Home Kalki Ponniyin Selvan Part 3 Ch 10

Ponniyin Selvan Part 3 Ch 10

97
0
Ponniyin Selvan Part 3 Ch 10 -Kalki -TamilNovel.in Ponniyin Selvan is one of the historical fiction novel in tamil history. Read Download Ponniyin Selvan Free Ponniyin Selvan Part 3, Ponniyin Selvan part 3 Ch 10, Ponniyin Selvan Kalki, Ponniyin Selvan,ps1,ps2, Read Ponniyin Selvan book, Download Ponniyin Selvan pdf
பொன்னியின் செல்வன் மூன்றாம் பாகம்: கொலை வாள் அத்தியாயம் 10: சூடாமணி விஹாரம்

Ponniyin Selvan Part 3 Ch 10

பொன்னியின் செல்வன் மூன்றாம் பாகம்: கொலை வாள்

அத்தியாயம் 10: சூடாமணி விஹாரம்

Ponniyin Selvan Part 3 Ch 10

பூம்புகார் என்னும் காவிரிப் பட்டினத்தைக் கடல் கொள்ளை கொண்டு போய்விட்டது அல்லவா? அதற்குப் பிறகு சோழ வளநாட்டின் முக்கியத் துறைமுகப்பட்டினம் என்ற அந்தஸ்தை நாகைப்பட்டினம் நாளடைவில் அடைந்தது. பொன்னி நதி பாய்ந்த இயற்கை வளம் செறிந்திருந்த சோழ நாட்டுடன் வர்த்தகத் தொடர்பு கொள்ள எத்தனையோ அயல்நாட்டார் ஆவல் கொண்டிருந்தனர். பெரிய பெரிய மரக்கலங்களிலே வர்த்தகப் பண்டங்கள் வந்து இறங்கியபடி இருந்தன. முத்தும், மணியும், வைரமும், வாசனைத் திரவியங்களும் கப்பல்களில் வந்து இறங்கியதோடு அரபு நாட்டுக் குதிரைகளும் விற்பனைக்காக வந்து இறங்கின.

ஸ்ரீ சுந்தர மூர்த்தி நாயனாரின் காலத்தில் நாகைப்பட்டினம் சிறந்த மணிமாட நகரமாயிருந்தது. அந்த நகரத்தைக் கண்ட நம்பி ஆரூரர்,

“காண்பினிய மணிமாடம் நிறைந்த நெடு வீதிக்
கடல் நாகைக் காரோணம் மேவியிருந்தீரே!”

என்று வர்ணித்தார். கடல் நாகைக் காரோணத்தில் மேவியிருந்த காயாரோகணப் பெருமானிடம் ஸ்ரீ சுந்தர மூர்த்தி நாயனார் என்னென்ன பொருள்கள் வேண்டுமென்று கேட்டார் தெரியுமா? மற்ற ஊர்களிலே போலப் பொன்னும், மணியும், ஆடை ஆபரணங்களும் கேட்டதோடு, நாகைப்பட்டினத்திலே ஓர் உயர்ந்த சாதிக் குதிரையும் கேட்டுப் பெற்றுக் கொண்டார்.

“நம்பிதாமும் அந்நாட் போய்நாகைக் காரோணம்பாடி
அம்பொன்மணிப்பூண் நவமணிகள் ஆடைசாந்தம் அடற்பரிமா”

ஆகியவை பெற்றுக்கொண்டு திருவாரூர் திரும்பிச் சென்றதாகப் பெரியபுராணம் கூறுகிறது.

நாகைப்பட்டினத் துறைமுகத்தில் வந்து இறங்கிய அரபு நாட்டுக் குதிரைகளைப் பார்த்ததும் நாயனாருக்கும் குதிரை ஏறிச் சவாரி செய்யவேண்டும் என்று தோன்றி விட்டது போலும்!

