Raja Muthirai Part 2 Ch4 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
ராஜ முத்திரை இரண்டாம் பாகம் – சாண்டில்யன்
அத்தியாயம் – 4 புதுக் காவலன்
Raja Muthirai Part 2 Ch4 | Raja Muthirai | TamilNovel.in
வீரரவி உதயமார்த்தாண்டவர்மனின் விஷ விழிகளில் விரிந்த சிரிப்புச் சாயையும் அவன் உதடுகளிலிருந்து கொட்டிய சொற்களில் கலந்தோடிய விபரீத ஒலியையும் கவனித்த வாலிபன், மன்னன் கண்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளத் தான் நின்றிருந்த மண்டபத்தின் அகல நீள உயரங்களை அளக்கும் பாவனையில் கண்களை ஐம்புறமும் ஓடவிட்டான். சலனமும், ஓரளவு அச்சமும் கலந்த அந்த வாலிப வீரனின் பார்வையைக் கண்ட சேர மன்னன் உதடுகளில் புன்னகையும் விஷமமும் நன்றாக விரிந்ததன்றி, அடுத்து அவன் கேட்ட கேள்வியிலும் விஷமம் பூர்ணமாக ஒலித்தது. “மண்டபத்தை எடை போடுகிறாயா, வீரனே?” என்று வினவினான் மன்னன் லேசாக நகைத்து.
வாலிபன் கண்கள் விடுதிக் கூரையையும் சுவர் களையும் விட்டு மீண்டும் மன்னனை நோக்கின. “மன்னர் விடுதியை எடைபோட இந்த அற்பன் யார்?” என்று மிகுந்த பணிவுடன் வாலிபன் பதில் கூறினான்.
மன்னன் கண்கள் மீண்டும் வாலிபனை ஊடுருவின. அத்துடன் உதடுகளும் சொற்களைச் சர்வசாதாரணமாக உதிர்த்தன. “வீரனே! உன்னைக் குறைத்து மதிப்பிட்டுக் கொள்ளாதே. நீ பார்வைக்குத்தான் அற்பன். இந்த விடுதியும் நீயும் ஒன்று,” என்று மன்னன் மீண்டும் முறுவல் கூட்டினான் உதடுகளில்.
வாலிபன் கண்கள் நிலத்தை நோக்கித் தாழ்ந்தன. “எனக்கு விளங்கவில்லை மன்னவா,” என்று மெல்லக் கூறினான் வாலிபன்.
“இந்த விடுதி பிரதான அரண்மனையல்ல….” என்று சுட்டிக் காட்டினான் மன்னவன்.
“ஆம் மன்னவா,” என்றான் வாலிபன் விடுதியைப் பற்றி மன்னவன் ஏன் பேசுகிறான் என்பதை அறியாமல்.
“அரண்மனையின் அகழியையும் மதிலையும் தாண்டியவுடன் முகப்பிலிருக்கும் சிறு விடுதிகளில் ஒன்று இது.”
“ஆம் மன்னவா! அரண்மனைக் கோட்டத்தின் நடுப் பெரு மாளிகையின் அழகும், கம்பீரமும் இதற்கு வராது.
“இருப்பினும் மாளிகைக்கு இது குறைந்ததல்ல. மாளிகையில் மன்னன் செல்வத்துடனும் சிறப்புடனும் வாழ அவனைச் சூழ்ந்த வீரர்களின் அரச பக்தியும், சக்தியும் அவசியமல்லவா?” என்று வினவிய அரசனை ஏறெடுத்து நோக்கிய வாலிபன், “ஆம் மன்னவா மிக அவசியம்.” என்று துடிப்புடன் கூறினான்.
அந்தத் துடிப்பை ஆமோதிப்பவன்போல் தலையசைத்த உதயமார்த்தாண்டவர்மன் மேலும் பேசத் தொடங்கி, அந்த வீரர்கள் எத்தனை திடமோ அத்தனை திடமானவை, அரண்மனை அகழி மதிலை அடுத்து அதைச் சுற்றிக் கட்டப்பட்டிருக்கும் இந்தச் சிறு விடுதிகள். அரண்மனையைப்போல் படாடோபமானவையல்ல. ஆனால் உரமான சுவர்கள் உள்ளவை. உண்மையான வீரனின் உள்ளம் எத்தனை உரமோ அத்தனை உரம் இவ்விடுதிகள். அரசன் மகிமையுடன் ஆள எப்படி உரமான வீரர்கள் அவசியமோ, அரண்மனைப் பாதுகாப்புக்கு இச்சிறு விடுதிகள் அவசியம். ஆகையால் என் வீரர்களை நான் எத்தனை நேசிக்கிறேனோ அத்தனை இவ்விடுதிகளையும் நேசிக்கிறேன்,” என்று கூறியதன்றி, “இதை நீ ஒப்புக் கொள்வாய் என்று நினைக்கிறேன்,” என்று வீரனை நோக்கி முடிக்கவும் செய்தான்.
