Raja Muthirai Part 1 Ch28 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
ராஜ முத்திரை முதல் பாகம் – சாண்டில்யன்
அத்தியாயம் – 28 விதி உதிர்த்த சொற்கள்
Raja Muthirai Part 1 Ch28 |Raja Muthirai Part1|TamilNovel.in
பகல் பல விஷயங்களைப் பட்டவர்த்தனமாக்கிவிடுகிறது. ஆனால் இரவு எழுதும் ரகசியச் சித்திரங்கள் எத்தனையோ விதம், மனத்தை உளைக்கும் சித்திரங்களும் உண்டு. மயக்கும் சித்திரங்களும் உண்டு. மங்கையரிருவரும் தங்கியிருந்த விடுதிக்குப் பின்னிருந்த மலையருவியின் தோற்றம் மயக்கும் சித்திரமாக அமைத்திருந்தது. விடுதிக்குப் பின்னால் சற்றுத் தூரத்திலிருந்த கோட்டைச் சுவருக்கருகில் நாட்டப்பட்டிருந்த ஒற்றைப் பந்தத்தின் ஒளி அந்த அருவியின் ஒரு பகுதியில் மட்டும் விழுந்திருந்ததால் அந்தப் பகுதி மட்டும் பொன்னொளி பெற்றும், மலைக்கற்கள் மீது தாவியோடியதால் சலனப்பட்ட நீர்நிலையில் தானும் சலனப்பட்டும் ஜாலவித்தைக் காட்டிக்கொண்டிருந்தது. அருவி ஓடிய சில இடங்களில் மலை நன்றாகக் குடையப்பட்டிருந்ததால் அந்த இடங்கள் முழங்காலளவு ஆழமுள்ளதாயிருந்தாலும், அருவிநீர் பளிங்கு போலிருந்த தன் விளைவாக, அடியிலிருந்த கூழாங்கற்கள் பந்த வெளிச்சத்தில் பளபளத்துத் தங்கக் கட்டிகளைப் போல் ஜொலித்துப் பார்ப்பதற்குப் பெரு மயக்கத்தை அளித்தன.
அருவி ஓரத்திலிருந்து பாறை மீதமர்ந்து முழங்காலுக்கு மேலிருந்த மேடையில் அடையை எடுத்து முடித்துத் திணித்து அந்தப் பொன்னிற அருவி நீரில் கால்களை அளையவிட்ட முத்துக்குமரிக்குச் சுரணை மட்டுமிருந்தால், சிந்தனை மட்டும் பலபடி சிதறாதிருந்தால், நீருக்குள்ளிருந்த தங்கக் கட்டிகளுக்கும் தன் தங்கக் கால்களுக்கும் உள்ள ஒற்றுமையைப்பற்றி நினைத்திருப்பான். ஆனால் அதற்கெல்லாம் எண்ணங்கள் இடம் கொடுக்காததால், கால்களின்மீது துள்ளித் தாக்கி ஓடிய அருவி தீரை வெறித்துப் பார்த்துக்கொண்டே உட்கார்ந்திருந்தாள்.
அந்த ஒற்றுமையைப்பற்றி நினைக்க அவளுடைய எண்ணங்கள் இடம் கொடுக்கவில்லையே தவிர சற்றுத் தூரத்தே பக்கத்திலிருந்து சிறிது விலகி மரத்தடியின் நிழலில் நின்றிருந்த இந்திரபானுவின் எண்ணங்கள் இடம் கொடுக்கவே செய்தன. அவன் கண்கள் அந்தப் பொன்னிறக் கால்களையே உற்று நோக்கிக் கொண்டிருந்ததால் அவன் நின்றிருந்த சிறு சந்தனமரத்தின் நறுமணத்தை நுகரக்கூட நாசி திறனற்றதாயிற்று. அவள் விடுதியிலிருந்து கிளம்பியதைச் சற்று தூரத்திலிருந்து கவனித்த இந்திரபானு, அவளை அணுகமுயலாமல் தூரம் கொடுத்தே நடந்து அவளைப் பின்பற்றி வந்தானானாலும், அவள் அருவியை நோக்கிச் சென்றதும் கிட்டே, நெருங்கமுடியாமல் எட்ட இருந்த சந்தன மரத்தடியில் நின்றுவிட்டான் அருவிக்கரைப் பாறையில் அவன் உட்கார்ந்து சீலையையும் முழங்காலை நோக்கி எடுத்ததும் அவன் மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டான். அரசகுமாரியின் கால்களைப் பார்ப்பதுகூடப் பண்பாட்டுக்குக் குறைவென்ற காரணத்தால் கண்களை வேறு திசையில் திருப்பவும் முயன்றான்.
