Raja Muthirai Part 2 Ch38 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
ராஜ முத்திரை இரண்டாம் பாகம் – சாண்டில்யன்
அத்தியாயம் – 38 பஞ்சணை பயந்தது
Raja Muthirai Part 2 Ch38 | Raja Muthirai | TamilNovel.in
காலில் கையொன்று பட்டவுடனேயே அருவிக் கரைப் பாறையிலிருந்து அரண்மனைப் பஞ்சணைக்குத் திரும்பி முழுச்சுரணையடைந்துவிட்ட முத்துக்குமரி பவள வாய் திறந்து கூச்சலிட முற்பட்டாலும், உதடுகளைத் திடீரென மென்மையும் வாசனையும் கலந்த ஏதோ ஒன்று பலமாக அடைத்துக் கொள்ளவே இதழ்களைத் திறக்கவும் சக்தியற்றவள் ஆனாள் பாண்டியன் பைங்கிளி. அந்த ஏதோ ஒன்று வழவழப்பாகவும் சுகந்தமாகவும் இருந்ததன்றி விரல் நீளத்துக்கும் அகலத்துக்கும் பலபடி அவள் பவள இதழ்களில் பரந்து கிடந்த விதத்திலிருந்தும், அதன் வாசனையிலிருந்த தினுசிலிருந்தும் செண்பக மலரொன்று தன் இதழ்களில் விரிந்து அழுத்தப் பட்டிருக்கிற தென்பதைப் புரிந்துகொண்ட அவள் கண்களைத் திறந்து அந்தச் செயலில் ஈடுபட்டிருப்பது யார் என்று அறிய முயன்றாள். அப்பொழுதுதான் அறையில் சாளர வெளிச்சம் தவிர வேறு வெளிச்சமில்லையென்பதையும், அந்த அறைக்கும் வெளியறைக்குமிடையேயிருந்த வாயில் திரைச்சீலை நன்றாக இழுத்து மூடப்படிருக்கிறதென்பதை யும் புரிந்து கொண்ட பாண்டியன் மகள், தன்னைத் தொட்டவன் யாராயிருந்தாலும் அவன் நல்ல முன் யோசனையுடனேயே காரியங்களைச் செய்திருக்கிறா னென்பதைப் புரிந்துகொண்டாள். திரைச்சீலை தரையைத் தொடாமல் சற்று மேலேயே நின்றுவிட்டதால் அதன் அடியில் தெரிந்த வெளியறை வெளிச்சம் தனது அறையில் இருட்டை அதிகப்படுத்திக் காட்டுவதைக் கண்ட
முத்துக்குமரி வந்தவன் கையில் தான் பூரணமாகச் சிக்கியிருப்பதை அறிந்து கொண்டாள்.
வந்தவன் யாராயிருந்தாலும் எத்தனை வல்லவனாயிருந்தாலும் அரண்மனையிலிருக்கும் காவலிலிருந்து தப்பிச் செல்வது முடியாத காரியமென்பதை உணர்ந்திருந்த பாண்டியகுமாரி, ‘இவன் எப்படி உள்ளே வந்தான்?” என்று மட்டும் தன்னைக் கேட்டுக் கொண்டாள். அவள் சிந்தனையை அவன் அறிந்து கொண்டிருக்க வேண்டும். அதுவரை நின்றிருந்தவன் மெள்ளப் பஞ்சணைப் பக்கத்தில் தரையில் மண்டியிட்டு உட்கார்ந்து இதழைப் பொத்தி யிருந்த கையாலேயே அவள் தலையைத் தானிருந்த பக்கத்தை நோக்கித் திருப்பி, “கட்டுக்காவல் எதுவும் தடுக்க முடியாதது ஒன்று இருக்கிறது குமரி?” என்று அவள் காதில் மெல்லக் கூறினான்.
