Nagadevi Ch 31 | Nagadevi Sandilyan | TamilNovel.in
நாகதேவி – சாண்டில்யன்
அத்தியாயம் – 31. வேஷப் பொருத்தம்
Nagadevi Ch 31 | Nagadevi Sandilyan | TamilNovel.in
குருநாதர் அறைக்கு நேர் அறையில் இருந்த உபேந்திரன், குருநாதர் கதவு மூடப்பட்டதையும் திறந்தவுடன் இந்தளதேவரும் குருநாதரும் வெளியே வந்ததையும் கவனிக்கவே செய்தாலும், அதைக் கவனிக்கா தவன் போலவே நடந்து
கொண்டான். குருநாதர் வெளியே வந்ததும் தன்னைப் பார்த்த பரிதாபப் பார் வைக்கும் இந்தளதேவர் வீசிய லேசான புன்முறுவலுக்கும் ஒரே மாதிரியாகப் புன் முறுவல் செய்துவிட்டுத் தான் உட்கார்ந்த ஆசனத்திலேயே ஆடாமல்
அசையாமல் உட்கார்ந்து விட்டான்.
குருநாதர் தமது அறையை விட்டுக் கிளம்பியதும், நேராக மாளிகையை விட்டுச் செல்ல முயன்றதும் இந்தளதேவர், “குருநாதரே! வழி தவறிப் போகிறீர். நாம் போக வேண்டியது நாகதேவி இருக்குமிடம்” என்று குறிப்பிட்டார்.
குருநாதர் திகைத்து நின்றுவிட்டுக் கேட்டார்:”நாகதேவி பக்கத்து மாளிகையில் இருப்பதாக நீங்கள் தானே சொன்னீர்கள்?” என்று.
இந்தளதேவர் ஏதும் அறியாதவர்போல் இங்கிருக்கும் மாளிகைகள் இரண்டு. ஒன்றில் கப்பல் மாலுமிகள் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். இன்னொன்றில் நீங்கள் தங்கியிருக்கிறீர்கள். வேறு மாளிகை ஏது?” என்று வினவினார்.
‘ஒருவேளை புகாரின் கடற்கோளால் மறைந்து போன மாளிகை எதையாவது நினைத்துக் கொண்டீர்களா?” என்றும் கேட்டார்.
இந்த இடக்குக் கேள்வியால் வெகுண்ட குருநாதர், “கடலுக்குள் இருக்கும் மாளிகையில் யாராவது தங்க முடியுமா?” என்று கேட்டார் குரலில் சிறிது கோபத்தையும் காட்டி.
இந்தள தேவர் புன்முறுவல் செய்தார். “எனக்கெப்படித் தெரியும்? கடலில் பல விநோதங்களைச் செய்யும் உமக்குத்தான் தெரியும்” என்றார் புன்முறுவலின் ஊடே.
“கடலில் அப்படி என்ன விந்தைகள் செய்து விட்டேன்?”
“நீங்கள் தான் சொல்லவேண்டும். சில நாள்களாக உங்களுக்குக் கடலில் தானே வாசம்.”
“இந்தளதேவரே!”
“உம்.”
“நீர் என்மீது ஏதோ சந்தேகப்படுவதாகத் தெரிகிறது.”
“துளிக்கூட சந்தேகமில்லை. சரி, தேவிக்கு என்னை அறிமுகப்படுத்துங்கள்” என்ற இந்தளதேவர் அந்த மாளிகையின் வெளிப்புறப் படிகளுக்கு வந்ததும் “இப்பொழுது பாரும் இந்த மாளிகையை, இரண்டு மாளிகைகள் ஒன்றாக
இணைக்கப்பட்டிருப்பதைப் பார்ப்பீர்” என்று இரண்டு பகுதிகளாகக் கட்டி இணைக்கப்பட்ட அந்தப் பெரு மாளிகையைக் காட்டினார்.
புகாருக்கு அதிகமாக வந்திராத காரணத்தாலும், அப்படியே வந்தாலும் கடலரசனால் விழுங்கப்படாதிருந்த மருவூர்ப்பாக்கத்தை மட்டும் பார்த்துவிட்டுப் போகும் வழக்கமா தலாலும் குருநாதருக்குக் கடல் வாயிலிலிருந்த அந்த
இரட்டை மாளிகையைப் பற்றி விவரம் தெரியாததால் சோழ நாட்டு வடக்கெல்லையிலிருந்து வந்த இந்தளதேவருக்குத் தெரிந்த விவரங்களைப் பற்றிப் பெரிதும் வியந்தார். ஆனால் உள்ளே இருந்த கிலி அந்த வியப்பை மறைத்து விடவே
இணை மாளிகையை நோக்கித் திரும்பினார். அந்தத் தனி வாசலில் இருந்த பெரிய தாழ்வரையும், தாழ்வரை அடுத்த அறையும், அறையின் மணிக்கதவங்களையும் பார்த்த குருநாதர் ஒரு விநாடி பிரமித்தார்.
