Raja Muthirai Part 1 Ch16 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
ராஜ முத்திரை முதல் பாகம் – சாண்டில்யன்
அத்தியாயம் – 16 அருவி அழைத்தது; ஆபத்தும் அழைத்தது!
Raja Muthirai Part 1 Ch16 |Raja Muthirai Part1|TamilNovel.in
இளநங்கையும் முத்துக்குமரியையும் கொட்டுத் தனம் செல்லும்படி பணித்து அவர்களுக்குத் துணை செல்ல வேறு ஒருவனையும் வெளியிலிருந்து அழைத்துவந்த இளவரசன், “இவர்களைக் கொட்டுந்தளத்திலுள்ள காவற் படைத் தலைவனிடம் ஒப்படைத்துவிட்டு நீ திரும்பிவிடு,” என்று அவனுக்கு உத்தரவிட்டதைக் கேட்ட மங்கையரிருவரும், இளவரசன் ஏனிந்த உத்தரவுகளைப் பிறப்பிக்கிறாள் என்பதை அறியமாட்டாமல் திகைத்தனர்.
முத்துக் களவு கொற்கையில் நடந்திருக்க, வீரரவி உதய மார்த்தாண்டவர்மனும் அவன் வீரர்களும் முத்தங்காடியையும் கொற்கைக் கோட்டையையும் சூறையாடத் திட்டமிட்டுக் கொற்கையிலே தங்கியிருக்க, தங்களை இளவரசன் தூரத்திலுள்ள பொதியமலை அகத்திய குடிலுக்கும் பீடபூமியான கொட்டுத்தளத்துக்கும் அனுப்பும் காரணமென்ன என்பதை யோசித்தும் ஏதும் புரியாததாக ஒரு வினாடி, குழப்பத்துடன் வீரபாண்டியனையும் பார்த்து வந்த மனிதனையும் பார்த்தனர்.
வந்தவனோ வயது முதிர்ச்சியில்லாதவன் இளவரசனுக்கும் குறைந்த வயதுள்ள வாலிபன். அவன் முகத்தில்கூட இளவரசனுக்கிருந்த கம்பீரமோ உறுதியோ இல்லாததன்றி கண்களும் கல்மிஷமின்றி, சதா சிரிப்பை உதிர்த்துக் கொண்டிருந்தன. மொத்தத்தில் பார்வைக்கு அவன் பொறுப்பேதுமற்ற விளையாட்டுப் பிள்னையைப் போல் இருந்தானேயன்றி, பெரும் பணிகளை நிறைவேற்றவல்ல ஆற்றல் அவனுக்கிருந்ததாகத் தெரியாததால், அவனை இரு பெண்களும் சற்று சந்தேகத்துடனேயே பார்த்தார்கள்.
அவர்கள் பார்வையில் தொக்கி நின்ற எண்ணத்தைப் புரிந்துகொண்டதாலோ என்னவோ அந்த வாலிபன் இதழ்களில் புன்முறுவலொன்று லேசாக ஒரு வினாடி தோன்றி மறைந்தது. மறுவினாடி பணிக்குச் செல்லும் வீரனின் கடமைக் குரலில் அவனிடமிருந்து சொற்கள் உதிர்ந்தன. “இளவரசி புறப்படுவதாயிருந்தால் அடியவன் காத்திருக்கிறேன்” என்று கூறினான் அவன். அத்துடன், தன் அழகிய கருங்குழல் சிறுமுடி முன்விழ தலையையும் லேசாகத் தாழ்த்தினான் வணக்கத்திற்கு அறிகுறியாக.
முத்துக்குமரி வீரபாண்டியனை ஏறெடுத்து நோக்கினாள் ஒருமுறை. அவன் முகம் உணர்ச்சியற்றுக் கிடந்தது. பணிமக்களை ஏலிய பின்பு அதிகாரியிருக்கும் நிலையிலேயே அவனிருந்தானே தவிர, இளவரசியின் சிறிய தந்தையென்ற முறையிலோ, இளநங்கையிடம் சிந்தையைப் பறிகொடுத்தவன் என்ற முறையிலோ அவனில்லாததைக் கண்டாள் முத்துக்குமாரி, அவன் தோரணையை இளநங்கை முன்னதாகவே புரிந்து கொண்டுவிட்டதால் முத்துக்குமரிக்கு முன்பாகவே அவள் அந்த வாலிபனைப் பின் தொடர ஓர் அடி எடுத்து வைத்தாள். அவளைச் சற்றே தடுத்த முத்துக்குமரி கேட்டாள் இளவரசனை நோக்கி, இவர் யாரென்று சொல்லவில்லையே நீங்கள்?” என்று.
