Raja Muthirai Part 1 Ch38 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
ராஜ முத்திரை முதல் பாகம் – சாண்டில்யன்
அத்தியாயம் – 38 பாண்டியர் விருந்து
Raja Muthirai Part 1 Ch38 |Raja Muthirai Part1|TamilNovel.in
வீரபாண்டியன் சொற்களால் திக்பிரமை பிடித்து நின்றுவிட்ட கிழவனைக் கண்ட சுந்தரபாண்டியன், எரிகிற கொள்ளியை ஏறத் தள்ளுவது போல், “வீரரே! அந்தத் தாடி மீசையை அகற்றி உமது வேஷத்தைக் கலைப்பது சுலபமல்ல வென்பதும், சிறிதுநேரம் பிடிக்குமென்பதும் எனக்குத் தெரியும். வேஷத்துக்கு உபயோகப்படும் அரிதாரத்தையும் காட்டுக்கள்ளிப் பசையையும் நீக்குவது எளிதல்ல. தவிர, இந்த வேஷமெல்லாம் நாள்தோறும் போடுவதும் கஷ்டம் பத்து நாட்களுக்கொருமுறைதான் கலைக்கலாம். பழைய காலத்தில் நீண்ட நாட்கள் அரசிலிருந்து வெளியேறிய மன்னர்கள் புறநாட்களில் மறைந்துறையவும், திரும்ப நாட்டுக்கு வந்து நகர சோதனை புரியவும் இத்தகைய மாறு வேஷங்கள் பயன்பட்டன. இப்பொழுது அதே வேடம் என்று கூறிய மன்னனை இடைமறித்த வீரபாண்டியன், “-படைத் தலைவர்களுக்கு உபயோகப்படுகிறது,” என்றான்.
“அதுவும் வேவு பார்ப்பதற்கு,” என்றான் மன்னன்.
“பெண்களைத் தூக்குவதற்கும் பயன்படுகிறது,” என்று வீரபாண்டியன் தன் கருத்தை வெளியிட்டான்.
“கள்ளத்தனம்” என்று மன்னன் கடிந்து கொண்டான்.
“அதனால்தான் கள்ளர்கள் உதவி தேவையாயிருக் கிறது” என்றான் வீரபாண்டியன்.
“கள்ளர்களையும், வீரர்களையும் பிரிப்பது இந்தப் பகுதியில் கஷ்டமாயிருக்கிறது” என்றான் மன்னன்.
“அது மட்டுமல்ல…”
“வேறென்ன தம்பி?”
“சேரர்களையும் போசளரையும் பிரிப்பது கஷ்டம்.”
“ஏனப்படி?”
“சேரர்களுக்காகப் போசளர்கள் எந்த ஈனமான தொழிலையும் செய்யத் தயாராயிருக்கிறார்கள்.”
“பெண் திருடுவது உட்பட”
இப்படி அண்ணனும் தம்பியும் மாறி மாறிப் பேசப் பேசத் திகைப்பை உதறி எரிச்சலை அடைந்துவிட்ட இழவன், “பாண்டிய மன்னரே!” என்று சீறினான் குதுக்கிட்டு.
பாண்டிய மன்னன் அதைக் கவனித்ததாகவே தெரிய வில்லை. தம்பியை நோக்கியே சொன்னான் அவன், “தம்பி! வரவர உலகத்தில் எல்லாம் தலைகீழாகிக் கொண்டு வருகிறது” என்று .
“எப்படி அண்ணா?” என்று வினவினான் வீர பாண்டியன் மிகுந்த அக்கறையுடன்.
“உலகத்தில் கிழவன் குமரனாக விரும்புவதுதான் சகஜம்,” என்று இழுத்தான் மன்னன்.
“ஆமாம்.”
“குமரன் கிழவனாக விரும்புவதைக் கேட்டதுமில்லை; பார்த்ததுமில்லை.”
“இப்பொழுது கேட்கிறோம். பார்க்கிறோம்.”
“கேட்கிறோமா?”
“ஆம். கேட்காவிட்டால் எப்படிப் பார்க்க முடியும்?”
