Nagadevi Ch 34 | Nagadevi Sandilyan | TamilNovel.in
நாகதேவி – சாண்டில்யன்
அத்தியாயம் – 34. அலை வடதில்
Nagadevi Ch 34 | Nagadevi Sandilyan | TamilNovel.in
இந்தளதேவர் சொன்ன புது விவரங்களால் பெரிதும் சலனமடைந்த இதயத்துடன் மருதியை அழைத்துக் கொண்டு அந்த அறையை விட்டுக் கிளம்பிய உபேந்திரன், நாகதேவி இருந்த மாளிகையிலிருந்து படிகளில் இறங்கி அதன் இரட்டை
மாளிகையான தானிருந்த மாளிகைக்கு வந்து தனது அறைக்குள் நுழைந்தான். இந்தளதேவரும் அவனைத் தொடர்ந்து வந்து, படைத்தலைவரே! நீங்கள் நிம்மதியாக இன்று உறங்கலாம். நாகதேவியின் நாடகக் கதையின் கடைசி காட்சி
வந்துவிட்டது. இனி அவளால் உங்களுக்கு எவ்விதத் தீங்கும் வராது. நான் நாளை வருகிறேன்” என்றார் வாயிற்படியில் நின்றபடியே.
உபேந்திரன் குழம்பிய கண் களுடன் அவரை நோக்கி “தாங்களும் இங்கேயே தங்கலாமே’“ என்றான்.
இந்தளதேவர் இதழ்களில் புன் முறுவல் அரும்பிற்று. சாவக மரக்கலத்திலிருந்து புகார்க்கரையில் சாவகத்தின் தூதர் தோன்றும் வரை அவரது முகத்தில் காணப்பட்ட கவலை மறைந்து முகத்தில் மகிழ்ச்சியின் சாயை படர்ந்து கிடந்தது.
அவர் உபேந்திரனுக்குப் பதில் சொன்ன போது அதில் கவலை நீங்கி ஓரளவு உற்சாகமிருந்ததை உபேந்திரன் கவனித்தான். புன்முறுவல் தவழ்ந்த உதடுகளைத் திறந்த இந்தளதேவர் சொன்னார். தங்கலாம், ஆனால் மருவூர்ப்பாக்கம்
போக வேண்டும் அங்கு சிறிது வேலை இருக்கிறது” என்று.
“அப்படியானால் உங்களுக்கு உதவ நானும் வருகிறேனே” என்றான் உபேந்திரன்.
“வேண்டாம். இது நான் தனிப்பட செய்ய வேண்டிய அலுவல்; இதில் மூன்றாவது மனிதருடைய தலையீடு கூடாதென்பது மன்னர் உத்தரவு” என்றார் இந்தளதேவர்.
நான் மூன்றாவது மனிதனா? மன்னருக்கு நான் பணியாளனல்லவா?” என்று வினவிய உபேந்திரன் குரலில் சிறிது வருத்தமும் இருந்தது.
இந்தளதேவர் ஒரு விநாடிதான் சிந்தனையில் இறங்கினார். “யார் யாருக்கு எந்தப் பணியை இடவேண்டுமென்பதை மன்னரைப்போல் அறிந்தவர் சோழ மண்டலத்தில் கிடையாது. அவர் இட்ட கட்டளையை நிறைவேற்ற வேண்டியது
அவரது ஊழியர் கடமை” என்று பொதுப்படையாகப் பதில் சொல்லிவிட்டு, “படைத்தலைவரே! மருதியை சமாதானப்படுத்துங்கள். பாவம், ஏதுமறியாத பெண். சில நாளாகவே பேராபத்திலிருந்திருக்கிறாள், இன்று அவள் உயிர்
மயிரிழையில் தப்பியிருக்கிறது!” என்றும் தமது அனுதாபத்தைத் தெரிவித்துவிட்டு அந்த அறையைவிட்டு அகன்றார்.
அவர் அகன்றதும் அறைக்கதவு திறந்திருப்பதையும் லட்சியம் செய்யாது மருதியை மார்புடன் அணைத்துக் கொண்டு அவள் முதுகை ஆதரவுடன் தடவி கொடுத்த உபேந்திரன் “மருதி! இனி உனக்கு எந்தவிதக் கஷ்டமோ ஆபத்தோ
கிடையாது. இன்றிரவைக் கழி. நாளைக் காலையில் வருகிறேன்!” என்று ஆதரவாக வும் அன்பாகவும் பேசவும் செய்தான்.