நாகைப்பட்டினத்தைப் பற்றிப் புராணம் வர்ணிப்பது ஒருபுறமிருக்க, சரித்திர பூர்வமான கல்வெட்டுக்களும் செப்பேடுகளும் அந்நகரைப் பற்றிச் சொல்லியிருக்கின்றன.

“பல கோவில்களும், சத்திரங்களும், நீர் நிலைகளும், சோலைகளும், மாட மாளிகைகளும் நிறைந்த வீதிகளையுடைய நாகைப்பட்டினம்” என்று ஆனைமங்கலச் செப்பேடுகள் அந்நகரை வர்ணிக்கின்றன.

அதே ஆனைமங்கலச் செப்பேடுகள், அந்நாளில் நாகைப்பட்டினத்தில் புகழ்பெற்று விளங்கிய சூடாமணி விஹாரம் என்னும் பௌத்த ஆலயத்தைப் பற்றியும், அதன் வரலாற்றையும் கூறுகின்றன.

மலாய் நாடு என்று இந்நாளில் நாம் குறிப்பிடும் தீபகற்பம் அக்காலத்தில் ஸ்ரீ விஜய நாடு என்னும் பெயரால் பிரசித்தி பெற்றிருந்தது. அந்த நாட்டில் ஒரு முக்கிய நகரம் கடாரம். அந்த மாநகரைத் தலைநகராக வைத்துக்கொண்டு நாலா திசையிலும் பரவியிருந்த மாபெரும் ஸ்ரீ விஜய சாம்ராஜ்யத்தை நெடுங்காலம் ஆண்டு வந்தவர்கள் சைலேந்திர வம்சத்தார். அந்த வம்சத்தில் மகரத்துவஜன் சூடாமணிவர்மன் என்னும் மன்னன் மிகவும் கீர்த்தி பெற்று விளங்கினான். அவ்வரசன் “இராஜ தந்திரங்களில் நிபுணன்; ஞானத்தில் ஸுரகுருவான பிரகஸ்பதியை ஒத்தவன்; அறிவாளிகளான தாமரை மலர்களுக்குச் சூரியன் போன்றவன்; இரவலருக்குக் கற்பகத் தருவாய் விளங்கினான்” என்று ஆணை மங்கலச் செப்பேடுகள் வியந்து புகழ்ந்து கூறுகின்றன.

அத்தகைய பேரரசனின் மகன் மாறவிஜயோத்துங்க வர்மன் என்பவன் தன் தந்தையின் திருநாமம் நின்று நிலவும் படியாக “மேரு மலையை யொத்த சூடாமணி விஹாரத்தை நாகைப்பட்டினத்தில் கட்டினான்” என்று அச்செப்பேடுகள் கூறுகின்றன.