இதைக் கேட்ட மன்னன் நகைத்தான். வீரபாண்டியனும் அந்த நகைப்பில் கலந்து கொண்டான். தீவிரமான சந்தர்ப்பத்தில், மகள் அபகரித்துச் செல்லப்பட்ட நிலையில், இருவரும் இவ்விதம் தன்னைப்பற்றிச் சுட்டிச் சிரித்துப் பேசியதைச் சகிக்க முடியாத கிழவன், “வீரபாண்டியரே! நகைப்பதற்கு இது சமயமல்ல,” என்று கூவினான்.
அவன் முகத்தில் திகைப்பு அடியோடு மறைந்து சீற்றம் மண்டிக் கிடந்தது. அதைக் கவனித்த வீரபாண்டியன் அவனை நோக்கி நன்றாகத் திரும்பினான். “போசனப் படைத் தலைவரே! இந்தக் குரலால்தான் நீர் கெட்டீர் இதை நான் வந்தவுடனேயே கேட்டேன். கிழவேஷம் போடுகிறவர், இருபத்தைந்து ஆண்டுக் குமரன் குரலில் பேசுவது பொருந்தாது பாருங்கள். வயதுக்குத் தக்க குரலை அமைத்துக்கொள்ளவேண்டும். வேவுப்பயிற்சியில் இது முதல்படி இதைக் கூடப் புரிந்து கொள்ளாமல் நீர் எப்படி வேவுத்தொழிலில் ஈடுபட்டீர்? நவநந்தர்களை அழித்த சாணக்கியனின் சீடர்களும்தான் வேடந்தரித்தார்கள், ஆனால் இப்படி அகப்பட்டுக் கொள்ளவில்லை. காரணம் தெரியுமா?” என்று வினவினான் சர்வசாதாரணமாக.
போசளர் படைத்தலைவன் பதில் சொல்லவில்லை அவன் முகத்தில் ஆத்திரமே சுடர் விட்டது. வீர பாண்டியனே தொடர்ந்து சொன்னான்; “அங்கே வேவு காரர்களை இயக்கியவன் பெரும் அறிவாளி, சாணக்கியன் இயக்கினான். அது மட்டுமல்ல. சாணக்கியன் முனிவன் தர்மமறிந்தவன் பெண்களைத் தூக்கவும், கள்ளத்தனம் செய்யவும் அர்த்தசாஸ்திர அறிவை உபயோகப்படுத்த வில்லை. உம்மை இங்கு அனுப்பியவன் காமுகன் ஏற்கெனவே முத்தைக் களவு செய்தவன். அதுவே குற்றம் இப்பொழுது அரசகுமாரியையும் கடத்திச் சென்றிருக் கிறான். அது பயங்கரமான இரண்டாவது குற்றம். தர்மத்துக்கும் அவனுக்கும் சம்பந்தம் கிடையாது. பாண்டிய அரசகுமாரியின் உடலில் ஊசிமுனையளவுக்குத் தீங்கிழைத் தாலும் அவன் நாடு எரியும். அவனைக் கொல்லமாட்டேன் பிடித்து உயிருடன் பாண்டிய நாட்டுக் கழுகுகளுக்கு.” இதற்குமேல் வீரபாண்டியன் பேசவில்லை. இதைச் சொன்ன அவன் முகம் பேய் முகமாக மாறிவிட்டதைப் போசளர் படைத்தலைவன் கவனித்தான். வீரபாண்டி, யனின் எழில்மிகுந்த நகைப்புச் சொட்டும் விழிகளில் பிணங்கொத்தும் கழுகுகளின் பார்வை படர்ந்துவிட்ட தையும் அவன் பார்த்தான். அதுவரை நடுங்காத அவன் உடலும் ஒருமுறை லேசாக நடுங்கியது. தன் கதி அதோகதிதானென்பதைத் தீர்மானித்துக்கொண்ட போசளர் படைத்தலைவன் சிலையென நின்றான், இளவரசன் உக்ர அக்னியின் முன்னிலையில்.
