Raja Muthirai Part 2 Ch27 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
ராஜ முத்திரை இரண்டாம் பாகம் – சாண்டில்யன்
அத்தியாயம் – 27 சாத்தனுக்குப் புரிந்தது
Raja Muthirai Part 2 Ch27 | Raja Muthirai | TamilNovel.in
இந்திரபானு தனது அபாயகரமான திட்டத்தை விவரிக்க முற்பட்ட பிறகுகூடப் பல வினாடிகள் அரண்மனைக் காவலன் அந்தப்பணிப்பெண் முகத்தையே கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான். அவள் உடல் கட்டையும் கண்டதுமே அவள் மலைச் சாதிப் பெண்ணென்பதைச் சந்தேகமற உணர்ந்து கொண்டான் அரண்மனைக் காவலன். காட்டுப் புஷ்பம் போலவே செழித்து உறுதியுடனும், அதிக மெருகுடனும் காட்சியளித்த அவள் உடல் பிரதேசமும், உருண்ட முகமும், திண்மைக் கன்னங்களும் குவிந்த உதடுகளும், அவள் மலைப்பூ வென்பதற்குச் சான்று காட்டின. கணுக்காலுக்குச் சற்று மேலேயே சேலை நின்றுவிட்டதால், ஆடுதசையின் கீழ்ப்பகுதி யானையின் துதிக்கை போல் ஆனால் மிகுந்த வழவழப்புடன் இறங்கியதையும், இறுக்கிய உடைக்கு அடங்கினாலும் உடல்கட்டின் உறுதியின் காரணமாகச் சுற்றிலும் வளையமாகச் சதை தெரிந்த சிற்றிடையும் அவள் வலுவுக்கு அத்தாட்சி கூறின. இத்தனை வலுவும் தெரியாமல் மறைத்து உடலைப் பூவுடலாகக் காட்டிய அவள் அழகு யாரையும் மயக்குந் தன்மையைப் பெற் றிருந்தது. அவள் காதில் செருகிய ஒற்றைப் பூவும் மலைப் பூவாதலால், அவள் இனத்தைப்பற்றி அரண்மனைக் காவலன் சந்தேகப்படவில்லை யென்றாலும் அவளைப் பற்றி அவன் மனத்தில் ஏதோ ஒரு சந்தேகம் தோன்றியிருந்தது. அவளை எப்பொழுதோ எங்கேயோ பார்த்திருக்கும் நினைப்பு அவன் மனத்தில் சுழன்று கொண்டிருந்தது. ஆகவே அதைப்பற்றி ஆராய்வதில் அவன் மனமிருந்ததால் இந்திரபானு விவரிக்க முற்பட்ட திட்டத்தின் ஆரம்பப் பகுதிகளை அவன் காதில் வாங்கிக் கொள்ளவில்லை.
அவன் பிரமை பிடித்து நிற்பதையும் தான் சொன்ன எதுவுமே அவன் காதில் விழாததையும் கண்ட இந்திரபானு, “வீரனே! நான் சொல்வது உன் காதில் விழவில்லை போலிருக்கிறது!” என்றான் சற்றுக் கடுமையுடன்..
இதைக் கேட்ட அரண்மனைக் காவலன், “மன்னிக்க வேண்டும். நான் இந்தப் பெண்ணையே பார்த்துக்கொண்டிருந்துவிட்டேன்,” என்றான்.
“பிற பெண்ணை அப்படிக் கண்கொட்டாமல் பார்ப்பது தவறு வீரனே!” என்றான் இந்திரபானு, தனது கடுமையைக் கைவிட்டுச் சற்றுப் புன்முறுவல் கொண்டு.
அரண்மனைக் காவலன் தனக்கும் நகைச்சுவை வரும் என்பதைக் காட்ட முற்பட்டு, “ஆனால் இவள் பிற பெண் அல்லவே,” என்றான் பதிலுக்கு, அவனும் புன்முறுவல் கூட்டி.
“வேறு யார்!” இந்திரபானு ஏளனம் நிரம்பிய குரலில் விசாரித்தான்.