முத்துக்குமரி வியப்பின் வசப்பட்டாளா? மகிழ்ச்சி வெள்ளத்தில் அமிழ்ந்தாளா? விடைகூற அவளுக்கே தெரியவில்லை. விவரிக்க இயலாத உணர்ச்சிகள் சரசரவென்று சுழன்றன அவள் உடலில், இந்திரபானு அத்தனை துணிகரமாக அந்தப்புரத்துக்குள் நுழைய முடியும் என்று அவள் சொப்பனத்தில் கூட நினைக்கவில்லை. அவன் எங்கிருந்தான், எப்படி வந்தான் என்று ஏதுமே தெரியாததால் அவள் வாயிலிருந்த மலரை மெள்ள நீக்கி முணுமுணுத்தாள், “என்ன சொன்னீர்கள்?” என்று.
செண்பக மலர் இதழ்களில் அழுந்தியிருந்ததால் அவள் சொன்னது தெளிவாகக் காதில் விழவில்லை இந்திரபானுவுக்கு. ஆகவே கையை இதழ்களிலிருந்து நீக்கி ஒருக்களித்திருந்த கன்னத்தில் வைத்து அழுத்திக் கொண்டே, “என்ன?” என்று வினவினான் மெதுவாகத் தலையை நன்றாகக் குனிந்து.
மண்டியிட்டு உட்கார்ந்திருந்த நிலையில் அவன் தலையை நன்றாகக் குனிந்ததால் அவள் தலைக் குழல்கள் அவன் நெற்றியின்மீதும் காதின் மீதும் விழுந்தன. அப்படி குழல் கவிந்து திரையிட்ட அவள் முகமலர்ப் பகுதிக்குள் இந்திரபானு நன்றாகப் புகுந்து உதடுகளைக் காதுக்கருகிலும் அசைத்தான். உதடுகள் காதுக்கருகில் அசைந்தன. பின்பு காதை விட்டிறங்கி அவள் மலர்க் கழுத்திலும் அசைந்தன. செண்பக மலரின் வாசனை அந்தக் கழுத்தையும் ஆட் கொண்டிருந்ததால் அதை நன்றாக ஒருமுறை இழுத்து முகர்ந்தான் இந்திரபானு. அதைத் திரும்பத் திரும்ப இழுத்து இழுத்து முகர்ந்துகொண்டேயிருக்க வேண்டும் போலிருந்தது அவனுக்கு. காட்டுக் குட்டைகளுக்கருகில் மழைத்தூற்றல் போட்டு மண் வாசனை எழும்போது அந்த மண்வாசனையை முகர்ந்து முகர்ந்து மகிழும் யானைகள், எத்தனை நேரம் முகர்ந்தாலும் திருப்தியடை யாததைப் போலவே அவள் கழுத்து வாசனையை நுகர்ந்தது நுகர்ந்தபடியே இருந்தான் பாண்டியர் உப தலைவன்.
அவள் தலைக்குழலை அவன் வலது கரம் கோதி விட்டது. அவன் இடது கை அவள் மலர்க் கன்னத்தை விட்டுக் கீழிறங்கியது. முத்துக்குமரியின் மார்பு படபடத்தது. “உம்….உம்” என்ற ஆட்சேபணை ஒலிகள் கிளம்பின அவளிடமிருந்து. இந்திரபானு அவற்றைக் கவனித்ததாகத் தெரியவில்லை . “உம்….” என்று ஏதோ கேள்வி கேட்கும் பாவனையில் மற்றோர் ஒலி அவளிடமிருந்து எழுந்ததே தவிர சரியான பதிலேதும் கிடைக்கவில்லை . உதடுகள் பதிலளிக்கவில்லை, உணர்ச்சிகள் வேறு அலுவலுக்கு உந்தியதால்.
சொற்கள் அர்த்தமற்ற சமயம் அது. ஒலிகள் பொருள் பெறும் சந்தர்ப்பம் அது. உணர்ச்சிகள் வெட்கத்தை உடைக்கவும் ஒலிகள் அவற்றுக்குத் தடைவிதிப்பன போல் பாசாங்கு செய்யவும் முற்படும் இன்பப் போர் விளையும் நேரம் அது. அந்த இந்திர ஜாலத்தில் சிக்காதவர் யார்? சிக்கிய சமயத்தில் வெளி உலகத்தை நினைத்தவர் யார்? இடையே சற்று நினைத்தாலும் அதை லட்சியம் செய்தவர் யார்? யாருமிலர். அப்படியிருக்க நீண்ட நாள் விட்டுச் சந்திக்கும் அந்த இருவர் நிலைமட்டும் எப்படி?
