Nagadevi Ch 33 | Nagadevi Sandilyan | TamilNovel.in
நாகதேவி – சாண்டில்யன்
அத்தியாயம் – 33. தூதரும் மகளும்
Nagadevi Ch 33 | Nagadevi Sandilyan | TamilNovel.in
நாகதேவி சிறையில் இல்லையென்பதை உணர்ந்ததும் ஒரு விநாடி சிலையென நின்றுவிட்ட உபேந்திரன், சிறிது சுரணையை வரவழைத்துக் கொண்டு துரிதமாக இயங்கலானான். “தேவரே! சற்று இங்கேயே இருங்கள். நாகதேவி தப்பிய
மர்மத்தை அறிந்து வருகிறேன்” என்று கூறிவிட்டுப் பக்கத்திலும் எதிரிலும் இருந்த அறைகளின் கதவுகளைத் திறந்து பார்த்தான். பிறகு தளத்துக்கு ஓடினான். கப்பலைக் காத்து நிற்க, தான் விட்டுப்போன சாவகத்து மாலுமிகளில்
ஒருவரை கூடக் காணாததால் வியப்பெய்தி அடித்தளத்துக்கு ஓடினான். அடித்தளத்தில் துடுப்புகள் துழாவும் அறை பூட்டி இருந்தது. அதன் முன்பு ஒரு மாலுமி மண்டையில் பலத்த காயத்துடன் மூர்ச்சையாகக் கிடந்தான்.
அவன் பக்கத்தில் பெரிய இரும்புச் சலாகை ஒன்று கிடந்தது. அந்த இரும்புச் சலாகையால் தான் அவன் காயப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்பதை உணர்ந்த உபேந்திரன் அவன் காயத்தை எட்ட ஒரு பாத்திரத்திலிருந்த குளிர் நீரால்
கழுவினான். அதனால் சற்று கண் விழித்த மாலுமியை நோக்கி, “என்ன நடந்தது?” என்று வினவினான்.
“நீங்கள் பூட்டி வைத்தீர்களே…” என்று முனகினான் மாலுமி.
“ஆம்… அவளுக்கென்ன?” என்று வினவினான் படைத்தலைவன்.
“நீங்கள் சென்றபின்பு கதவை பலமாக உடைத்து…”
‘உம்…”
“அதை அடக்கிக் கட்டிப் போடக் கதவைத் திறந்தோம்…”
“உம்…”
“ஓர் இரும்புச் சலாகையைக் கொண்டு எங்களைத் துரத்தியது…”
“உம்…”
அது பைத்தியமென்று தெரிந்ததால் நாங்கள் பின்னால் நகர்ந்தோம். உடனே கதவின் பூட்டையும் தாழ்களையும் வெறிகொண்டு இரும்புச் சலாகையால் உடைத்தெறிந்து எங்களைத் துரத்தியது. அடித்தளத்துக்கு ஓடினோம். துடுப்புத்
துழாவும் அறைக்கு அருகில் வந்ததும் என் தலையில் பலத்த அடி விழுந்து சுரணை தப்பினேன்.”
“மற்றவர்கள்?”
“அந்த அறைக்குள் இருக்கவேண்டும்” என்று கதையை முடித்தான் அந்த மாலுமி.
உபேந்திரன் சினம் உச்சஸ்தாயியை அடைந்தது. “முட்டாள்கள்! ஒரு பெண்ணைச் சமாளிக்க முடியாத நீங்கள் வீரர்களா?’ என்று சீறிய படைத்தலைவன் அடுத்து அடித்தள அறைப் பூட்டை அந்த இரும்புச் சலாகையால் உடைக்கவே
பூட்டு தெறித்து கதவு திறந்து, உள்ளிருந்து நான்கு மாலுமிகள் வெளியே வந்தார்கள். அவர்களை இகழ்ச்சியுடன் நோக்கிய உபேந்திரன் படிகளில் ஏறி இந்தளதேவர் இருந்த இடத்திற்கு வந்து அவரிடம் நடந்த விவரங்களைச் சொன்னான்.
