Nagadevi Ch 7 | Nagadevi Sandilyan | TamilNovel.in
நாகதேவி – சாண்டில்யன்
அத்தியாயம் – 7. நாகதேவியின் திட்டமும் திண்டாட்டமும்
Nagadevi Ch 7 | Nagadevi Sandilyan | TamilNovel.in
திட்டங்களை வகுப்பது சுலபம். ஆனால் நமது இஷ்டப்படி அவை நிறைவேறுகின்றனவா அல்லது சிக்கலிலும் குழப்பத்திலும் கொண்டுபோய் விடுகின்றனவா என்பது மட்டும் நமது கையில் இல்லை. மனித அறிவையும் மீறிய ஏதோ
ஒரு சக்தி சகல திட்டங்களையும் இயக்குகிறது. நமது எதிர்பார்ப்பை அது உடைக்கிறது. எதிர்பாராத நிகழ்ச்சிகளை விளைவித்துத் திண்டாடவும் வைக்கிறது. அத்தகைய ஒரு திண்டாட்டத்தில் மாட்டிக் கொண்டாள் நாகதேவி நாகலிங்கக்
காட்டின் குடிசையில். மருதிக்கு ஒரு மாமன் இருப்பானென்றோ அங்கு அவன் திடீரென வந்து முளைப்பானென்றோ அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. மருதியின் தாய் மாமன் பெண்ணுரிமை கொண்டாட அவள் கையை இறுகப்
பிடித்தபோது என்ன செய்வதென்று அறியாமல் திண்டாடினாள் நாகர்கள் தலைவி.
குருநாதரின் விடுதியில் மருதியைக் கண்டதுமே அவள் போட்ட திட்டம் வேறு. நாகதேவியை விஷமென நினைத்த உபேந்திரன் மருதியை அமுதமென நினைக்கலாம் என்று கணக்குப் போட்டாள் நாகதேவி. அப்படி உபேந்திரன் தனது
காதலில் சிக்கினால் அவனைக் கொண்டு தான் வந்த காரியத்தைச் சாதிக்கலாம் என்பதும் அவள் யோசனை. அந்த யோசனை யைச் சாதிக்கவும் அவள் காலம் தாழ்த்தவில்லை. தாழைமடலின் சுகந்தத்தால் மருதியை மயக்கமடையச் செய்த
சாவகத் தீவின் சதிகாரி அவளைத் தூக்கிக் கொண்டு குருநாதரின் யோக அறைக்குச் சென்று அங்கு கட்டிலில் மருதியைக் கிடத்திக் குருநாதரை வெளியே அனுப்பியதும் வெகு விரைவில் தனது அலுவலை முடித்துக் கொண்டாள்.
மருதியின் ஆடையை அவிழ்த்து அதைத் தான் புனைந்து மருதிக்குத் தனது ஆடையை அணிவித்தாள். அவள் தலையில் கோணல் வகிடை நடு வகிடாக எடுத்து முத்தலை நாகாபரணத்தையும் அவளுக்கு அணிவித்தாள். அதற்கு முன்பு
அந்த நாகாபரணத்தால் மருதியின் கையில் முத்தலை நாகச் சின்னத்தையும் பொறித்தாள். பிறகு விலகி நின்று மருதியைக் கவனித்தாள்.
“யாரும் அடையாளம் கண்டுபிடிக்க முடியாது. இவள் நாகதேவிதான்” என்று குதூகலித்த நாகதேவி தனது மரக்கலத்தில் வந்த மாலுமிகளை நள்ளிரவில் வந்து தேவியைத் தூக்கிச் செல்லும்படி பணித்து விட்டு, மருதியின் குடிசையைப்
பற்றிக் குரு நாதரிடம் தகவல் கேட்டு அங்கு விரைந்தாள். அதுவரை சகலமும் அவள் திட்டப்படி தான் நடந்தது. ஆனால் குடிசையில் ஒரு தாய்மாமன் முளைத்து அவள் கையைப் பிடித்து இழுத்தபோது தான் தனது திட்டம் சிறிது
மாறிவிட்டதை உணர்ந்தாள் நாகதேவி.