மாறுபடாத நிலையில், உலகத்தை மறந்த நிலையில், வெளியறையில் பணிப்பெண் படுத்திருக்கிறாள், அதற்கும் வெளியே காவலனொருவன் காத்திருக்கிறான் என்ற எதையுமே நினைக்காத நிலையில், இந்திரபானு அருகிலிருக் கிறான். அவன் கரமொன்று தன் குழலைக் கோதி விளையாட இன்னொரு கரம் மற்றதைத் தேடுகிறது என்பதை மட்டும் உணர்ந்த முத்துக்குமரியின் உடல் வேதனையால் நெளிந்தது. அந்த வேலையைச் சற்றுத் தணித்துக்கொள்ளவோ என்னவோ அவள் தனது பவள வாய் திறந்து, “என்னமோ சொன்னீர்களே,” என்றாள் மெதுவாக
அவள் கழுத்தில் புதைத்த முகத்தை எடுக்காமலே காதுக்கருகில் கேட்டான் அவன், “என்ன சொன்னேன்?” என்று.
சர்ப்பம் சீறுவதுபோன்று மூச்சின் உணர்ச்சியில் கலந்து காதில் புகுந்த அந்த ரகசியச் சொற்களைக் கேட்ட முத்துக்குமரி புன்முறுவல் கொண்டாள். “ஏதோ கட்டுக் காவல்….” என்று முணுமுணுக்கவும் செய்தாள்.
“ஆம் ஆம்.” அவனும் முணுமுணுத்தான்.
“என்ன ….?”
“கட்டுக்காவல்….”
“உம்…”
“தடுக்காதது உண்டு.”
இதைக் கேட்ட அவள் சட்டென்று அவனை நோக்கி ஒருக்களித்து, “அது எது?” என்றாள் மெள்ள.
“இதுதானென்றால்….”
“இப்பொழுது கிடைத்திருப்பது.”
“எதுவோ ?”
“காதல்….”
“கட்டுக் காவலைக் கடந்து விட்டதா?”
“ஆம்.”
“அது மட்டுமல்ல…” என்று இழுத்தாள் பாண்டிய
குமாரி,
“வேறு எது?” என்றான் அந்தக் காளை.
“கட்டுப்பாட்டையும் கடந்து விட்டது,” என்றாள் மெள்ள அந்தக் காரிகை
“எது?” இந்திரபானு புரியாதது போல் கேட்டான்.
“இதுதான்,” என்ற முத்துக்குமரி அளவுக்குமீறி நகர்ந்த அவன் இடது கையைத் தனது வலது கையால் தடுத்துக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டாள்.
வேறு இடம் கிடைக்காது போகவே அந்த மலர்க் கையில் அவன் கரம் சுழன்றது. பிறகு விடுவித்துக்கொண்டு அவள் கையைப் பிடித்து நெரிக்கவும் செய்தது. “என்ன இது?” என்றாள் முத்துக்குமரி
“தண்டனை,” என்றான் இந்திரபானு
“வலிக்கிறது.”
“வலிக்கிறதற்குத்தானே நெரிக்கிறது,” என்று கூறி மேலும் ஏதோ பேச முயன்ற அவன் வாயைச் சரேலென்று அவன் கையிலிருந்து பொத்தியது.அவன் உதடுகளில் பதிந்த கை மலரைவிட மென்மையாயிருந்தது. அவன் உதடுகள் அக் கையில் அழுந்தப் பதிந்தன. அந்தக் கையிலிருந்த பாண்டியநாட்டு முத்து மோதிரம் அவன் உதடுகளில் அழுந்தியதால் சற்று உதடுகள் வலிக்கக் கூடச் செய்தன. இந்திரபானுவுக்கு அந்த வலிகூடத் தேவையாயிருந்தது. நீண்டநாள் மனவலிக்கு அந்த வலி மாற்று மருந்தென்று நினைத்தான். அந்த மோதிரத்தின் முத்தையும் மெல்லக் கடித்தான்.
