Nagadevi Ch 35 | Nagadevi Sandilyan | TamilNovel.in
நாகதேவி – சாண்டில்யன்
அத்தியாயம் – 35. விசாரணை
Nagadevi Ch 35 | Nagadevi Sandilyan | TamilNovel.in
நீலத்திரைக் கடல் ஓரத்திலே அலைகள் அடிபணிய சோழ சாம்ராஜ்யாதிபதியான ராஜேந்திர சோழ தேவன் இந்தள தேவருடன் பேசிக்கொண்டே சிந்தனை வசப்பட்டு நடந்ததைக் கவனித்த உபேந்திரனும் பரதவத்தலைவனும் மணலில்
மண்டியிட்டுத் தலை குனிந்து வணங்கினார்களென்றாலும், அவ்விருவரையும் மாமன்னரோ தேவரோ கவனிக்கவில்லையாகையால் சிறிது நேரம் கழித்து இருவருமே எழுந்து நின்றனர். சோழ மாமன்னனும் இந்தளதேவரும் அலை ஓரமே
நடந்து காவிரி கட லுடன் சங்கமமாகும் இடத்தில் நின்று மறுபடியும் உரையாடலில் இறங்கிவிட்டதையும், சக்கரவர்த்தி இருமுறை சங்கமத்துறையைச் சுட்டிக்காட்டியதையும் பார்த்த நாகை நாகர்களின் படைத்தலைவன், சக்கரவர்த்தி
ஒருமுறைகூட. தூரத்தே ஆடி நின்ற சாவகக் கப்பலின் மீது கண்ணைச் செலுத்தாதையும் தேவர்கூட அதை சுட்டிக்காட்டி ஏதும் பேசாததையும் கண்டு அத்தகைய அசட்டைக்குக் காரணம் எதுவாயிருக்குமென்று சிந்தித்துப் பார்த்தான்.
ஏதும் தெரியா மற்போகவே “எப்படியும் காலையில் எல்லாம் விளங்கும்” என்று தன்னைத் தேற்றிக் கொண்டான். சின்னப்பா! சக்கரவர்த்தி நான் எதிர்பார்த்தபடி கடல் வழியில் வரவில்லை. நிலமார்க்கத்தில் தான் வந்திருக்கிறார். உனக்கு
அதிக அலுவலில்லை” என்று சொன்னான்.
“பாக்கியமில்லையென்று சொல்லுங்கள் படைத்தலைவரே! மன்னரை வரவேற்கும் பாக்கியத்தைப் பரதவர் இழந்தார்கள்” என்று துன்பம் துலங்கிய குரலில் சொன்னான் சின்னப்பன்.
அவனுக்கு எந்தப் பதிலும் சொல்லும் நிலைமையில் படைத்தலைவன் இல்லாததால், “சின்னப்பா! நீ போய் வா! நான் பிறகு வருகிறேன்” என்று பரதவர் தலைவனுக்கு விடை கொடுத்தான். அவன் சென்றதும் புகார் கடற்கரை மணலில்
படுத்து விண்ணை நோக்கினான். உதய காலம் நெருங்கிக் கொண்டிருந்த காரணத்தால் நட்சத்திரங்கள் மெல்ல மெல்ல மறையத் தொடங்கின. சந்திரனும் சோபை இழந்து வானத்தில் உலாவிக் கொண்டிருந்தான். அந்த சந்திரனையும்
நினைத்துத் தன்னையும் நினைத்த உபேந்திரன், சந்திரா! உன் நிலையும் எனது நிலையும் ஒன்று. நீ சோபையை இழக்கிறாய். என் சோபையும் நாளை சக்கரவர்த்தியின் விசாரணையில் மங்கிவிடும். கடமையைத் துறந்து நாகையிலிருந்து
வந்ததற்குக் கடும் தண்டனை கிடைத்தாலும் கிடைக்கலாம். தலையே போனாலும் போகலாம்” என்று தனக்குள் சொல்லிக் கொண்டான். அசதி யால் சிறிது கண்களையும் மூடினான். உறக்கம் அவனை ஆட்கொண்டது. பல நாள்களின்
வேதனை அவனுக்கு அசதியைத் தந்திருந்ததால் தூரத்தே சக்கர வர்த்தியின் அரண்மனையிலிருந்து எழுந்த உதயகால கீதங்களோ முரசங்களின் ஒலிகளோ அவன் காதில் விழவில்லை. காலைக் கதிரவன் தங்கப் பழமென கடலிலிருந்து
எழுந்து அவன் மீது கிரணங்களை வீசிய பின்பே படைத்தலைவன் கண் விழித்தான்.