இந்தளதேவர் ஒரு விநாடிதான் யோசித்தார். பிறகு சொன்னார், “நாம் உடனடியாகக் கரைக்குச் செல்ல வேண்டும்” என்று.
அவர் மனத்திலோடிய எண்ணத்தைப் புரிந்து கொண்ட உபேந்திரன், “ஆம்; மருதியின் உயிர் ஆபத்தில் இருக்கிறது. தேவரே, வாருங்கள்” என்று கூறிக் கொண்டே அவர் பின் தொடர மேல்தளத்தை நோக்கி ஓடினான். பிறகு இருவரும்
நூலேணியில் இறங்கி, தாங்கள் வந்த படகில் புகாரின் கரையை நோக்கி விரைந்தனர்.
புகார்க் கடலில் அன்று அலைகள் பெரிதாக எழும் பிக் கொண்டிருந்தன. அவற்றை எழுப்பிய பெருங்காற்றும் ஊழிக் கூச்சல்போல் ‘ஊ’ வென்று கூச்சலிட்டு ஏதோ பெரும் அனர்த்தம் நடக்கவிருப்பதைத் தெரிவித்துக்
கொண்டிருந்தது. அத்தனை பெரிய அலையிலும் காற்றிலும் அனாயாசமாகப் படகைச் செலுத்தினான் உபேந்திரன். சில வேளைகளில் எதிரலைகள் காரணமாகப் பின்னுக்கு நகர முற்பட்ட படகைத் தனது புயங்களின் வலிமையாலும்
துடுப்புகளைத் துழாவும் திறமையாலும் முன்னுக்கு சிரமப்பட்டுச் செலுத்தினான். இத்தனைக்கும் இந்தளதேவர் எந்தவித உணர்ச்சியையோ பதத்ற்றதையோ காட்டாமல் கல்லுப்பிள்ளையார் மாதிரி உட்கார்ந்திருந்தார். அலைகளில்
தாவித் தாவிப் படகுக் கரைக்கு வந்து அது உபேந்திரனால் தரைக்கு இழுக்கப்பட்ட பின்பே இந்தளதேவர் வாயைத் திறந்தார்.
“படைத்தலைவரே! நீர் நேராக மாளிகைக்குச் சென்று மருதியைக் காப்பாற்றப் பாரும். அத்துடன் நாகதேவியை மருதியாகவே வைத்திரும். மருதி, தேவியின் கிரீடங்களை அணிந்தே இருக்கட்டும். மன்னர் வந்த பின்பு மற்ற விஷயங்களைச்
சரி செய்து கொள்ளலாம்” என்றார்.
படைத்தலைவன் அவர் சொற்களின் காரணத்தை அறியாவிட்டாலும் தலையை அசைத்துவிட்டு மாளிகையை நோக்கி ஓடினான். விடுவிடுவென்று மாளிகைப் படிகளில் ஏறி மருதி இருந்த அறையை நோக்கி ஓடினான். மருதியின்
அறை தாழிடப்பட்டிருந்ததால் அதன் மீது தனது உடலை பலமாக மோதி தாள் உடைந்து கதவு உள்ளே விழும்படிச் செய்யவே உள்ளிருந்த பயங்கர நிலை தெள்ளெனத் தெரிந்தது உபேந்திரன் கண்களுக்கு.
அப்பொழுதும் மருதி நாகதேவியின் உருவத்தில் உட்கார்ந்திருந்தாள். அப்பொழுதும் முத்தலை ஆபரணம் அவள் குழலை அழகு செய்திருந்தது. கையில் நாக்கங்கணம் பளீரென நாகரத்தினங்களுடன் பிரகாசித்துக் கொண்டிருந்தது.
