Raja Muthirai Part 1 Ch47 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
ராஜ முத்திரை முதல் பாகம் – சாண்டில்யன்
அத்தியாயம் – 47 சிகிச்சை
Raja Muthirai Part 1 Ch47 | Raja Muthirai | TamilNovel.in
கோட்டாற்றுக்கரைத் தலைவனான விஜயவர்மன், தான் பெண்ணென்றறிந்ததும் தன்னை நோக்கி வாயைப் பிளந்து பிரமித்ததை எண்ணிப் பார்த்த இளநங்கை போர்க்களத்தில் புரவி மீதமர்ந்திருந்த அந்தச் சமயத்திலும் புன்முறுவல் கொண்டாள். தன்னைப் பயங்கரப் பெண்ணென்று வீரபாண்டியன் சொல்லிப் போனதை நினைத்ததும் அவளுக்குச் சிறிது ஆத்திரம் வந்த தென்றாலும் அந்த ஆத்திரத்திலும்கூட இன்பம் கலந்து தானிருந்தது. தனக்குப் பயங்கரப் பட்டத்தை அளித்து விட்டு நூறு வீரர்களும்
, விஜயவர்மனும் பின் தொடரக் கோட்டையை நோக்கிச் சென்றுகொண்டிருந்த வீரபாண்டியனைச் சிறிது நேரம் நின்ற இடத்திலிருந்தே உற்று நோக்கினாள். கேவலம், படை அணிவகுப்பினாலும் தாக்க வேண்டிய முறையை முன்னோக்கி வகுத்துக்கொண்டதாலுமே அரை ஜாமத்திற்குள் போரை வெற்றிகரமாக முடித்துக் கொண்ட வீரபாண்டியன், கோட்டையை நோக்கிச் சென்ற அந்தத் தருணத்திலும் எந்தவிதப் பதற்றத்தையும் காட்டாததையும், போரில் அசுரத்தனமாகப் பாய்ந்த அவன் சாம்பல் நிறப் புரவிகூட வழக்கமான நிதானமான ஒரே சீரான அந்தப் பழைய நடையைப் போட்டுக்கொண்டு சென்றதையும் கவனித்த அந்த வீரப் பெண்மணி, புரவிக்கும் எசமானனுக்குமுள்ள ஒற்றுமையை நினைத்து வியப்புப் பார்வையொன்றையும் அந்தத் திசையில் வீசினான்.
முதலில் விஜயவர்மன், அடுத்தபடி வீரபாண்டியன், பின்னால் சுமார் நூறு புரவி வீரர்கள் பந்தங்களின் ஒளியில் சென்றுகொண்டிருந்த நிலையில், வீரபாண்டியன் உருவம் மட்டும் அதிக உயரமாகத் தெரிந்ததைக் கண்ட இளநங்கை ‘மனிதர்களில் இவர் உயர்ந்தவர்தான். சந்தேகமில்லை’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள். பிறகு தன் அலுவலைக் கவனிக்கப் புரவியைத் திருப்பிப் போர்க்களத்தைக் கவனித்தாள். மலைச்சரிவின் கீழேயுள்ள சமநிலத்தில் போர் நடந்திருந்தாலும் அவள் எதிர்ப்படையின் முன் விளிம்பிலேயே தாக்கித் தேக்கிவிட்டதின் விளைவாக மலைச்சரிவின் முனையில் நின்றிருந்தபடியாக எதிரே விரிந்த படுகளத்தை நன்றாகப் பார்வையிட்டு முடிந்தது அவளால். ஆங்காங்கு பாண்டிய வீரர்கள் தங்கியிருந்த பந்தங்களின் வெளிச்சத்தில் அந்தப் படுகள் கோரக் கதையைச் சொல்லியது.
வேல் தாக்கி மாண்ட வீரர்களின் சடலங்கள் சில மல்லாந்து கிடந்ததன்றி விழித்த கண்ணை வானை நோக்கியும் வெறித்துப் பார்த்துக்கொண்டு கிடந்தன. வாள் தாக்கி புரவியிலிருந்து கீழே உருண்டு விட்ட சிலர் பூமியை முத்தமிட்டுக் கொண்டிருந்தனர். புரவிகள் சில வேலால் தாக்குண்டு விழுந்தாலும் உயிர் போகாமையால் உயிருக்கு மன்றாடிக் கால்களைப் பயங்கரமாக உதைத்துக் கொண்டிருந்தன. சட்டென்று சாய்ந்து விட்ட வீரர்களின் குருதி பாறைகள்மீது தெளித்து பந்த வெளிச்சத்தியின் பயங்கரச் சிவப்பைக் காட்டின. சில புரவிகள் மரணகனைப்புக் கனைத்தன. வீரர் சிலர் படுகாயமுற்றதால் ஆங்காங்கு முனகிக்கொண்டிருந்தனர். இன்னும் சிலர் எழுந்திருக்க முயன்று முடியாமல் தொப்பென்று விழுந்து கொண்டிருந்தனர். ரத்தமும் குரூரமும், கொலையும் இம்சையும் கலந்த அந்த படுகளக் காட்சி இளநங்கையின் இதயத்தில் பெரு வேதனையைத் தந்தது.
