Raja Muthirai Part 2 Ch23 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
ராஜ முத்திரை இரண்டாம் பாகம் – சாண்டில்யன்
அத்தியாயம் – 23 எரிபரந்தெடுத்தல்
Raja Muthirai Part 2 Ch23 | Raja Muthirai | TamilNovel.in
செண்டுவெளிப் போர்க்கூத்து நடந்து ஏழு நாட்கள் சென்றுவிட்ட பிறகு எட்டாவது நாள் கிட்டிய அந்தச் செய்தி மன்னன் மனதில் மட்டில்லாக் கவலையை ஊட்டி விட்டதால், எதிரே நின்ற ஒற்றனை நோக்கி, “என்ன சொன்னாய்? திரும்பச் சொல்,” என்று வீரரவி வினவினான் குரலில் கோபமும் கவலையும் கலந்து ஒலிக்க.
ஒற்றன், கடமையைச் செய்யும் துணிவால் கொற்றவனை நிர்ப்பயமாக உற்று நோக்கி, “எரிபரந் தெடுத்தல் துவங்கி விட்டது,” என்று கூறினான் திரும்பவும் மிகத் தெளிவான குரலில்.
மன்னன் முகத்தில் கவலைக்குறி மறைந்து சினத்தின் சாயை மெல்லப் பரவியது. “எந்த இடத்தில் துவங்கியிருக்கிறது?” என்று வினவினான் குரலில் கோபம் தொனிக்க.
“நமது வடகிழக்கு எல்லையில்,” என்று அறிவித்த ஒற்றன், “விவரம் ஓலையிலிருக்கிறது,” என்றும் விளக்கினான் பணிவுடன் தலை வணங்கி.
அதுவரை மௌனம் சாதித்த முதலமைச்சர் கையில் இடுக்கி வைத்திருந்த ஓலையை எடுத்து மன்னனிடம் நீட்டினார். அதை வாங்கி இரண்டு முறை படித்த மன்னன் முதலமைச்சரை நோக்கி, “இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்!” என்று வினவினான்.
முதலமைச்சர் முகத்தில் கவலை பரிபூரணமாகத் தெரிந்தது. அவர் சொற்களும் கவலை தோய்ந்த வண்ணம் வெளி வந்தன. “இதில் நினைப்பதற்கு என்ன இருக்கிறது மன்னவா? நமது வட எல்லைப் படைத்தலைவன் செய்தியை மிகத் தெளிவாகப் பொறித்திருக்கிறானே?” என்றார் முதலமைச்சர்.
“ஆம் முதலமைச்சரே! ஓலையில் செய்தி தெளிவாகத் தானிருக்கிறது. பாண்டியன் வடகிழக்கு எல்லையிலுள்ள கிராமங்களைக் கொளுத்துகிறானென்று கூறுகிறான் படைத் தலைவன்,” என்றான் மன்னவன்.
“இந்தச் செய்தி உண்மையாயிருந்தால், நாமும் அறியாத சூது ஏதோ நடக்கிறது என்று அர்த்தம்,” என்றார் விவேகியான முதலமைச்சர்.
“எங்கு அது நடக்கிறதென்று நினைக்கிறீர் அமைச் சரே?” என்று வினவினான் மன்னவன்.
“கோட்டாற்றுக்கரையில்…” என்ற முதலமைச்சர் கவலையால் சற்றுப் பெருமூச்சும் விட்டார்.
மன்னன் முகத்தில் சினத்துடன் வியப்பும் கலந்து தெரிந்தது. “கோட்டாற்றுக் கரையிலா?” என்ற கேள்வியில் வியப்பு கோபத்தைவிடச் சற்று அதிகமாகத் தொனித்தது.
“ஆம். கோட்டாற்றுக் கரையில்தான்,” என்றார் முத லமைச்சர் உறுதியுடன்.
“எத்தகைய சூழ்ச்சியை எதிர்பார்க்கிறீர்?”
“எது என்று நிச்சயமாகச் சொல்ல முடியவில்லை மன்னவா? ஆனால் சிங்கணனிடமிருந்து செண்டுவெளி அன்று கிடைத்த செய்தி சந்தேகத்தை ஊட்டுகிறது !”
“என்ன சந்தேகம் அதில்?”
“வீரபாண்டியன் சரணடைந்துவிட்டதாகச் சிங்கணன் ஓலை விடுத்திருந்தான் தங்களுக்கு.”