வாலிப வீரனின் உணர்ச்சிகள் பலவிதமாகச் சுழன்று கொண்டிருந்ததால் சில விநாடிகள் அவன் பதிலேதும் சொல்லாமல் மௌனமாக நின்றான். சிறைப்பட்ட தன்னைப் போன்ற சாதாரண வீரர்களைக் கடுமையான கேள்விகளைக் கேட்டுத் தண்டிக்கவோ விடுதலையோ செய்யாமல் நீண்ட நேரம் பலபடி மன்னன் பேசவேண்டிய காரணம் அவனுக்கு விளங்கவில்லை. தவிர, தன்னைப் போன்றவர்களைக் காவலர் தலைவன்தான் விசாரிப்பது வழக்கமே தவிர மன்னன் நேரிடப் பார்ப்பதோ விசாரிப்பதோ கிடையாதாகையால், மன்னன் தன்னை நேரில் ஏன் சந்திக்கின்றானென்பதும் புரியாத புதிராயிருந்தது. அவனுக்கு மன்னவன் தன்னை நேரில் விசாரிப்பதிலிருந்து ஏதோ மர்மம் இருப்பது மட்டும் குறிப்பாகத் தெரிந்ததேயொழிய விவரமாகவோ திட்டமாகவோ ஏதும் தெரியாததால் அவன் சில விநாடிகள் குழம்பி நின்றான்.
அவன் மௌனத்தைக் கவனித்த வீரரவி, “நான் சொல்வதை நீ ஒப்புக்கொள்ள முடியாவிட்டால் அஞ்சாமல் சொல்லிவிடு ,” என்றான்.
வாலிபன் மன்னனை நோக்கிப் பெருமரியாதை யுடன், தலை தாழ்த்தினான். அத்துடன் சொல்லவும் – செய்தான். ”மன்னர் சொல்வதை மறுக்க இந்த அற்பனுக்குத் துணிவேது?” என்று.
அடுத்தபடி மன்னன் குரல் திட்டமாக எழுந்தது. “துணிவில்லாதவன் வீரனல்ல. வீரனல்லாதவனை நான் விரும்புவதில்லை,” என்ற அவன் சொற்களில் திடமும் உறுதியும் இருந்தன.
“துணிவு இடத்தைப் பொறுத்தது மன்னவா,” என்றான் வாலிபன்.
“இடத்தைப் பொறுத்ததா!” மன்னன் குரலில் வியப்பு ஒலித்தது.
“ஆம் மன்னவா! போரில் துணிவைக் காட்டுபவன் வீரன் மரியாதைக்குரியவர்கள், வயோதிகர்கள் பெண்கள் இவர்கள் முன்பு வீரம் பேசுவதோ, துணிவைக் காட்டு வதோ வீரத்துக்கு அடையாளமில்லையென்று சாத்திரங்கள் கூறுகின்றன,” என்ற வாலிபன் தன் சுயநிலை மறந்து மேலும் விவரித்தான், “அதுமட்டுமல்ல மன்னவா! எளியவரைத் தாக்குவது, பெண்களை அபகரிப்பது, ஓடும் எதிரிமீது வேலெறிவது இவற்றையும் வீரர்கள் தர்மம் அனுமதிக்கவில்லை ,” என்று .
இந்த விவரத்தைக் கேட்ட மன்னன் முகத்தில் கோபத்தின் சாயை ஒரு விநாடி தோன்றி மறைந்தது. பிறகு பழைய வஞ்சகப் புன்முறுவல் அவன் இதழ்களை நன்றாகத் தழுவிக் கொள்ள, மன்னன் வீரனைச் சிலாகித்து, “நன்று சொன்னாய் வீரனே. அதுதான் தர்மம்; துணிவைக் கைவிட வேண்டிய நேரமும் நீ குறிப்பிட்டவைதான்; ஆனால், அரசனைக் காக்கும் விஷயத்தில், அவன் நலன்களைப் பாதுகாக்கும் விஷயத்தில் துணிவையும் பக்தியையும் காட்டவேண்டியது அவசியமல்லவா?” என்று கேட்கவும் செய்தான்.