இருப்பினும் கடமையைச் செய்யவேண்டிய காரணத்தால் தனது புரவி வீரர்களில் சிலரை அழைத்து நிராயுதபாணிகளாய் நின்ற எதிரி வீரர்களை ஒன்று திரட்டும் படிக்கும், காயமடைந்தவர்களை ஒருபுறம் சேர்க்கும் படிக்கும் உத்தரவிட்டாள். அவள் உத்தரவுப்படி சுற்றிலும் புரவிகள்மீது வளைய வந்த வீரர்கள் எதிரிப் படையில் இறவாமல் மிகுந்தவர்களைத் திரட்டிப் புரவி வளையத்துக்குள் இருத்தினார்கள். காலாட்களை விட்டுக் காயமடைந்தவர்களை ஒருபுறம் தூக்கிச் சேர்க்க வைத்தார்கள். இந்த ஏற்பாடுகள் நடக்கக் கிட்டத்தட்ட ஒரு ஜாம நேரம் பிடித்ததால் அதற்குள் கோட்டைக்குள்ளிருந்து காயமடைந்தவரைத் தூக்கிச் செல்லப் பாரி வண்டிகளும் வரவே, அவற்றில் காயமுற்றோரைத் தூக்கிச் செல்லப் பணித்த இளநங்கை சிறைப்பட்ட எதிரிப்படையினருடன் தன் படையை நடத்திக்கொண்டு கோட்டையை நோக்கிச் சென்றாள்.
அவள் கோட்டைக்குள் நுழையும்போது போர் முடிந்து ஒன்றரை ஜாமமே ஆகியிருக்குமென்றாலும், அந்த ஒன்றரை ஜாமத்திற்குள் கோட்டைக்குள் எத்தனை கெடு பிடியைப் பாண்டிய இளவரசன் ஏற்படுத்தி விட்டானென்பதைக் கண்ட இளநங்கை மேலும் பிரமிப்புக்கே உள்ளானாள். கோட்டையின் வாயிற்கதவுகள் இரண்டும் நன்றாகத் திறந்திருந்தாலும் அவள் கோட்டை வாயிலை அணுகியதும் அவற்றைக் காத்து நின்ற புரவி வீரர்கள் இருவர் கொம்புகளை எடுத்துப் பலமாக ஊதினார்கள். மற்றும் அணிவகுத்து நின்ற புரவி வீரர்கள் வாட்களைத் தாழ்த்தி உபதளபதிக்கு வணக்கம் செலுத்தினார்கள். புரவி வீரர் அணிவகுப்புக்குள் நுழைந்து பத்து அடிகள் அவள் சென்றதும் ஒரு புரவி வீரன் அவளைச் சந்தித்து, “நீங்கள் என் பின்னால் வரவேண்டும்” என்றான்.
“எங்கு?” என்று வினவினாள் இளநங்கை அந்த உத்தரவைக் கேட்டதால் சற்றே சினந்து.
“படைத் தலைவர் இருக்குமிடத்திற்கு,” என்று திட்டமாகக் கூறினான் அந்த வீரன்.
“சிறைபிடிக்கப்பட்டவர்கள்…?” என்று வினவினாள் இளநங்கை .
“அவர்களைக் கவனிக்க ஏற்பாடாகிவிட்டது என்றான் வீரன்.
அவன் அவ்விதம் சொல்லிக்கொண்டிருக்கும் போது சிறைப்பட்டவர்கள் வரிசையாகக் கோட்டையின் முன் பகுதிக்கு நடத்திச் செல்லப்படுவதைக் கண்ட இளநங்கையை “யார் உத்தரவின்மேல் இவர்களை அழைத்து செல்கிறீர்கள்?” என்று சீறினாள்.