முயற்சிக்கு மனம் இடம் கொடுக்கவில்லை கண்களும் அவன் இஷ்டப்படி வளைந்து கொடுக்க இஷ்டப்படவில்லை. அந்தப் பொன்னிறக் கால்கள், மாசுமருவற்று நன்றாக இழைக்கப்பெற்றுப் பழுப்பேறிய தந்தம்போல் வழவழத்திருந்த அந்தக் கால்களில், அழகிய சருமம் வைரகண்டியைப் போல வளைந்து கிடந்த கணுக் கால்கள், பங்கயத் தளிர் போன்ற விரல்கள், கணுக்கால்களுக்கு மேலே இயற்கை தீட்டி எழுப்பிய சித்திரம் போன்ற ஆடுசதை, இவையனைத்திலும் அவன் கண்கள் திரும்பத் திரும்ப உறைந்தன. அருவி நீருக்குள் தங்கக்கட்டிகள் போல் பளபளத்த கூழாங்கற்களை அவன் கண்களும் கவனிக்கவே செய்தன. இருப்பினும் அந்தப் பொன்னிறக் கால்களை நோக்கினால் அவை வெறுங் கூழாங்கற்களே என்று நினைத்தான் இந்திரபானு.
அவனிருந்த சந்தன மரத்தடியிலிருந்து அவனை அவன் பக்கவாட்டில்தான் பார்க்க முடிந்ததென்றாலும், அதிலும் எத்தனையோ இன்ப ஜாலங்கள் தெரிந்தன அவன் கண்களுக்கு. அவள் மடியில் நன்றாக மடித்து திணித்திருந்த சேலையிலிருந்தே அவள் உடல்கட்டு பரம வாளிப்பாக அமைக்கப்பட்டிருக்கிறதென்பதைப் புரிந்து கொண்டான் இந்திரபானு, அவன் தீவிர சிந்தனையில் தலை குனிந்து, முதுகு குனிந்து, அந்தப் பாறையில் உட்கார்ந்திருந்த கோலம், கைதேர்ந்த ஓவியினால் சிருஷ்டிக்கப்பட்ட சிலையை நினைவுறுத்தியது அந்த வாலிபனுக்கு அவள் கைகள் மடியில் பின்னிக்கிடந்தாலும், முதுகு குனிந்திருந்ததாலும் கிடைத்த காட்சியால் சற்றே நிலைகுலைந்த இந்திரபானு, மேலும் தான் அப்படி மறைந்து நிற்பது தவறென்ற காரணத்தாலும், தனக்கு ஒரு கடமையும் இருக்கிறதென்ற தினைப்பாலும் மெள்ளமெள்ள அரசகுமாரியை அணுகினான்.