கடாரத்து அரசனாகிய மற விஜயோத்துங்கன் நாகைப்பட்டினத்துக்கு வந்து புத்த விஹாரத்தைக் கட்டுவானேன் என்று வாசகர்கள் கேட்கலாம். சோழ வளநாட்டுடன் நீடித்த வர்த்தகத் தொடர்பு கொண்டிருந்த அயல் நாடுகளில் ஒன்று ஸ்ரீ விஜய நாடு. அந்நாட்டுப் பிரஜைகள் பலர் நாகைப்பட்டினத்துக்கு வந்து நிரந்தரமாகவே குடியேறி இருந்தனர். வேறு பலர் அடிக்கடி வந்து திரும்பினர். கடாரத்து அரசனும், அவனுடைய குடிகளும் புத்த மதத்தைச் சார்ந்தவர்கள். அவர்கள் புத்தரை வழிபடுவதற்கு வசதியாயிருக்கட்டும் என்று தான் அம்மன்னன் நாகைப்பட்டினத்தில் சூடாமணி விஹாரத்தைக் கட்டினான். புத்த மதத்தின் தாயகம் பாரத தேசமாயிற்றே என்ற காரணமும் அவன் மனத்தில் இருந்திருக்கலாம். தமிழகத்து மன்னர்கள் எக்காலத்திலும் சமய சமரசத்தில் நம்பிக்கை கொண்டவர்கள், ஆகையால் அவர்கள் நாகைப்பட்டினத்தில் சூடாமணி விஹாரம் கட்டுவதற்கு அநுமதி கொடுத்தார்கள். அநுமதி கொடுத்தது மட்டுமா? அவ்வப்போது அந்தப் புத்தர் கோயிலுக்கு நிவந்தங்களும், இறையிலி நிலங்களும் அளித்து உதவினார்கள். (இந்தக் கதை நடந்த காலத்திற்குப் பிற்காலத்தில் இராஜ ராஜ சோழன் நாகைப்பட்டினம் சூடாமணி விஹாரத்துக்கு ஆனைமங்கலம் கிராமத்தையும் அதைச் சார்ந்த பல ஊர்களையும் முற்றூட்டாக அதாவது எந்தவிதமான வரியும் விதிக்கப்படாத இறையிலி நிலமாகத் தானம் அளித்தான்; இந்த நில தானத்தை இராஜராஜனுடைய குமாரன், சரித்திரப் புகழ் பெற்ற இராஜேந்திர சோழன் – செப்பேடுகளில் எழுதுவித்து உறுதிப்படுத்தினான். இவை தாம் ஆனைமங்கலச் செப்பேடுகள் என்று கூறப்படுகின்றன. மொத்தம் இருபத்தொரு செப்பேட்டு இதழ்கள். ஒவ்வொன்றும் 14 அங்குல நீளமும் 5 அங்குல அகலமும் உள்ளனவாய் ஒரு பெரிய செப்பு வளையத்தில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இச்செப்பேடுகள் சமீப காலத்தில் கப்பல் ஏறிக் கடல் கடந்து ஐரோப்பாவில் ஹாலந்து தேசத்தில் உள்ள லெயிடன் என்னும் நகரத்தின் காட்சி சாலையில் வைக்கப்பட்டிருக்கின்றன. ஆகையினால் இச்செப்பேடுகளை ‘லெயிடன் சாஸனம்’ என்றும் சில சரித்திர ஆராய்ச்சியாளர் குறிப்பிடுவதுண்டு.)

விஜயாலய சோழரின் காலத்திலிருந்து சோழ மன்னர்கள் சிவபக்தியில் திளைத்தவர்களாயிருந்தனர். ஆதித்த சோழரும், பராந்தக சோழரும், கண்டராதித்தரும் சைவப் பற்று மிக்கவர்கள். பற்பல சிவலாயத் திருப்பணிகள் செய்வித்தார்கள். எனினும் அவர்கள் பிற மதங்களைத் துவேஷிக்கவில்லை. தங்கள் இராஜ்யத்தில் வாழும் பிரஜைகள் எந்தெந்த மத்தைச் சேர்ந்தவர்களாயினும் அவர்களையும் அவர்களுடைய மதங்களையும் நடுநிலைமை தவறாமல் பராமரித்தார்கள். சுந்தர சோழ சக்கரவர்த்தி தமது முன்னோர்களைக் காட்டிலும் சில படிகள் முன் சென்றார். புத்தப் பள்ளிகளுக்கு விசேஷச் சலுகைகள் அளித்தார். இதனால் சோழ சாம்ராஜ்யத்தில் அச்சமயம் வாழ்ந்திருந்த பௌத்தர்கள் அனைவரும் மிக்க உற்சாகம் கொண்டிருந்தார்கள். இலங்கையில் அருள்மொழிவர்மர் இடிந்து போன புத்த விஹாரங்களைப் புதுப்பிக்கும்படி ஏற்பாடு செய்தது அவர்களுடைய உற்சாகத்தை மேலும் அதிகமாக்கியிருந்தது.

