Raja Muthirai Part 1 Ch29 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
ராஜ முத்திரை முதல் பாகம் – சாண்டில்யன்
அத்தியாயம் – 29 காத்திருந்தவன்
Raja Muthirai Part 1 Ch29 |Raja Muthirai Part1|TamilNovel.in
சொற்கள் சிலவற்றை உதடுகள் உதிர்க்கும்போது அவற்றுக்குக் காரண காரியம் இல்லையென்று நினைக் கிறோம். அசந்தர்ப்பமாக அகாரணமாக ஏற்பட்ட வெற்றுச் சொற்கள் அவை என முடிவும் கட்டுகிறோம். ஆனால் காலம் அவற்றுக்குக் காரணத்தையும் கற்பிக்கிறது காரியத்தையும் கற்பிக்கிறது. அப்பொழுது புரிந்து கொள்கிறோம். சொல்லோ, செயலோ நம் வசத்தில் இல்லை என்பதை, நம்மையும் மீறிய சக்தியொன்று நமது நாவையும் இயக்குகிறது என்பதை உணர்ந்து கொள்கிறோம் அதை விதி என்ற இரண்டெழுத்துச் சொல்லால் குறிப்பிடுகிறோம். ஆத்திகன் இதை எப்பொழுதும் ஒப்புக் கொள்கிறான். ஏதோ ஒரு காலத்தில், ஏதோ ஒரு சமயத்தில் இதை அனைவருமே புரிந்து கொள்கிறார்கள். ஆனால் குறிப்பிட்ட காலத்தில் தேவைப்பட்ட சமயத்தில் புரிந்துகொள்கிறவர்கள் மிகக் குறைவு. புரிந்து கொள்ள சூழ்நிலையோ, சொந்த அறிவோ இடங்கொடுப்பதில்லை.
பாறை மீதமர்த்திருந்த பாண்டிய குமாரியின் இடையை இரு கைகளாலும் பற்றியிருந்த இந்திரபானுவின் நிலையும் அந்த இரவில் அப்படித்தான் தடம் புரண்டு கிடந்தது. அவன் அறிவெல்லாம் பாறையிலிருந்த அந்த அரிவையிடத்தில் லயித்துக் கிடந்தது. சூழ்நிலையோ பெரும் மாய வலையென அவனை வளைத்திருந்தது. அந்த நிலையில் தான் சொன்னான் இந்திரபானு, “உன்னை இந்திரலோகத்துக்குக் கொண்டுபோனாலும் அங்கும் உன்னைத் தொடர்ந்து வருவேன்” என்று, அவளுக்கு அந்தச் சொற்கள் இத்திரபோகமாக இருந்தன. ‘கட்டுக்காவல் மிகுந்த அந்தக் கோட்டைக்குள் யார் வரமுடியும், யார் தூக்கிக்கொண்டு போகப் போகிறான். எதற்காக இந்திரபானு தன்னைக் கப்பாற்ற வேண்டும்’ என்றெல்லாம் அவன் தன்னைக் கேட்டுக் கொள்ளவில்லை. யாரோ எதிரி தன்னைத் தூக்க வந்து விட்டது போலும், இந்திரபானு அவனிடமிருந்து தன்னை மீட்க வந்து விட்டது போலும் அவன் எண்ணினாள். அனாவசிய வேகத்துடன் அவன் உதிர்த்த சொற்கள் அவளை இளக வைத்திருந்தன. சொற்களின் வேகத்தை மீறும் வகையில் சுற்றிவந்த கைகளின் முரட்டுப்பிடி அவளுக்குப் பேரானந்தத்தை அளித்தது. அந்தக் கைகள் தன்னை அப்படியே இறுக்கி நொறுக்கிவிட்டால்கூட இன்பமாயிருக்கும் போலிருந்தது. பாண்டியன் மகளுக்கு.