ஆனால் திடீரென அந்த அக்னி அணைந்தது. வீரபாண்டியன் விழிகளில் மீண்டும் சாந்தம் நிலவியது. “படைத்தலைவரே! காவலர் இல்லம் சென்று உமது வேஷத்தைக் கலைத்து வாரும். பகல் போஜனவேளைவின் போது மீதி விஷயங்களைப் பேசுவோம் உம்மிடம் நான் அறிய வேண்டிய விஷயங்கள் சில இருக்கின்றன,” என்றும் கூறி, அவன் செல்லலாமென்பதற்கு அறிகுறியாகக் கையையும் அசைத்தான்.
போசளர் படைத்தலைவன் சிறிது நேரம் அசைவற்று நின்றான். பிறகு திரும்பிச் செல்ல முற்பட்டான். அவன் நாலடி, நடந்ததும், “சிங்கணா!” என்று வீரபாண்டியன் விடுத்த அழைப்பு அவன் நடையைச் சட்டென்று தேக்கியது. அவன் திரும்பி வீரபாண்டியனை நோக்கினான். “ஏன்?” என்று வினவவும் செய்தான்.
“அருவிக்கரைச் சுவர்ப் பகுதியிலும் காவலிருக்கிறது.” என்று சுட்டிக் காட்டினான் வீரபாண்டியன்.
அவன் அதை எதற்காகச் சுட்டிக் காட்டுகிறானென் பதைப் புரிந்து கொண்ட சிங்கணன், “சரி,” என்று மட்டும் சொல்லி மேலே நடக்கத் துவங்கினான்.
“இன்னொரு விஷயம்.” வீரபாண்டியன் குரல் அவன் நடையை மீண்டும் தேக்கியது.
“என்ன?”
“நீங்கள் யாரென்பது பாண்டிய வீரர்களுக்குத் திட்ட மாகத் தெரியாது.”
“சரி.”
“இருப்பினும், நீங்கள் தப்ப முயன்றால் உடனடியாக என்னையோ, மன்னரையோ கேட்காமலே தக்கது செய்யும் படி வீரர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறேன்,” என்ற வீரபாண்டியன், அவன் செல்லலாமென்பதற்கு அறிகுறியாகத் தலையை அசைத்தான்.
‘தக்கது.’ என்று வீரபாண்டியன் குறிப்பிட்டது எது என்பதைச் சந்தேகமறப் புரிந்து கொண்ட சிங்கணன், மெல்ல மன்னன் விடுதிப் படிகளில் இறங்கிக் காவலர் அறைக்குள் சென்றதும் கதவைச் சாத்திக்கொண்டு கதவுக் கெதிரில் நின்று தனது வேஷத்தை கலைக்கத் தொடங் கினான். சற்று எட்ட இருந்த ஒரு பாத்திரத்திலிருந்து எண்ணெவை மெள்ள எடுத்துக் கன்னங்களிலும் முகவாய்க் கட்டையிலுமிருந்த தாடியிலும் அனாவசியமாகப் பெரிதாயிருந்த மீசையிலும் தடவினான். பிறகு எண்ணெயை ஆள்காட்டி விரலால் அழுத்தி அழுத்திச் சருமத்துக்குள் இறக்கிப் பொய் ரோமங்களை மெல்ல மெல்லப் பிய்த்து எடுத்தான். மாறுவேட சாத்திரப்படி அமைக்கப்பட்டிருந்த அந்தப் பொய்த்தாடி மீசைகளை எடுப்பது உண்மையில் பெரும் கஷ்டமாகவே இருந்தது சிங்கணனுக்கு. இருப்பினும் மெள்ளப் பொறுத்துக்கொண்டு வேடத்தை அறவே நீக்கிப் பழைய நிலைக்குத் தனது முகத்தைக் கொண்டுவந்த சிங்கணன், தனது வாலிப முகத்தைப் பார்த்து மகிழ்ச்சிப் பெருமூச்சு விட்டான். ‘சே சே! வீரனுக்கான வேஷமல்ல நான் போட்டது. இந்த முகத்தைப் போயும் போயும் சேரனுக்காக நான் ஏன் வீணாக அடித்துக் கொண்டேன்? என்றி சிறிது அலுத்துக்கொள்ளவும் செய்தான். பிறகு முகத்தை நன்றாகச் சுகந்தப் பொடிகளைக் கொண்டு கழுவினான். பிறகு நீராடும் உத்தேசத்துடன் அருவியை நோக்கிச் சென்றான்.