அப்படியெல்லாமிருக்க, இன்று அந்தப் பெயர் பெற்ற சூடாமணி விஹாரத்தில் நேர்ந்த குழப்பத்துக்குக் காரணம் என்ன? பிக்ஷுக்கள் நிலை கொள்ளாமல் அங்குமிங்கும் பரபரப்பாக ஏன் ஓடிக் கொண்டிருக்கிறார்கள்? சூடாமணி விஹாரத்தின் வாசற்புரத்தில் என்ன அவ்வளவு இரைச்சலும் கூச்சலும்? – நல்லது நாமும் சேந்தன் அமுதனைப் பின்பற்றிச் சென்று பார்ப்போம்.

சேந்தன் அமுதனும், மற்ற இருவரும் கால்வாயின் வழியாகப் படகைச் செலுத்திக் கொண்டு சூடாமணி விஹாரத்தின் உட்பகுதிக்கே வந்து விட்டதாகச் சொன்னோம். அங்கே ஒருவரையும் காணாமையால் சேந்தன் அமுதன் தட்டுத்தடுமாறி வழி தேடிக்கொண்டு, விஹாரத்தின் வாசற்பக்கம் போய்ச் சேர்ந்தான். அங்கேதான் பொதுமக்கள் வந்து வழிபடுவதற்குரிய புத்தர் பெருமானின் சைத்யம் என்னும் கோயில் இருந்தது. பக்தர்கள் பலர் அந்தக் காலை நேரத்தில் தாமரை மலர்களும் செண்பகப் பூக்களும், மற்ற பூஜைத் திரவியங்களும் நிறைந்த தட்டுக்களை ஏந்திக் கொண்டு வந்திருந்தார்கள். ஆனால் வந்த காரியத்தை அவர்கள் மறந்து விட்டதாகத் தோன்றியது. சைத்யத்தில் ஏறுவதற்குரிய படிகளில் புத்த பிக்ஷுக்கள் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களை நோக்கிக் கீழே நின்றவன் ஒருவன் ஏதோ சொல்லிக் கொண்டிருப்பதைச் சேந்தன் அமுதன் கண்டான். பிக்ஷுக்கள் சிலருடைய கண்களில் கண்ணீர் ததும்பி நிற்பதையும் பார்த்தான். கீழே நின்ற பக்தர்களில் பலர் வழக்கப்படி “சாது! சாது!” என்று கோஷிப்பதற்குப் பதிலாக, “ஆஹா!”, “அடாடா!” “ஐயோ!” என்று அங்கலாய்த்துக் கொண்டிருப்பதையும் கவனித்தான்.

அருகில் நெருங்கிச் சென்று சிறிது நேரம் கேட்ட பின்னர் விஷயம் இன்னதென்று தெரிந்தது. பிக்ஷுக்களிடம் பேசிக் கொண்டிருந்தவன் பார்த்திபேந்திரனுடைய கப்பலிலே இருந்த மாலுமிகளில் ஒருவன். கப்பல் முதல் நாள் இரவு நாகைப்பட்டினத்துக்கு வந்துவிட்டது. மாலுமிகள் கரையில் இறங்கியதுமே இளவரசரைக் கடல் கொண்டு விட்டது என்ற செய்தியைச் சிலரிடம் சொல்ல, அது நகரமெல்லாம் பரவி விட்டது. அச்செய்தி உண்மைதானா என்று அறிய அதிகாலையில் அம்மாலுமிகளில் ஒருவனைச் சூடாமணி விஹாரத்தின் பிரதம பிக்ஷு அழைத்து வரச் செய்தார். அவன் தான் அறிந்ததை அறிந்தபடி கூறினான், “சுழற்காற்று அடித்த போது இளவரசர் கடலிலே குதித்தவர் திரும்பி வரவேயில்லை” என்று துயரக் குரலிலே சொன்னான்.