அவன் வந்ததை உணரக்கூடச் சக்தியற்ற நிலையில் முத்துக்குமரி பாறைமீது உட்கார்ந்திருந்தாள். அவள் மனம் பூராவும் அப்பொழுது இந்திரபானுவைச் சுற்றியே வட்டமிட்டுக் கொண்டிருந்தது. அவன் இத்தனை நேரம் என்ன செய்து கொண்டிருப்பான் என்றும் ஆராய்ந்து கொண்டிருந்தது. ‘என்ன அலட்சியமாக என்னைப் பிடித்தார்! என்ன அலட்சியமாக தூக்கிக் கொண்டுவந்து விடுதியின்படிகளில் தொப்பென்று போடாக் குறையாக இறக்கினார்!” என்று ஆராய்ந்தாள் முத்துக்குமரி. ‘என்ன திமிறியும் அவர் ஏன் என்னை விடாமல் அத்தனை முரட்டுத் தனமாகப் பிடித்தார்?” என்றும் கேட்டுக் கொண்டாள். இந்திரியங்களை உட்புறம் செலுத்தாமல், அவள் வெளிப்புறம் செலுத்தியிருந்தால் அருகில் வந்து நின்றுகொண்டிருந்த இந்திரபானுவிடமே அந்தக் கேள்வியைக் கேட்டிருக்கலாம். ஆனால் எண்ணங்கள் உட்புறம் திரும்பியிருந்தன. எண்ணங்கள் திரும்பியதால் பார்வையும் உட்புறம் திரும்பிக் கிடந்தது. வெளியே பார்த்த கண்ணுக்குப் பார்வையில்லை.
பார்வை வரச் சிறிது நேரம் பிடித்தது. இத்திரபானு தன்னைத் திமிறத் திமிறத் தூக்கி வந்தபோது, அவன் விரல்கள் தனது இடது கைமீது அழுந்தப் பதித்து கிடந்த தால் அந்த இடம் விரல் விரலாகக் கன்றியிருந்ததை நினைத்த முத்துக்குமரி, அந்த இடத்தை வலது கையால் தடவிக் கொடுத்துக்கொண்டாள். அவை எப்படிப் பதிந்து கிடக்கிறதென்பதைப் பார்க்கத் தனது முகத்தையும் திருப்பினாள். கன்றியிருந்த கையைப் பார்க்கத் திரும்பிய கண்களுக்கு எதிரே வேறொரு கை தெரியவே திடுக்குற்ற அவள் கண்கள் மேலெழுந்து நோக்கின; இந்திரபானுவின் விளையாட்டுக் கண்கள் அந்தக் கண்களைக் கவர்ந்து நிறுத்தின. கண்களைத் தன்பால் இழுத்துக்கொள்ளும் சக்தியை அறவே இழந்தாள் பாண்டியன் குமரி. அவன் ஆண்மை அவளுக்கு ஓரளவு அச்சத்தை அளித்தது. அந்த அச்சத்தால் முழங்காலுக்கு மேல் மடிந்து கிடந்த சீலையை எடுத்து விட்டுக் கால்களை மறைக்க வேண்டிய சுரணையைக்கூட இழந்தாள். ஒரு விநாடிக்குப் பிறகுதான் அந்த அவசியப் பணியையும் செய்தாள் அவள். அந்த அச்சம் அவளுக்கே வியப்பாயிருந்தது. கேவலம் என் தந்தையிடம் பணிபுரியும் இவருக்கு நான் ஏன் அஞ்ச வேண்டும் என்று தன்னைத் தானே கேட்டுக்கொண்டாள். தைரியத்துடன் அவனை நோக்கவும் முயன்றாள். ஆனால் மனம் தைரிய உணர்ச்சிக்கு இடம் கொடுக்கவில்லை. அச்சத்துக்கே இடம் கொடுத்தது. அந்த அச்சத்தில் இன்பம் பெரிதும் கலந்து கிடந்தது. என் கால்களை அவர் எத்தனை நேரம் பார்த்திருப்பாரோ என்ற எண்ணம், அச்சம், இன்பம் இவற்றுடன் வெட்கத்தையும் இணைத்துவிட்டது.