முத்து கடிக்கப்படுவதை உணர்ந்த முத்துக்குமரி சட்டென்று கையை இழுத்துக்கொண்டாள். “முத்தைக் கடிக்கிறீர்கள்?” என்று கோபப்பட்டாள்.
“ஆம்.” இந்திரபானு மெல்ல அவள் காதுக்கருகில் நகைத்தான்.
“இந்த முத்து…” என்றாள் முத்துக்குமரி ஆத்திரத் துடன்.”
“என்ன அதற்கு?”
“என் தந்தையளித்தது; விலை உயர்ந்தது.”
“இருக்கட்டுமே.”
“அதை ஏன் கடித்தீர்கள்?”
"எனக்குத் தெரியவேண்டாமா குமரி?"
” என்ன தெரியவேண்டும்?”
“முத்தின் தரத்தைப் பார்க்கும் முத்துக் குளியாளர்கள் அதை லேசாகக் கடித்துப் பார்ப்பது வழக்கம்.”
“ஆமாம், முத்துக் குளித்து சீர்செய்யப்பட்டதும் தரம் பிரிப்பதற்குப் பார்ப்பார்கள்.”
“ஆம்.”
“தரம் பிரித்து மோதிரம் கட்டிய பின் பார்ப்ப துண்டா?”
“ஏன் கூடாது.”
“எதற்காம்?”
இந்திரபானு தலையை மெள்ளத் தூக்கி அவளை நன்றாகத் தனக்காகத் தனது இடது கையால் புரட்டி அவளை உற்று நோக்கினான். “இங்கும் தரம் பிரிக்க வேண்டியிருக்கிறது,” என்றும் கூறினான்.
சாளரத்திலிருந்து வந்த விண்மீன்களின் வெளிச் சத்தில் அவள் முகம் மிக மங்கலாகத் தெரிந்தது அவனுக்கு. இருப்பினும் அவள் கண்கள் மட்டும் பளிச்சிட்டன பெரு முத்துக்களைப்போல். அவள் உதடுகள் நன்றாகத் தெரியாவிட்டாலும் அவற்றின் சிவப்பு ஓரளவு ஒளி பெற்றே இருந்தது. இரண்டு கெம்புகள் போல் உதடுகள் அசைந்தன அந்த மங்கலான வெளிச்சத்திலும், “இங்கு தரம் பிரிக்க எத்தனை முத்துக்கள் இருக்கின்றன?” என்று.
“இரண்டு,” என்றான் இந்திரபானு.
“இரண்டு ஏதாம்?” குமரியின் குரல் தழுதழுத்துக் கிடந்தது, தன்னைப் புரட்டிய இந்திரபானுவின் கரம் பின் புறத்தில் அழுத்திக் கிடந்ததால்,
“மோதிரத்தில் தங்கத்தில் பிணைந்திருக்கும் முத்து ஒன்று.” என்றான் புன்முறுவலுடன் இந்திரபானு .
“இன்னொன்று?”
“இதோ,” என்று அவள் உடலை இடது கையால் அசைத்துக் காட்டினான். “இந்த முத்து அதிக எடை யுள்ளது. அரைஸாகியோவுக்கு அதிகப்பட்டாலே பாண்டிய மன்னர் முத்துக்களைத் தன் பொக்கிஷத்துக்கு இழுத்துக்கொள்கிறார். ஆனால் இந்த முத்தை மட்டும்…”
“என்ன, இதை மட்டும்” என்றாள் முத்துக்குமரி
“ஒன்று அவராகவே தானம் செய்ய வேண்டும்.”
“அல்லது.”
“நானாகவே தூக்கிக்கொண்டு போய் விடுவேன்,”
“பெரிய வீரர்.” இம்முறை ஏளனத்துடன் கூறினாள் முத்துக்குமரி.
“என் வீரத்துக்கு என்ன குறை?”
“இந்த முத்தைத் தூக்கிக்கொண்டு போய் விடுவதாக மார் தட்டுகிறீர்களே?”
“ஆம்.”