வேகத்துக்கு இலக்கான முத்துக்குமரியின் நிலையை விட மோசமான நிலையிலிருந்தான் வேகத்துக்குக் காரணமான இந்திரபானு. தனது கைகள் இறுக்கிக் கொண்டிருந்த அவள் இடையின் மென்மை, தன் உணர்ச்சிகளை ஒரே சுழலாகச் சுழற்றுவதை இந்திரபானு உணர்ந்தான். வாளேந்தியதால் கறுத்துவிட்ட தன் கைகளால் இடைக்கு ஏற்படக்கூடிய இம்சையைவிட, வழவழத்த அந்த இடையால் தன் கைகளுக்கும் சிந்தனைக்கும் ஏற்படக்கூடிய உபத்திரவம் அதிகமென்பதை அந்தச் சில விநாடிகளில் புரிந்து கொண்டான் அந்த வாலிபன். இம்சைக்கும் இன்பத்துக்கும் வித்தியாசம் அதிகமில்லையென்பதும் தெளிவாகத் தெரிந்தது அவனுக்கு. அவள் பாறையில் உட்கார்ந்திருந்தாலும் அவன் பக்கவாட்டில் அவள் கால்களுக்கடியில் உட்கார்ந்திருத்தாலும் அவள் முழத்தாளுக்கு மேலிருந்த கால் பகுதியில் இழைந்திருந்த தனது கன்னத்தின் மூலமும், இடையே இறுக்கிய கைகளின் மூலமும், உணர்ச்சிகள் மின்னல் வேகத்தில் தன்னை ஊடுருவுவதை உணர்ந்தான் சந்திரபானுவின் மகன். இத்தகைய ஓர் அபூர்வ மலருக்கு ஆபத்து உண்டாக முடியும் என்ற எண்ணமே அவன் சிந்தைக்குப் பெரு வேகத்தைக் கொடுத்தபடியால்தான் அவன் அந்த வார்த்தைகளைச் சொன்னான். இந்திர லோகம் என்று அவன் குறிப்பிட்டதற்குக் காரணம் தொலை தூரத்திலுள்ள ஏதோ ஓர் இடத்தைக் குறிப்பிட வேண்டுமென்பதற்காகவே தவிர வேறில்லை. உண்மையை மட்டும் ஆராய அவனுக்குச் சக்தியிருந்தால் இந்திரலோகம் அத்தனை தூரத்திலில்லை என்பதைப் புரிந்து கொண்டிருப்பான். அறிவின் சுழற்சி அந்த எண்ணத்திற்கு இடம் கொடுக்கவில்லை.
ஆனால் அவன் கைகளின் பிடிக்கு ஆளாயிருந்த முத்துக்குமரி மட்டும் அதைப் புரிந்து கொண்டாள். இந்திர லோகமென்றால் அது இந்திரபானு இருக்குமிடத்தில் தானிருக்க முடியுமென்பதை அவள் புரிந்து கொண்டாள். இந்திரதனுசு ஏதாவதிருக்க முடியுமானால் அது அவன் கைகளாகத் தானிருக்க முடியும் என்று நினைத்தாள். மின்னல் என்று ஏதாவது ஒன்றிருக்குமானால், அதன் சக்தி பூராவும் தனது பக்கத் தொடையில் பட்டுக்கொண்டிருந்த அவன் கன்னத்தில் மூலம் உடலெங்கும் பாய்ந்து பளிச்சிடுவதைப் புரிந்துகொண்டாள். அதற்கு மேல் பாறையில் தங்கியிருக்க இயலாமல் அவன் கைகளையும் மீறி நெகிழ்ந்து தரையில் இறங்கினாள். அந்தப் பெரும் பாறைக்கு அருகேயிருந்த தரையும் கரடு முரடாகத் தானிருந்தது. பாறையிலிருந்து சரிந்து அவள் அதில் உட்கார்ந்தபோது நன்றாக இந்திரபானுவின் கை வளையத்துக்குள் இறங்க நேரிட்டபடியால், சிந்தனை அதைப்பற்றி ஓடியதே தவிர, கீழிருந்த முரட்டுத் தரையைப்பற்றி ஓடவில்லை. இந்திரபானுவின் கரங்கள் அவளைத் திடீரென்று தரையில் இறங்கவிடாமல் மெள்ளப் பிடித்து உட்கார வைத்தன. அப்படி இறங்கிய முறையில் அவள் அழகிய உடல் அவன் கைகளிலும், மார்பிலும் அசப்பில் பட்டதாலும் அவனுக்கு விவரிக்க இயலாத வேதனையை அளித்தன.
