Raja Muthirai Part 1 Ch33 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
ராஜ முத்திரை முதல் பாகம் – சாண்டில்யன்
அத்தியாயம் – 33 இதயத்தின் இன்பக் காற்று
Raja Muthirai Part 1 Ch33 |Raja Muthirai Part1|TamilNovel.in
இளநங்கை வீசிய ஒரே பார்வையில், அவள் இமைகளின் ஒரே ஓர் இமைப்பில், எதற்கும் அசையாத தம்பியின் இதயம் அசைந்துவிட்டதையும், அவன் அவள் பின்னால் ஓடி விட்டதையும் கண்ட சுந்தரபாண்டியன், ஆண் மக்களின் பலவீனத்தை நினைத்துத் தன் மனத்தில் பெரிதும் கசந்து கொண்டான். சதா பாண்டிய அரசைப் பேரரசாக உருவாக்குவதைத் தவிர வேறு சிந்தனையில்லாதவனும் வாழ்க்கையில் பெண்களை இரண்டாம் பட்சமாகவே வைத்திருந்தவனுமான பாண்டிய மன்னன், இளநங்கையும் தம்பியும் எதிரிலிருந்த விடுதிக்குள் நுழையாமல் அதைச் சுற்றிச் சென்றதைக் கண்டதும்; இகழ்ச்சிப் புன்முறுவலொன்றை ஒரு வினாடி இதழ்களில் கூட்டிவிட்டுப் பிறகு சிந்தனையிலாழ்த்தவனாய் மீண்டும் தனது விடுதிக்குள் சென்று விட்டான். மன்னன் சிந்தனைகள் நாட்டுச் சூழ்நிலைப் பற்றியும், முத்துக்குமரியின் மறைவு பற்றியும், பலபடி சிதறிக் கொண்டிருந்ததென்றால், அவன் தம்பியின் சிந்தனை மட்டும் ஏதோ ஒரு வழியில் வயித்துக் கிடந்தது. அதே நேரத்தில். விடுதியிலிருந்து பாண்டிய மன்னன் பல விḥஷயங்களைப்பற்றிச் சிந்தித்தான், பேசவில்லை. தம்பி வீர பாண்டியனோ பல விஷயங்களைப் பற்றிப் பேசினான். சிந்திக்க முடியவில்லை. அத்தகைய விபரீத நிலையில், பெரும் பலவீனத்தில், இளதங்கையுடன் வீரபாண்டியன் அவளிருந்த விடுதியைச் சுற்றி அருவிக்கரையை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தான்.
மன்னன் விடுதியிலிருந்து கிளம்பியது முதல் அவனை அதிகமாகத் திரும்பிப் பார்க்காத இளநங்கை, ஏதாவது ஓரிரு பதில்கள் சொல்வதற்கு மட்டுமே இரண்டு மூன்று முறைகள் திரும்பிப் பார்த்தானானாலும், அந்த இரண்டு மூன்று முறைகளிலும் வீரபாண்டியன் நிலைகுலைந்தே போனான். தானிருந்த விடுதியை அடைந்ததும் அதைச் சுற்றிச் செல்ல முயன்ற இனதங்கை அவனைத் திரும்பி நோக்கி, “அருவி பின்புறமிருக்கிறது” என்று கூறிவிட்டு மேலே நடந்தாள்.
வீரபாண்டியன் அந்தப் பார்வையிலும் ஓர் இன்ப அருவி, ஓர் அமுத தாரை இருந்ததைக் கண்டானாகையால் எதுவும் பேசாமல் அவனைப் பின்பற்றிச் சென்றான், ஆனால் அவன் எழில்கள் அவனிடம் ஏதேதோ பேசின, அவனை நோக்கி நகைத்தன, அவனை ஈர்த்தன.