சூரியன் கிளம்பிவிட்டதைக் கண்டதால் துடிதுடித்து எழுந்து கடலோரம் சென்று அங்கிருந்த கறுத்த குழைவு மண்ணால் பல் துலக்கிக் கடலலைகளில் நீந்தி நீராட்டத்தையும் முடித்துக் கொண்டான். துரிதமாகத் தலை துவட்டி உடல்
துடைத்து ஈர உடைகளுடன் தனது மாளிகை அறைக்கு வந்து சேர்ந்தான். அந்த இரட்டை மாளிகை அன்று புதுத்தோற்றம் அளித்தது. அதன் ஆரம்பப் படிகளில் சோழ நாட்டு வீரர்களும், சாவகத்தின் தூதர் இருந்த இரண்டாவது வாயிலும்
அதற்குச் செல்லும் படிகளிலும் சாவகத்து மாலுமிகளும் ஆயுத பாணிகளாய் காவல் காத்து நின்றனர். இந்த ஏற்பாடுகளைக் கண்டதால் வியந்து ஒரு விநாடி படிகளில் நின்றுவிட்ட படைத்தலைவனை எல்லன், “எசமான், உங்களைக் காலை
முதல் தேடுகிறேன். எங்கு போயிருந்தீர்கள்? சீக்கிரம் வாருங்கள், புறப்பட வேண்டும்” என்று துரிதப்படுத்தினான்.
“எங்கு புறப்பட வேண்டும்” என்ற கேள்வியை வீசினான் படைத்தலைவன்.
எல்லன் பதில் சொல்லு முன்பு இரட்டை மாளிகை யின் வாயிலில் சாவகத்தின் தூதர் ஆயுதம் அணிந்து தலைப்பாகை அணிந்து ராஜரீக உடையில் தோன்றினார். அவருடன் நாகதேவியும் சர்வாலங்கார பூஷிதை யாய் வந்தாள். ஆனால்
அவள் நாகாபரணம் எதையுமே அணியவில்லை. இருவரும் படிகளில் இறங்கி வந்ததும் படைத்தலைவனைக் கவனியாது போலவே அவனைத் தாண்டிச் சென்றனர். ஆனால் படைத்தலைவனைத் தாண்டியதும் ஒரு முறை திரும்பிப்பார்த்த
நாகதேவியின் கண்களில் மட்டும் அதிக சீற்றமிருந்ததைக் கவனித்தான் படைத் தலைவன். பிறகு சரசர வென்று படிகளில் ஏறி தனது அறையை அடைந்தான். அங்குதான் முழு விவரங்களை எல்லன் சொன்னான். “சக்கரவர்த்தியின் அரண்
மனைக்கு உடனடியாக வரும் படியாக இந்தளதேவர் உத்தரவிட்டிருக்கிறார்” என்று.
“மருதி?” என்று வினவினான் படைத்தலைவன்.
“இந்தளதேவரே அழைத்துச் சென்றுவிட்டார் என்றான் எல்லன்.
இதனால் வியப்படைந்த உபேந்திரன், “ இந்தள தேவர் இங்கு எப்பொழுது வந்தார்?” என்று கேட்டான்.
“விடிவதற்கு ஒரு நாழிகைக்கு முன்பு. பூர்ணமாக படைத்தலைவர் உடையை அணிந்திருந்தார். மருதியை உடனடியாக எழுப்பி நீராடச் சொல்லி ராஜதரிசனத்துக்கான உடைகளைப் புனையச் சொல்லி அழைத்துச் சென்றார்.
போகும்போது தான் உங்களை வரச்சொல்லி உத்தரவிட்டுப் போனார்” என்றான் எல்லன்.
“வேறு ஏதாவது சொன்னாரா?” என்று சந்தேகத்துடன் கேட்டான் படைத்தலைவன்.
“சொன்னார்.”
“என்ன சொன்னார்?”
“நாகர்களின் இயற்கை உடையில் வரச் சொன்னார்.”
இதை எல்லன் சொன்னதும் தனது நாகையின் துறைமுகப் பதவி போய்விட்டதை உணர்ந்து கொண்டான். வேறு ஏதும் பேசாமல் தனது இயற்கை உடையணிந்து இடையில் வாளைக்கட்ட எல்லனை வாளைக் கொண்டு வரும்படி
உத்தரவிட்டான்.
எல்லன் இன்னொரு வெடியை வீசினான், “வாளில்லை எசமான்” என்று.
“எங்கே?” திகைப்புடன் வினவினான் உபேந்திரன்.
