Raja Muthirai Part 2 Ch10 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
ராஜ முத்திரை இரண்டாம் பாகம் – சாண்டில்யன்
அத்தியாயம் – 10 காலன் சிரிப்பு
Raja Muthirai Part 2 Ch10 | Raja Muthirai | TamilNovel.in
“காமத்தின் வசப்பட்ட கட்டழகி முத்துக்குமரியின் கண்கள் வேறு, வீரரவி உதயமார்த்தாண்டவர்மன் கண்கள் வேறு,” என்று பரதபட்டன் சொன்னதில் தவறேதுமில்லையென்பதை அன்று அரண்மனையில் நடந்த நிகழ்ச்சிகள் சந்தேகமற நிரூபித்தன.
பரதப்பட்டனும் இந்திரபானுவும் மன்னவன் சன்னி தானத்திலிருந்து மெய்க்காவலர் விடுதிக்குச் சென்றதும் மன்னனைக் காண உட்புகுந்து, தன்னந்தனியே மன்னனுடன் நீண்ட நேரம் அறைக்குள் தங்கிய சாதாரணக் காவலனை வீரரவி விசாரித்த விவரங்களை மட்டும் இந்திர பானு அறிந்திருந்தால், ஆரம்பத்திலேயே தன்னை மன்னன் புரிந்து கொண்டுவிட்டான் என்ற உண்மையை அவன் உணர்ந்திருப்பான். ஆனால் அதற்கு எந்தவித அறிகுறியையும் காட்டாத வீரரவியின் நாடகத்தில் இந்திரபானு ஓரளவு ஏமாந்து சற்று எச்சரிக்கையைக் கைவிட்டே காரியங்களைச் செய்துவிட்டானாகையால் அவை மன்னனுக்குச் சான்றின் மேல் சான்று கிடைக்க உதவி செய்தன. அந்தச் சான்றுகளின் தொகுப்பில் ஒரு கட்டத்தை மட்டும் மன்னனைத் தனித்துக் காண வந்த வீரன் மன்னனுக்கு விவரித்தான்.
இந்திரபானுவையும், பரதபட்டனையும் அனுப்பி விட்டுக் காத்திருந்த அந்தக் காவலனை அழைத்துவரச் செய்த வீரரவி, மண்டபக் கதவு சாத்தப்பட்டதும் வந்த காவலனை நோக்கிக் கண்களை உயர்த்தினான். அந்தக் கண் பார்வையிலிருந்தே மன்னன் கேள்வியை உணர்ந்து கொண்ட காவலன் தனது பேச்சைத் துவங்கி, “நான் கடற்கரை மாளிகையில் காவல் புரிகிறேன்,” என்று கூறினான்.
மன்னன் முகமோ, கண்களின் பார்வையோ சிறிதும் எந்த மாற்றத்தையும் காட்டவில்லை. உதடுகளிலிருந்து சொற்களும் உதிரவில்லை. கேட்கவேண்டிய கேள்விகளை அவன் பார்வையே கேட்டது. ஆகவே, காவலனே பதில் சொன்னான் மளமளவென்று. ஏதோ தெய்வ சன்னிதானத்தில் மந்திரங்களைச் சொல்வதுபோல் அடக்கத்துடனும் தெளிவாகவும் அவன் சொற்கள் தொடர்ந்து உதிர்ந்தன. “நேற்றிரவு அந்தப் புதுக் காவலனைப் பாண்டிய குமாரி இருக்கும் உள்ளறைக்குத் தாங்கள் காவல் வைத்துச் சென்ற பிறகு உப சேனாதிபதி என்னைச் சந்தித்தார். அதுவும் மிகுந்த எச்சரிக்கையுடன் தூண்களின் பக்கவாட்டில் வந்து, உள்ளறைக் காவலனுக்குத் தெரியாமல் என்னைப் பார்த்து, ‘உள்ளறைக் காவலன் மீது ஒரு கண்ணை வைத்துக்கொள். எது நடந்தாலும் தலையிடாதே. மன்னர் உன்னை நாளை சந்திப்பார்’ என்று கூறிச் சென்றார். ஒரு வினாடி நான் திடுக்கிட்டேன். மாளிகைத் தலைமைக் காவலர் இருக்க, உபசேனாதிபதி எனக்கு நேரிடையாகக் கட்டளையிடுவது இதுவே முதல் தடவை. அதுவும் மன்னரை நான் நேரில் பார்க்கப் போவதும் எனக்கு அச்சத்தை விளைவித்தது. ஆகவே மிகுந்த எச்சரிக்கையுடன் கவனித்தேன். காவலை வழக்கப்படி சாதாரண முறையில் செய்வதாகப் பாசாங்கு செய்தேன். வாயிற்படியை அணுகும் போதெல்லாம் அடுத்த கட்டு வாயிற்படியிலும் ஒரு கண் வைத்திருந்தேன். புதுக் காவலன் கடைக்கட்டில் என்னைப்போலத்தான் காவல் புரிந்து கொண்டிருந்தான் நீண்ட நேரம். நாழிகைகள் ஓடின. உப்சேனாதிபதியின் எச்சரிக்கையில் அர்த்தமில்லையென்று நினைத்துச் சற்று ஏமாறக்கூட இருந்தேன். ஆனால் அர்த்த ஜாமவேளையில் புதுக் காவலன் நின்ற நிலையிலிருந்து உட்கார்ந்த நிலையை அடைந்தான். அதுவும் பாண்டிய குமாரியிருந்த அறையின் மேல் படியில்…” என்று சொல்லிக் கொண்டு போன சிறைக் காவலன் சற்று நிதானித்தான்.