மலைச்சரிவிலிருந்து அந்த விடுதியைச் சுற்றிச் சென்று மலை ஏற்றத்தில் ஏறத் தொடங்கிய இளநங்கையின் கால்கள் கற்களில் மாறி மாறி ஊன்ற முற்பட்டதால் அவள் இடை அசைந்து அசைந்து தோள்களும் மாறி மாறி இயங்கியதாலும், கால்கள் ஊன்றிய அதிர்ச்சியினாலோ என்னவோ தலையிலிருந்த இரண்டு செண்பகப் பூக்களிலொன்று தெறித்துத் தரையில் வீழ்ந்தாலும், ஏதோ இந்திரலோக விந்தைகளைக் காண்பதுபோல் அவன் பின்புற எழிலசைவுகளைக் கண்டுகொண்டிருந்த வீரபாண்டியனின் புத்தி, அவளைத் தவிர வேறெதையும் நினைக்கும் ஆற்றலை இழந்து கிடந்தது. கீழே விழுந்த அந்தச் செண்பக மலரைக் கூட அவன் ஏதோ செய்யத்தகாத காரியத்தைச் செய்பவன் போல் திருட்டுத்தனமாக எடுத்துத் தன் கச்சையில் செருகிக் கொண்டான். விடுதிக்கு வலப்புறத்தில் மலைச்சரிவில் ஏறி விடுதிக்குப் பின்புறம் வந்த பின்பும், அங்கு தங்களைப் பார்ப்பவர்கள் யாருமில்லையென்பதை உணர்ந்த பின்பும் கூட வீரபாண்டியன் ஏதும் பேசச் சக்தியற்றிருந்தான். விடுதியில் பின்புறத்தில் சற்றுத் தூரத்திலிருந்த பந்த வெளிச்சம் வீசியதால் அதிலிருந்து சற்றுத் தள்ளியிருந்த அருவி இருட்டைக் கிழிக்கும் இந்திராஸ்திரம்போல மலையைக் கிழித்து, பளிச்சென்று ஒளிவீசி ஓடிக் கொண்டிருந்ததென்றாலும் இயற்கையின் அந்த இந்திர ஜாலத்தைக் கூட அவன் ரசிக்கவில்லை.
இளநங்கை பேசாமல் நடந்து அருவியை நோக்கி சென்றாள். அவள் அருவிக்கும் பந்தத்துக்கும் இடையே வந்ததும் அவள் மேனி அந்தப் பந்தத்தின் ஒளியில் எப்படிப் பொன்னெனப் பிரகாசித்தது என்பதை மட்டுமல்ல வீர பாண்டியன் கண்டது; பந்தத்தின் ஒளிவீச்சுக்குள் புகுந்ததும் அவள் சற்றே திரும்பிய போது அவள் கழுத்துக்கு அந்த ஒளி பெருமெருகு கொடுத்ததல்லாமல், அடுத்து எழுத்து தின்ற எழிலுக்கும் எத்தனை ஏற்றத்தை அளித்தது என்பதையும் கண்டதால், மேலே ஓர் அடிகூட எடுத்து வைக்காமல் நிலைத்து நின்றுவிட்டான் வீரபாண்டியன். இடையே சில நாட்கள் காணாவிட்டாலே புதுவேகம் கொடுக்கும் பெண்ணினத்தின் அற்புத அழகுகள் அவனை இழுத்து அலைத்துத் திணற அடித்துக்கொண்டிருந்த அந்தச் சமயத்தில், ஒவ்வோர் அங்க அசைவினாலும், அவ்வப்போது வெளிப்பட்ட அங்கலாவண்யங்களாலும் மனம் ஒரு நிலையில் நில்லாமல் பலவீனப்பட்டுவிட்ட வீரபாண்டியன் நின்ற இடத்திலேயே நின்று எதிரே அருவியை நோக்கி மெல்லடி எடுத்து வைத்துச் சென்றுகொண்டிருந்த இளநங்கையைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
இளநங்கையின் மனம் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்து கிடந்தது. பின்னால் வரும் இளவரசனின் நிலை அவளுக்கு நன்றாகப் புரிந்திருந்தாலும், அவன் வேகமும், வேட்கையும் அவளுக்கிருந்தாலும், அந்த வேட்கையையும், வேகத்தையும் சிறிதும் வெளிக்குக் காட்டாமலே அவள் மெல்ல நடந்து அருவிக்கருகிலிருந்த பாறையில் உட்கார்ந்துகொண்டாள் அதே பாறையில் முதல் நாளிரவும அதற்கு முன்பொரு நாளிரவும் முத்துக்குமரி அமர்ந்திருக்கிறாளென்பதை அறியாமலே அருவிக்கருகில் சற்று உயரமாயிருந்த இடம் அது என்ற காரணத்தால் அந்தப் பாறையில் அமர்ந்த இளநங்கை, தலைகுனிந்து அருவியைப் பார்த்துக் கொண்டிருந்தாளானாலும் அதில் அவன் எண்ணங்கள் லயிக்க மறுத்தன. கண்பார்வை முன்னே சென்றாலும் இதயத்தின் கூரிய கண்கள் பின்புறம் திரும்பியிருந்ததால் சில வினாடிகளின் தாமதத்துக்குப் பிறகு வீரபாண்டியன் மீண்டும் தன்னை நோக்கி வருவதைப் புரிந்து கொண்டாள்.