“இந்தளதேவர் எடுத்துச் சென்றுவிட்டார்’ என்ற எல்லன் தலைகவிழ்ந்து நின்றான்.
நாகையின் நாகர் தலைவன் சில விநாடிகள் தான் சிந்தித்தான். “சரி; நான் அரண்மனை போய் வருகிறேன். எல்லா நான் திரும்பும் மட்டும் இங்கேயே இரு. திரும்பாவிட்டால் ஊர் போய்ச் சேர்” என்று கூறி, “நீ இத்தனை நாள் என்னிடம் பணி
செய்ததற்கு இதை வைத்துக்கொள் என் நினைவாக” என்று கூறி தனது கழுத்திலிருந்த சங்குடன் கூடிய பொன் சங்கிலியை எடுத்து அவன் கழுத்தில் போட்டான். பிறகு வீடுவிடு என்று படிகளில் இறங்கிச் சென்றான்.
அங்கு நடையைத் தொடங்கியவன் மருவூர்ப்பாக்கத்தின் மத்தியிலிருந்த அரசர் அரண்மனைக்கு வந்து சேர்ந்தான். அதன் வழியையும் வாயிலையும் ஈட்டிகளைத் தாங்கிய புரவி வீரர் காத்து நின்றனர். அரண்மனை உப்பரிகையின்
இரண்டு அடுக்குகளின் தாழ்வரைகளிலும் ஆயுதபாணிகளான வீரர்கள் உலவிக் கொண்டிருந்தனர். அவர்கள் உலாவிக்கொண்டிருந்தும் அரச மாளிகை மாடத்தின் பொந்து களிலிருந்து கிளம்பிய வெண்புறாக்கள் அவ்வப்பொழுது
சிறகடித்துப் பறந்து கொண்டிருந்தன. சில சமயங்களில் உப்பரிகை காவல் வீரர்களின் மகுடங்களிலும் உட்கார்ந்து இராஜேந்திர சோழ தேவர் ஆட்சியில் வீரத்தைவிட சமாதானத்துக்கு மதிப்பு அதிகமென்பதை நிரூபித்தன.
சாதாரண சமயங்களில் இயற்கையின் இந்த அழகுகளைப் பருகும் உபேந்திரன் அன்று எதையும் கவனியாமல் அரண்மனை வாயிலுக்குள் நுழைந்தான். அவனை யாரும் தடை செய்யவில்லை. ஆனால் எந்த வீரனும் அவனுக்குத்
தலைவணங்கவும் இல்லை. இதை யெல்லாம் கவனித்துக் கொதிக்கும் உள்ளத்துடன் உள்ளே நுழைந்த உபேந்திரனை இரு வீரர்கள் சபா மண்டபத்தின் முகப்பு அறைக்குள் செல்லும்படி சைகை செய்தனர். அங்கு உட்கார்ந்திருந்த ஒரு
தர்மாதிகாரி, “உபேந்திரா! இங்கேயே உட்காருங்ள். சக்கரவர்த்தி சபா மண்டபம் வந்ததும் நீங்கள் உள்ளே செல்லலாம்” என்று ஓர் ஆசனத்தைச் சுட்டிக் காட்டினார். அங்கு சுமார் அரை நாழிகை நேரமே உட்கார்ந்திருந்தாலும் அது அரை
வருஷமாகத் தெரிந்தது உபேந்திரனுக்கு. –
அரை நாழிகைக்குப் பிறகு சபா மண்டபத்தில் சுகமான வீணையொலி ஒன்று கிளம்பியது. “இராஜேந்திர சோழ தேவர் வருகிறார்! உலகமாளும் சக்கரவர்த்தி வருகிறார்! ஜெய விஜயீ பவ” என்ற கட்டியக்காரன் குரல் எழுந்தது. பிறகு
மாதர்கள் நடந்து வரும் சிலம் பொலிகள் கேட்டன. மன்னனின் பாதங்கள் நடக்க பாவாடை விரிக்கப்படுகிறது என்பதை உபேந்திரன் புரிந்து கொண்டான். சில விநாடிகளுக்கெல்லாம் சபா மண்டபத்தில் அமைதி குடிகொண்டது.
உபேந்திரனுடன் இருந்த தர்மாதிகாரி, “இனி நீங்கள் உள்ளே போகலாம்” என்று அனுமதி கொடுக்க சபா மண்டபத்துக்குள் உபேந்திரன் நுழைந்தான். தூரத்திலிருந்தே சக்கரவர்த்திக்குத் தலை வணங்கிவிட்டுச் சற்று எட்ட இருந்த
ஆசனத்தில் அமர்ந்தான்.