“ஆம்.”
“வீரபாண்டியன் சரணடைந்திருந்தால் அந்தச் செய்தி நமக்குக் கிட்டுவதுபோல் பாண்டியனுக்கும் கிட்டியிருக்க வேண்டும்.”
“ஆம்.”
“நீங்கள் பாண்டியனாயிருந்தால் என்ன செய்வீர்கள்?”
எதற்காக முதலமைச்சர் அந்தக் கோள்வியைக் கேட்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடியாத மன்னன், கேள்வி தொக்கி நின்ற பார்வையொன்றை அவர்மீது வீசினான். மன்னன் கேள்வியைப் பார்வையிலேயே புரிந்து. கொண்ட முதலமைச்சர், “மன்னவா! பாண்டியப் படைகள் இரு கூறாகப் பிரிந்து ஒன்று சேரநாட்டு வட கோடிக்கும் தென் எல்லைக்கும் நகர்ந்தன. வடக்கெல்லையில் வீர பாண்டியன் சரணடைந்துவிட்டான். இந்தச் செய்தி கேட்டதும் தென் எல்லையில் அதாவது நமது தலைநகருக்கு நேர் வட கிழக்கில் நிற்கும் பாண்டியன் என்ன செய்ய வேண்டும்” என்று வினவினான்.
“வடக்கெல்லையிலுள்ள வீரபாண்டியனுக்கு உதவ விரையவேண்டும்.”
“இரண்டு காரணங்களுக்காக விரையலாம். சரணடைந்துவிட்ட படைகளை ஒழுங்காகச் சிங்கணனிடமிருந்து மீட்க விரையலாம். அல்லது சரணடைந்த படைகளுக்குத் துணை கொடுத்து அவற்றைத் தனது படைகளுடன் இணைத்து வடக்கில் எதிரியை மீண்டும் தாக்க விரையலாம்,” என்று சுட்டிக் காட்டினார் முதலமைச்சர்.
“ஆம். உண்மை,” என்று ஒப்புக்கொண்டான் மன்னவன்.
“அப்படிச் செய்யவில்லை பாண்டியன்! வடக்கே திரும்புவதை விட்டு, தெற்கே திரும்பி, போரை மும்முரப் படுத்துகிறான். அதுவும் கிராமங்களையும் பயிர்களையும் கொளுத்துகிறான். இது விசித்திரமாயில்லையா உங்களுக்கு?” என்று வினவினார் முதலமைச்சர்.
மன்னன் சில விநாடிகள் சிந்தனையில் இறங்கினான். பிறகு “ஆம். விசித்திரமாகத்தானிருக்கிறது” என்றும் கூறினான்.
“கோட்டாற்றுக் கரையில் வீரபாண்டியன் வெற்றி யடைந்திருந்தால் அதைப்பற்றிக் கவலையை விட்டு சுந்தர பாண்டியன் பரலியை நோக்கி நகருவது இயற்கை,” என்று சுட்டிக் காட்டினார் முதலமைச்சர்.
“ஆம். அவன் செய்கை இயற்கைக்கு விரோதமாயிருக் கிறது. பரம்பரைப் போர் முறைக்கும் ஒவ்வாததாயிருக்கிறது,” என்றான் மன்னன் சஞ்சலத்துடன்!
“அதுமட்டுமல்ல….” என்று இழுத்தார் முதலமைச்சர்.
“வேறென்ன?” இன்னும் ஏதோ சொல்லப் போகிறார் முதலமைச்சர் என்ற கிலியுடன் கேட்டான் மன்னன்.
“வீரபாண்டியன் சரணடைந்து விட்டதாக சிங்கணன் ஓலை அனுப்பி இன்று எட்டாவது நாள்…”.
“ஆம்.”
“முதல் ஓலைக்குப் பிறகு சிங்கணனிடமிருந்து வேறு ஓலையே ஏன் வரவில்லை?”
“கோட்டையைக் கைப்பற்றி அங்கே மக்களிடையே ஒழுங்கை நிலைநிறுத்திப் போர்க் காயங்களை நகரத்திலிருந்து நீக்கும் முயற்சியில் முனைந்திருக்கலாம் சிங்கணன்.”
“பிடித்த கோட்டையை ஒழுங்குக்குக் கொண்டுவர நல்ல படைத்தலைவனுக்கு இரண்டு நாட்கள் போதாதா?”