மருதி பேசும் சக்தியை அறவே இழந்திருந்ததால் அவனுக்குப் பதிலேதும் சொன்னாளில்லை. அவன் மார்பிலிருந்து முகத்தையும் நீக்கினாளில்லை. தன்னைக் கட்டிப் பிணைத்திருந்த அவன் கைகள் தனது உடலிலிருந்து நீங்கியபோது
தனது கைகளால் அவனைப் பிணைத்தாள், இறுக்கினாள். அப்படி இறுக்கியதால் அவன் மார்பில் அழுந்திக் கிடந்த அவளது திண்ணிய இள மார்பக மொட்டுகள் இரண்டும் அணைப்பின் இறுக் கலால் சிறிது மலர்ந்து படர்ந்தாலும்
அதிகமாக விரியவில்லையாதலால், உபேந்திரன் உடலின் இன்ப அலைகள் பாய்ந்து சென்றன. அவன் பிரிந்து போய் விடப் போகிறானே என்ற பயத்தில் அவனுடைய இடைக்குக் கீழே இணைந்து அழுந்திய அவள் பூவுடல் அவன்
உணர்ச்சிகளை உலுக்கலாயிற்று. இத்தனையையும் சமாளித்துக்கொண்டு உபேந்திரன், “மருதி! இனி அச்சத்திற்கு ஏதுமில்லை. என்னை விடு. இரவு முடிய இன்னும் ஒரே ஜாமந்தானிருக்கிறது. விடிந்ததும் வருகிறேன்” என்று கூறி அவள்
கைகளைத் தன்னிடமிருந்து பிரிக்க முயன்றான்,
அவள் அவனை விடவில்லை. “படைத் தலைவரே! என் உறுதியெல்லாம் உடைந்துவிட்டது. எனக்கு இனிமேல் எதிலும் நம்பிக்கையில்லை. நீங்கள் சென்று விட்டால் அந்த ராட்சஸி வந்து என்னைக் கொன்றாலும் கொல்லுவாள்.
அவளிடம் இத்தனை நாள் நான் அனுபவித்த கஷ்டங்கள் போதும். இங்கேயே இருங்கள். அடுத்த ஒரு ஜாமத்தை விழித்தே கழிப்போம்” என்று கெஞ்சினாள்.
உபேந்திரன் அவள் தலையை நிமிர்த்தினான். குனிந்து அவள் வழவழத்த புஷ்டியான கன்னங்களைத் தனது உதடுகளால் தடவினான். பிறகு அவள் செம் பருத்தி இதழ்களையும் லேசாகத் தனது அதரங்களால் தொட்டான். அடுத்து
அவள் முகத்தைவிட்டு மீண்டும், ‘மருதி! உனக்கு தீங்கு ஏற்படும் என்று நம்பினாலும் அந்த இடத்தை விட்டு நான் போகமாட்டேன். ஆனால் உனக்கு எந்தவித அபாயமும் கிடையாது. எதற்கும் எதிர் அறையிலிருக்கும் குருநாதரை
உனக்குத் துணையாக விட்டுப் போகிறேன். கீழே சென்று எல்லனையும் அனுப்புகிறேன்!” என்று சொன்ன உபேந்திரன் சற்று திரும்பி, “குருநாதரே!” என்று அழைத்தான்.
அதுவரை அந்த அறையின் பக்கச் சுவரில் சாய்ந்து மறைந்து நின்றிருந்த குருநாதர் சரேலெனத் தலையை நீட்டி “படைத்தலைவரே! இதோ இருக்கிறேன்” என்று அறை முசுப்பில் தலையை நீட்டினார்.
உபேந்திரன் புருவங்கள் கேள்வி கேட்பனபோல் எழுந்தன. “இத்தனை நேரம்…” என்று சொற்களை முடிக்காமல் விட்டான்.
“இங்கு தானிருந்தேன்…” குருநாதர் தயக்கத்துடன் பதில் சொன்னார்.
“நாங்கள் பேசுவதை ஒட்டுக் கேட்டீரா?” என்று வினவினான் படைத்தலைவன்.