அந்த வெட்கத்தால் அவள் சங்கடப்பட்டு அசைந்தாள். “சேச்சே! இதென்ன பைத்தியம்’ என்று தன்னைக் கடிந்தும் கொண்டாள். அந்த நிலையில் வேறொரு நிலையும் அவள் எண்ணத்தில் எழுந்தது. காதலெனும் பித்து எப்படியென்பதை அகத்தியர் அருவிக் அருகில் இளநங்கை விளக்கியதை அவள் எண்ணிப்பார்த்தாள். அந்தப் பித்து ஏற்பட்டால் பெண்களின் சுயநிலை அடியோடு சிதறிப் போகிறதை நினைத்துப் பெரும் வியப்பும் கொண்டாள். இதயத்தில் எண்ணங்கள் பல ஓடினாலும், பேசும் சக்தியும் அந்தப் பாறையை விட்டு எழுந்திருக்கும் சக்தியும் தன்னிடமிருந்து அடியோடு போய்விட்டதென்பதைப் புரிந்து கொண்டாள் பாண்டியன் மகள், ஆகவே இரண்டும் செய்ய மாட்டாமல் உள்ளம் தவிக்க, உடல் இன்பத்தால் துடிக்க உட்கார்ந்தது உட்கார்ந்தபடியே இருந்தாள். இந்திரபானுவின் பார்வையில் சிக்கிக் கிடந்த தனது விழிகளை விடுவித்துக் கொண்டு மீண்டும் அருவியைப் பார்த்தாள். “உன் உறுதி இத்தனைதானா?” என்று சலசலவென்று ஓடிய அந்த அருவி அவளைப் பார்த்துக் கலகலவென நகைத்தது.
அந்த அச்சத்திலிருந்து, அந்த வெட்கத்திலிருந்து, அந்தச் சக்தியிலிருந்து இந்திரபானுவே அவளை மீட்க முற்பட்டான். உண்மையில் அவன் உள்ளமும் உணர்ச்சி அலைகளில் சிக்கித்தான் கிடந்தது. அரசின் நிலை எதுவாயிருந்தாலும் சமாளிக்கவல்ல இந்திரபானு அந்தப் பெண்ணரசியின் சமீபத்தில் செயலற்றே நின்றான். அவள் அங்க அமைப்பு ஒவ்வொன்றும் அவனுக்குப் பெரு வேதனையையும், மன விகாரத்தையும் தந்தது. இருப்பினும் மெள்ளச் சமாளித்துக்கொண்டு, “அரசகுமரி!” என்று மெள்ள அழைத்தான்.
அருகில் தன் தலைக்கு மேலிருந்து வந்த அந்தச் சொல்லைக் காதில் வாங்கிய முத்துக்குமரிக்கு அவனைக் கடித்துக் குதறி விடவேண்டுமென்று தோன்றினாலும், உதடுகள் மெள்ளவும் இனிமையாகவும், “உம்!” என்ற ஒலியை மாத்திரமே உதிர்த்தன.
“இரவில் நீங்கள் இப்படித் தனித்து வருவது சரியல்ல என்ற இந்திரபானுவின் சொற்களில் மென்மையும் கடுமையும் கலந்திருந்தது.
முத்துக்குமரியின் மனம் புரட்சி செய்தது. “நான் என்ன செய்ய வேண்டுமென்று சொல்ல இவர் யார்?’ என்று நினைத்து, ‘அது என் இஷ்டம்,” என்றாள் அவளும் கடுமையுடன்.
“நம் இஷ்டம் என்பது எதுவுமே கிடையாது.” என்றான் இந்திரபானு மெதுவாக.
இதைச் சொன்னபோது அவன் தனக்கு வெகு அருகில் வந்துவிட்டதையும், அவன் ஆடைகூட அவன் விரல்கள் பதிந்து கன்றிக் கிடந்த தனது கையின்மீது உராய்வதையும் பார்க்காவிட்டாலும் உணரவே செய்தாள் முத்துக்குமரி; அதனால் ஏற்பட்ட மனக்கிளர்ச்சியையும் அடக்கிக்கொண்டு கேட்டாள்,” ஏன் கிடையாது?” என்று.