“போதும்.”
“அப்படியானால் மூன்றாவது நாள் செய்தியனுப் பியிருக்கலாமே. அனுப்பியிருந்தால் இரண்டு நாட்களுக்கு முன்பே நமக்குக் கிடைத்திருக்குமே. தவிர மன்னவா, வெற்றியடையும் உற்சாகத்தில் திரும்பத் திரும்ப வெற்றிச் செய்திகளையும் இதர விவரங்களையும் தலைநகருக்குத் தெரியப்படுத்துவது படைத்தலைவர் வழக்கமல்லவா?”
முதலமைச்சர் எந்தத் துறைக்குத் தனது விவரணத்தைக் கொண்டு செல்கிறார். என்பது புரிந்தது மன்னனுக்கு. ஆகவே திட்டமாகவே கேட்டான் வீரரவி. “அப்படியானால் கோட்டாற்றுக்கரை வெற்றி பொய் என்கிறீர்கள்?”
“பொய்யென்று சொல்லவில்லை மன்னா! மெய்யானால் எந்த வகையில் காரியங்கள் நடைபெற வேண்டுமோ அந்த வகையில் நடக்கவில்லையென்றுதான் சொல்லுகிறேன். தங்கள் காலமுதல் நான் இங்கு அமைச்சுத் தொழில் பார்க்கிறேன். உங்கள் தந்தை காலத்திலும் போர்கள் நடந்திருக்கின்றன. கோட்டைகள் பிடிபட்டிருக் கின்றன. கோட்டை பிடிப்பட்ட நாளிலிருந்து தினமொரு ஓலை வந்து கொண்டிருக்கும். தவிர, பிடிப்பட்ட எதிரிக் கோட்டையின் முக்கிய இலச்சினைகளை இருவீரர்கள் கொண்டு வருவார்கள். அவை தலைநகரில் வலம் வரும். மக்கள் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் அந்தப் பவனியில் கலந்து கொள்வார்கள். ஆனால் கோட்டாற்றுக்கரை வெற்றி மிக ரகசியமாயிருக்கிறது. வெற்றியைப்பற்றி ஓர் ஓலை வந்தது. பிறகு அதைப்பற்றிச் செய்தியில்லை. கிடைக்கும் செய்தி எரிபரந்தெடுத்தல், இவையெல்லாமே இயற்கைக்கு விரோதமாயிருக்கிறது மன்னவா! கோட்டாற்றுக் கரையில் மேற்கொண்டு என்ன நடக்கிறது என்பது தெளிவாகத் தெரியவேண்டும்” என்றார் முதலமைச்சர்.
முதலமைச்சர் உள்ள நிலைமையைத் தனது கூரிய அறிவு கொண்டு நன்றாக விமர்சித்து சந்தேகத்தையும் கிளப்பிவிட்டதால் மன்னனும் ஆழ்ந்த சிந்தனையில் இறங்கினான். “அப்படியானால் இங்கிருந்து ஒரு தூதனை அனுப்புவோமா?” என்று வினவினான் முதலமைச்சரை நோக்கி.
“அனுப்புவது நல்லது,” என்றார் முதலமைச்சர்.
“சரி, ஒரு தூதனைக் கோட்டாற்றுக் கரைக்கு அனுப்பும். இடையே பாண்டியனை எதிர்க்க உத்தரவு அனுப்புகிறேன்.” என்றான் மன்னன்.
“உத்தரவோடு துணைப்படையொன்றும் வடக்கு நோக்கி விரையட்டும்,” என்று முதலமைச்சர் யோசனை சொன்னார்.
அப்படியே அனுப்பச் சம்மதித்தான் மன்னன். கோட் டாற்றுக் கரை நிலவரத்தை அறிந்துவர ராமவர்மனுக்கு ஓலையொன்று மன்னன் அறையிலேயே வரைந்து செய்தி கொண்டுவந்த ஒற்றனிடம் கொடுத்து, “வீரனே! இதை ராமவர்மனிடம் கொடுத்துப் பதில் வாங்கி வா. கோட்டாற்றுக் கரைக்கு மலை வழி மூலம் செல்லாதே. அங்கு எதிரிகளிடம் சிக்கிக்கொள்வாய். கடற்கரை ஓரமாகப் பயணம் செய்,” என்றும் உத்தரவிட்டான்.