சக்கரவர்த்தியின் சிம்மாசனத்திற்கு அடுத்த கீழ்ப்படியில் ஒருபுறம் சாவகத் தூதரும் கிரீடமணிந்த நாகதேவியும், இன்னொரு புறம் இந்தளதேவரும் மருதியும் அமர்ந்திருந்தார்கள்.
அப்பொழுது கட்டு ஓலைகளுடனும் எழுத்துச் சீலைகளுடனும் உள்ளே நுழைந்த தர்மாதிகாரி இராஜேந்திர சோழ தேவருக்குப் பின்னால் வந்து அவர் காதில் ஏதோ ஓத, மன்னர் தலையை அசைத்தார். உடனே சற்று மேடைக்கு முன்பாக
வந்த தர்மாதிகாரி மேடையிலிருந்தபடியே, “ இராஜேந்திர சோழ தேவர் பல நாடுகளை ஒரு குடைக்கீழ் ஆளும் மகாவீரர், இன்று வழக்குகளை விசாரிப்பார். யாருக்காவது குறைகள் இருந்தால் எழுந்து முன்னே வரலாம்!” என்று அறிவித்தார்
பலத்த குரலில். கட்டியக்காரனும் “மனுச்செய்து கொள்வோர் வரலாம்” என்று மும்முறை
ஆனால் யாரும் வரவில்லை. மன்னர் திரும்பி தர்மாதிகாரியை ஏதோ கேட்டார். தர்மாதிகாரி, “வழக்கு ஏதுமில்லாததால் அடுத்து தர்ம காரியங்களை மன்னர் கவனிப்பார்” என்று கூற இந்தள தேவர் மெல்ல எழுந்து, “மன்னிக்க வேண்டும்
ஒரு வழக்கு இருக்கிறது” என்றார்.
“யார்மீது? இதை ஏன் முதலில் சொல்லவில்லை?” என்று தர்மாதிகாரி கேட்டார்.
“இதைக் கடைசியில் விசாரிப்பதாக மன்னர் உத்தரவு. அதனால் நானாக வழக்கை எழுப்பவில்லை” என்று கூறி இந்தளதேவர் தலை வணங்கினார் மன்னருக்கும் தர்மாதிகாரிக்கும். தர்மாதிகாரி மன்னரை நோக்கினார். மன்னர்
தலையசைக்க “சரி சொல்லுங்கள் வழக்கை” என்று உத்தர விட்ட தர்மாதிகாரி மும்முறை நீதி தண்டத்தை மேடையில் தட்டினார். இந்தள தேவர் சர்வ சாதாரணமாக சபையை நோக்கினார்.”புகார் சோழ நாட்டின் சங்ககால பெருமையின்
சின்னம். அதை ஒரு கருவியாக உபயோகப்படுத்த முயலும் யாருக்கும் கடும் தண்டனை சொல்லப்பட் டிருக்கிறது. அதாவது நாளங்காடி சதுக்க பூதத்துக்குப் பலியாக்கப்படுவார்கள்” என்று சுட்டிக் காட்டினார்…
சபையில் பயங்கர அமைதி குடிகொண்டது. அப்பொழுது இந்தளதேவர் அந்த அமைதியின் பயங்கரத்தை அதிகப்படுத்துபவர் போல், “அந்தக் குற்றச்சாட்டு முதலில் சுத்ததத்தரைச் சேரும், சுத்ததத்தர் முன்னால் வரட்டும்” என்றார்
மெதுவாக. ஆனால் அவருடைய மெதுவான ஒலி மண்டபம் முழுவதும் எதிரொலி செய்தது.
சபையின் முகப்பில் இரண்டு மூன்று துறவிகளோடு துறவியாக உட்கார்ந்திருந்த சுத்த தத்தர் எழுந்து நின்றார் தமது ஆசனத்திலிருந்து. பிறகு நடந்து மன்னர் முன்பாக அவை நடுவே நின்றார்.
இந்தளதேவரின் குரல் மீண்டும் ஒலித்தது. “சுத்ததத்தரே! நீர் இந்த நாட்டின் குடிமகனாயிருந்தும் வெளி நாட்டு விவகாரங்களில் தலையிட்டிருக்கிறீர். உமது வேஷத்துக்கும் தகுதியற்றவராக நாகதேவியுடன் சேர்ந்து நாகையைக் கைப்பற்ற
சூழ்ச்சி செய்திருக்கிறீர். அதாவது சோழ நாட்டின் நிலத்தை வேறு நாட்டுக்கு விலை பேசியிருக்கிறீர். இதற்கு என்ன சமா தானம் சொல்கிறீர்?” என்று வினவினார் இந்தள