“படைத்தலைவர் உத்தரவு” மிகுந்த உறுதியுடனும் அடக்கத்துடனும் பதில் வந்தது பக்கத்தில் புரவி மிகுந்த வீரனிடமிருந்து. “தாங்கள் வந்தால் அழைத்துச் செல்ல சித்தமாயிருக்கிறேன்!” என்றும் கூறிய அந்த வீரன் புரவின் எதிரேயிருந்த தெருவழியாகத் திருப்பவும் செய்தான்.
அவனுடன் வாதிப்பதில் பயனில்லை என்பதை உணர்ந்த இளநங்கை ஏதும் பேசாமல் புரவி வீரனை தொடர்ந்தாள். இரண்டு மூன்று உள்ளரண்களைத் தாண்டிச் சென்ற இளநங்கைக்கு அந்தக் கோட்டையின் பலம் நன்றாகப் புரிந்தது. கொற்கைக் கோட்டையின் பலம் அதற்கில்லையென்றாலும் அதுவும் அப்படிச் சப்பையான கோட்டையல்ல வென்பதையும், அதன் காவலும் அப்படி அற்பமானதல்லவென்பதையும் புரிந்துகொண்டாள். சச்சதுரமான அந்தக் கோட்டாற்று நகரத்தைச் சுற்றி மதிலரண்கள் நான்கிருந்ததையும், வாயில்களும் ஒன்றுக் கொன்று நேராக இல்லாமல் ஒரு வாயிலைத் தாண்டியதும் சுவர் தென்பட்டுப் பிறகு சற்றுச் சுற்றிய பின்பே அடுத்த வாயில் தெரிந்ததையும் கண்ட இளநங்கை, பலமான எதிர்ப்பை எதிர்பார்த்தே அந்த அரண்கள் அமைக்கப் பட்டிருப்பதைப் புரிந்து கொண்டாள். கோட்டாற்றுக் கரை நல்ல அகல நீளமுள்ள பெரும் நகரமாயிருந்தது. உள்ளே கடை வீதிகளும், வீடுகளும், படைவீடுகளும் சாதாரண மக்கள் இல்லங்களும் நெருக்கமாகவும் இருந்தன. மக்கள் கூடிய வரையில் பயமில்லாதவர்களாய் இருந்ததையும் போரை முடித்து உள்ளே நுழையும் வீரர்களைப் பார்க்க ஆங்காங்கு மக்கள் வீட்டுமுனைப்புகளிலும், உப்பரினைகளிலும் நின்றதையும் கவனித்த இளநங்கை, வீரர்களான மக்களே அன்று தோற்கடிக்கப்பட்டார்களென்பதை உணர்ந்து சிறிது வருத்தமும் கொண்டாள்.
இப்படி ஊரை அளவிட்டுக்கொண்டே வந்ததால் பயண அவகாசத்தைக் கூடக் கவனிக்காத இளநங்கையைக் கூட வந்த வீரன் எச்சரித்து, “உபதளபதியவர்களே, தளபதியின் இல்லம் வந்தாகிவிட்டது.” என்று உணர்த்திய பின்பே தலையைத் தூக்கி எதிரேயிருந்த பெருமாளிகையின் மீது கண்ணை ஓட்டினாள் அவள். அம்மாளிகையே ஒரு கோட்டைமாதிரியிருந்ததையும் அதன் வாயிலிலும் பல வீரர்கள் காத்து நிற்பதையும் அறிந்த இளநங்கை தனது புரவியை விட்டு இறங்கி அம்மாளிகையின் படிகளில் ஏறிச் சென்றாள். அவள் உள்புகுந்தபோது, மாளிகைப் படிகளில் நின்ற வீரர்கள் தலை வணங்கியதையோ, வாட்களைத் தாழ்த்தியதையோ கவனிக்காமல் பிரமிப்புடன் நடந்து உள்ளே சென்றாள். மாளிகையின் முன் கூடத்துக்கு வந்ததும் அங்கும் அவளைச் சந்தித்த இரு வீரர்கள் அவளுக்கு வழி காட்டி உப்பரிகைக்கு அழைத்துச் சென்றனர். உப்பரிகையின் அகலமான பெரும் படி வரிசையில் ஏறிச் சென்ற இளநங்கை படியின் உச்சியில் வீரபாண்டியன் தனக்காகக் காத்திருப்பதைக் கண்டதும் சிறிது நிதானித்தாள். மேற்படியிலிருந்த வீரபரண்டியன் அவள் நிதானத்தைக் கண்டு முறுவலித்துப் பிறகு அவளுடன் வந்த காவலர்மீது கண்ணைத் திருப்பியதும் அவர்களிருவரையும் தனிமையில் விட்டுக் காவலர் திரும்பச் சென்றனர்.