இளவரசன் ஒரு வினாடி முத்துக்குமரியை நோக்கினான். “பாண்டிய சாம்ராஜ்யத்தின் முக்கிய ஆயுதங்களில் ஒன்று” என்று கூறவும் செய்தான்.
“இவர் மனிதரல்லவா? ஆயுதமா?” என்று கோபத்துடன் கேட்டாள் முத்துக்குமரி, இளவரசன் தன்னிடம் ஏதோ மறைக்கிறானென்ற கோபத்தில்.
“ஆம், ஆயுதம்தான்.” திடமாக வந்து வீரபாண்டியன் பதில், அந்தப் பதிலில் உஷ்ணமும் இருந்தது. பயணம் தாமதமாகிறதென்ற காரணத்தால்.
“அப்படியானால் மனிதரில்லையா இவர்?” என்று கேட்டாள் முத்துக்குமரி கோபம் தணியாமல்.
“சில சமயங்களில் மனிதர்தான்.”
“மற்றச் சமயங்களில்?”
“பணிபுரியும் ஆயுதம்.”
“அப்படியா?”
“என்ன ஆயுதமோ? வேலா? அம்பா?”
“அம்பு.”
“ஏனப்படி?”
“எய்பவன் நான்,” என்று வீரபாண்டியன் அவர்கள் செல்லலாம் என்பதற்கு அறிகுறியாகத் தலையால் குறிய காட்டினான்.
அதற்குமேல் பேசுவதில் ஏதும் பயனில்லை என்பதை உணர்ந்த முத்துக்குமரி அந்த வாலிபனைப் பின் தொடர்ந்தாள். அந்த வாலிபனும் முத்துக்குமரியும் பின் தட்டி வழியாக வெளியே சென்றதும் இளவரசன் தனித்திருந்ததை நோக்கிய இளநங்கை, “கொட்டுந்தளத்துக்ச் சென்று ஒலையைக் கொடுத்த பின்பு நாங்கள் என்ன செய்யவேண்டும்?” என்று வினவினாள்.
“நான் கொடுத்துள்ள ஓலையில் கொட்டுந்தளத் தலைவனுக்கு விரிவான உத்தரவிருக்கிறது.” என்று கண்டிப்புடன் சொன்ன இளவரசன், இளநங்கையின் முகத்தில் விளைந்த கோபக் கனலை அணைக்கும் எண்ணத்துடன் மேலும் சொன்னான்; “இளநங்கை! கொற்கையில் பல நிகழ்ச்சிகள் ஏற்பட்டு வருகின்றன. நான் முத்துக் களவை மட்டும் எதிர் பார்த்து வந்தேன். ஆனால் மேலும் பல சிக்கல்கள் பல வல்லரசுகளின் கரங்கள் தென்படுகின்றன இங்கே, இவற்றைச் சமாளிக்க என்னால் முடியுமோ முடியாதோ தெரியாது. ஆனால் மிகுந்த எச்சரிக்கையும் ரகசிய ஏற்பாடுகளும் தேவையாகிறது, பாண்டியநாடு இந்தச் சிக்கல்களிலிருந்து மீள வேண்டுமானால். ஆகையால்தான் உங்களிடம் எதையும் சொல்ல என்னால் முடியவில்லை. ஒன்று நிச்சயம். உங்களுடன் கூட வருபவன் வாலிபனாவிற்றே, பார்வைக்கு விளையாட்டுப் பிள்ளையாயிருக்கிறானேயென்று நினைக்க வேண்டாம். நான் உங்களுடனிருந்தால் எப்படியோ அப்படித்தான் அவன் உங்களுக்குத் துணை வருவதும், அஞ்சாமற் செவ், சீக்கிரம் நாம் சந்திப்போம்,” இதைச் சொன்னதன்றி அவளுக்குத் தைரியமூட்டுவதற்காக அவனருகில் வந்து அவள் தோள் மேல் இரு கைகளையும் வைத்து ஒருமுறை அவளை உற்று நோக்கிவிட்டு வெளியே அனுப்பினான்.
இள நங்கை அதே தட்டி மூலம் வெளியே வந்ததும் அங்கு முத்துக்குமரியுடன் தயாராக நின்றிருந்த வாலிபன் தன்னுடன் வரும்படி அவர்களிருவருக்கும் சைகை செய்து முன் சென்றான். பொருநையின் கரையோரமே, முத்தங் காடியின் ஒரு சாரிக் கடைகளின் பின்புறமே அவர்களை அழைத்துச் சென்ற அந்த வாலிபன், தன் தோளிலிருந்த பெருந்துணியை எடுத்து வணிகர்கள் கட்டும் முண்டாசு போல் தலையில் லேசாகச் சுற்றிக்கொண்டு, கூடவந்த பெண்களிருவரையும் முக்காடிட்டுக் கொள்ளும்படி வேண்டிக் கொண்டான்.