அவர் பிரமிப்பைக் கண்ட இந்தளதேவர், “குருநாதரே! இந்த முகப்பு மாளிகையில் பழைய புகார் மன்னர்கள் தங்குவது வழக்கம். இந்த இடம் அவர்கள் அந்தப்புரம். பரதவர் விஷயமறிந்து தான் நாகதேவியை இங்கு தங்க
வைத்திருக்கிறார்கள்” என்று சிலாகித்தார்.
இதைக் கேட்டு மனமுடைந்த சுத்ததத்தர் ‘அப்படியா! நன்று நன்று!’ என்று கூறி மணிக்கதவைத் தட்ட உள்ளிருந்து ஒரு பரதவ மங்கை கதவைத் திறந்தாள். என்ன வேண்டும்? ராணியார் இளைப்பாறு கிறார்கள்” என்று சொன்னாள்.
“ராணியாரைப் பார்க்கவேண்டும். நான் வந்திருப்பதாகச் சொல்” என்றார் குருநாதர்.
“நீங்கள் யார்?” அந்தப் பெண் வினவினாள்…
“குருநாதர்.” குருநாதர் பதில் திடமாகவே இருந்தது.
“சரி இருங்கள்” என்று சொல்லி உள்ளே சென்று சிறிது நேரத்தில் திரும்பி வந்து அவர்கள் இருவரையும் அழைத்துச் சென்று பக்கத்து அறை ஒன்றில் உட்கார வைத்தாள்.
சிறிது தாமதத்திற்குப் பிறகு அவ்விருவரையும் ராணி வேடம் போட்ட மருதியிடம் அழைத்துச் சென்றாள். அவ்விருவரும் உள்ளே நுழைந்ததும் குருநாதர் அவளை நோக்கித் தலை வணங்கினார். இந்தளதேவர் தலை வணங்காமல் “தேவி!
நான் இந்தளதேவன். சோழ மன்னரால் அனுப்பப்பட்டிருக்கிறேன்” என்று கூறி ஆசனத்தில் அமர்ந்தார்.
போலி நாகதேவி தலையை அசைத்தாள் புரிந்து கொண்டதற்கு அடையாளமாக. குருநாதர் இந்தள தேவரை அறிமுகப்படுத்தத் தொடங்கி, “இந்தளதேவர் சோழ தேவரின் அந்தரங்கமான தலைவர்களில் ஒருவர். படைகளை நடத்துவதில்
வல்லவர். அத்துடன் வெளி நாட்டு வாணிபமும் நடத்துகிறார்” என்று கூறினார்.
“தாங்கள் வணிசுரா!” என்று வியப்புடன் வினவினாள் மருதி.
“ஆமாம்.”
“படைத்தலைவர் என்றும் குருநாதர் சொல்கிறாரே.”
“இந்தக் காலத்தில் பல தொழில்களும் தெரிய வேண்டியிருக்கிறது.”
“அப்படியா!”
“ஆம் தேவி. வாணிபத்தில் பயனுமிருக்கிறது. வெளி நாடுகளை அவற்றின் எண்ணங்களைப் புரிந்து கொள்ளலாம். நான் தங்கள் நாட்டுக்கு வந்திருக்கிறேன். அடுத்து உள்ள சொர்ண த்வீபத்துக்கும் வந்திருக்கிறேன். அக்ஷய
முனையில் சில காலம் தங்கியிருக்கிறேன்” என்று அடுக்கிக் கொண்டே போன இந்தளதேவர் பேச்சை நிறுத்தி, “தாங்கள் அக்ஷயமுனை போயிருப்பீர்களல்லவா?” என்று கேட்டார்.
“அக்ஷயமுனையா!” என்று வியப்புடள் கேட்டாள் மருதி.
“ஆம்.”
“அது?”
“சொர்ணத்வீபத்தின் வடக்கு முனை.”
“ஆமாம், ஆமாம். கேள்விப்பட்டிருக்கிறேன்.”
கேள்விதான் பட்டிருக்கிறீர்களா! போனது இல்லையா?”
“இல்லை,நாகர்குலத்தார் அவசியமில்லாமல் சாவகத்திலிருந்து போகமாட்டார்கள்.”
“இங்கு அவசியத்தால் வந்திருக்கிறீர்கள்?”
இதற்கு மருதி பதில் சொல்லவில்லை. குருதேவரை நோக்கினாள். பரிதாபமாக குருதேவரும் திணறினார், இந்தளதேவரின் குறுக்குத்தனமான கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வதென்று அறியாமல். இந்தளதேவரே நிலைமையைச்
சமாளித்து, “இதென்ன அனாவசியக் கேள்வி? அவசியமில்லாமல், அதுவும் அத்தியா வசியமில்லாமல், சாவகத்திலிருந்து இத்தனை தூரம் யாராவது வருவார்களா?” என்று சொல்லிக் கொண்டார். பிறகு குருநாதரை நோக்கி, “குருநாதரே!