“இவள் என் மைத்துனியென்று தாங்கள் தானே கூறினீர்கள். அதற்குள் மறந்துவிட்டீர்களா?” என்று கேட்டான் அரண்மனைக் காவலன்.
இதைக் கேட்ட கூத்தனும் அந்தப் பெண்ணும் கூட நகைத்தார்கள். ஒரு சாதாரண அரண்மனைக் காவலன் தன்னைப் பேச்சில் மடக்கிவிட்டதைக் கண்டு சற்றே சங்கடப்பட்ட இந்திரபானு, “சாத்தா!” என்று காவலனை அழைத்தான்.
காவலன் முகத்தில் சற்று ஆச்சரிய ரேகை படர்ந்தது. இருவரும் வந்து நாட்கள் நாலு ஆகியும் இருவரும் தன் பெயரைத் தன்னிடமோ தனது மனைவியிடமோ கேட்கவில்லை யென்பதை உணர்ந்திருந்த காவலன், ‘இவர்கள் வெளியிலும் யாரிடமும் உரையாட முடியாதே. இந்தக் கூத்தனுக்கும் என் பெயர் தெரியாதே. அப்படியிருக்க என் பெயர் இவனுக்கு எப்படித் தெரிந்தது?’ என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டான்.
அவன் மனத்திலெழுந்த கேள்விகள் இந்திர பானுவுக்குச் சந்தேகமறப் புரிந்ததால், “இதைப்பற்றி வியக்க வேண்டாம் சாத்தா! நேற்றிரவு நாங்கள் இங்கிருந்து கிளம்பிய போது காவலர் இருவர் எங்களைப் பார்த்தனர். அவர்களில் ஒருவன் எங்களை ஏதோ கேள்வி கேட்க எண்ணி, எங்களை நோக்கி வர முற்பட்டான். மற்றவன் அவனைத் தடுத்து, அவர்கள் சாத்தன் வீட்டுக்கு வந்திருக்கிறார்கள்’ என்று அவனைத் தன்னுடன் அழைத்துச் சென்றான். அதிலிருந்து உன் பெயரை அறிந்து கொண்டேன்,” என்று கூறினான் இந்திரபானு.
இதைக் கேட்ட அரண்மனைக் காவலன் முகத்தில் பயக்குறி படர்ந்தது. “அவர்கள் ஏதாவது சந்தேகப்பட்டார்களா உங்கள் மீது?” என்று வினவினான் சாத்தன்.
“இல்லை. நாங்கள் உன் வீட்டவர் என்று தெரிந்ததும் முதலில் சந்தேகப்பட்டவனும் சென்றுவிட்டான்,” என்ற இந்திரபானு, “சாத்தா! சாமர்த்தியமாகப் பேசுகிறாய். ஆனால் மைத்துனியாயிருந்தாலும் அவளை வெறித்து வெறித்துப் பார்க்கக்கூடாது.” என்றான்.
சாத்தன் அதற்கும் மசியவில்லை. “இதை ஆட்சேபிக்க வேண்டியது தாங்களல்ல,” என்றான்.
“வேறு யார்?” இந்திரபானு கேட்டான் வியப்புடன். “என் மனைவி,” என்றான் சாத்தன்.
இதைக் கேட்டதும் கூத்தனும் அந்தப் பெண்ணும் மீண்டும் நகைத்தனர்.
தன்னைப் பேச்சில் வெல்லக்கூடியவன் வீர பாண்டியன் ஒருவன்தான் என்று அன்றுவரை நினைத் திருந்த இந்திரபானு இன்னொருவனும் அந்தச் சாமர்த்தியத் துடனிருக்கிறானென்பதை அறிந்ததால் சற்றுச் சங்கடத்துடன், “சரி சாத்தா, வேடிக்கைப் பேச்சிருக்கட்டும். நமக்கு முன்னிருக்கும் அலுவலைக் கவனிப்போம்,” என்று மீண்டும் தனது திட்டத்தை விவரிக்க முற்பட்டு, “சாத்தா! உனக்கு எங்கள் இருவரையும் தெரியும். ஆனால் இப்பெண்ணைத் தெரியாது. இருப்பினும் தெரிந்ததாகப் பாசாங்கு செய்யவேண்டும். இவர்கள் எப்படியும், அரண்மனையில் பணிப்பெண் ஆக வேண்டும். அதுவும் பாண்டிய மகளிடம் இவள் பணிபுரிய வேண்டும்,” என்று சற்று நிதானித்துச் சாத்தனைக் கூர்ந்து நோக்கினான்.