வீரபாண்டியன் நடை பழையபடி நிதானமாக ஒரே சீரான நடையாய் இருந்தாலும் அதில் அன்று மட்டும் சிறிது தயக்கமிருப்பது தெரிந்தது இளநங்கைக்கு. பந்தத்தின் வெளிச்சம் அவள் முதுகுப்புறம் இருந்ததால் தன்னுடைய பெரிய நிழலொன்று எதிரேயிருந்த அருவியில் விழுந்து நீரில் அல்லாடிக் கொண்டிருந்ததைக் கண்ட இளநங்கை, ஆயிரம் வெளி உறுதியிருந்தாலும் பெண்கள் பாடு இந்த விவகாரங்களில் அல்லாட்டம்தான் என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள். அவளுக்குப் பின்புறம் வந்து சற்று ஒதுங்கிய வண்ண ம் நின்று அருவி நீரில் ஆடிய அவளது திழாலாட்டத்தைக் கண்ட வீரபாண்டியன் அப்படி நினைக்கவில்லை… அந்த நிழலாட்டங்கூடத் தன் இதயத்தை எத்தனை தூரம் ஆட்டிவைக்கிறதென்பதை எண்ணிப் பார்த்தான். அதனால் வியப்பும், அவள் உட்கார்ந்திருந்த நிலையால் மலைப்பும் அடைந்த உள்ளத்துடன், அவளுக்குப் பின்புறம் நன்றாக வந்து நின்ற அவனும் நீரின் சலனத்தையும் நிழலின் சலனத்தையும் கவனித்தான்.
வீரபாண்டியன் கை அவள் தோளில் பலமாக உட்கார்ந்திருந்தது. அத்தனை புஜபலத்திலும் அவன் மனம் மட்டும் பெரிதும் பலவீனப்பட்டுக் கிடந்ததால், அருவியில் விழுந்து ஒன்றுக்கொன்று இணைந்து ஒரே உருவாகிவிட்ட தங்களிருவர் நிழலின் ஒன்றிய தன்மையையும் கண்டு அவன் புத்தி பலவிதக் கற்பனைகளைக் கிளப்பியிருந்தது. ஒருமுறை அவன் சற்றுத் தூரத்திலிருந்த கோட்டை மதில் சுவருக்கு அப்பாலிருந்த மலையையும் பார்த்து, அருகிலிருந்த அருவியையும் பார்த்தான். இரண்டும் பேரழகை அந்த இருளிலும் அள்ளிக் கொட்டின. தூரத்தே எழுந்த இரு மலை உச்சிகளும், எதிரே ஓடிய அருவியின் பளபளப்பும், அருவிக்கு அப்பாலிருந்த இரண்டு மூன்று புஷ்பச் செடிகளிலிருந்து உதிர்ந்த மலர்களும் பார்ப்பதற்குப் பெரும் பிரமையாக இருந்தாலும், இளநங்கையின் வனப்பில் இல்லாதது அவற்றில் என்ன இருக்கிறது என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டான். “மலையுச்சிகள், அருவியின் பளபளப்பு, மலர்களின் இதழ்கள், இதழ்களின் வழவழப்பு, மலரில் ஊறும் தேன், எது இல்லை இங்கு?” என்று வினவினான் வீர பாண்டியன். மலரிலும் மென்மையான அவள் இதழ்களில் ஊறிய நீரின் விளைவாக உதடுகள் சிவந்து பளபனத்ததைப் பத்தத்தின் வெளிச்சத்தில் அவன் பார்த்தான். அதன் விளைவாக அவன் கைப்பிடி அவள் தோளில் அதிகமாக இறுகியது. வலித்தது அவளுக்கு. அந்த வலி வேண்டியும் இருந்தது.