அதைப் பக்கத்திலிருந்து கேட்டுக்கொண்டிருந்த மன்னன் முதலமைச்சரை நோக்கி, “ஓலை யாருக்கு?” என்று வினவினார்.
“ராமவர்மனுக்கு.”
“சிங்கணனுக்கு எழுதக்கூடாதா?”
“சிங்ணனைவிட ராமவர்மன் நம்பத் தகுந்தவன். தவிர சேர நாட்டு உபசேனாதிபதி, சேரநாட்டிடம் பக்தி கொண்டவன்.”
“சிங்கணனை நீர் நம்பாத காரணம்?”
“பெண்களைக் களவாடுபவன் சிங்கணன். களவு, பொய் இக்குணங்கள் ஒன்றையொன்று விடுவதில்லை.
“எத்தனையோ அரசர்கள் பெண்களைக் களவாடிய தில்லையா?”
“உண்டு. அவர்களே நேரிடையாகச் சென்று பெண்களைத் தூக்கி வந்தார்கள். மணம் புரிந்து கொண்டார்கள். அப்படிப்பட்ட விவாகம் ராட்சஸம் என்று அழைக்கப்படுகிறது. அதைத் தர்ம சாஸ்திரம் ஒப்புக்கொள்கிறது. ஆனால் இன்னொருவருக்காகப் பெண் திருடுபவன் தர்மத்தின் ஏடுகளில் இடம் பெறுவதில்லை.”
மன்னன் அதற்குமேல் ஏதும் பேசவில்லை . தவிர எதிரே ஒற்றன் நின்று கொண்டிருக்க அவன் முன்பு சிங்கணனைப் பற்றிச் சர்ச்சை செய்வதும் உசிதமாகப் பட வில்லை வீரரவிக்கு. ஆகவே ஒற்றனை அனுப்பிவிட்டு, “முதலமைச்சரே! ஆதிமுதல் உங்களுக்குச் சிங்கணனைப் பிடிக்கவில்லை. ஆகையால் அவனைக் காமாலைக் கண்ணுடன் பார்க்கிறீர்கள்,” என்று கூறினான். முதலமைச்சர் அதற்குப் பதிலேதும் சொல்லாமல் மன்னனிடம் விடைபெற்றுத் தமது இல்லம் சென்றார்.
அடுத்த நாளே பாண்டியன் சேர நாட்டு எல்லை களைக் கொளுத்தும் செய்திதலைநகரெங்கும் பரவிவிட்டது. அடுத்த இரண்டு நாட்களில் கொளுத்தப்பட்ட எல்லைப் புறத்திலிருந்து தலைநகர் வந்த மக்கள் எரிபரந்தெடுத்தல் உண்மையே என்றும் கூறினர். ஆனால் அவர்கள் கூறியது மன்னனுக்குக் கோபத்தைவிட வியப்பையே விளைவித்தது. எல்லைப்புறக் குடிமக்களில் சிலரை அரண்மனைக்கு வர வழைத்த மன்னன் அவர்களுக்கு முதலில் ஆறுதல் கூறினான். “குடிபெருமக்களே! நீங்கள் இழந்த அனைத்தையும் திரும்பப் பெறுவீர்கள். பாண்டியன் தீ வைக்கலாம், தலைநகர் நோக்கியும் முன்னேறலாம். ஆனால் அவன் வைத்த தீயில் விட்டிலென அவனே விழப் போகிறான். அதற்கு ஏற்பாடுகள் நடக்கின்றன” என்ற சேர மன்னன், “பாண்டியன் உங்களை மிகவும் துன்புறுத்தி விட்டானா?” என்றும் வினவினான்.
குடிமகனொருவன் மன்னனுக்குத் தலைவணங்கிச் சொன்னான், “இல்லை; துன்புறுத்தவில்லை,” என்று.
மன்னன் பக்கத்தில் நின்ற முதலமைச்சரைப் பார்த்து சேனாதிபதியையும் நோக்கினான். பிறகு குடிமகனை நோக்கி, “துன்புறுத்தவில்லையா? உங்கள் கிராமங்களைக் கொளுத்துவதன் பொருள் என்ன?” என்று வினவவும் செய்தான்.
“பாண்டிய மன்னரின் முறை விசித்திரமாயிருக்கிறது” என்றான் குடிமகன்.
“என்ன விசித்திரம்?” என்று மன்னன் கேட்டான்.