இந்திரபானுவின் கண்கள் தன் விரல்கள் பட்டுக் கன்றியிருந்த அவள் இடது கையைக் கவனித்தது. அவன் முகத்தில் சற்று வேதனைகூடப் படர்ந்தது. அந்த வேதனை குரலில் ஒலிக்கக் கூறினான், “அரசகுமாரி! இந்தக் கோட்டையின் பாதுகாப்பு விதிகள் அப்படி,” என்று.
முத்துக்குமரி அவனைப் பார்க்காமலே கேட்டாள் ஏளனத்துடன், “பெண்களைத் தொடருவதும், தனித்திருக் கும்போது உரையாட வருவதும் அந்த விதிகளில் ஒன்றா?” என்று .
இந்திரபானுவின் இதழ்களை அவள் அப்பொழுது பார்க்கவில்லை. பார்த்திருந்தால் அவற்றில் பெரும் விஷமப் புன்னகையொன்று படர்ந்திருந்ததைக் கவனித்திருப்பாள் “இராக்காலத்தில் காவல் வீரர்களைத் தவிர யாரும் விடுதி களைவிட்டு வெளியில் உலாவக் கூடாதென்று விதியிருக் கிறது. அது மட்டுமல்ல..” என்று இழுத்தான் இந்திரபானு.
வேறென்ன இருக்கிறது?” என்று சீறினாள் முத்துக்குமரி,
“அப்படி யாராவது உலாவினால் அவர்களைக் கண் காணிக்கவும் விதியிருக்கிறது.”
“கண்காணித்த பின் என்ன செய்வீர்கள்?”
“திரும்ப விடுதிக்குச் செல்ல உத்தரவிடுவோம்.”
“திரும்ப மறுத்தால்?”
“சாதாரண வீரர்களாயிருந்தால் சிறை செய்வோம்.”
“பெண்களாயிருந்தால்?” இதைக் கேட்ட முத்துக்குமரி தலை நிமிர்ந்து அவனை நோக்கினாள்; ‘என்ன செய்து விடுவாய் நான் திரும்ப மறுத்தால்?” என்று கேட்பது போலிருந்தது அந்தப் பார்வை.
இந்திரபானுவின் கண்கள் அவளைப் பார்த்து நகைத்தன. பிறகு அவன் கண்கள் அவள் கையில் பதிந்திருந்த தனது விரல்களின் அடையாளங்களைக் கவனித்தன. பதிலை அவன் சொல்லிவிட்டான் என்பதை அவள் புரிந்து கொண்டாள். ‘சற்று முன்பு தூக்கியது போல் தூக்கிக்கொண்டு விடுதியில் போட்டுவிடுவேன்’ என்று சொல்வது போலிருந்தது அவன் பார்வை; அதனால் பெரிதும் வெகுண்ட அவள் பகிரங்கமாகவே கேட்டாள், “திரும்பவும் தொட்டுத் தூக்க உங்களுக்குத் துணிவுண்டா?” என்று.
இந்திரபானு அவளை விஷமப் பார்வையாகப் பார்த்தான். “கடமைக்குத் துணியாதவன் வீரனல்ல அரசகுமாரி,” என்று கூறி, தான் அதற்கும் துணிந்தவனென்பதை மறைமுகமாகச் சுட்டிக் காட்டினான். அந்தத் துணிவுக்கு அத்தாட்சியாக, அந்தப் பாறையின் பக்கத்தில் தரையிலிருந்த மற்றொரு சிறு பாறாங்கல்லில் உட்கார்ந்து, தனது விரல்கள் பதிந்த அவள் கையைத் தன் கையால் பிடித்துப் பரிசோதிக்கவும் செய்தான். “இந்த இடம் கன்றிவிட்டது அரசகுமாரி! மிகவும் வருத்தமாக இருக்கிறது எனக்கு. ஆனால் எனக்கு வேறு வழியில்லை. நீங்கள் மிகவும் திமிறினீர்கள்,” என்று கூறினான்.