மருதியின் தாய்மாமன் கையைப் பிடித்ததும் ஏது செய்வதென்று ஒரு விநாடி திகைத்த நாகதேவி, “டேய் விடு கையை” என்று சீறினாள். பழைய நாக குணம் அவள் விழியில் விஷத்தைத் தோற்றுவித்தது. முகத்தின் அழகை குரூரம் சற்று
குறைத்தது. ஆனால் அதையெல்லாம் கவனிக்க மாமனுக்கு அவகாசமில்லாததால் அவன் கையைப் பிடித்து இழுத்ததோடு நில்லாமல் அவளை இறுகத் தழுவவும் முற்பட்டான். ஆனால் அடுத்த விநாடி அவன் கையில் சுர்ரென்று ஏதோ
குத்தியது. அவ்வளவுதான், குடிசைத் தரையில் குப்புற விழுந்தான் தாய்மாமன். இடையில் எப்பொழுதும் தற்காப்புக்காக மறைத்து வைத்திருந்த ஒரு தலை நாகா பரணத்தை, அதாவது விஷக்குப்பியை மறுபடியும் மடியில் சொருகிக்
கொண்ட நாகதேவி குடிசையை விட்டு வேகமாக நாகையின் கடலாடு துறையை நோக்கிச் சென்றாள். அங்கு சேலையை வரிந்து கட்டிக் கொண்டு நீரில் குதித்து நீந்தினாள்.
சுற்றிலும் ஆங்காங்கு நாவாய்கள் நங்கூரம் பாய்ச்சி நின்று கொண்டிருந்தன. கடலில் பெண்கள் ஒருபுறத்திலும் ஆண்கள் ஒரு புறத்திலும் நீராடிக் கொண்டிருந்தார்கள். பரதவர் சிலர் படகுகளைச் சற்று தூரம் செலுத்தி வலைவீசி மீன்
பிடித்துக் கொண்டிருந்தார்கள். நாகையின் துறைமுகத்தில் கதிரவன் ஒளி வீசிக் கொண்டிருந்ததால், கடல் நீர் பல கண்ணாடிகளைப் போல் பளபளத்துக் கொண்டிருந்தது. அன்று கடலலை அதிகமில்லாத காரணத்தால், அந்த நீரில்
துளைந்து விளையாடிய நாகதேவியை மருதியென நினைத்த பெண்களில் சிலர், “மருதி! நீருக்குள் நீந்து வாயே வேகமாக இன்று ஏன் எங்களைப்போல் சாதாரண நீச்சல் போடுகிறாய்?” என்று வினவினார்கள். “ஏதோ நீ நீந்திச் சென்று
அதோ இருக்கும் சாவக நாட்டுக் கப்பலில் ஏறு பார்ப்போம்” என்று இன்னும் சிலர் கேட்டார்கள்.
இந்தக் கேள்விகள் நாகதேவியைப் பெரிதும் பாதித்தாலும் அவள் அவற்றைச் சட்டை செய்யாமல் நீந்தினாள். நீச்சலை முடித்துக்கொண்டு கரை ஏறி எதிரேயிருந்த நாகலிங்கக் காட்டு முனைப்பிலிருந்து மேட்டுக்கு வந்தாள். அங்கு
உட்கார்ந்திருந்தான் உபேந்திரன். அவனைக் கண்டதும் அதிக வெட்கத்தைக் காட்டவில்லை நாகதேவி. தனது உடலில் ஆடை ஆங்காங்கு ஒட்டி அழகுகளைப் பிரித்தும், எழுச்சி செய்தும் காட்டிக் கொண்டிருந்த இடங்களை மறைக்கும்
பாவனையில் கைகளை மார்பில் கட்டிக் கொண்டு ஓடினாள் மரங்களின் மறைவுக்கு. அங்கேயே சேலையின் ஒரு புறத்தைப் பிழிந்து கட்டிக் கொண்டு இன்னொரு புறத்தை உலர்த்தினாள். பிறகு தலையைத் துவட்டி முடிந்து கொண்டு
நாகலிங்கப்பூ ஒன்றையும் பறித்துத் தலையில் சூட்டிக் கொண்டாள். பிறகு மருதியின் குடிசையை நோக்கிச் சென்றாள். குடிசைக்குள் நுழைந்ததும் பிரமித்து நின்றாள் ஒரு விநாடி. அங்கு மயக்கமாய் அவள் விட்டுப்போன மாமன்
மறைந்து விட்டான்.
“அவன் எப்படி மறைந்திருக்க முடியும்? அவனை யார் வந்து தூக்கிப் போயிருப்பார்கள்?” என்று தன்னைத்தானே வினவிக் கொண்டாள் நாகதேவி. விடை காண முடியாததால் அதைப்பற்றி நினைப்பதை விட்டு தொலையட்டும்
அவன், எப்படியாவது” என்று சற்று இறைந்தே சொல்லிவிட்டு மருதியின் குடிசை மூலையில் கொடியில் இருந்த சேலைகளில் ஒன்றை எடுத்துக் கட்டிக் கொண்டு தனது ஈர உடையை கொடியில் உலர்த்தினாள். சுற்றும் முற்றும்
குடிசையை நோக்கினாள் இரண்டாம் முறையாக.