பாறையிலிருந்து இறங்கிய முத்துக்குமரி தனது அழகிய கால்களை அருவியில் நன்றாக நீட்டிக் கொண்டாள். அந்தக் கால்களின் அழகைப் பருகிய இந்திர பானு அவற்றிலொன்றைத் தன் இரு கைகளாலும் மெல்லப் பிடித்தான். அவன் கைவிரல்கள் அந்தக் கால் விரல்களுக் கிடையே நுழைத்து பின்னிக்கொண்டன. அதைக் கண்ட முத்துக்குமரி சொன்னாள், “உம், உம் வேண்டாம். விடுங்கள் காலை” என்று.
இந்திரபானு அவள் காலைவிட மறுத்தான், “ஏன் விட வேண்டும்?” என்று விசாரித்தான், அவள் காலழகைப் பார்த்துக்கொண்டே.
“அடிமைகள் தான் காலைப் பிடிப்பார்கள்,” என்றாள் முத்துக்குமரி.
இந்திரபானு தலை நிமிரக்கூட இல்லை. அவன் குனிந்து அவன் காலைப் பார்த்துக்கொண்டிருந்ததால் அவன் முதுகு முத்துக்குமரியின் உடலுக்குக் குறுக்கே பாய்ந்திருந்தது. சிறிது விழுந்திருந்த அவன் குழலையும் வளைந்த முதுகின் உரத்தையும் கண்ட முத்துக்குமாரி, அத்தகைய ஓர் ஆண் மகன் குழந்தைபோல் தன் காலைப் பிடித்திருப்பதைக் கண்டு புன்முறுவல் கொண்டாள். ஆனால் அந்த ஆண் மகள் தலை நிமிராமலே பதில் சொன்னான்: “சரியாகச் சொன்னாய் குமரி,” என்று.
“என்ன சரியாகச் சொன்னேன்” என்று வினவினாள் முத்துக்குமரி மெல்லிய குரலில்.
“அடிமைகள் தான் காலைப் பிடிப்பார்களென்று சொன்னாயல்லவா?” என்ற இந்திரபானு, அவள் பாதத்தின் அடித்தளத்தைச் சற்றே அழுத்தினான்.
“ஆம்” என்றான் முத்துக்குமரி மெள்ளக் காலை இழுத்துக் கொள்ள முயன்று.
“அடிமைதான் இப்பொழுதும் காலைப் பிடிக்கிறான்,” என்றான் இந்திரபானு, நீரில் துளைத்துக் கொண்டிருந்த மற்றொரு காலையும் பிடித்து இணைத்துக் கொண்டு,
“நீங்கள் அடிமையா?”
“அம்!”
“எப்படி அடிமை?”
“இருவகைகளில் அடிமை.”
“அதிலும் இருவகை உண்டா?”
“உண்டு.”
“எப்படிச் சொல்லுங்கள் பார்ப்போம்?”
“நீ பாண்டிய மன்னன் மகள். நான் அவரிடம் அடிமையாயிருக்கிறேன்.”
“அதனால்?”
அரசனுக்கு அடிமை அப்படியானால் அரச குமாரிக்கும் அடிமை தானே?”
“இதிலும் பரம்பரை உண்டா?”
“பரம்பரை எதில் இல்லை?”