அவன் தைரியத்துடன் தன் கையைப் பிடித்தது பெரும் வியப்பாக இருந்தது அவளுக்கு, என்னதான் பெரிய வீரனாயிருந்தாலும், தனது உத்தரவின்றி எப்படி அவன் தன் கையைப் பிடிக்கலாம் என்று எண்ணினாலும் வேண்டாமென்று சொல்லத் தனக்குத் தெம்போ இச்சையோ இல்லாததைக் கண்டு உள்ளூர வியந்தாள் முத்துக்குமரி இருப்பினும் வெளிக்குக் கோபத்தைக் காட்டி அவனைப் பார்த்தாள். அவள் உட்கார்ந்திருந்த பாறை உயரமாகவும் அவன் அமர்ந்திருந்த பாறை தாழ்வாகவும் இருந்ததால் கிட்டத்தட்ட அவள் தோளுக்குக் கீழேயே அவன் தலை விருந்தது. அந்த நிலையில் அவள் கேட்டான், “புரவி என்னை விசிறி விட்டதல்லவா” என்று.
“ஆம்” என்றான் இத்திரபானு.
“நீங்கள் தாங்கிப் பிடித்தீர்கள்…” என்றாள் மீண்டும் முத்துக்குமரி.
“ஆம்.”
“பிடித்த பிறகு எல்லோர் முன்னிலையிலும் என்னைத் தூக்கிக்கொண்டு போவானேன்?”
“விடுதியில் விட,”
“விடுதிக்கு நான் நடந்து போகமாட்டேனா?”
“அதிர்ச்சியில் நடக்க முடியுமோ முடியாதோ என்ற சந்தேகம்.”
“இஷ்டமில்லாமலா நான் திமிறினேன்?”
“ஆம், திமிறினீர்கள்.”
“அப்பொழுதாவது இறக்கிவிடுவதுதானே!”
“அப்பொழுது எனக்கு இஷ்டமில்லை,” இதைச் சொன்ன இந்திரபானு அவளை நோக்கிப் புன்முறுவல் கொட்டினான்.
உங்களிஷ்டம் என்று தனியாக உண்டா இந்தக் கோட்டையில்?” என்று வினவினாள் முத்துக்குமாரி.
“பிடிவாதம் என்று வைத்துக்கொள்ளுங்கள்,” என்றான் இந்திரபானு பதிலுக்கு.
“பிடிவாதமா?”
“ஆம்! அந்தப் புரவிமீது ஏறுவது அபாயமென்று எச்சரிக்கை செய்தேன். பிடிவாதத்தால், நீங்கள் ஏறினீர்கள், நீங்கள் விழுந்தபோது, பதில் பிடிவாதம் நான் காட்டினேன். ஆனால் அரசகுமாரி..” என்ற இந்திரபானு தயங்கினான்.
“ஆனால்…” அவள் கண்களில் பளிச்சிட்டன.
“உங்களைக் கீழே இறக்க எனக்கு மனமில்லை.” என்று சொன்ன இந்திரபானு, அவன் கையில் தன் விரல்கள் பதித்த இடங்களை வருடினான். அந்த வருடலில், அவன் கெயின் வெப்பத்தில் அவள் இளகினாள். அவனை நோக்கி நன்றாகத் திரும்பினாள் அவள். அவனை நோக்கிக் குனியவும் செய்தாள்.
அவன் மூச்சு பெரிதாகவே வந்தது. “அரசகுமாரி…” என்று அவன் நா தழுதழுத்தது.
“அரச – வேண்டாம்.” என்று அவள் முணுமுணுத் நான் அவன் காதில்.
“குமாரி…”
“ஊம்…”
“இது சரியல்ல,” என்று அவன் உதடுகள் கூறிக் கொண்டேயிருக்கையில் அவன் கை அவன் இடையில் தவழ்ந்தது.
