலில் ஊறி முழு சுரனையும் வந்ததால் கண்களை அகலமாக விரித்தாள் மருதி.
“நான் ஏன் இந்த மூத்தலை ஆபரணத்தை அணிந்திருக்கிறேன்? இங்கு ஏன் இருக்கிறேன்?” என்று மெதுவாகக் கேள்விகளைத் தொடுத்தாள்.
படைத்தலைவன் அவளை நோக்கிக் குனிந்து, “நீ இன்னும் ஒரு நாளைக்கு நாகதேவியாக நடிக்க வேண்டும். சிறிது தப்பினாலும் நாம் இந்த மரக்கலத்தை விட்டு நகர முடியாது” என்று ரகசியமாக அவள் காதில் ஓதிவிட்டு “எல்லா!”
என்று குரல் கொடுக்க எல்லன் அறைக்குள் நுழைந்தான். “நாகதேவியை எச்சரிக்கையுடன் பாதுகாத்திரு. பொழுது விடிந்த சில நாழிகைகளில் நாம் புகார் போகப்போகிறோம்” என்று கூறி விட்டு வெளியேறினான்.
அங்கிருந்து சுத்ததத்தர் இருந்த அறைக்கு வந்து அங்குள்ள சிறு கட்டிலில் கிடந்த குருநாதரை நோக்கிப் புன் முறுவல் செய்தான். குருநாதர் எரிச்சல் தாங்கமுடியாமல் “ஏன் இளிக்கிறாய்?” என்று சீறினார்.
“தங்கள் நிலையை நினைத்தால் பரிதாபமாய் இருக்கிறது” என்றான் படைத்தலைவன் போலி துன்பத்துடன்.
“பரிதாபமாயிருந்தால் சிரிப்பார்களா?” என்று கேட்டார் சுத்ததத்தர்.
“சில சமயங்களில் அப்படியும் நேரிடுவது உண்டு” என்ற படைத்தலைவன், “குருநாதரே! உமக்கு சரியாக மருந்து புகட்டத் தெரியவில்லை” என்றும் சொல்லி புன்முறுவல் செய்தான்.
அவன் சொன்னதை நன்றாகவே புரிந்து கொண்ட குருநாதர், “தெரியவில்லை என்பது உனக்கு எப்படித் தெரியும்?” என்று வினவினார்.
மெல்ல நகைத்தான் உபேந்திரன். “குருநாதரே! மருந்து புகட்டினாலும், புகட்டுவதுபோல் நடித்தாலும் அதை சரியாகச் செய்ய வேண்டும்” என்றும் சொன் னான் நகைப்பின் ஊடே.
“சரியாகப் புகட்டவில்லை என்பது உனக்கு எப்படித் தெரியும்?” என்று எரிந்து விழுந்தார் குரு நாதர்.
“நாகதேவியின் கன்னங்களில் நீர் மருந்தைச் சொட்ட வீட்டபோது உமது விரலால் சிறிது எடுத்து உதடுகள் மேலும் தடவியிருக்க வேண்டும். அப் பொழுது நான் ஏமாந்திருப்பேன். நான் அவளருகில் உட்கார்ந்தபோது அவள் உதடுகளில்
ஈரம் சிறிதும் இல்லை. நன்றாக உலர்ந்து கிடந்தன உதடுகள். நீர் சொட்டிய மருந்துத் துளிகள் கன்னங்களில் மாத்திரம் உருண்டு கிடந்தன. ஆகவே அவற்றைத் துடைத்தேன். மருதியென்று நினைத்தது போலவே அவளுடன் பேசினேன்.
அவளும் மருதியாக நடித்தாள். நானும் நடித்தேன். ஆனால் இம்முறை ஏமாந்தது நாகதேவி. அவள் அறையைப் பூட்டிவிட்டேன். மருதிக்கு வெறி பிடித்து விட்டதாக அந்த அறையைக் காவல் செய்யும் சாவக மாலுமிகள் நினைக்கிறார்கள்.
நீங்களும் அப்படி நினைப்பது நல்லது” என்று உபதேசம் செய்தான் உபேந்திரன்.