‘மேலே சொல்’ என்பதற்கறிகுறியாகச் சேர மன்ன னின் கை மட்டும் அசைந்தது. மேலே சொன்னான் காவலன். ஆனால், அவன் சொற்களில் மந்திரம் போன்ற உச்சரிப்பில்லை. நிதானமில்லை. பய உணர்ச்சி நிரம்பிக் கிடந்தது. “நடுச் சாமத்தில் நடந்ததை இப்போது நினைத்தாலும் பிரமிப்பாய் இருக்கிறது மன்னவா! உள்ளறைக் காவலன் காவலனாக நடக்கவில்லை. மாளிகையே தனது போல் நடந்துகொண்டான். அவன் முகப்புப் படியில் உட் கார்ந்ததும் உள்ளிருந்து பாண்டிய குமாரி வந்தார். குனிந்து ஏதோ அவனைக் கேட்டார். அந்தச் சமயத்திலிருந்து இரு வரும் பேசிக் கொண்டேயிருந்தார்கள். என் காவல் கட்டுக்கும் அந்த உள்ளறைக்கும் இடையே மண்டபமிருப்பதால், சொற்கள் ஏதும் காதில் விழாவிட்டாலும், மண்டபப் பந்த வெளிச்சத்தில் காவலன் முகத்தை நான் நன்றாகப் பார்க்க முடிந்தது. பாண்டிய குமாரியை ஒரு முறைதான் பார்த்தேன். பிறகு அவர்களைக் காணவில்லை. ஆனால் அவர்கள் காவலனுக்குப் பின்பக்கத்திலிருந்திருக்க வேண்டும். காவலனின் உதடுகள் சொற்களை உதிர்த்துக் கொண்டேயிருந்தன. கண்கள் என் கட்டையே உற்று நோக்கிக்கொண்டிருந்தன. இருப்பினும் அவன் என்னைப் பார்த்துச் சொல்ல என்ன இருக்கிறது? நான்தான் ஏது மறியாதவன் போல், எதையும் பாராதவன்போல் நடந்து கொண்டேன்,” என்ற காவலன் சற்றுத் தனது சாமர்த்தியத்தையும் காட்டினான்.
“சரி, சரி, மேலே சொல்,” என்று மன்னன் முதன் முறையாகச் சொற்களை உதிர்த்தான். அவற்றில் சற்று வேகமிருந்ததால் காவலன் மிதமிஞ்சிய பயத்துடன் கூறி னான். “நடந்தது என்னவென்று திட்டமாகக் கூறமுடியாது மன்னவா. நான் மறுமுறை வாயிலைக் கடந்தபோது உள்ள றைக் கதவு மூடியிருந்தது. இருப்பினும் அங்கு செல்லத் துணிவில்லை எனக்கு. ஆனால் இரண்டாம் முறை நான் வாயிலைக் கடந்துபோது கதவு மூடியிருக்கவே உள்மண்டபத்தில் நுழைந்து அறைக்கதவினருகே உள்ளே பார்க்க முயன்றேன். பூட்டுத் துவாரத்தில் சிறிதுதான் பார்க்க முடிந்தது. ஆனால் சொற்கள் காதில் விழுந்தன…” என்றான் காவலன்.
“என்ன சொற்கள்?” இம்முறை வீரரவியின் குரலில் லேசான கடுமை தெரிந்தது.