அவள் எதிரே சொட்டச் சொட்ட நனைந்த குழலுடனும் உடையுடனும் உண்மை நாகதேவி நின்றிருந்தாள். நனைந்த ஆடை அவள் பின்னழகுகளில் ஒட்டி அவற்றின் திண்மையையும் ஆங்காங்கு சதையின் வெண்மையையும்
புலப்படுத்தியிருந்தது. கதவு உடைக்கப்பட்டதும் சரேலென்று திரும்பிய நாகதேவியின் அழகிய விழிகள் அழகாக இல்லை. வெறி பிடித்து சீறின. அவள் மார்பகம் ஈரச் சீலையால் வெளிப்படையாகத் தெரிந்தும் சீறியும் நின்றாலும் அந்த
அழகை கண்களின் வெறி மறைக் கவே செய்தது. “படைத்தலைவரே! சிறிது நேரங் கழித்து வந்துவிட்டீர்கள். இதோ உங்கள் காதலி வானுலகம் சென்று கொண்டிருக்கிறாள்” என்று கூறிக் கொண்டே அவள் என்ன செய்யப் போகிறாள் என்
பதை படைத்தலைவன் உணருமுன்பு முத்தலை நாகா பரணத்தை மருதியின் தலையிலிருந்து சரேலெனப் பிடுங்கி அவள் மார்புச் சீலையைக் சிழித்து அதில் பதிய வைக்க முனைந்தாள். அந்த நாகாபரணம் பதிந்துவிட்டால் அதில் உள்ள
விஷத்திலிருந்து உலகத்திலுள்ள எந்த மருந்தும் மருதியைக் காப்பாற்ற முடியாதென்றும் அப்படியே முடிந்தாலும் மருத்துவன் வருவதற்குள் மருதியின் ஆவி பிரிந்துவிடுமென்பதையும் உணர்ந்து கொண்ட தால் படைத்தலைவன் ஏது
செய்வதென்று அறியாமல் அதிர்ச்சியுற்று நின்றான். ஒருமுறை மட்டும் கூவினான். “நாகதேவி! அவளைக் கொல்லாதே! நீ எதைக் கேட்டாலும் தருகிறேன். எங்கு அழைத்தாலும் வருகிறேன். உன்னையே மணக்கிறேன்” என்று.
நாகதேவி அவனை நோக்கித் திரும்பி நகைத்தாள் பலமாக. “உபேந்திரா! காதலியின் உயிருக்காகக் கதறுகிறாய்! அவள் பிணத்தைக் கண்டு பிறகு கதறப் போகிறாய்! என் உடல் பொருள் ஆவி மூன்றையும் உனக்கு அர்ப்பணித்தேன்.
அவற்றை உதாசீனம் செய்தாய்! என்னைத் தூசிபோல் நடத்தினாய்! அதன் பலனை அனுபவி!” என்று கூறிவிட்டு மருதியைக் கட்டிலில் தள்ளி அவள் கால்களைத் தனது ஒரு காலால் அழுத்தினாள். “மருதி! உன்மேல் எனக்குப்
பொறாமையில்லை. நீ ஓர் அநாதை, நீ செய்த தவறு ஒன்றுதான். என்னைப் போலவே பிறந்தாய், அதனால் ஏற்பட்ட கலவரமும் குழப்பமும் அதிகம். நாகர் குலத்துக்கு நீ ஒரு சாபக்கேடு ஆனாய்! ஆகையால் நீ போய்ச் சேர். நாம் இருவரும்
இந்த உலகத்தில் இருக்க முடியாது” என்று கூறிவிட்டு நாகாபரணத்தை மருதியின் வலது மார்பகத்தில் பொருத்தினாள். அதை அழுத்த கையை யும் அசைத்தாள். அந்தக் கை அசைந்திருந்தால் மருதியின் கதை முடிந்திருக்கும்.
ஆனால் அதே சமயத்தில் “நாகதேவி” என்று எழுந்த ஒரு குரல் அவள் கையைத் தேக்கியது. நாகதேவி தனது கொடிய செயலை நிறுத்தி திரும்பி நோக்கினாள். அவள் கண்களிலிருந்து வெறி மறைந்து அதன் இடத்தை அச்சம்
ஆட்கொண்டது.