“இது வீரத்துக்கழகா?”
“எப்படி வீரமோ?”
“ஏன் வீரமில்லை?”
“தானாகக் கிடைப்பதை தூக்கிக் கொண்டு போகப் பிரமாத வீரம் வேண்டும்!” என்று மெல்லச் சிரித்தாள் பாண்டியகுமாரி.
“ஆம், தானாகக் கிடைப்பதுதான், வா இப்படி. இப் பொழுதே தூக்கிக்கொண்டு போகிறேன்,” என்று எழுந்து அவள் உடலைச் சுற்றித் தன் கைகளைக் கொடுத்துத் தூக்க முற்பட்டான்.
அவன் தூக்க முற்பட்ட பின்புதான் விழித்துக் கொண்டாள் முத்துக்குமரி காதல் மயக்கத்திலிருந்து.
“நீங்கள் எப்படி வந்தீர்கள்?” என்று வினவினாள் கிலியுடன்.
“சாளரத்தின் மூலம் ஏறிக் குதிக்கவில்லை நான் என்ன திருடனா தப்பு வழியில் வர?” என்றான் அவன்.
“திருடனல்லவா? வேறு யாரோ?”
“காவலன்.”
“அரண்மனைக் காவலனா?”
“ஆம். உடையைப் பார்,” என்று அவளைக் கட்டிலை விட்டு குழந்தையைத் தூக்குவதுபோல் தூக்கிக் கொண்டு சாளரத்தின் வெளிச்சத்தில் கொண்டுபோய் இறக்கினான்.
அவள் அவனை நோக்கி, “இன்று பாதகமில்லை ,” என்றாள்.
“ஏன்?”
“மெள்ள இறக்கினீர்கள் கீழே.”
“வேறு எப்படி இறக்குவேன்?”
“சிந்தித்துப் பாருங்கள்.”
“சிந்தனைக்கு என்ன இருக்கிறது?”
“காட்டுக்கோட்டை இருக்கிறது.”
“அப்புறம்?”
“என் சிறிய தந்தையின் புரவியிருக்கிறது. அதன் மேலேறி விழப்போன என்னை நீங்கள் தாவிப் பிடித்து ஆக்ரோஷத்துடன் சுமந்து சென்று எங்கள் விடுதிப் படியில் போட்ட நிலையிலிருக்கிறது,” என்று அவள் கண்களில் பழைய கனவு விரிந்தது. அவனும் அந்த நிலைக்குச் சென்று கனவில் சிக்கினான்.
சற்றுப் பொறுத்து அவள் மெள்ளக் கூறினாள் அவனுடன் இழைந்தவண்ணம், “பணிப்பெண் விழித்துக் கொள்ளப் போகிறாள்,” என்று.
“விழிக்க மாட்டாள்,” என்றான் இந்திரபானு திட்டமாக.
“ஏன்?”
“செண்பகப் பூவை அனுபவிக்கிறாள்.”
“இன்னொரு காவலன்?”
“அவனும் ரசிகன். செண்பகத்தை முகர்ந்தான்.”
“நான் முகர்ந்தது”
“அது வேறு.”
“அந்த இன்னொன்று.”
“இதோ இருக்கிறது,” என்று தன் கச்சையிலிருந்த செண்பகப் பூவை எடுத்துக் காட்டினான்.
“இப்படிக் கொடுங்கள்.”
“வேண்டாம். இதை முகரக்கூடாது நீ,” என்று கையை இழுத்துக் கொண்டான்.
“ஏன்?”
“அவர்களைப்போல் நீயும் மயங்கிவிடுவாய்.”
“சரி, சரி தெரிகிறது. என்னை மயக்க இந்த அஸ்திரம் தேவையில்லை.
“என்ன குமரி?”
“வேறு அஸ்திரம் இருக்கிற தைரியம் உங்களுக்கு.”
இருவரும் நகைத்தார்கள். ஒருவரை நோக்கி ஒருவர் நெருங்கவும் செய்தார்கள். திரும்பவும் செய்தார்கள். சற்று தூரத்தே இருந்த பஞ்சணை பயந்தது.