குடிசையில் மாறுதல்கள் சில இருந்தன. அங்குள்ள சிறு அடுப்பு மூட்டி அணைக்கப்பட்டிருந்தது. அதன் மீது ஒரு கலயம் மூடி வைக்கப்பட்டிருந்தது. முடியைத் திறந்து பார்த்தாள் நாகதேவி. கலயத்தில் சூடாக பால் இருந்தது. அதைக்
குடிக்கலாமென்று எடுத்துக் கலயத்தை வாயை நோக்கிக் கொண்டுபோன நாகதேவி ஏதோ சந்தேகப்பட்டு சட்டென்று நிறுத்திக் கொண்டாள் பால் அருந்துவதை. “ அஞ்ச வேண்டாம். அதில் விஷமில்லை.அருந்தலாம்” என்று குரல்
கேட்டுச் சரேலெனத் திரும்பிய நாகதேவி குடிசையின் வாயிலில் உபேந்திரன் நிற்பதைக் கண்டாள்.
அவன் குடிசையின் மேல் பகுதியைப் பிடித்துக் கொண்டு நின்றதே அழ காகத் தெரிந்தது நாகதேவிக்கு. அவன் முகத்திலிருந்த புன்முறுவல் அவ ளுக்குப் பெரும் இன்பத்தை அளித்தது. தன்னை அவன் மருதியென்று
நினைத்திருக்கிறானென்று அவள் நினைத்தாள். ஆனால் அந்த நினைப்பிலும் சந்தேகமிருந்தது. பாலைக் குடிக்கலாம், விஷமில்லை என்று சுட்டிக் காட்டினானே அதற்கு என்ன பொருள் என்று நினைத்துப் பார்த்தாள். தன்னை
ஒருவேளை அடையாளம் கண்டுகொண்டு விட்டானோ என்ற அச்சமும் அவள் இதயத்தில் எழுந்து கண்களிலும் பிரகாசித்தது.
அப்பொழுது அவன் சொன்னான், “மருதி! பயப்படாதே! உன்னை நான் நாகதேவி என்று நினைத்துத் தான் மூர்க்கத்தனமாக நடந்து கொண்டேன். மன்னித்து விடு” என்று.
இதைக் கேட்டதும் நாகதேவி பெரும் பூரிப்படைந்தாள். உபேந்திரன் தன்னை மருதியென்றே நினைக்கிறான் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி கொண்டாள். ஆகவே தலை குனிந்து கொண்டு மெதுவாகப் பதில் சொன்னாள். “நீங்கள் நடந்து
கொண்ட முறை…” என்று வாசகத்தை முடிக்காமல் இன்பநகை கொட்டினாள்.
“தவறுதான் மருதி. ஆனால் வேண்டுமென்று செய்யப்பட்ட தவறல்ல, உன்னைப்போல் வேறொருத்தியைப் பார்த்தேன். நீதான் அவளென்று நினைத்தேன். ஆத்திரத்தில் அப்படிச் செய்துவிட்டேன்” என்று விளக்கம் சொன்னான்
உபேந்திரன்.
“அதற்காக ஒரு பெண்ணைத் தூக்கிக் கட்டிலில் போட்டு…”
“அதற்காகப் போடவில்லை…”
“எதற்காகப் போடவில்லை?”
“மருதி! என்னை அதிகமாக பரீட்சை செய்யாதே! உன்னை எந்தவிதத்திலும் துன்புறுத்தும் நோக்கம் எனக்கில்லை. உன்னை நான் பார்த்ததுகூடக் கிடையாது.”
போலி மருதி நகைத்தாள் இன்பமாகவே. “ நாகையின் நாகர்கள் தலைவரே! சோழரிடம் சேவை செய்தும் உமக்கு நாகர்களின் முரட்டுத்தனம் போகவில்லை” என்றாள் நாகதேவி “ஏன் வாயிற்படி யிலேயே நிற்கிறீர்கள்? வாருங்கள் உள்ளே’
என்றும் அழைத்தாள் நாகதேவி.
“இல்லை மருதி நான் வருவதற்கில்லை” என்று சொன்னான் உபேந்திரன்.
“ஏன்?” என்று கேட்டாள் நாகதேவி.
“நான் போக வேண்டும். தவிர… இந்த ஊர் பொல்லாதது. உனக்கும் எனக்கும் முடிச்சு போட்டுவிடும்” என்று சுட்டிக் காட்டினான் உபேந்திரன்.
“அதற்கு நான் அஞ்சவில்லை” என்றாள் நாகதேவி.
“நான் அஞ்சுகிறேன் மருதி. தவிர சற்று முன்பு இங்கு சிடந்தானே ஒரு மனிதன் அவன் உன் தாய் மாமனாமே” என்று வினவினான் உபேந்திரன்.
இதைக் கேட்டதும் தூக்கிவாரிப் போட்டது நாக தேவிக்கு. “இங்கு… மனிதனா… தாய் மாமனா…” என்று உளறியது போல் பாசாங்கு செய்தாள் நாகதேவி.