அவள் பெயரை அழைத்தவர் வாயிற்படியில் நின்றிருந்தார். அவரது உடை நாகர்களின் உடையாயிருந்தது. அவர் தலையிலும் முத்தலை நாகாபரண மொன்று சுற்றிக் கிடந்தது. அவரைக் கண்டதும் வெலவெலத்துப் போன நாகதேவி,
“நீங்கள். நீங்கள்” என்று குழறினாள்.
“ஆம் தேவி நானேதான், எழுந்து வா” என்று அன்புடன் அழைத்தார் அந்த மனிதன்.
நாகதேவி, மருதியின் மீது அழுந்தியிருந்த தனது காலையும் எடுத்தாள். அவள் மார்பில் அழுத்த முயன்ற முத்தலை நாகாபரணத்தையும் எடுத்துக் கொண்டாள். தன்னை அழைத்த அந்த மனிதரை நோக்கி கனவில் நடப்பவள் போல்
நடந்து சென்றாள். அவள் தன்னை அணுகியதும் அவளைத் தன் மார்புடன் அணைத்துக் கொண்ட அந்த மனிதர், ‘தேவி! உன் உடலெல்லாம் நனைந்திருக்கிறதே உடலைத் துடைத்துக் கொள். தலையையும் துவட்டிக்கொள்” என்று
அன்புடன் சொன்ன அந்த மனிதர் படைத்தலைவனை நோக்கி, “நீங்களும் அந்தப் பெண்ணும் இந்த அறையைவிட்டுச் சென்றால் நாகதேவி இந்த அறையில் இருப்பாள்” என்று கூறினார். அவர் பேச்சில் சிறிது அதிகாரத்தின் ஒலியும்
இருந்தது.
“நீங்கள் யார் எனக்கு உத்தரவிட? உங்களுக்கு அதிகாரமளித்தது யார்?” என்று படைத்தலைவன் சற்று உஷ்ணத்துடன் கேட்டான்.
பதிலுக்கு அந்த மனிதர் படைத்தலைவனை வீயப்புடன் உற்று நோக்கினார். “என் உடையிலிருந்தே என்னை யாரென்று நீங்கள் புரிந்து கொண்டிருக்க வேண்டும். புரியாவிட்டால் இந்தள தேவரைக் கேட்டுத் தெரிந்து கொள்ளும்”
என்றார் அந்த மனிதர்.
அந்த சமயத்தில் இந்தளதேவரும் அங்கு தலையை நீட்டினார். “படைத்தலைவரே! இவர் தான் சாவகத்தின் தூதர். மன்னர் அனுப்பித்தான் நாங்கள் இருவரும் இங்கு வந்தோம். அவர் சொல்கிறபடி இந்த அறையை நாகதேவிக்கும்
அவருக்கும் ஒழித்து விடுங்கள்” என்றும் சொன்னார்.
உபேந்திரன் அசந்து போனான். “சாவகத்தின் தூதரா!’ என்று வினவவும் செய்தான்.
“ஆம்” என்றார் தேவர்.
“நாகதேவியை நாம் எதற்காக இவருடன் விட வேண்டும்?” என்று உபேந்திரன் வினவினான்.
“அவர் பாதுகாப்பு அவளுக்கு அவசியம்” என்றார் இந்தள தேவர். “அது நியாயமுங்கூட,” என்றும் சொன்னார்.
“என்ன நியாயம்?” உபேந்திரன் கேள்வியில் ஆத்திரமிருந்தது. –
“நாகதேவி அவர் பெண், விவாகமாகாத பெண், தந்தையுடன் இருப்பது தான் – நியாயம்” என்றார் இந்தளதேவர்.
உபேந்திரனுக்கு ஏதும் விளங்கவில்லை. அதை வாய்விட்டும் சொன்னான். “எனக்கு ஏதுமே விளங்க வில்லை தேவரே” என்று.
“நாளை விளங்கும்” என்றார் தேவர்.
அடுத்த நாள் விளக்கம் கிடைத்தது. தமிழக வரலாற்றை உலுக்கும் விளக்கம் அது.