வீரபாண்டியன் இரண்டு படிகள் இறங்கி வந்து அவள் கைகளைப் பிடித்துக்கொண்டு, “இளநங்கை வா! என்னுடன்” என்று அவளை எதிர்கொண்டு இருபடிகளையும் ஏறி உப்பரிகைத் தாழ்வரை வழியாக அழைத்துச் சென்றான். அந்த உப்பரிகையின் தாழ்வரையில் இரு பெரும் அறைகளே இருந்ததைக் கண்ட இளநங்கை அவனை ஏறெடுத்து நோக்கி, “இது…?” என்று ஏதோ கேட்க முயன்றும், அவனுடன் தான் தனித்திருப்பதை நினைத்துப் பயத்தாலோ நாணத்தாலோ பேசமுடியாமல் மென்று விழுங்கினான்.
“கோட்டைத் தலைவன் மாளிகை, இதுதான் நாம் தங்குவதற்குச் சிறந்த இடம்,” என்று கூறிய வீரபாண்டியன் “இப்படி வா! இதைப் பார்!” என்று அவளை அழைத்துக் கொண்டு தாழ்வரையின் வெளியிடத்துக்குச் சென்று சுற்று முற்றும் காட்டினான்.
அங்கிருந்து அந்த நகரம் பூராவும் நன்றாகத் தெரிந்த தன்றிக் கோட்டையையும் தாண்டி மலைச்சரிவையும் காண முடிந்தது அவளால். “பார்த்தாயா? இங்கிருந்தால் நாமறியாமல் கோட்டையிலுள்ள எந்தப் பகுதியிலும் எதுவும் நடக்க முடியாது. அது மட்டுமல்ல, கிழக்குப் புறத்திலோ மேற்குப் புறத்திலோ எதிரி வந்தால் அவன் கால் காத தூரத்திலிருக்கும்போதே நமக்குத் தெரியும். ரகசியமாக இந்தக் கோட்டையை யாருமே அணுக முடியாது” என்று வீரபாண்டியன் அவளுக்குச் சுட்டிக் காட்டினான்.
‘’அதுதான் இந்தக் கோட்டையின் பலவீனம்” என்றாள் இளநங்கை.
“அது எனக்குத் தெரியாதா?” என்ற வீரபாண்டியன் புன்முறுவல் கொண்டான்.
இளநங்கை சட்டென்று தன் விழிகளை அவன்மீது திருப்பினாள். “அதனால்தான்…” என்று இழுத்தாள்.
“நாம் இங்கு வருவதை முன்பாகவே எதிரிக்குத் தெரியப்படுத்தினேன். அவனே கண்டுகொள்ளக் கூடியதைத் தெரியப்படுத்துவதில் நமக்கு என்ன நஷ்டம்?” என்று வினவிய வீரபாண்டியன், “இளநங்கை வா! கவசத்தைக் கழற்றி உன் காயங்களைப் பரிசோதிக்கிறேன்” என்று கூறி அவள் தோளைத் தன் கையால் பிடித்துத் திருப்பி இரண்டறைகளில் ஒன்றுக்கு அவளை அழைத்துச் சென்றான்.
அவளுக்காக அவன் ஏற்பாடு செய்திருந்த அறை விசாலமாயிருந்தது. அந்த அறையைத் தாண்டிச் சில அடிகள் தள்ளி நீராட்ட அறையொன்றும் இருந்தது. அவளுடன் முதலறைக்குள் நுழைந்த வீரபாண்டியன் தன் இரு கைகளாலும் அவள் தலைக்கவசத்தைக் கழற்றி எடுத்தான். கவசத்தை எடுக்கும்போது அதில் சிக்கிக்கிடந்த அவள் குழல்களிரண்டொன்றுகூட அறுந்து போகாமல் மிக எச்சரிக்கையுடன் சிக்கல்களை நீக்கிக் கவசத்தைக் கழற்றி அவள் தலையைக் கோதி விட்டான். அவன் எச்சரிக்கை கண்டு புன்முறுவல் கொண்ட இளநங்கை, “ஆமாம்! உங்கள் கவசத்தை நீங்கள் கழற்றவில்லையே?” என்று வினவினாள்.