அவன் சொற்படி கேட்க மறுத்த முத்துக்குமரி, “நாங்கள் வணிகர் உடைதான் அணிந்திருக்கிறோம். தவிர, தமிழக வணிகப் பெண்கள் முக்காடு போடும் வழக்கம் கிடையாது”, என்று சுட்டிக்காட்டினாள்.
அவன் அதற்கு ஏதாவது மறுமொழி கூறுவானென்றோ அல்லது சொல்கிறபடி செய்யவேண்டுமாறு பிடிவாதம் பிடிப்பானென்றோ எதிர்பார்த்திருந்தால் முத்துக்குமரி ஏமாந்து போனாள் என்றுதான் சொல்லவேண்டும். அந்த வாலிபன் எந்தவிதமான ஆட்சேபணையும் கிளப்பவில்லை; பதிலும் சொல்லவில்லை. பேசாமல் முன் நடந்தான். சுமார் இரண்டு நாழிகைகள் பொருநைக் கரையோரமாகவும், அதைச் சற்று தூரத்தில் வந்து கலந்து கொண்ட கொட்டுந்தளச் சாலை வழியாகவும் அவ்விரு வரையும் அழைத்துச் சென்ற அந்த வாலிபன், கரையேரங்ககளிலும் சாலையிலுமிருந்த கூட்டங்களின் ஊடே நுழைந்தும் இடித்துக் கொண்டும் கஷ்டப்பட்டுப் பயணம் செய்து அந்தப் பெருஞ் சாலை ஓரத்தில் கூடாரமடித்தும், கூடாரமேதும் அடிக்காமலும் தங்கியிருந்த வணிகர் கூட்டங்களிடம் வந்தான், அங்கிருந்த கூடாரங்களொன்றில் நுழைந்து மங்கையரிரு வரையும் உள்ளே வரச்சொன்ன அந்த வாலிபன், அங்கிருந்த ஒரு தனியறைக்குள் செய் இரண்டு பெரும் கூடைகளை எடுத்து வந்து அவ்வரிவரிடமும் கொடுத்து, “ஆளுக்கொன்று எடுத்துக் கொண்டு வாருங்கள்.” எனக்கூறி கூடாரத்துக்குள்ளிருந்த பத்துப் பதினைத்து வணிகர்களையும், “உம்…கிளம்புங்கள்” என்று அதட்டினான்.
அந்த வாலிபன் உள்ளே நுழைந்ததுமே மிகுந்த மரியாதையுடன் எழுந்து நின்ற அந்தப் பத்து பதினைந்து வணிகரும், அவன் உத்தரவிட்டதும் பயணத்துக்குச் சித்தமாக வெளிக் கிளம்பினர், சாலை மரங்களில் கட்டப்பட்டடிருந்த புரவிகள் அவிழ்க்கப்பட்டதன்றி, இருபெரும் புரவி வண்டிகளும் பூட்டப்பட்டுப் பயணத்துக்குச் சித்தம் செய்யப்பட்டன. வண்டிகளில் பெரும் கூடைகளும் மூட்டைகளும் ஏற்றப்பட்டதும் வண்டிகளுக்கு முன்னும் பின்னும் காவலாக வணிகர்கள் சென்றனர். அந்த வாணிகர் கூட்டத்தின் முன் பகுதியின் நடுவில் இரு பெண்களையும் புரவியில் வரச்செய்த அந்த வாலிபன், தான் மட்டும் தனது புரவியில் ஏறி முன்னால் வழிகாட்டிச் சென்றான் முத்துக்குமரி அவன் ஏறியிருந்த புரவியைக் கண்டதும் பெருவியப்புற்றாள். அந்தப் புரவி அவளுக்குப் பெரிதும் பழக்கமான புரவிதான். வீரபாண்டியன் வீரத்தை மெச்சி, பாண்டிய மன்னர் பரிசாக அளித்த பெரும் புரவி அது வீரபாண்டியனைத் தவிர வேறு எவரையும் அண்ட விடாததும் பரம துஷ்ட மிருகமெனப் பிரசித்தி பெற்றதுமான அந்தச் சாம்பல் நிறப்புரவி, விளையாட்டு பார்வையும் பால் முகமும் உள்ள அந்த வாலிபரனை எப்படிச் சுமக்கிறது என்பதை எண்ணி வியப்பின்மேல் வியப்பெய்தினாள் அவள். தவிர வேறு யாருக்கும் அந்தப் புரவியைக் கொடுக்காத இளவரசன் இந்த வாலிபனுக்கு மட்டும் ஏன் அதை அளித்தார் என்பதும் புரியவில்லை அவளுக்கு எப்பொழுது இளவரசன் அந்தப் புரவியின்மீது ஏற வாலிபனுக்கு அனுமதியளித்தாரோ அப்பொழுதே, அந்த வாலிபன் சிறிய தந்தையின் நெருங்கிய நண்பனாக இருக்க வேண்டுமென்ற முடிவுக்கு வந்தாள் முத்துக்குமரி. அந்த வாலிபன் அப் புரவிமீது சர்வசாதாரணமாக அமர்ந்திருந்தது அவளுக்கு வியப்பை மட்டுமின்றி ஒரு சந்தேகத்தையும் அளித்தது. அந்தப் புரவியையே சமாளிக்கத் தக்க வாலிபன் முகத்தில் விளையாட்டுக் குறியும் அனுபவ முதிர்ச்சியின்மையும் தெரிந்தாலும், உண்மையில் அவன் கைதேர்ந்த புரவி வீரனாக இருப் பானென்ற சம்சயம் மெள்ள மெள்ள அவள் இதயத்தில் உதயமாயிற்று.