“அப்படித்தான் நாகர் குடிசைகளில் பேசிக் கொள்கிறார்கள். நல்ல வேளை சமயத்தில் நான் வந்தேன். அவன் பிழைத்தான்” என்று விளக்கினான் உபேந்திரன்.
“அவன் ஏன் இங்கு கிடந்தான்?” என்று வினவிய நாகதேவியின் குரலில் அச்சமிருந்தது.
“கையில் பாம்பு கடித்துவிட்டது. நல்லவேளை விஷத்தை நான் எடுத்துவிட்டேன்” என்றான் உபேந்திரன்.
நாகதேவி பிரமிப்பதுபோல் பாசாங்கு செய்தாள். ‘ஐயோ” எனறு திகைப்புடன் சொல்லையும் உதிர்த்தாள்.
“இப்பொழுது உயிருக்கு ஆபத்தில்லை. எப்படியும் இன்று மாலைக்குள் எழுந்து நடுமாடுவான். நீ பார்க்க வேண்டுமானால் அவனிடம் உன்னை அழைத்துப் போகிறேன்” என்றான் உபேந்திரன்.
நாகதேவியின் முகத்தில் கோபம் துளிர்த்தது. நான் யாரையும் பார்க்க வேண்டியதில்லை. எனக்கு எந்தத் தாய் மாமனையும் தெரியாது” என்ற நாகதேவி கையிலிருந்த கலயத்திலிருந்த பாலை இரண்டு வாய் குடித்து கலயத்தை பழையபடி
அடுப்பில் வைத்து மூடினாள்.
அதனால் சிறிது சுய நிலையடைந்த நாகதேவி குடிசையின் தரையில் உட்கார்ந்து கையில் முகத்தைப் புதைத்துக் கொண்டாள். அந்த நிலையில் உபேந்திரன் வருவான், தனது குழல்களைக் கோதுவான், தலையிலிருந்த பூவை எடுத்து
முகர வருவான் என்று ஏதேதோ மனோராஜ்யம் செய்து கொண்டாள் நாகதேவி. ஆனால் அவள் நினைத்தபடி எதுவும் நடக்கவில்லை.
அவள் தலையை நிமிர்ந்து பார்த்தபோது உபேந்திரள் வாயிலில் இல்லை. வாயிலை நோக்கி ஓடினாள் நாகதேவி. நாகலிங்கக் காட்டில் சற்று எட்ட நடந்து சென்று கொண்டிருந்தான் உபேந்திரன். நாகதேவி தூரத்தில் அவனைத்
தொடர்ந்து சென்றாள்.
அவன் நாகலிங்கக் காட்டைத் தாண்டி சூடாமணி விஹாரம் கட்டிக் கொண்டிருந்த இடத்துக்கு வந்தான். அந்த விஹாரத்தின் நடுவில் பூசாமல் விடப்பட்டிருந்த மண் தரையை நீண்ட நேரம் கவனித்துக் கொண்டிருந் தான். பிறகு
புன்முறுவல் கொண்டு குருநாதர் விடுதியை நோக்கி நடந்தான்.
நாகதேவியின் மார்பு திக்கென்று அடித்துக் கொண்டது. உபேந்திரன் ஏதோ சந்தேகப்படுகிறான் என்பது மாத்திரம் திட்டமாகத் தெரிந்தது அவளுக்கு. அடுத்து அவன் குருநாதர் இல்லத்தை நோக்கி விரைந்தது இன்னும் அதிக
சந்தேகத்தைக் கிளறவே அவனை மேலும் தொடர்ந்து சென்றாள். குருநாதர் இல்லத்தில் நாகதேவியின் அச்சத்தை உச்சத்துக்குக் கொண்டு போகும் நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்தன. குரு நாதரின் யோக அறையின் சாளரத்தருகில்
மறைந்து நின்ற நாகதேவி பிரமிக்கும் பல நிகழ்ச்சிகளைக் கண்டாள்.
மருதி மயக்கமாய்க் கிடந்த கட்டிலுக்கருகே நின்று அவளை உற்று நோக்கிக் கொண்டிருந்தான் உபேந்திரன், எதிரே குருநாதர் சங்கடத்துடன் நின்றிருந்தார். அவரை நோக்கி உபேந்திரன் கேட்டான், “குருநாதரே! யாரையும் மயக்கவல்ல
நாகதேவியே மயங்கிக்கிடப்பது விந்தையல்லவா?” என்று.
குருநாதர் பதில் சொல்லவில்லை முதலில். பிறகு உபேந்திரா! நீ சொல்வது விளங்கவில்லை” என்று கூறினார் தட்டுத்தடுமாறி.
“இதில் விளங்காதற்கு என்ன இருக்கிறது? இரட்டைப் பிறவிகள் சிருஷ்டியில் புதிதா என்ன?” என்று இன்னொரு கேள்வியையும் தொடுத்தான்.