அப்போது அக்கூட்டத்திலே விம்மி அழும் குரல்கள் பல எழுந்தன. பிரதம பிக்ஷுவின் கண்களிலிருந்து கண்ணீர் அருவியாகப் பெருகித் தாரை தாரையாக வழிந்தது. அவர் குனிந்த தலை நிமிராமல் படிகளில் ஏறிச் சென்று சைத்தியத்தைத் தாண்டி விஹாரத்துக்குள் பிரவேசித்தார். மற்ற பிக்ஷுக்களும் அவரைத் தொடர்ந்து சென்றார்கள். சேந்தன் அமுதனும் அவர்களோடு வந்ததை ஒருவரும் கவனிக்கவில்லை.

பிரதம பிக்ஷு மற்றவர்களைப் பார்த்துச் சொன்னார்:- “புத்த பகவானின் கருணை இப்படியா இருந்தது? பற்பல மனக் கோட்டைகள் கட்டிக் கொண்டிருந்தேனே? சக்கரவர்த்தியைப் பார்க்கச் சமீபத்திலே தஞ்சாவூருக்குப் போயிருந்தேன் பாருங்கள்! அச்சமயம் இலங்கையில் அருள்மொழிவர்மரின் அற்புதச் செயல்களைப்பற்றிக் கூறினேன். அதையெல்லாம் இளைய பிராட்டி குந்தவை தேவியும் கேட்டுக் கொண்டிருந்தார். பிறகு என்னைத் தனியாக வரவழைத்து இந்த விஹாரத்தையொட்டி ஆதுரசாலை ஒன்று ஏற்படுத்த வேண்டும் என்று அதற்குத் தேவையான நிபந்தங்கள் அளிப்பதாகவும் கூறினார். அது மட்டுமா? ‘ஆச்சாரியாரே! நாட்டில் பலவாறு பேச்சுக்கள் நடந்து கொண்டிருப்பதைக் கேட்டிருப்பீர்கள். ஒருவேளை இளவரசர் சூடாமணி விஹாரத்தில் சில நாள் விருந்தாளியாக இருக்கும்படி நேரும். அவரை வைத்துப் பாதுகாக்க முடியுமா?’ என்று குந்தவை பிராட்டி கேட்டார். ‘தேவி! அத்தகைய பேறு எங்களுக்குக் கிடைத்தால் கண்ணை இமை காப்பதுபோல் வைத்துப் பாதுகாப்போம்’ என்று கூறினேன். என்ன பயன்! இளவரசரா கடலில் முழுகினார்? இந்த நாட்டிலுள்ள நல்லவர்களின் மனோரதமெல்லாம் முழுகிவிட்டது! சோழ சாம்ராஜ்யமே முழுகிவிட்டது. சமுத்திர ராஜன் இவ்வளவு பெருங்கொடுமையைச் செய்ய எப்படித் துணிந்தான்? அக்கொடியவனைக் கேட்பார் இல்லையா?”

மற்ற பிக்ஷுக்கள் அனைவரும் மௌனமாகக் கண்ணீர் பெருக்கினார்கள். தலைமைப் பிக்ஷு பேசி நிறுத்தியதும் சிறிது நேரம் அங்கே மௌனம் குடி கொண்டிருந்தது. சேந்தன் அமுதன் அதுதான் சமயம் என்று புத்த பிக்ஷுக்களிடையே புகுந்து ஆச்சாரியரை அணுக யத்தனித்தான்.

உடனே அவனைப் பலர் தடுத்தார்கள். “இவன் யார்? இங்கே எப்படி வந்தான்?” என்று ஒருவரையொருவர் கேட்டுக் கொண்டார்கள்.

“ஐயா அடியேன் பெயர் சேந்தன் அமுதன்! தஞ்சையைச் சேர்ந்தவன். உங்கள் தலைவரிடம் ஒரு விஷயம் சொல்ல வேண்டும்!” என்றான்.

“சொல், சொல்!” என்றார்கள் பலர்.