பிரமை தட்டிய முகத்துடன் உட்கார்ந்திருந்தார் சுத்ததத்தர். பிறகு மெதுவாகச் சொனனார் : “உபேந்திரா! நாகதேவியுடன் விளையாடுவது நெருப்புடன் விளையாடுவதற்குச் சமானம். வீணாக அவளை எதிர்க் காதே! மருதியும்
நாகதேவியும் ஒரேமாதிரி இருந்தாலும், அந்த உருவ ஒற்றுமையை நீ உபயோகப்படுத்திக் கொண்டாலும் உண்மை மறையாது; தான் யார் என்பதை நாகதேவி எப்படியும் விளக்கிவிடுவாள், அப்பொழுது பெருத்த விபரீதம் ஏற்படும்”
என்று
உபேந்திரன் அவர் சொல்வதை ஆமோதிப்பதற்கு அறிகுறியாகத் தலையை அசைத்தான். “உண்மைதான் குருநாதரே! நாகதேவி சாவக மன்னன் சார்பாக வந்திருக்கிறாள். தூது ஒனல அவளிடமிருக்கிறது. அது மட்டுமல்ல. நீரும்
சோழர்களுக்குத் துரோகியாகி அவளுடன் சேர்ந்து சூடாமணி விஹாரத்தை சதிக் கூடமாக அமைக்கப் பார்க்கிறீர். இது இராஜேந்திர சோழ தேவருக்குத் தெரிந்தால் என்ன விளைவு ஏற்படும் தெரியுமா?” என்று கேட்டு சிறிது நிறுத்தினான்
பேச்சை. மேலும் அவனே தொடர்ந்தான். நாகதேவி மன்னிக் கப்படுவாள் பெண் என்ற காரணத்தால். ஆனால் நீர் தூக்கில் தொங்கலாடுவது நிச்சயம். உமது பருத்த உடலைத் தூக்கிலிட நல்ல கெட்டியான மணிக் கயிறு தேவைப்படும். அதைத்
திரிப்பது நாகை நார்த் தொழிலாளர்க்கு ஒரு பிரமாதமில்லை” என்று சொல்லி குரு நாதரின் கழுத்தை நோக்கினான். “நல்ல தடித்த கழுத்து. சந்நியாசிகள் கழுத்து எப்படித்தான் இத்தனை புஷ்டியாகிறதோ?” என்று இரைந்தும்
சொன்னான்.
குருநாதர் கண் முன்பு நாகையின் தூக்குமேடை தெரிந்தது. அதில் குற்றவாளிகளைத் தூக்கில் போடும் வல்லாளளின் கல்முகமும் அவர் கண் முன்பு காட்சியளித்தது. தமது கழுத்தை ஒருமுறை தடவிப் பார்த்துக் கொண்டார்
சுத்ததத்தர். அதில் கயிறு சுருங்கினால் மூச்சு எப்படித் திணறும், கண்கள் எப்படிப் பிதுங்கும் என்பதையெல்லாம் நினைத்துப் பார்த்ததும் பெரும் கிலி அவரது முகத்தில் படர்ந்தது. ஆகவே உபேந் திரனை நோக்கி
கொஞ்சத்தொடங்கினார். “உபேந்திரா! அந்த மாயக்காரியை நான் அழைக்கவில்லை நாகைக்கு. வந்த பின்பு அவளை எதிர்க்கத் துணிவில்லை எனக்கு. சற்று அவளுக்கு சந்தேகம் வந்தால் என்னைத் தொலைத்துவிடுவாள். தொலைத்து
விட்டால்கூட பாதகமில்லை. சித்திரவதை செய்யும் வழிகள் பல இருக்கின்றன அவளிடம். என்னைப்பற்றி அவளுக்கு சந்தேகம் வந்தால் அவள் என்ன செய்வாளென்று சொல்ல முடியாது” என்று கெஞ்சினார் குரு நாதர்.
உபேந்திரன் புன் முறுவல் கொண்டான். “குரு நாதரே! அதையெல்லாம் நினைத்துப் பார்க்கும் சமயம் போய்விட்டது. இனி இந்த நாடகத்தின் முடிவுக் கட்டம் வந்துவிட்டது. அதில் நீர் இராஜேந்திர சோழ தேவரிடம் பக்தியுள்ள பிரஜையாக
நடந்து கொண்டால் உம்மை நாகதேவி கொன்றாலும் உமது மனச்சாட்சி உம்மை வருத்தாது. இல்லையேல் உமது பெயர் மண்ணில் சிதைந்து போகும். ராஜத் துரோகி என்று மக்கள் தூற்றுவார்கள். உமது இஷ்டப்படி நீர் நடந்து
கொள்ளலாம். எதற்கும் புகார் துறைக்குச் செல்ல சித்தம் செய்து கொள்ளும்” என்று சொல்லிவிட்டு அந்த அறையைவிட்டு அகன்றான்.