சாத்தன் மனோநிலை கவலையையும் பயத்தையும் மீறி இருந்தது. மிகவும் சாமர்த்தியமாக இரு எதிரி ஒற்றர்களிடம் தான் சிக்கிக்கொண்டிருப்பதை நான்கு நாட்களாக உணர்ந்துவிட்ட அவன், தன் வாழ்வின் விதி எப்படியும் அபாய மார்க்கத்தில் திரும்பக்கூடும் என்ற நினைப்பை அடைந்திருந்தான். ஆகவே இந்திரபானு தனது யோசனை யைக் கூறியதும் புரிந்து கொண்டதற்கு அறிகுறியாகத் தலையை மட்டும் அசைத்தான்.
இந்திரபானு மேலும் சொன்னான், “சாத்தா, நீ அரண்மனைக் காவலனானாலும் அளவுக்குமீறி நீ எதுவும் செய்ய முடியாதென்பது எனக்குத் தெரியும். ஆனால் இந்தப் பெண்ணுக்கு நீ வேலை கேட்கலாம். இவளை உன்னுடன் நாளைக்கு அழைத்துச் சென்று அரண்மனை அந்தப் புரத்தில் உன் மைத்துனியாக இவளை அறிமுகப்படுத்து. இவளுக்கு வேலையும் கேள். அரண்மனைக் காவலன் சிபாரிசு செய்வதால் அவர்கள் ஒப்புக்கொள்வார்கள்.”
இந்திரபானுவின் யோசனை அத்தனை எளிதாக நிறைவேற முடியும் என்று நினைக்கவில்லை சாத்தான். “இதில் சில கஷ்டங்களிருக்கின்றன,” என்றும் சுட்டிக் காட்டினான்.
“என்ன கஷ்டங்கள்?” என்று வினவினான் இந்திர பானு.
“உங்களை மைத்துனர்கள் என்று கூறச் சொன் னீர்கள்…” என்று இழுத்தான் சாத்தான்.
“ஆம்,” என்று ஒப்புக்கொண்டான் இந்திரபானு.
“அப்படித்தான் அக்கம்பக்கத்திலிருக்கும் சகோதர வீரர்களுக்குக் கூறியிருக்கிறேன்.”
“சரி.”
“இந்த விஷயம் அரண்மனை வரையில் முதல் இரண்டு நாட்களிலேயே போயிருக்கும்.”
“இப்பொழுது மைத்துனி வந்திருப்பதாக சொல்லச் சொல்கிறீர்கள்.”
“ஆம்.”
சாத்தான் இகழ்ச்சியுடன் நோக்கினான். “இப்படித் தினம் மைத்துனர்களும் மைத்துனிகளும் வருகிறார்களென்றால் அரண்மனையில் நம்புவார்களா? தவிர, இந்த மைத்துனர்களும் மைத்துனிகளும் இத்தனை வருடங்கள் எங்கு போயிருந்தார்களென்று கேட்கமாட்டார்களா?” என்று வினவிய சாத்தன் இகழ்ச்சி நகையும் கோட்டினான் இந்திரபானுவைப் பார்த்து.
இந்திரபானு அவன் இகழ்ச்சி நகையையோ பார்வை யையோ லட்சியம் செய்யவில்லை. “உனக்கும் உன் மாமன் வீட்டுக்கும் பல வருஷங்கள் விரோதமிருந்தது. யாரும் வர வில்லை. இப்பொழுது அவர்களாக வருகிறார்கள். வேலைக்கு உன் பிராணனை வாங்குகிறார்கள்…” என்று சுட்டிக் காட்டினான் இந்திரபானு.