“ஒட்டுக் கேட்க அவசியமில்லை, உமது குரல் பலமாகத்தானிருந்தது.” குருநாதர் குரலில் வெறுப்பு இருந்தது.
“அப்படியானால் புதிதாக உமக்கு ஏதும் சொல்ல வேண்டிய அவசியமில்லை.”
“இல்லை. நாகதேவி நாகைக்கு வந்த நாளாய் இந்தப் பேச்சை உம்மிடமிருந்து நாள் தவறாமல் கேட்டு வருகிறேன். காதல் பேச்சு எனக்கு அலுத்து விட்டது.”
“இதற்கு முன்பு தங்களுக்கு இதில் அதிகப் பரிச்சயமுண்டோ?”
“நான் துறவி என்பது நினைவிருக்கட்டும்.”
“அதைத் தாங்கள் நினைப்பில் வைத்துக்கொண்டால் போதும்.”
“வைத்துக் கொள்ளாமல் என்ன செய்து விட்டேனாம்?”
“ஒரு புருஷனும் பெண்ணும் பேசுவதை ஒட்டுக் கேட்கிறீர்?”
இந்தக் குற்றச்சாட்டைக் கேட்டதும் அதிக வெறுப்பை முகத்தில் காட்டினார் சுத்ததத்தர். “ஹும்” என்று வெறுப்பு கலந்த மூச்சையும் வெளியிட்டார்.
“என்ன ஹும்” என்று கேட்டான் படைத்தலைவன்.
“ஒட்டுக் கேட்பதாவது மண்ணாங்கட்டியாவது? மருதியை நாகதேவியாகவும், நாகதேவியை மருதியாகவும் நினைத்து நீர் திரும்பத் திரும்பக் கொஞ்சி என் கழுத்தை அறுத்திருக்கிறீர். நாகையில் ஆரம்பித்த இந்தக் குலாவல் கப்பலிலும்,
இப்பொழுது புகாரிலும் தொடர்ந்திருக்கிறது. இதில் ஒளிவு மறைவும் அதிகமாகக் காணோம். எல்லாம் துறவியான என் கண் முன்னால் நடந்திருக்கிறது. கஷ்டம்! கஷ்டம்!” என்று அலுத்துக் கொண்டார் குருநாதர்.
இதைக் கேட்ட உபேந்திரன் மருதி இருவருமே நகைத்தார்கள். “இந்த அவதியிலிருந்து உமக்கு விடுதலையளிக்கின்றேன்” என்றான் உபேந்திரன் சிறிது நகைப்பை நிறுத்தி.
“எப்படியோ?” என்று வினவினார் குருநாதர்.
“மருதியை உமது பாதுகாப்பில் விட்டுப் போகிறேன்” என்றான் படைத்தலைவன்.
“வேண்டாம் வேண்டாம்” குருநாதர் குரலில் நடுக்கம் இருந்தது. –
“ஏன்?”
“யாரையும் பாதுகாக்கும் சக்தி எனக்கில்லை.”
“உம்மை யார் என்ன செய்ய முடியும்?”
“நாகதேவி…”
“அவளால் உமக்கு எந்தக் கெடுதியும் ஏற்படாது.”
“சொல்வது சுலபம்.”
“இப்பொழுது அவள் தகுந்த பாதுகாப்பில் இருக்கிறாள்.”
“அவளைத் தடுக்கக்கூடிய பாதுகாப்பு உலகில் இல்லை. கப்பலில்கூட பூட்டித்தான் வைத்துவிட்டு வந்தீர். நடந்தது என்ன?”
“குருநாதரோ!”
“உம்?”
“நீர் இத்தனை பயங்கொள்ளியென்பது எனக்குத் தெரியாது.”
“இப்பொழுது தெரிந்து கொள்ளும், நான் சோழ மண்டலத்தைவிட்டே ஓடப் போகிறேன்.”
“சூடாமணி விஹாரம்?”
“எக்கேடு கெட்டுத் தொலையட்டும்.”
சுத்ததத்தரின் இந்தத் தியாக உணர்ச்சி உபேந்திரனுக்கு நகைப்பை உண்டாக்கியதால் சிறிது நகைக்கவும் செய்தான்.