இதைக் கேட்ட முத்துக்குமரி இன்பநகை நகைத்தாள். தனக்குக் குறுக்கே வளைந்திருந்த முதுகில் ஒரு கையையும் வைத்தாள் ஆதரவுடன். அந்த நிலையில். “சரி சரி, இன்னொரு வகை?” என்று மெள்ள வினவினாள்.
“அழகுக்குச் சிலர் அடிமையாகிறார்கள். ” என்று இழுத்த இந்திரபானு அவள் பாதங்களைக் கன்றிப்போகும் படி பிடித்தான்.
முத்துக்குமரியின் உள்ளமும், உடலும் ஆனந்த வெள்ளத்தில் அழுந்திக் கிடந்தன. “ஊஹும் ஆரம்பித்து விட்டீர்களா?” என்றாள் பொய்க் கோபத்துடன்.
“என்ன ஆரம்பித்துவிட்டேன்?” என்று ஏதும் புரியாமல் வினவினான் இந்திரபானு.
“ஆண் பிள்ளைகளின் வேலையை…”
“என்ன அது?”
“பெண்களைப் புகழ்வது. பிறகு.”
“அது கிடக்கட்டும்.”
“எது?”
“எதுவாயிருந்தாலென்ன? புகழ ஆரம்பித்துவிட்டீர்கள், அழகுக்கு அடிமையா?
“ஆம் சந்தேகமாயிருக்கிறதா? என்ற இந்திரபானு சரேலென்று நிமிர்ந்தான். அதை எதிர்பார்க்காத முத்துக் குமரியின் முகத்தில் அவன் தலை மோதவே, “அப்பா!” என்று அவள் சாய்ந்திருந்த தனது கன்னத்தைப் பிடித்துக் கொண்டாள். அடுத்த விநாடி அவன் கைகள் அவள் கன்னங்களிரண்டையும் அழுந்தப் பிடித்தன. அவன் கண்கள் அவள் கண்களை ஊடுருவிப் பார்த்தன. உள்ளத்தையே அவன் பார்ப்பது போலிருந்தது அவளுக்கு. “பலமாகப் பட்டுவிட்டதா குமரி?” என்று அவன் அனுதாபத்துடன் உதிர்த்த சொற்கள் அரைகுறையாக அவள் காதுகளில் விழுந்தன.
“இல்லை.” என்று பொய் சொன்னாள் அவள்.
அவள் கைகளை மெல்லக் கன்னத்திலிருந்து நீக்கிப் பார்த்தான். ஒரு கன்னம் நன்றாகச் சிவந்திருந்தது. பல மாகத்தான் இடித்திருக்கிறது.” என்று பயந்து பதைபதைக்கச் சொன்னான். பிறகு அவன் அவளை ஏதும் கேட்காமல் பாறைமீது சார்த்தி இரண்டு கன்னங்களையும் கைகளால் லேசாக இழைத்தான். “இன்னொரு கன்னத்தில் ஏதுமில்லை,” என்றாள் முத்துக்குமரி சங்கடத்துடன்.
“இல்லாததுதான் தவறு.” என்று சொல்லிக்கொண்டே இந்திரபானு இரு கன்னங்களையும் வருடிக் கொடுத்தான்.
“தவறா? என்று கேட்டாள் அவள் அவன் கண்களைப் பார்த்துக்கொண்டே.
“ஆம், ஒரு கன்னம் மட்டும் சிவந்திருந்தால் பார்ப்பவர்கள் காரணம் கேட்பார்கள்.”
“அதற்காக இன்னொரு கன்னத்தையும் இழைக்கிறீர்களா?”
“ஆம்,”
“புரிகிறது.”
“என்ன புரிகிறது!”
“உங்களைப் பொய்யர் என்று நினைத்திருந்தேன்.”
“இப்பொழுது?”
“திருடரும்கூட என்று புரிகிறது.”
“திருடனா?”
“ஆம். திருட்டுத்தனத்தை மறைக்கத்தானே இன்னொரு கன்னத்தை இழைத்துச் சிவக்க அடிக்கிறீர்கள்?” என்று உதடுகளில் புன்னகை காட்டினாள் முத்துக்குமரி.