நீராடும் உத்தேசத்துடன் அறையைவிட்டு வெளியே வந்து காவலர் விடுதியிலிருந்து கீழிறங்கிய சிங்கணன் கோட்டைப் பகுதியைச் சுற்றுமுற்றும் பார்த்தான். எங்கும் காவல் பலமாயிருந்தது. கிழவனாக உள்ளே சென்று குமரனாக வெளியே வந்த சிங்கணன், காவல் புரிந்துகொண்டு புரவிகளை இழுத்து நடந்தும், ஈட்டிகளையும் வாட்களையும் கூர்பார்த்துக்கொண்டும் பலவித அலுவல்களில் ஈடுப்பட்டிருந்த வீரர்கள் தன்னைக் கவனித்தாலும், அதை எள்ளளவும் காட்டிக்கொள்ளாமல் கவனிக்காதவர்கள் போலவே நடந்து கொண்டதைக் கவனித்தான், தான் காவலர் விடுதியிலிருந்து கோட்டைக்குக் குறுக்கே நடந்த போதோ, இளநங்கை விடுதியைச் சுற்றி அருவியை நோக்கிச் செல்ல முயன்ற போதோ, யாரும் தன்னைக் கவனிக்காதது போல் தோன்றினாலும் அத்தனைக் கண்களும் தன்னைக் வெனிக்கின்றன வென்பதைச் சந்தேகமறப் புரிந்து கொண்ட சிங்கணன், பாண்டிய சகோதர்கள் படைகளை திர்வகிக்கும் இறமையை எண்ணிப் பெரிதும் வியந்தான். தான் உறங்கிய ஒன்றரை ஜாமத்துக்குள் வீரபாண்டியன் கோட்டைப்புறம் முழுவதையும் தன்னைப் பற்றி எச்சரித்தது எப்படிச் சாத்தியம் என்று எண்ணி ஏதும் புரியாமல் பிரமித்த சிங்கணன் அந்தப் பிரமிப்புடனேயே அருவியில் நீராடினான். பிறகு மீண்டும் தனது அறைக்குள் வந்து திலகமிட்டு, படைத்தலைவனுக்குரிய ஆடைகளையும் பெரு வாளையும் அணிந்து கம்பீர நடை நடந்து மன்னன் விடுதிக்குச் சென்றான்.
மன்னன் விடுதியை அவன் அடைந்தபோது நல்ல உச்சிவேளை, கதிரவன் உஷ்ணம் மிக அதிகமாயிருந்தது. அந்தக் கோட்டைப் பகுதிகளில் மலைப்பாறைகள் உஷ்ணத்தை வாங்கி விசிறியதன் விளைவாக, அத்தனை வெப்பத்தையும் லட்சியம் செய்யாமலும், தண்டனை எதுவாயிருந்தாலும் ஏற்றுக்கொள்ளும் திடசித்தத்துடனும் மன்னர் விடுதியில் நுழைந்த சிங்கணன், உள்ளேயிருந்த ஏற்பாட்டைக் கண்டு திகைத்தான். பஞ்சணையில்லாத மரமஞ்சத்தில் மன்னன் அமர்ந்திருந்தாலும், பெரும் மன்னனைப் போல் தன்னை வரவேற்க ஏற்பாடு பலமாயிருந்ததைப் போசளர் படைத்தலைவன் கவனித்தான். மன்னன் மஞ்சத்தை அடுத்த இரண்டு மஞ்சங்கள் விலை உயர்ந்த பாண்டிய நாட்டு விரிப்புகளால் மூடப்பட்டிருந்தன. இடையே இருந்த மற்றொரு மஞ்சத்தில் தங்கத் தட்டுகளில் உணவு வகைகள் பரிமாறப் பட்டிருந்தன. காவலர் மூவர் பொற்கிண்ணங்களைத் தாங்கி மேலும் பரிமாறத் தயாராக தின்றார்கள்.