அங்கிருந்து தளத்துக்கு வந்து சாவக மாலுமி ஒருவனை அழைத்து “நீ படகொன்றில் புகாருக்குப் போ. அங்கிருக்கும் பரதவர் தலைவனிடம் நம் தேவி யார் இன்னும் சில நாழிகைகளில் புகாருக்கு வருவார் என்பதைச் சொல்லி
அவர்கள் வரவேற்புக்குத் தகுந்த ஏற்பாடு செய்யச் சொல்” என்று உத்தரவிட்டான். பிறகு “இன்னொரு மாலுமியை அழைத்து கீழ்த்தளத்தில் துடுப்புத் தள்ளும் மாலுமிகளையும் கரைக்கு அழைத்துப் போவதாகச் சொல். நாகதேவியார்
இன்று முழுவதும் புகாரில் தங்கி புகாரைப் பார்வையிடுவார்கள் என்று தெரிவி” என்று உத்தரவிட்டான். பிறகு மருதியிடம் வந்து, “மருதி! இன்னும் இரண்டு நாழிகைகளில் இந்த மரக்கலத்திலிருந்து நாம் புறப்படுகிறோம். உன்னை
சித்தம் செய்து கொள். யாருக்கும் நீ மருதியென்று தெரியக்கூடாது” என்று கூறினான். கடைசி யாக எல்லனை அழைத்துக் கொண்டு தனது அறைக்குச் சென்று நீண்ட நேரம் ஏதோ பேசிக்கொண்டிருந்தான்.
பொழுது நன்றாகப் புலர்ந்தது. கதிரவனும் கீழ்த்திசையில் தோன்றினான். சாவகத்தின் மரக்கலத்தில் மாலுமிகள் பரபரப்புடன் நடமாடினார்கள்.
எல்லோரும் சின்னஞ்சிறு மூட்டை களைக் கட்டிக் கொண்டு படகுகளில் இறங்கி துறைமுகம் நோக்கிச் சென்றார்கள். கடைசிப் படகில் சுத்த தத்தர் மருதி இவர்களுடன் உபேந்திரன் பயணமானான். பயணப் படுமுன்பு சாவக
மாலுமிகள் இருவரை மட்டும் மரக்கலத்தில் நிறுத்தி, “அந்த வெறி பிடித்த பெண்ணை வெளியில் விடாதீர்கள். காலா காலத்தில் உணவைக் கூட தட்டில்வைத்து கதவை கால்வாசி திறந்து உள்ளே தள்ளிவிடுங்கள். அவளுக்கு வைத்தியம்
செய்ய மாலையில் நான் ஒரு மருத்துவரை அழைத்து வருகிறேன்” என்று எச்சரித்துக் கூறிவிட்டு படகில் இறங்கிச் சென்றான்.
அன்று காலை சூரிய வெளிச்சத்தில் புகாரின் கடல் மனத்தை அள்ளும் வண்ணம் பிரகாசித்தது. அது கடற்கோளால் ஓரளவு பாதிக்கப்பட்டிருந்தாலும் பழைய கம்பீரம் மாறாமல், கெட்டாலும் மேன்மக்கள் மேன் மக்களே என்ற
மூதுரைக்கு அத்தாட்சியாக நின்றது. பழைய கோட்டைச் சுவரில் இடிபடாமலிருந்த இரண்டு சிறு பகுதிகளின் மீது அலைகள் மடிந்து சென்று வணக்கம் செய்து கொண்டிருந்தன. புகாரின் கரையை அடைந்த சாவக மாலுமிகள் தங்களை
வரவேற்கக் காத்திருந்த பெரும் கூட்டத்தைக் கண்டு பிரமித்தனர்.
கடைசியாகப் படகில் வந்த புது நாகதேவிக்கும் படைத்தலைவனுக்கும் அவர்கள் அளித்த வரவேற்பு பிரமிப்பை அளித்தது. அரசரையே வரவேற்கும் தோரணையில் வரவேற்பு நடந்தது. படகு கரையை அடைந்ததும் படைத்தலைவனை
இரு பரதவர் கைலாகு கொடுத்து படகிலிருந்து இறக்கினார்கள். புது நாகதேவியைப் படைத்தலைவன் கையைப் பிடித்து இறக்கினான். கடைசியாக இறங்கினார் சுத்ததத்தர். இறங்கியதும் அவர் பார்வை நாலா பக்கமும் சுழன்றது.
கடைசியில் அந்தக் கூட்டத்தின் நடுவேயிருந்த ஒரு புதிய மனிதன்மீது நிலைத்தது. அதனால் அவர் திரும்பி ஓடிவிட முயன்றார். படைத்தலைவன் அவா கையைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டான். தனது புராணம் அன்றுடன்
பூர்த்தியாகிவிட்டது என்பதை சுத்ததத்தர் சந்தேகமறப் புரிந்து கொண்டார்.