“குருநாதரே! உமக்காக சைலேந்திர மன்னர்களால் கட்டப்படும் விஹாரத்தை விட்டு ஓடுவது பெரும் தவறு. புத்தபிரானையும் புத்த மதத்தையும் கைவிட்ட குற்றம் உம்மைச் சேரும்” என்று கூறினான் உபேந் திரன் நகைப்பின் ஊடே. “சரி
குருநாதரே! நேரமரகிறது. மருதியைக் கவனித்துக் கொள்ளும். உமக்குத் துணையாக எல்லனையும் அனுப்புகிறேன்” என்று கூறிவிட்டு வெளியே சென்ற உபேந்திரனை மாளிகை வாயிலிலேயே எல்லன் சந்தித்தான்,
“எல்லா!” என்றழைத்த படைத்தலைவன் “இன்று மருதியையும் சுத்ததத்தரையும் கவனித்துக்கொள். நாளைக் காலையில் நான் வருகிறேன்” என்று உத்தரவிட்டு பரதவர் குடியிருப்புகளை நாடிச் சென்றான்.
நான்காம் ஜாமம் துவங்கிவிட்டதால் பரதவர் குடியிருப்புகளில் நிசப்தம் குடி கொண்டிருந்தது. ஓரிரு இல்லங்களில் மட்டும் சின்னஞ்சிறு விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. அந்த இல்லங்களின் ஓரமாகவே நடந்து சென்ற உபேந்திரன்
அந்தக் குடியிருப்புகளில் சிறிது பெரிதாயிருந்த ஒன்றை அணுகியதும், “சின்னப்பா! சின்னப்பா!” என்று அழைத்தான்.
பெரிய மீசையும் பூதாகரமான உடலையும் பெற்ற பூதம் போன்ற சின்னப்பன் குடிசைக்குள்ளிருந்து வெளியே வந்து, “யாரது?” என்று முரட்டுத்தனமான குரலில் வினவினான்.
“நான் தான் உபேந்திரன்” என்றான் படைத்தலைவன்.
“அடடடா! தாங்களா!” என்று உபேந்திரனைக் கண்டதும் மரியாதைக் குரல் காட்டிய பரதவர் தலைவன், “என்ன எசமான்? ஏது இத்தனை நாழிகைக்கு…” என்று வினவினான்.
“காரணமாகத்தான் வந்தேன். நாளைக் காலையில் இராஜேந்திர சோழ தேவர் இங்கு வருகிறார். என் ஊகம் சரியானால் கடல் வழியாகத்தான் வருவார். அவரை எதிர் கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும்” என்றான் உபேந்திரன்.
“மன்னரா!” அதிர்ச்சியைக் காட்டினான் சின்னப்பன்.
“ஆம்” உபேந்திரன் குரல் திட்டமாயிருந்தது.
“எதற்காக? எங்களுக்கு இதுவரை யாரும் சொல்லவில்லையே?” என்ற சின்னப்பன் சரேலென்று பேச்சை நிறுத்தி விறைத்து நின்றான்.
“என்ன சின்னப்பா?” என்ற உபேந்திரன் பரதவர் தலைவன் முகத்திலிருந்த அதிர்ச்சிக்குக் காரணம் தெரியாமல் திகைத்தான்.
சின்னப்பன் பேசும் சக்தியை இழந்து கிடந்தான். “அதோ பாருங்கள்” என்று அலை தரையைக் தொட்டுக் கொண்டிருந்த இடத்தைச் சுட்டிக் காட்டினான்.
.
அலை ஓரத்தில் கடை இரவின் நிலவு அளித்த மங்கலான வெளிச்சத்தில் இருவர் நடந்து கொண்டிருந்தனர். அவர்களைக் கண்டதும் சின்னப்பனைவிட சிதறிய உள்ளத்தால் உடல் நடுங்கினான் உபேந்திரன். அவன் கால்கள் துவண்டு
மண்ணில் இறங்கின. மணலில் மண்டியிட்டான் படைத்தலைவன். சின்னப்பனும் அவன் காட்டிய வழியைப் பின்பற்றினான்.
கரைப்பக்கம் தலையைத் திருப்பாமலே இந்தள தேவருடன் ஏதோ பேசிக் கொண்டே இந்தியாவின் பெரிய சாம்ராஜ்யாதிபதியும் மகாவீரனென்று உலகப் பிரசித்தி பெற்றவனுமான ராஜேந்திர சோழ தேவன் நடந்து கொண்டிருந்தார்.