இதையெல்லாம் கவனித்துப் பிரமித்த சிங்கணனை, “வாருங்கள் அமருங்கள்” என்று உபசரித்த வீரபாண்டியன், அவன் அமர்ந்ததும் தானும் ஒரு மஞ்சத்தில் அமர்ந்து கொண்டான். பிறகு போஜனம் பரிமாறப்பட்டதும் மன்னனனுடனும் இளவரசனுடனும் அவனும் உணவருத்தி னான். உணவு உள்ளே செல்வது பெரும் கஷ்டமாயிருந்தது போசளர் படைத்தலைவனுக்கு. பெரும் விபரீதத்துக்கு முன்னோடி என்பதைப் புரிந்து கொண்டதால் ஏதோ ஒப்புக்கு ஓரிருகவளம் அன்னத்தையும் இரண்டு பழங்களையும் உண்டு நீரருந்தினான். ஆனால் மன்னனோ வீரபாண்டியனோ எதைப் பற்றியும் யோசிக்காமல் நன்றாக உணவருந்தியதையும், சில வேளைகளில் இருவரும் சில பதார்த்தங்களைக் குறிப்பிட்டு ரசித்துப் பேசியதையும் கண்ட சிங்கணன் அவர்கள் மனோநிலையை நினைத்துப் பெரிதும் ஆச்சரியப் பட்டாள். இருவரும் உணர்ச்சியற்ற மரக்கட்டைகளாயிருந்தாலொழிய, பெண்ணும் போய், போரும் துவங்கவிருக்கும் நிலையில் உணவை ரசித்து அருந்த முடியாதென்று தனக்குள் சொல்லிக்கொண்டதன்றி அவர்களை வெறுப்புடன் நோக்கினான். அதுமட்டுமின்றி தன் நிலையில் அவர்களில்லையென்பதையும் புரிந்து கொண்டான். பலியிடுவதற்கு முன்பு ஆட்டுக்கு எப்படி உணவளித்து உபசாரம் செய்வார்களோ அப்படித் தனக்கு உபசாரம் நடக்கிறதென்பதை அறிந்துகொண்ட சிங்கணன், பொற் பாத்திரத்தில் கை கழுவி மஞ்சத்தில் மல்லாந்து உட்கார்ந்து கொண்டான்.
பாண்டிய சகோதரரிருவரும் நிதானமாக உண்டு முடித்துக் கைகழுவி வீரர்கள் நீட்டிய பட்டுத் துண்டுகளில் கைவாய் துடைத்த பின்பு வீரர்கள் போஜனத் தட்டுக்களை எடுத்துச் சென்றார்கள். அதற்குப் பிறகு வீரபாண்டியன் போசளனை நோக்கித் திருப்பி கேட்டான், “படைத்தலைவருக்கு உணவு திருப்திதானே என்று .
“பாண்டியர் விருந்தைக் குறை சொல்ல முடியுமா?”என்று கேட்டான் சிங்கணன் தைரியத்துடன்.
அவன் தைரியத்தை வீரபாண்டியன் மட்டுமல்ல ஜடாவர்மனான சுந்தரபாண்டியனும் மெச்சினான். வீரபாண்டியன் மெச்சியதற்கு அறிகுறியாகத் தலையை மட்டும் அசைத்தான், “உங்கள் பாராட்டுதலுக்கு நன்றி,” என்று மன்னன் வாய்விட்டுச் சொன்னான்.
அடுத்த விநாடி வீரபாண்டியனின் கழுகுக் கண்கள் சிங்கணனை நோக்கின. பாண்டியர் விருந்தைக் குறை சொல்ல முடியாதென்றீர்கள் சிங்கணரே! நீர் ஒழுங்காக நடந்துகொண்டால், பாண்டியர் நீதியையும் குறைசொல்ல முடியாது. நீர் இந்தக் கோட்டையிலிருந்து உயிருடன் வெளியே செல்வதா இல்லையாவென்பது உம்மையே பொறுத்திருக்கிறது. நான் சொல்வதைக் கவனமாய்க் கேளுங்கள்,” என்ற அவன் சொற்கள் மிகுந்த கம்பீரத்துடனும் திட்டமாகவும் ஒலித்தன. திடீரென அவன் குரலில் ஏற்பட்ட மாறுதல் சிங்கணனுக்கும் சிறிது அச்சத்தை விளைவித்தது. ஆனால், அவன் சொற்கள் தொகுத்த கதை வியப்பின் உச்சிக்குக் கொண்டு சென்றது சிங்கணனின் சித்தத்தை.