காவலன் குழப்பத்துடன் சொன்னான். “எனக்குச் சற்றும் விளங்காத சொற்கள் மன்னவா. முத்து, கோடரி, காட்டுப் பாதைப் போர்- இப்படிப் பல சொற்கள் காதில் விழுந்தன. இதைச் சொன்ன சமயத்தில் உள்ளே புதுக் காவலன் பெரு உணர்ச்சிகளையும் காட்டினான். இந்திரபானு என்ற ஒரு சொல்லும் கேட்டது. ஆனால் முழுதும் ஏதும் கேட்க முடியவில்லை. திடீரென உள் விளக்கு அணைந்தது. பேச்சும் நின்றது.” என்ற வீரன் தனது செய்தி முடிந்து விட்டதென்பதற்கறிகுறியாகத் தலை தாழ்த்தி மன்னனை வணங்கினான்.
“அவ்வளவுதானா?”
“ஆம் மன்னவா. அதற்கு மேல் அங்கு நிற்காமல் நான் காவலுக்கு வந்துவிட்டேன். அடுத்த இரண்டு முறை நான் நடந்த பிறகு மூன்றாம் முறையில் அடுத்த கட்டில் நோக்கினேன். உள்ளறை விளக்கு எரிந்து கொண்டு இருந்தது. புதுக் காவலன் ஏதுமறியாத பூனை போல் வெளிப் படியில் உட்கார்ந்திருந்தான்.”
அத்துடன் அவன் போகலாமென்பதற்கறி குறியாகக் கையை அசைத்த சேரமன்னன் நீண்ட நேரம் உட்கார்ந்த நிலையிலேயே சிந்தனையில் ஆழ்ந்து கிடந்தான். பிறகு எழுந்திருந்து கனவில் நடப்பவன் போல் நடந்து அரண் மனைக்குள் சென்று உப்பரிகையிலிருந்த தன்னறைக்குச் செல்லும் படிகளில் ஏறினான். உப்பரிகையிலிருந்த வெளி யறைக்கு வந்ததும் அங்கிருந்த சாளரங்கள் மூலம் தூரத்தே தெரிந்த கடலையும், இடையே தெரிந்த பெரும் தோப்புகளையும், கடலுக்கு உருண்டு சென்று கொண்டிருந்த போர் வாகனங்களையும் உற்று நோக்கினான். பிறகு அரண்மனைக்கும் அரண்மனை மதிலுக்குமிடையில் கிழக்குப் பகுதியிலிருந்த இடைவெளியைக் கவனித்தான். மெள்ள மெள்ள அவன் இதழ்களில் குரூரப் புன்முறுவல் படர்ந்தது. கண்களில் விஷம் பரவியது. “இந்த இடம்தான் சரி. இங்கு தான் அவன் கண்களை மூடவேண்டும். செண்டு வெளிக்களியாட்டத்தில் யார் இறந்தாலும் எப்படி இறந்தாலும் யார் கேட்கப் போகிறார்கள்? வீரனாயிருப்பவன் அந்தக் களியாட்டத்தில் இறங்காமலிருக்கவும் முடியாது. ஆம் ஆம். அதுதான் சரி,” என்ற மன்னன் மெள்ள தனக்குள் நகைத்துக் கொண்டான். பிறகு பஞ்சணையில் படுத்துக் கொண்டு தீர்க்காலோசனையில் இறங்கினான்.
மாலை மெள்ள மெள்ள நெருங்கியது. கதிரவன் குட திசைக் கடலில் இறங்க முடிவு செய்து தனது கதிர்களின் தீட்சண்யத்தை மெல்ல மெல்ல அடக்கிக் கொண்டான். கடற்கரையை அடுத்த சோலைகளிலிருந்து ஜில்லென்ற காற்று மெல்லென்று வீசத் தொடங்கியது. சேரன் தலை நகரான திருவாழுங்கோட்டில் திரு உண்மையாகவே வாழ் கிறாளென்பதை வலியுறுத்திக் கதிரவன் எங்கும் பொன் முலாம் பூசினான். அந்த மாலை வேளையில் மன்னன் மனமும் கடற்கரைப் பூங்காற்றைப் போலவே குளிர்ந்து கிடந்தது. அவன் மந்தகாச வதனத்தைக்கண்ட அரண்மனைப் பாங்கிகள் காமநகை காட்டினர். மன்னனது புன் சிரிப்புக்காகவும் ஒரு பார்வைக்காகவும் ஏங்கியிருந்த அந்தப்புர மகளிர் பலர் அவன் வதனத்தில் தாண்டவமாடிய சந்துஷ்டியிலிருந்து இஷ்டசித்தியடைய அவனை நெருங்கி உறவாட முயன்றார்கள். ஆனால் அவை எதற்கும் இடங்கொடாத மன்னன் நகைத்து அவர்களை விலக்கிவிட்டு அரண்மனையிலிருந்து வெளிப்போந்து தனது ஒற்றைப் புரவி ரதத்தில் ஏறிக்கொண்டு கடற்கரை மாளிகையை நோக்கிச் சென்றான். மாளிகையை அடைந்ததும் அதன் கடைக்கட்டுக்கு வந்த மன்னன் முத்துக்குமரியிருந்த அறைக்குள் நுழைந்தான். மன்னன் சைகையைத் தொடர்ந்து காவலர் விலகிய பின்பும் உள்ளிருந்த முத்துக்குமரி மஞ்சத்திலிருந்த எழுந்திருக் காமலேயே அவனை அதிகாரம் ததும்பும் பாவனையில் ஏறிட்டு நோக்கினாள்.