சாத்தன் முகத்தில் வியப்பு மறைந்தது. மதிப்பு மூண்டது. “மனித இயற்கையை நன்றாக உணர்ந்திருக் கிறீர்கள்,” என்று சிலாகிக்கவும் செய்தான் அவன்.
அந்தப் பாராட்டுதலைக் காதில் வாங்கிக்கொள்ளாத இந்திரபானு சொன்னான்; “சாத்தா! நீ நல்ல அறிவு படைத்தவன். எங்கள் வரவுக்குக் காரணம் சொல்ல உன்னை நான் பழக்க வேண்டியதில்லை. தகுந்த காரணங்களைக் கேட்பவருக்குத் தகுந்தபடி நீயே சொல்லிக்கொள். இவளை நீ அரண்மனையில் பணிப்பெண்ணாக்கு,” என்று.
“அதற்கு முயலலாம்,” என்ற சாத்தன், “ஆனால்….” என்று இழுத்தான் சற்று சிந்தனைக்குப் பிறகு.
“என்ன ஆனால்?”
“பாண்டிய இளவரசியிடம் இவளைப் பணிப் பெண்ணாக அமர்த்த என்னால் முடியாது.”
“வேண்டாம், அதை இவள் கவனித்துக்கொள்வாள்.”
“அப்படியா!”
“ஆம் சாத்தா.”
“அத்தனை திறமைசாலியா இவள்?”
இதுவரை மௌனமாயிருந்த கூத்தன் சம்பாஷ ணையில் புகுந்து, “போகப் போக உனக்கே தெரியும்,” என்றான்.
“கூத்தா!” என்றான் சாத்தன்.
“என்ன சாத்தா?”
“அபாயமான பணியில் என்னை இறங்கச் சொல் கிறீர்கள்.”
“ஆம்”
“இதில் என் தலை போனாலும் போகலாம்.”
“உன் தலை தனியே போகாது. எங்கள் தலைகளும் சேர்ந்தே போகும்.”
“அதனால் எனக்கு எவ்விதப் பயனுமில்லை,” என்ற சாத்தன் சோகப் பெருமூச்சு விட்டான்.
அதைக் கவனித்த இந்திரபானு, “உன்னைக் காப் பாற்றிக்கொள்ள ஒரு வழி சொல்லுகிறேன்,” என்றான்.
“என்ன?”
“நீ எங்கு அபாயத்தில் சிக்கிக் கொண்டாலும் எங் களைக் காட்டிக் கொடுத்து விடலாம். நாங்கள் யாரென்பது உனக்குத் தெரியுமென்றும் எங்களைப் பிடித்துக் கொடுக்கவே உன் வீட்டுக்கு அழைத்துவந்ததாகக் கூறிவிடு. நீ தப்பலாம். உனக்கு வெகுமதியும் கிடைக்கும்.”
இதைக் கேட்ட சாத்தன் முகம் அவமானத்தால் குன்றியது. “அத்தனைக் கயவனல்ல நான்,” என்ற சாத்தன் அவர்கள் இஷ்டப்படி பணிப் பெண்ணை மறுநாள் அரண் மனைக்கு அழைத்துச் செல்லச் சம்மதித்தான்: “அரண்மனையில் பணிப்பெண்ணாக்கியதும் என அலுவல் முடிந்து விட்டதா?” என்றும் வினவினான்.
இந்திரபானு திட்டமாகக் கூறினான்; “இல்லை, இவளை நீ அடிக்கடி சந்திக்கவேண்டும். இவள் சொல்லும் செய்திகளை எங்களுக்குத் தெரிவிக்கவேண்டும்.” என்று.
சாத்தன் சந்தேகமறப் புரிந்து கொண்டான், தான் எதிரிகளின் ஒற்றனாவதை. வீரனான அவன் மனம் அந்த வேலைக்கு இணங்க மறுத்தது. ஆகவே அவன் கேட்டான், “நான் சாப்பிட்ட உப்புக்கு என்னைத் துரோகம் செய்யச் சொல்கிறீர்களா?”