“பாண்டியன் படைகள் திடீரென்று தாக்குவது மில்லை. எதிர்பாராமல் ஊரைக் கொளுத்துவதுமில்லை. முதலில் பாண்டியப்படையின் முன்னணி வீரர் முரசறைவிக்கிறார்கள். அதன்படி கிராமத்தின் பெருந்தனக்காரர் இருவர் பாண்டிய மன்னரைச் சந்திக்கிறார்கள். அக்கிராமம் கொளுத்தப்படுமென்றும் ஆகவே முக்கியமாக வேண்டிய பொருள்களை எடுத்துக் கொண்டு தலைநகர் நோக்கிக் கிராம வாசிகள் செல்லலாமென்றும் மன்னர் அறிவிக்கிறார். கிராமத்தை ஒழிக்கவும், வயோதிகர்கள் குழந்தை குட்டிகள் சௌக்கியமாகச் செல்வதற்கும் பாண்டிய வீரர்கள் துணைபுரிகிறார்கள். எல்லோரும் கிராமத்தை விட்டு அகன்ற பிறகு கிராமம் கொளுத்தப்படுகிறது. அங்கு கிராமப் பாதுகாப்பு வீரர்கள் இருந்தால் அவர்கள் ஆயுதங்கள் மட்டும் பறிக்கப்படுகின்றன. தலைநகர் பயணத்துக்கு வேண்டிய உடை, உணவு, இவை தாராளமாக அனுமதிக்கப்படுகின்றன.” என்றான் குடிமகன்.
அவன் சொன்னதை மற்றவர்களும் ஆமோதித் தார்கள். கிராமத்தை விட்டு விரட்டிய பாண்டியனை அந்தக் குடிமக்கள் அப்போதும் பாராட்டியதைக் கண்டு கோபத்துக்குப் பதில் பெரும் வியப்பே அடைந்தான் மன்னன். முதலமைச்சருக்குக்கூடப் பாண்டியன் போக்கு விசித்திரமாயிருந்தது. ஆனால் அதைக் கேட்டுக் கொண்ட சேனாதிபதி முகத்தில் சிறிதளவும் வியப்பு இல்லை . திகில் மண்டிக் கிடந்தது. அந்தத் திகிலுக்குக் காரணத்தை அறியாத மன்னன் கேட்டான், “என்ன சேனாதிபதி” என்று.
“”மிகப் பயங்கரம்” என்றான் சேனாதிபதி பதிலுக்கு,
“எது?” என்று வினவினான் மன்னன் மீண்டும்.
“எரிபரந்தெடுத்தல், அதன் விளைவு. இத்தனை பயங் கரமான போர் முறையைப் பற்றி இதுவரை நான் கேள்விப் பட்டதில்லை,” என்றான் சேனாதிபதி.
“கிராமங்களைப் பாண்டியன் கொளுத்துவதைப் பற்றிப் பயப்படுகிறீரோ?”
“அதைப் பற்றியல்ல நான் பயப்படுவது.”
“வேறெதைப் பற்றி?”
“போர் முறையைப் பற்றி. எல்லையைப் பாண்டியன் கொளுத்துவதால் விளையும் விபரீதத்தைப் பற்றி.”
“என்ன விபரீதம் விளையக்கூடும்?” என்று கேட்டான் மன்னன் கோபத்துடன்.
மெல்ல மெல்ல விளக்கினான் சேனாதிபதி, அவன் விளக்கத்தைக் கேட்ட மன்னன் மட்டுமின்றி முதலமைச்சரும் அச்சத்துக்கு உட்பட்டார். எரிபரந் தெடுத்தலின் விளைவு அத்தனை விபரீதமாகவும் பயங்கரமாகவும் இருக்குமென்பது சேனாதிபதி விளக்கும் வரை அவர்கள் இருவருக்குமே புரியவில்லை. புரிந்த பின்பு அவர்கள் மனத்தில் சாந்தியில்லை.
அவர்கள் மன உளைச்சலைக் கண்ட சேனாதிபதி கடைசியாக ஒரு வார்த்தையும் சொன்னான்; “பாண்டியனை உடனடியாகச் சமாளிக்க நாம் ஏற்பாடு செய்யாவிட்டால் தலைநகரம் இன்னும் ஒரே மாதத்தில் எதிரி வசப்படும்,” என்று திட்டவட்டமாக அறிவித்தான் சேனாதிபதி,