வீரரவி எதிரிலிருந்த சிறு மஞ்சத்தில் தானாகவே அமர்ந்தான். கூண்டில் சிக்கிய பின்பும் எப்படிப் புலியின் தோரணை மாறுவதில்லையோ அப்படியே பலநாள் சிறை வாசத்துக்குப் பின்பும் சிறிதளவும் மாறாத பாண்டியன் மகளை வீரரவியும் ஏறெடுத்து நோக்கினான். “பாண்டியப் பெருமான் மகளுக்கு இங்கு ஏதும் குறையில்லை என்று நினைக்கிறேன்,” என்றும் கூறினான் மெள்ள.
“கூண்டிலடைக்கும் மிருகங்களுக்கும், பட்சிகளுக்கும் குறை வைப்பது மனிதன் பழக்கமல்ல,” என்றாள் முத்துக் குமரி.
“இது சிறையல்ல பாண்டியகுமாரி. இது என் சொந்த மாளிகை. ஆண்டில் மூன்று மாதங்கள் இங்கு நானே வசிக் கிறேன்,” என்றான் வீரரவி.
“கட்டுக்குக் கட்டு காவலர் இருக்கிறார்கள்” என்று சுட்டிக் காட்டினாள் முத்துக்குமாரி.
“நானிருக்கும் இடத்திலும் அப்படித்தான். மன்னர் மாளிகையில் காவலர் இருப்பது புதிதல்லவே?” என்றான் வீரரவி.
“சாதாரணக்காவல் வேறு, இத்தகைய காவல் வேறு.”
“ஏன்? என்ன வித்தியாசம்.”
“நடைமுறை தான் வித்தியாசம்.”
இதை கேட்ட மன்னன் கண்களில் கோபக் கனல் துளிர்த்தது. “ஏன், புதுக்காவலன் முறைதவறி நடந்து கொண்டானா? சொல் முத்துக்குமரி, அவன் தலையை இன்றே சீவி விடுகிறேன்” என்று சீற்றத்துடன் கூறவும் செய்தான்.
முத்துக்குமரியின் முகத்தில் பயத்தின் சாயை சரேலெனப் படர்ந்தது. “இல்லையில்லை, அவன் முறை தவறி நடக்கவில்லை,” என்று அவசர அவசரமாகச் சொன்னாள் முத்துக்குமரி.
மன்னன் இளநகை கொண்டான். ஆசுவாசப் பெரு மூச்சும் விட்டான். “அதுதானே கேட்டேன், அவனோ புதுக் காவலன். இந்த நாட்டானுமல்ல. அவனை இந்த முக்கிய காவலுக்கு நியமித்து விட்டேனே என்று பயந்தேன்,” என்று கூறினான் மன்னவன்.
முத்துக்குமரியின் வழிகளில் லேசாக அச்சம் உதயமா யிற்று, “என்ன! அவன் இந்த நாட்டவனல்லவா?” என்ற கேள்வியிலும் அச்சம் விரவிக் கிடந்தது.
“ஆம். இந்நாட்டவனல்ல,” என்றான் மன்னவன் சர்வ சாதாரணமாக.
“முன்பின் தெரியாதவனைக் காவலுக்கு நியமிக் கலாமா?” என்று வினவினான் முத்துக்குமரி.
“நமக்கு முன்பின் தெரிந்தவன், நம்பிக்கைக்குப் பாத்திரமானவன். அறிமுகப்படுத்தினால் நியமிக்கலா மல்லவா!” என்று கேட்ட மன்னன் முகத்தில் இளநகை மேலும் விரிந்தது.