அவள் சம்சயம் உண்மையென்பதற்கு அவன் நடத்தையே அன்று மாலைக்குள் சான்று கூறியது. அன்று பூராவும் வணிகர் கூட்டத்துக்கு உணவருந்தவும் இளைப்பாறவும் இருமுறை மட்டுமே சிறிதளவு அவகாசம் இந்த அந்த வாலிபன், பயணத்தைத் துரிதமாக நடத்தினான், பொருதையின் கரையோரச் சாலையிலேயே அக் கூட்டத்துடன் அன்று முழுவதும் பயணம் செய்த இளநங்கையும் முத்துக்குமரியும் வழியெங்கிலும் அதிகக் காவல் இல்லாததைக் கவனித்தனர். அந்த நிலையில் பாண்டிய நாட்டின் அந்தப் பகுதியைச் சேரர் தாக்குவது மிக எளிதென்று அவ்விருவருக்கும் புரிந்ததால், அவர்களிருவர் இதயங்களிலும் கவலை பெரிதும் துளிர்விடலாயிற்று. என்னதான் கொட்டுந்தளத்தில் காவற்படையிருந்தாலும், பொதியமலை தாண்டினால், சேரநாடு காட்சியளிக்கும் அத்தனை சமீப எல்லையில் அடியோடு காவலின்றி இருந்ததால் முத்துக்குமரி இளநங்கையை நோக்கி, இளநங்கை! அவரைக் கேள். இங்கு ஏன் காவலில்லை பென்று?” எனக் கூறினாள்,
இனநங்கை தன் புரவியைச் சற்று முன்செத்தி “வணிகரே! வணிகரே!” என்று கூவியழைத்தாள் அந்த வாலிபனை.
அந்த வாலிபன் புரவியைச் சற்று நிறுத்திப் பின்னடைத்து, “ஏன்?” என்று வினவினான்.
“இந்தச் சாலையில் காவல் ஏதுமில்லையே?” கேட்டாள் இளநங்கை.
“இல்லை.” ஒற்றைச் சொல்லி பதில் வந்தது வாலிபனிடமிருந்தது.
“என்?”
“எனக்கெப்படித் தெரியும்?
“இளவரசி கேட்கிறார்கள்.”
“யாரது இளவரசி!”
“என்னுடன் வருகிறார்களே அவர்கள்.”
“அவர்கள் இளவரசியா!” வியப்பைக் காட்டினான் குரலில் அந்த வாலிபன்.
இதைச் சற்றுப் பின்னிருந்து கேட்ட முத்துக்குமரிக்கு ஆத்திரம் பொத்துக்கொண்டு வந்தது. முன்னுக்குக் குதிரையைச் செலுத்தி, “ஏன், என்னைப் பார்த்த யாரென்று தெரியவில்லையா உங்களுக்கு?” என்று வினவினாள் கோபத்தைப் பூரணமாகக் குரலில் காட்டி.
“எப்படித் தெரியும்?” என்றான் அந்த வாலிபன் அவளைத் திரும்பி நோக்கி.
“இளவரசி புறப்படுவதாயிருந்தால் அடியவன் காத்திருக்கிறேன் என்று கூறவில்லை நீங்கள் முத்துக் கடையில்?” என்று கேட்டாள் முத்துக்குமரி..