நான் சில விஷயங்கள் ராணியாருடன் பேச வேண்டியிருக்கிறது. தாங்கள் சிறிது வெளியில் இருக்கலாமா?” என்று விண்ணப்பித்துக் கொண்டார்.
இந்தளதேவரின் இந்த விண்ணப்பத்தைக் கேட்டதும் மருண்டுபோன சுத்ததத்தர், முன்பின் அறிமுகமில்லாத இந்த ராணியிடம் உங்களுக்கு என்ன ரகசியமிருக்க முடியும்?” என்று கேட்டார்.
இந்தளதேவர் குருநாதரை விபரீதப் பார்வையாகப் பார்த்தார். “தங்களை வெளியில் இருக்கச் சொன்னேன்” என்று சற்று கடுமையாகச் சொன்னார்.
அந்தக் கடுமையைக் குருநாதர் கவனிக்கவே செய்தாலும் அறையை விட்டு உடனே அகலாமல் தனது ஆசனத்திலிருந்து எழுந்து நின்றார் சில விநாடிகள். பிறகு வேகமாக அறையை விட்டு அகன்றார் அவர். அகன்றதும் அந்த
அறைக்கதவைத் தாமே சென்று சாத்திவிட்டு வந்த இந்தளதேவர் ஆசனத்தில் அமராமல் மருதியின் முன்பு நின்று கொண்டு அவளை ஊடுருவி நோக்கினார். அந்த ஆராய்ச்சிக் கண்களுக்கு ஈடுகொடுக்க முடியாத மருதியின் கண்கள்
நிலத்தில் தாமாகவே தாழ்ந்தன.
பல விநாடிகள் நின்றுகொண்டிருந்த இந்தளதேவர் ராணி” என்று மெதுவாக அழைத்தார்.
அவர் அழைப்பை முதலில் காதில் வாங்காத மருதி அவர் இரண்டாம் முறை அழைத்த பிறகே, “என்ன தேவரே!” என்று வினவினாள்.
இந்தளதேவரின் இதழ்களில் இளநகை விரிந்தது. “மகுடத்தை தாங்கள் சரியாக வைத்துக்கொள்ளவில்லை. முத்தலை நாக முகப்பு பக்கவாட்டில் இருக்கிறது. நேராகத் திருப்பிக் கொள்ளுங்கள்” என்றார்.
மருதி திடுக்கிட்டாள். “அப்படியா!” என்று திகிலுடன் கேட்டாள். மெல்ல தலைக்கிரீடத்தைச் சரிப்படுத்திக் கொள்ளவும் செய்தாள்.
“இப்பொழுது சாட்சாத் ராணியைப் போலவே இருக்கிறாய்” என்ற இந்தளதேவர் மகிழ்ச்சிப் புன்முறுவல் காட்டினார்.
அவர் பேச்சில் சற்று மரியாதை குறைந்து விட்டதை மருதி கவனித்தாலும் கவனிக்காதது போலவே நடந்து கொண்டாள். “ஏதோ தனிமையில் பேச வேண்டுமென்றீர்களே?” என்று கேட்டாள்.
“நாளைக்கு மன்னரை இங்கு எதிர்பார்க்கிறேன்” என்று சர்வ சாதாரணமாகச் சொன்னார் தேவர்.
“மன்னரையா” அதிர்ச்சியுடன் வினவினாள் மருதி,
“ஆம்” அசட்டையுடன் வந்தது இந்தளதேவரின் பதில்.
“எதற்கு?”
“சாவகத்தின் நாகர் தலைவியைச் சந்திக்க.”
“என்னையா?”
“நீங்கள்தானே நாகதேவி?”
“ஆம். பார்த்தால் தெரியவில்லையா?”
“தெரியாமலென்ன?”
“பின் சந்தேகமாகக் கேட்கிறீர்களே.”
“துளிக்கூட சந்தேகமில்லை. அது கிடக்கட்டும். நீ திரும்பவும் சாவகக் கப்பலுக்கு எப்பொழுது போவாய்! இன்று போகத் தேவையிருக்கிறதா?” என்று இந்தள தேவர் வினவினார்.
“படைத்தலைவரைக் கேளுங்கள்” என்றாள் மருதி.
“கேட்கிறேன்” என்ற இந்தள தேவர் வாயிற்படியை நோக்கி நடந்தார். வாயிற்படியை அடைந்த தும் சற்று திரும்பி, “வேஷம் பொருத்தமாகத் தானிருக்கிறது” என்றொரு வெடியை வீசிவிட்டு அவள் பதிலுக்குக் காத்திராமல் கதவைத்
திறந்து கொண்டு வெளியே சென்றார். மருதி சிலையென நின்றாள்.