“எது சரியல்ல?” அவள் பாறையில் நெகிழ்ந்தாள்.
“இந்த நிலை…”
“ஏன்?”
“எதிரேயிருப்பது போர்.”
“ஆம்.”
“நாமிருப்பது அரண்.”
“ஆம்.”
“இதையும் இதிலுள்ளவர்களையும் பாதுகாப்பது மன்னர் எனக்கு இட்டிருக்கும் உத்தரவு.”
“உத்தரவை நிறைவேற்றுங்கள்,” என்ற அவள் பாறையில் சற்றே சரிந்தாள்.
இன்னும் அதிகமாகச் சரித்தால் நிலைதவற அவசியம் இருந்ததால் இரு கைகளாலும் அவள் இடையைப் பிடித்துப் பாறையிலேயே அவளை இருத்திய இந்திரபானு கூறினான். “அந்த உத்தரவை நிறைவேற்றவே நான் இன்று உறங்க வில்லை. உங்கள் விடுதிமீது ஒரு கண் வைத்திருந்தேன் வைத்திருந்தது நல்லதாயிற்று,” என்று.
“ஆம், ஆம், நல்லதாயிற்று,” என்று கூறி தகைத்தாள் முத்துக்குமரி, தன்னைச் சுற்றிச் சிறை செய்திருந்த அவன் கைமீது கண்களை ஓட்டி.
இந்திரபானு பெரும் சங்கடத்துக்குள்ளானாள் “குமாரி! ‘இந்தக் கோட்டை பெரும் மலைகளுக்கிடையேயிருந்தாலும், இது பெரும் பாதுகாப்பென்று நினைக்க வேண்டாம். இங்கும் சேரவீரர் நடமாட்டம் இருக்கிறது அவர்கள் மலைவாசிகள். எந்த நேரத்திலும் எதிர்பாராத வகையில் புரவிகளுடன் வந்து நம்மைத் தாக்கலாம் ஆகையால்தான் இரவும் பகலும் எச்சரிக்கையாயிருக்க வேண்டும்,” என்று கூறினான், அவளுக்கு ஏதாவது நேர்ந்துவிட்டால் என்ன செய்வது என்ற அச்சத்தாலோ என்னவோ அவள் இடையை அழுத்தியும் பிடித்தான்.
“நான் எச்சரிக்கையாயிருக்க மாட்டேன்,” என்றாள் முத்துக்குமரி.
“ஏன்?”
“என்னைக் காக்க ஒருவர் இருக்கிறார்.
“ஆம் குமாரி! உன்னைக் காக்க நானிருக்கிறேன் இந்திரலோகத்துக்கு உன்னைக் கொண்டு போனாலும் அங்கும் தொடர்ந்து வருவேன்,” என்று ஆவேசத்துடன் கூறிய இந்திரபானுவை ஆனந்தக் கண்களுடன் நோக்கினாள் அவள். அவன் சாதாரணமாகச் சொன் வார்த்தைகள் அவை. ஆனால் அந்த வார்த்தைகள் எத்தனை உண்மையென்பதை அந்த இரண்டு நாட்கள் நிரூபித்தன. அவை விதி உதிர்த்த சொற்கள் என்பதை இந்திரபானுவே பின்னால் உணர்ந்துகொண்டான். ஆனால் அன்று அந்தப் பந்தத்தின் வெளிச்சத்தில் அவள் பொன்னிற மேனியைச் சுற்றிக் கைகள் ஓடி ஆராய்ந்த நிலையில், தன் சொற்களுக்கு அத்தனை உண்மை உண்டென்று அவன் நினைக்கவில்லை. பெரும் விபரீதம் ஏற்படுவதற்கு முன்னிருந்த ஆனந்த நிலையில் அந்தக் காதலரிருவரும் அன்றிரவு கட்டுண்டு கிடந்தார்கள்.