அவனுடைய தயக்கத்தைப் பார்த்துவிட்டு ஆச்சாரியர், “இவர்களுக்குத் தெரியக்கூடாத ரகசியம் ஒன்றுமில்லை; சொல்” என்றார்.

“ஐயா! நோயாளி ஒருவரை அழைத்து வந்திருக்கிறேன்!”

“அது யார் நோயாளி? என்ன நோய்? எங்கே விட்டிருக்கிறாய்?”

“விஹாரத்தில் நடுமுற்றத்தில் விட்டிருக்கிறேன்….”

“எப்படி அங்கே வந்தாய்?”

“கால்வாய் வழியாக, நோயாளியைப் படகில் கொண்டு வந்தேன். நடுக்கும் குளிர்க்காய்ச்சல் – தாங்கள் உடனே….”

“பகவானே! நடுக்கும் சுரம் தொற்றும் நோய் ஆயிற்றே! இங்கே ஏன் அந்த நோயாளியை அழைத்து வந்தாய்? அதிலும் நல்ல சமயம் பார்த்து…”

“ஆச்சாரிய! அசோக சக்கரவர்த்தி புத்த மதத்தினர் என்று இதுகாறும் நினைத்திருந்தேன். இப்போது இல்லை என்று தெரிகிறது…”

“அது ஏன் அப்படிக் கூறுகிறாய்?”

“அசோக ஸ்தம்பம் ஒன்றை நான் காஞ்சிக்கு அருகில் பார்த்தேன். அதில் நோயாளிக்குச் சிகிச்சை செய்வதை முதன்மையான தர்மமாகச் சொல்லியிருக்கிறது. நீங்களோ இப்படி விரட்டி அடிக்கிறீர்கள்!” என்றான் அமுதன்.

ஆச்சாரிய பிக்ஷு மற்றவர்களைப் பார்த்து “கொஞ்சம் பொறுங்கள்; நான் போய்ப் பார்த்து விட்டு வந்து சொல்லுகிறேன்” என்று கூறிவிட்டு, “வா! அப்பனே” என்று அமுதனை அழைத்துக் கொண்டு சென்றார்.

விஹாரத்தின் நடு முற்றத்தில் கால்வாய்க்கு அருகில் ஒரு யுவனும், யுவதியும் இருப்பதைப் பார்த்துப் பிக்ஷு திடுக்கிட்டார். “இது என்ன காரியம் செய்யத் துணிந்தீர்கள்? இந்த விஹாரத்துக்குள் ஸ்திரீகளே வரக்கூடாதே! பிக்ஷுணிகளுக்குக் கூட வேறு தனி மடம் அல்லவா கட்டியிருக்கிறது?”

அருகில் போய் அந்த இளைஞர் யார் என்பதை உற்றுப் பார்த்ததும், பிக்ஷு திகைத்துப் போனார் என்று சொன்னால் போதாது! வியப்பினாலும் களிப்பினாலும் அவரால் சிறிது நேரம் பேச முடியவில்லை.

சந்தேக நிவர்த்திக்காக, “இளவரசர் அருள்மொழிவர்மர் தானா?” என்று சேந்தன் அமுதனைக் கேட்டார்.

இது இளவரசர் காதில் விழுந்தது. “இல்லை, ஆச்சாரியரே இல்லை. நான் இளவரசனுமில்லை ஒன்றுமில்லை. இந்தப் பெண்ணும் இந்த பிள்ளையுமாகச் சேர்ந்து என்னைப் பைத்தியமாக அடிக்கப் பார்க்கிறார்கள். நான் ஒரு ஓடக்காரன். சற்றுமுன் இந்தப் பெண்ணைப் பார்த்து, ‘பெண்ணே! என்னை மணம் புரிந்து கொள்வாயா? இருவரும் படகில் ஏறித் தூரதேசங்களுக்குப் போகலாம்’ என்றேன். இவள் ஏதேதோ பிதற்றினாள். நான் உலகத்தை ஒரு குடை நிழலில் ஆளப்பிறந்தவனாம்! ஏழை வலைஞர் குலப் பெண்ணாகிய இவள் என்னை மணந்து கொள்ள மாட்டாளாம். நான் சுகமாயிருந்தால் இவளுக்குப் போதுமாம். வருங்காலத்தில் என்னுடைய மகத்தான வெற்றிகளைக் கேட்டு இவள் மகிழப் போகிறாளாம். எப்படியிருக்கிறது கதை? உண்மையில் எனக்குச் சித்தப்பிரமையா? இவளுக்கா?”