“ஆம். நியமிக்கலாம், நியமிக்கலாம்,” என்று தடு மாற்றத்துடன் சொன்னான் முத்துக்குமரி.
“இவனை அறிமுகப்படுத்தியது யாரென்று நினைக்கிறாய்?”
“யார்?”
“நமது கூத்தன்.”
“கூத்தனா?
“இப்பொழுது சொல் இவனை நம்புவதா கூடாதா?”
“நம்பலாம், நம்பலாம்,” என்றாள் முத்துகுமரி வேகமாக.
வீரரவி ஒரு வினாடி மௌனம் சாதித்தான். பிறகு “பாண்டியகுமாரி! இவனைக் கூத்தன் அறிமுகப்படுத்தியது மட்டுமல்ல நான் இவனைக் காவலுக்கு அனுப்பியதற்குக் காரணம் இவன் சிறந்த வீரன்,” என்றும் சொன்னான்.
முத்துக்குமரியின் முகத்தில் போலி ஆச்சரியம் படர்ந்தது. “இவன் சிறந்த வீரனா!”
“ஆம். வேலெறிவதில் இணையற்றவன்,” என்று கூறி னான் வீரரவி.
“எப்படித் தெரியும் உங்களுக்கு?”
“கூத்தனே கூறினான், அவன் குடிசைப் பக்கம் வந்த மதயானையை இவன் வேலெறிந்து கொன்று விட்டதாக மதயானை மீது வேலெறிவது எத்தனை அபாயம், அதைக் கொல்வது எத்தனை கடினம் என்பது உனக்குத் தெரியுமல்லவா?” என்று வினவினான் வீரரவி.
“தெரியும், தெரியும்.”
“அவன் வேலெறிவதைப் பார்க்க உனக்கு இஷ்டமா?”
முத்துக்குமரியின் கண்களில் மீண்டும் மெள்ள மெள்ள அச்சம் படர்ந்தது. “நான் எதற்காகப் பார்க்க வேண்டும்?”
“வீரர்களின் சாமர்த்தியத்தை அரச மகளிர் காணுவது இயல்பு. ஆகவே அதற்கு ஏற்பாடு செய்யப் போகிறேன். இன்றிலிருந்து நான்காவது நாள் செண்டு வெளியில் நீ ஓர் அற்புதத்தைப் பார்க்கப் போகிறாய். விளைவு உன்னை அசர வைக்கும்,” என்று கூறிய மன்னன் ஆசனத்திலிருந்து எழுந்திருந்தான். “அந்த விளையாட்டுக்குப் பிறகு நீ இந்நாட்டு ராணியாகும் நாளும் அதி தூரத்திலிருக்காது” என்றும் கடைசியாக ஒரு சொல்லம்பை வீசிவிட்டு நடந்தான்.
அன்றிரவு தனது சேனாதிபதியை அழைத்துச் செண்டு வெளிக் களியாட்டத்துக்கு ஏற்பாடு செய்யுமாறும் உத்தரவிட்டான். அதற்குத் தலைவணங்கிய சேனாதிபதியை நோக்கி, “அரண்மனை உப்பரிகையிலிருந்து செண்டாயுதத் தைச் செண்டுவெளி நோக்கி எறிய முடியுமா?” என்று வினவினான் மன்னவன்.
“முடியும் மன்னவா.’
“அதற்கும் ஏற்பாடு செய்யுங்கள்,” என்றான் வீரரவி.
“எதற்கு?” சேனாதிபதியின் கேள்வியில் வியப்பு இருந்தது.
“அந்தச் செண்டு வெளியில் ஒருவன் ஆயுள் முடியும்,” என்ற மன்னன் சேனாதிபதியை அர்த்த புஷ்டியுடன் நோக்கினான்.
சேனாதிபதி திகைத்துப் போனான். “மன்னவா! இது அதர்மமாயிற்றே” என்றும் குழறினான்.
“தர்மத்தையும் அதர்மத்தையும் நிர்ணயிப்பது அரசன் கடமை, உன் கடமையல்ல, செல், சொன்னபடி செய்.”
அவன் கண்கள் விஷத்தைக் கக்கின. உதடுகள் சிரிப்பை உதிர்த்தன. காலன் சிரித்தால் அப்படித்தானிருக்குமென்று சேனாதிபதி எண்ணினான். எண்ணியதைச் சொல்லத் துணிவின்றி மன்னன் சன்னிதானத்திலிருந்து வெளியே நடந்தான்.