இந்திரபானு அனுதாபத்துடன் நோக்கினான் சாத்தனை. “சாத்தா! நாம் சாதாரண காலத்தில் ஜீவிக்க வில்லை. தமிழகம் நிலைகுலைந்து கிடக்கும் நாட்களில் ஜீவிக்கிறோம். தர்மம் தளர்ந்து கிடக்கும் நிலையில் வாழ்கிறோம். பாண்டியன் மகள் காரணமின்றி இங்கு சிறைப்பட்டிருக்கிறாள். அந்த அநீதியை எதிர்த்து நாங்கள் போராடுகிறோம். நீயும் அதை எதிர்ப்பதில் தவறில்லை. தர்மம் தெரிந்த குருநாதரே அதை எதிர்க்கவில்லையா? சாத்தா, நம்மைவிட குருநாதர் தர்ம நியாயங்கள் தெரிந்தவர். தவிர அவர் சேரநாட்டிடம் பக்தி கொண்டவர். அவர் காட்டும் வழியில் நடப்பது ஒரு வேளை ராஜத் துரோகமாகலாம், நாட்டுத் துரோகமாகாது,” என்றும் கூறினான்.
சாத்தனுக்கு அந்தப் பதிலோ தர்ம நியாயமோ திருப்தியளிக்கவில்லையென்றாலும் இந்திரபானுவின் திட்டத்தை நிறைவேற்ற ஒப்புக் கொண்டான். மறுநாள் பொழுது புலர்ந்ததும் அந்தப் பெண்ணை அரண்மனைக்கு அழைத்துச் செல்வதாக உறுதி கூறினான்.
மறுநாள் காலைப் பொழுது புலர்ந்தது. கதிரவன் எழுந்ததும் அந்த மலைச்சாதிப் பெண் அரண்மனை செல்லத் தயாராகக் கூடத்துக்கு வந்தாள். அவள் உடை, முதல் நாள் உடைக்கு முற்றும் மாறுபட்டிருந்ததையும், மறுநாள் உடை நகரத்து மக்களின் நாகரிக உடையாக இருந்ததையும் கவனித்தான் சாத்தன். “ஏன் இந்த மாறுபாடு பெண்ணே ?” என்றும் கேட்டான்.
“உங்கள் மைத்துனி காட்டுப் பெண்ணாக இருந்தால் ஒப்புக் கொள்வார்களா?” என்று கூறி அவள் சாத்தனை நோக்கிக் கலகலவென நகைத்தாள்.
அவள் சிரிப்பு கிண்கிணி நாதம்போலிருந்தது சாத்தன் காதுகளுக்கு. அவள் அழகு கண்ணைப் பறித்தது. அவள் விழிகளில் தீட்டியிருந்த மை அவன் சித்தத்துக்கு மை போட்டது.
“உன் பெயர்?” என்று வினவினான் அவன் அவள் அழகைக் கண்டதால் ஏற்பட்ட பிரமிப்புடன்.
“குறிஞ்சி” என்றாள் அவள்.
திடீரென உண்மை சித்தத்தில் பளிச்சிட்டதால் பிரமை பிடித்து நின்ற சாத்தன், “குறிஞ்சி!” என்று பிரமிப்புடன் வார்த்தைகளை உதிர்த்தான். “நீ ! நீ! கோட்டாற்றுக் கரையில்…” என்று குழறவும் செய்தான்.
“விஜயவர்மனின் பணிப் பெண்.” அதை சர்வ சாதாரணமாகக் கூறினாள் குறிஞ்சி.
யாருமறியாத பேருண்மையொன்று சாத்தனுக்கு விளங்கிடவே, “அது மட்டுமல்ல! அது மட்டுமல்ல,” என்று குழறிய சாத்தன் மிதமிஞ்சிய பீதியால் தன் இரு கைகளாலும் முகத்தையும் மூடிக் கொண்டான். அச்சத் தால் அவன் உடல் பயங்கரமாக அசையவும் செய்தது.