சேந்தன்அமுதன் ஆச்சாரிய பிக்ஷுவின் காதோடு ஏதோ கூறினாள். அதற்கு முன்னாலேயே இளவரசர், சுரவேகத்தினால் நினைவிழந்த நிலையில் பேசுகிறார் என்பதை பிக்ஷு உணர்ந்திருந்தார். குந்தவை தேவி தம்மிடம் இளவரசருக்கு அடைக்கலம் தரும்படி கேட்டிருந்ததும், அவருக்கு நினைவு வந்தது.

மற்ற பிக்ஷுக்களைப் பார்த்து அவர், “இந்தப் பிள்ளைக்கு விஷ சுரம்தான் வந்திருக்கிறது. இவனை வெளியில் அனுப்பினால் இன்னும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு வந்துவிடும். இலங்கையில் எத்தனையோ ஆயிரம் பேர் சுரத்தினால் இறந்து போனார்கள். ஆகையால் இந்த இளைஞனை என் அறைக்கு அழைத்துப் போய், நானே பணிவிடையும் செய்யப்போகிறேன், இடையில் சுர வேகத்தினால் இவன் ஏதாவது பிதற்றினால் அதை நீங்கள் பொருட்படுத்த வேண்டாம்!” என்றார்.

உடனே தலைமைப் பிக்ஷு இளவரசர் அருகிலே நெருங்கி ஒரு கையினால் அவரை அணைத்துத் தூக்கினார். சேந்தன் அமுதன் இன்னொரு பக்கத்தில் இளவரசரைப் பிடித்துக் கொண்டு உதவினான். எல்லாரும் படிகளில் ஏறிச் சென்றார்கள்.

‘இதோ, இன்னும் சில விநாடி நேரத்தில் படிக்கட்டு முழுவதும் ஏறிவிடுவார்கள். கதவைத் திறந்து கொண்டு உள்ளே பிரவேசிப்பார்கள். பிறகு கதவு சாத்தியாகிவிடும். சாத்தினால் சாத்தியதுதான். அப்புறம் அவரைப் பார்க்க முடியாது.’

பூங்குழலி எதிர்பார்த்தபடியே நடந்தது. மாடிப்படி ஏறியதும் கதவு திறந்தது. சேந்தன் அமுதனை மட்டும் வெளியில் நிறுத்தித் தலைமைப் பிக்ஷு ஏதோ கூறினார். பிறகு திறந்த கதவு வழியாக எல்லாரும் பிரவேசித்தார்கள்.

கதவு படார் என்று சாத்திக்கொண்டது. அது பூங்குழலியின் இதயமாகிய கதவையே அடைப்பது போலிருந்தது.

“இனி இந்தப் பிறவியில் இளவரசரைப் பார்க்கலாம் என்ற நிச்சயமில்லை. அடுத்த ஜன்மத்திலாவது அத்தகைய பாக்கியம் தனக்குக் கிடைக்குமா?” இவ்வாறு எண்ணமிட்டுக் கொண்டே இளவரசர் மறைவதைப் பார்த்துக்கொண்டு நின்றாள் பூங்குழலி.

Source

Previous articlePonniyin Selvan Part 3 Ch 9
Next articlePonniyin Selvan Part 3 Ch 11

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here