“உன் காயங்களைக் கவனித்த பிறகு கழற்றுகிறேன்.” என்று கூறிய வீரபாண்டியன் அவள் மார்பிலிருந்த இரும்புக் கவசத்தின் பூட்டுகளையும் நீக்கித் திறந்து மார்பை உற்று நோக்கினான். “மார்பில் ஒரே ஒரு காயம் இருக்கிறது. கழுத்திலும் காயம் சற்று ஆழ இருக்கிறது. ரத்தம் நின்று விட்டது பாதகமில்லை. நீ நீராடிவிட்டு வா. பிறகு வந்து பார்க்கிறேன்” என்று கூறிய வீரபாண்டியன் பக்கத்திலிருந்த தனது அறைக்குச் சென்றான்.
போரில் போகாத பிராணன் அவன் மார்பு அங்கியைக் கழற்றுகையில் போய்விடும் போலிருந்தது இளநங்கைக்கு. அவன் மெல்ல மார்பங்கியின் பூட்டுகளைத் திறந்து நீக்கிக் கழற்றியதும் உற்று உற்றுப் பார்த்ததும் சங்கடம் தாங்கவில்லை அவளுக்கு. “கோபத்திலும் கழுகுப் பார்வை. காமத்திலும் கழுகுப் பார்வை இவருக்கு. என்ன அப்படி உற்று உற்றுப் பார்ப்பது?’ என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்ட இளநங்கை, கைகளைத் தட்டி வீரனொருவனை அழைத்து, “நீராட வேண்டும், அண்டாவில் நீர் நிரப்பு.” என்றாள்.
“நீர் நிரப்பியிருக்கிறது. தாங்கள் நீராடலாம்,” என்றான் உள்ளே வந்த வீரன்.
“யார் நிரப்பச் சொன்னது உன்னை?” என்றாள் இள நங்கை, நிரப்பச் சொன்னது யாரென்பது தெரிந்திருந்தும்.
“படைத்தலைவர்” என்றான் வீரன்.
“ஊஹூம்…” என்று உறுமினாள் இளநங்கை காரண மில்லாமல்.
“வாசனைப் பொடிகளும் வைத்திருக்கிறேன்” என்றான் வீரன்.
இளநங்கைக்குக் கோபம் பீறிட்டுக்கொண்டு வந்தது “மஞ்சள் பொடி வைக்கவில்லையா?” என்று சீறினாள்.
“வைத்திருக்கிறேன்.” என்று கூறித் தலை வணங்கிய வீரன், “அதோ அந்தப் பேழையில் பட்டுச் சீலைகள் கூட இருக்கின்றன.” என்றான்.
இளநங்கை அவனிடம் பதிலேதும் பேசாமல் விடுவிடு என்று நடந்தாள். நீராட்ட அறைக்குச் சென்று நீராட்டத்தை முடித்துக் கொண்டாள். அவள் முகத்திலிருந்த கீறல்களும், கழுத்து மார்புப் புண்களும் வாசனைத் திரவியங்கள் பட்டதும் எரியத் தொடங்கியதைக் கூட லட்சியம் செய்யாமல் நீராடி முடித்துத் தனது அறைக்குத் திரும்பிய இளநங்கை, அறைக் கோடியிலிருந்த பேழையை எடுத்துப் பட்டுச் சீலையொன்றை அணிந்து தலையை உதறிக் கோடரி முடிச்சொன்றையும் போட்டுக்கொண்டு மஞ்சத்திலமர்ந்து கொண்டாள். அவள் நீராடி முடித்த மூன்று நாழிகைகள் கழித்து, இடுப்பிலொரு பட்டு வேட்டியும் தோளிலொரு சரிகைத் தகடியையும் போட்டுக்கொண்டு கையிலொரு சிறு கிண்ணத்துடன் மணமகன் போல் உள்ளே நுழைந்த வீரபாண்டியனின் அழகு அவளைப் பிரமிக்க வைத்தது. அவன் கையிலிருந்த தங்கக் கிண்ணத்தை அவள் பார்த்து, “இது எதற்காக?” என்று அதிசயித்தாள்.
அவள் முகத்தில் நிரம்பி வழிந்த வியப்பைக் கண்ட வீரபாண்டியன், அதைப் பற்றிக் கவலைப்படாமல், மஞ்சத்தில் வந்து முகப்பில் உட்கார்ந்துகொண்டு, “படுத்துக்கொள்” என்று உத்தரவிட்டான்.
“எதற்காக?” என்ற இளநங்கையின் குரலில் வெட்கமும், கோபமும் கலந்து ஒலித்தன.
“சிகிச்சை செய்ய வேண்டும்.” என்ற வீரபாண்டியன் கிண்ணத்தை ஒரு பக்கத்தில் வைத்து அவளைப் பலவந்தமாகப் படுக்க வைத்து, சிகிச்சையைத் தொடங்கினான்.