இந்திரபானு சங்கடத்துடன் நெகிழ்ந்தான். “கன்னத்தைச் சிவக்கச் செய்ய முயற்சி தேவை. ஆனால் இவற்றைச் சிவக்க அடிக்க முயற்சி ஏதும் தேவையில்லை,” என்று அவன் உதடுகளைத் தொட்டுக் காட்டினான்.
“நீங்கள் கவி போலிருக்கிறது?” என்றாள் முத்துக்குமரி.
“கவிக்கு வேண்டியது இருக்கிறதல்லவா?”
“எது?”
“பெண்.”
“பெண்ணா ?”
“ஆம். முக்கால்வாசிக் கவிகள் பெண்ணைத்தான் வர்ணித்து எழுதியிருக்கிறார்கள். ஆனால்…” இங்கு நிதானித்தான் இந்திரபானு.
“ஆனால்?”
“நீ வர்ணனைக்கு அப்பாற்பட்டவள் முத்துக்குமரி.”
இதற்குமேல் அவன் பேசவில்லை. அவளும் மௌன மாகவே இருந்தாள். கோட்டையின் இரண்டாவது ஜாம சங்கு பிடிக்கப்பட்டது. அதனால் சுரணை வந்த இருவரும் எழுந்து நின்றார்கள். “இரண்டாவது ஜாமம் முடிந்து விட்டது…” என்றாள் முத்துக்குமரி பயத்துடன்.
“ஆம்,” என்றான் இந்திரபானுவும், அவன் குரலிலும் அச்சமிருந்தது.
“சரி, நான் வருகிறேன்,” என்று கிளம்பினான் முத்துக்குமரி.
இந்திரபானு பதில் சொல்லவில்லை. அவள் மெள்ள நடத்தாள். நாலடி சென்றதும் இந்திரபானு, “குமரி” என்று அழைத்தான்.
அவள் திரும்பினாள். அவள் முகமும் பொற் சிலையின் முசுமென ஜொலித்தது பந்தத்தின் ஒளியில். “ஏன்?” என்ற உதடுகளும் மயக்கின.
“நாளைக்கும் இங்கு?” கேள்வி அவன் வாயில் உறைந்தது.
“வரமாட்டேன்”
“ஏன்?”
“யாரோ தூக்கிக்கொண்டுபோகப் போகிறார்கள் இந்திரலோகத்துக்கு, அங்கு வாருங்கள்,” என்று சொல்லி நகைத்துவிட்டுச் சென்றாள் அவள்.
அவள் சென்ற திசையையே பார்த்துக்கொண்டே நீண்ட நேரம் இந்திரபானு நின்று கொண்டிருந்தான். அவன் உருவம் கண்ணுக்கு மறைந்த பின்பும் அவள் சிரிப்பு மட்டும் அவன் காதில் ஒலித்துக் கொண்டிருந்தது. மறுநாள் அவள் கண்டிப்பாய் வருவாள் என்பதை அவன் உணர்த்திருந்தான். அந்த உணர்வே அவனுக்குப் பேரின்பத்தை அளித்தது. அடுத்த நான் ஏற்படப் போகும் சந்திப்பையும், அதனால் கிட்டக்கூடிய இன்பத்தையும் நினைத்துக் கொண்டே அவன் தனது இருப்பிடம் நோக்கி நடந்தான்.
அவன் நினைத்தபடி மறுநாள் முத்துக்குமரி வரத்தான் செய்தான். காலம் தாழ்த்தாதபடியும் வந்து சேர்ந்தாள். இந்திரபானு தனக்காகக் காத்திருப்பானென்ற எண்ணத்தில் சற்று வேகமாக வந்தாள். ஆனால் இந்திர பானு காத்திருக்கவில்லை அவளுக்காக அதே இடத்தில் வேறொருவன் காத்திருந்தான்.