“ஆம். கேட்டேன், அப்பொழுது தீங்கள் இளவரசி அந்தத் தட்டிக் கடையை விட்டுப் புறப்பட்ட பின்பு அதை மறந்துவிட்டேன்,” என்றான் அந்த வாலிபன்.
“ஏன்?” சீறினாள். முத்துக்குமரி.
“மறந்து விடும்படி இளவரசர் உத்தரவு” என்று அந்த வாலிபன் சற்றுக் கடுமையுடன் கூறியதன்றி, “நீங்களும் மறந்துவிடுவது நல்லது. கிட்டத்தட்டப் பொதியமலை அடிவாரத்துக்கு வந்துவிட்டோம். இருட்டுவதற்குச் சற்று முன்பே அகத்தியர் குடிலை அடைந்துவிடுவோம். ஏதும் பேசாமல் வாருங்கள். இப்பொழுது பெருத்த அபாயத்துக்குள் நுழைகிறோம். கொட்டுத் தளத்துக்கும் அகத்தியர் குடிலுக்கும் இடையே உள்ள தூரம் அதிகமில்லை. ஆனால் அந்தக் குறைந்த தூரத்தில் பெருத்த அபாயமிருக்கலாம். ஆகவே, கேள்வி ஏதும் கேட்காமல், நீங்கள் யாரென்பதைப் பறை சாற்றாமல், பேசாமல், வாருங்கள்,” என்று கண்டிப்புடன் கூறிய அந்த வாலிபன், மீண்டும் முன்னே செல்லப் புரவியைத் தூண்டினான்.
முத்துக்குமரியின் சினம் எல்லை கடந்தது. இளநங்கை யின் மனம் வியப்பின் வசப்பட்டு கிடந்தது. சாதாரண ஊழியனுக்கு எத்தனை திமிர் என்று இருவருமே நினைத்து ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.
அவர்கள் நினைப்பைப்பற்றிக் கடுளவும் எண்ணாமல் பயணம் செய்த அந்த வாலிபன், மாலை மறைந்து இரவு கவிந்த சமயத்தில் பொதியமலைமீது ஏற முற்பட்டான். சிறிது தூரம் ஏறியதும் வணிகர் கூட்டத்துக்கு ஏதோசைகைசெய்யவே கூட்டம் பல திசைகளில் பிரிந்து மலைச் சரிவுகளில் இறங்கியது. பார வண்டிகள் இரண்டை மட்டும் மேலே ஓட்டிச் செல்ல உத்தரவிட்டான் அந்த வாலிபன். பெண்களிருவரையும் தன்னுடன் வரச்சொல்லி மலைச் சரிவில் துரிதமாகப் புரவியை இறங்கவிட்டான். அந்தச் சரிவில் வேகமாகச் சென்றும் நின்றும் திரும்பியும் பாதை காட்டியும் அந்தப் பெண்கள் புரவியில் தடுமாற்றமேதும் இல்லாமல் தன்னைத் தொடர்ந்துவர வழிசெய்த வாலிபன், அகத்தியர் குடிலை அடைந்ததும், தான் புரவியிலிருந்து இறங்கி அவர்களையும் இறங்கச் சொல்லி அவர்கள் அகத்தியர் குடிலின் ஒரு மூலையின் தங்க ஏற்பாடு செய்தான். பிறகு, மீண்டும் புரவிமீது ஏறிய அந்த வாலிபன், “நீங்கள் இந்த இடத்தில் பயமின்றி இருக்கலாம். இன்னும் ஒரு தாழிகை கழித்து வருகிறேன். எக்காரணத்தை முன்னிட்டும் இந்த இடத்திலிருந்து வெளியேற வேண்டாம்,” என்று கண்டிப்பான உத்தரவிட்டுச் சென்றான்.
ஆண்மகன் சொல்லுக்குப் பெண் பணியவதாயிருந்தால் ஆபத்து ஏது? கதை தானேது? அந்தப் பெண்களிருவரும் அவன் சொல்லுக்குப் பணியவில்லை. சூழ்நிலையும் பணிய அவர்களை அனுமதிக்கவில்லை. சற்றுத் தூரத்தேயிருந்த அகத்தியர் அருவி அவர்களை அழைத்தது. அருவி மட்டு மல்ல, ஆபத்தும் அழைத்தது. அதில் நீராடச் சென்று உடைகளைக் களைந்த அந்த இருவரையும் அருவி மேலேயிருந்த பெரும் பாறையில் படுத்திருந்த ஓர் உருவம் ஊன்றிக் கவனித்துக் கொண்டிருந்தது.