இப்படி நீண்டநேரம் வீரபாண்டியன் பேசாமலே நின்றதாலும், அவன் பின்னால் நின்றது பெரும் வேதனையாயிருந்தாலும், ஏதாவது பேச்சுக் கொடுக்க வேண்டுமென்பதற்காக இளநங்கை அருவியைப் பார்த்த வண்ணம், “முத்துக்குமரி இங்குதான் இரண்டு நாட்களாக வந்து கொண்டிருந்தாள்” என்றாள்.
வீரபாண்டியன் பதில், “உம், உம்” என்று மட்டும் வந்தது. அத்த ‘உம் உம்’மில் பெண் காணாமற் போய்விட்ட வேதனையில்லை. அந்தச் சந்தர்ப்பத்திலிருந்த நிலையின் விளைவாகச் சங்கடம் மட்டும் ஒலித்தது.
“நேற்றுப் போனவள் திரும்பவில்லை” என்றாள் இளநங்கை மேலும்.
“எப்பொழுது உன்னிடமிருந்து விடை பெற்றுச் சென்றான்?”
இரவு முதல் ஜாமத்தின் முடிவில்.”
“பிறகு அவளை நீ பார்க்கவில்லை” என்றான் வீர பாண்டியன், ஏற்கெனவே மன்னனின் முன்பு சொல்லி யாகிவிட்ட விஷயத்தை எதற்காக வீரபாண்டியன் மீண்டும் கேட்கிறான் என்பது புரியவில்லை இளநங்கைக்கு.
“இல்லை,” என்று பதில் சொன்னாள் இளநங்கை
“அவள் நீண்ட நேரம் வராததால் இங்கு வந்து பார்த்தாய்?”
“ஆம்”
“இங்கு ஏதாவது விசேஷமாகச் தெரிந்ததா?”
“விசேஷமென்றால்?
“யாராவது தூக்கிச் சென்றதற்கு அறிகுறி? சண்டை நடந்ததற்கு அறிகுறி!” என்று கேள்விகளை உதிர்த்த வீர பாண்டியன் உதடுகள் அவள் காதுக்கருகில் உலாவின.
“ஒன்றும் தெரியவில்லை,” இளநங்கை இப்படிப் பதில் சொன்னாள். உண்மையில் அப்பொழுது அவளுக்கு ஒன்றுமே தெரியவில்லை. வீரபாண்டியனுக்குக்கூட எதுவும் தெரியவில்லை. அவன் கேட்ட கேள்விகளுக்கும் ஈடுபட்ட செயல்களுக்கும் சம்பந்தமில்லாதிருந்தது. எந்த அபாய மிருந்தாலும், எந்த முக்கிய அலுவலிருந்தாலும், எல்லா வற்றையும் மறைத்துவிடக்கூடிய திரைக்குள் இருந்தார்கள் அவர்களிருவரும். பல நாள் பார்க்காத பதற்றம், சமயம் அகப்பட்டதால் ஏற்பட்ட சலனம், வேட்கையால் விளைந்த வேகம் எல்லாம் அவ்விருவரிடையும் பொய்யையும், உண்மையையும் கலந்து நிறுவியிருந்தன. அருவிக்கரைக்கு வந்தது முத்துக்குமரியைப் பற்றிய ஆராய்ச்சிக்கு கேட்கப்பட்ட கேள்விகள் எல்லாமே அவளைப்பற்றி. இவையனைத்தும் வியாஜம்; பொய். அவர்களை ஈர்த்தது அனைவரையும் சர்க்கும் உலக மாயை. பேசியவை உணர்ச்சிகள். ஆராய்ச்சியோ ஆவல் தூண்டிய இடங்கள். இவை உண்மை ; பிரத்தியட்சம்,
திடீரென, “இளநங்கை அதோ பார்! அதோ பார் என்று கூறினான் வீரபாண்டியன். அந்த வேகத்தில் அவளை இறுகப் பிடித்து அணைத்துத் தூக்கியும் நிறுத்தனான். இளநங்கை அவன் கை தீட்டிய இடத்தைப் பார்த் தாள். “ஆம், ஆம்,” என்று பயத்துடன் உதிர்ந்தன அவள் சொற்கள். இதயத்தின் இன்பக் காற்று அச்சத்தின் வீச்சுக்கும் பெரு மூச்சுக்கும் இடமளித்தது.