“மிக அவசியம்?” என்றான் வாலிபன்.
“உனக்கு அந்தப் பக்தி உண்டா?” மன்னன் கேள்வி திடீரென்று உச்ச ஸ்தாயியில் ஒலித்தது.
“சோதித்துப் பாருங்கள் மன்னவா,” என்ற வாலிபன் மன்னனை நன்றாக ஏறெடுத்து நோக்கினான்.
“அப்படியானால் சொல், கூத்தன் எங்கே?” என்று கேட்டான் மன்னவன்.
“எனக்குத் தெரியாது, மன்னவா?”
“கூத்தன் யாரொன்பது உனக்குத் தெரியுமா?”
“தெரியும் மன்னவா?”
“எத்தனை நாட்களாக?”
“பல நாட்களாக?”
“பல நாட்களாக என்றால்?”
“சுமார் பதினைந்து நாட்களாக”
“அதற்கு முன்னால் எங்கிருந்தாய்?”
“எங்குமில்லை. நாடோடியாக இருந்தேன்.”
“நீ சேர நாட்டவனா?”
“இல்லை. சோழ நாட்டவன்!”
“இங்கு எதற்கு வந்தாய்?”
“பிழைப்பைத் தேடி. கூத்தன் உதவினான்.”
“கூத்தன் உன்னை எப்படி அரண்மனையில் சேர்க்க முடிந்தது?”
“தங்கள் கருணையால்.”
“என் கருணை உன்மீது ஏன் விழுந்தது? தவிர, கூத்தன் வீரனல்லவென்பது உனக்குத் தெரியும்?” இதை வீரரவி திடீரென்று கேட்கவே வாலிபன் அசந்து போனான். அசந்து விழிக்கவும் செய்தான்.
“கூத்தன் வீரனல்லவென்பது உனக்குத் தெரியும். அப்படியிருக்க ஒரு கூத்தாடியை மன்னன் ஏன் அரண்மனைக் காவலனாக்கினான் என்பதை யோசித்தாயா?” என்று மீண்டும் கேட்டான் மன்னன்.
“இல்லை மன்னவா,” என்று கூறினான் வாலிபன்.
“இருக்கிற கூத்தாடிகளையெல்லாம் அரண்மனைக் காவலர்களாக்கினால் அரண்மனையின் கதி என்ன?”
“அதோகதிதான்”
“இதை அறிந்தும் அவனை அரண்மனைக் காவலனாக்கினேன். அதுவும் முக்கியமான கடற்கரை மாளிகையில் காவலுக்கு வைத்தேன். ஏன் தெரியுமா?” என்ற வீரரவி வாலிபனைக் கூர்ந்து நோக்கினான்.
“ஏன் மன்னவா?” என்று சற்று சலனத்துடன் கேட்டான் வாலிபன்.
வீரரவி ஒருவிநாடி தாமதித்தான். பிறகு அறிவித்தான் நிதானமாக, “அவன் பாண்டியநாட்டு ஒற்றன்,” என்று.
வாலிபன் எல்லையற்ற அதிர்ச்சியால் பேச நா எழாமலும், கையசைக்கக்கூட திடமில்லாமலும் விநாடிகள் திகைத்து நின்றான். “அப்படியா மன்னவா!” என்று கடைசியில் கேட்கவும் செய்தான் திகைப்பு குரலில் பெரிதும் ஒலிக்க.
ஆம். சில நாட்களாகக் கூத்தனுடைய நடவடிக்கை கள் பெரிதும் சந்தேகத்துக்கு இடமாயிருப்பதாக ஒற்றர்கள் சொன்னார்கள். ஆகையால் அவனைக் காவலனாக்கினேன் கடற்கரை மாளிகையைக் காவல் புரிய அனுமதித்தேன். அவனைக் கவனிக்கும்படி வீரர்களுக்கும் பணித்திருந்தேன். நான் விரித்த வலையில் விழுந்தான் கூத்தன். நேற்று முன் ஜாமம் மட்டுந்தான் அவனுக்குக் காவல். இருப்பினும் இரண்டாம் ஜாமமும் அங்கு தங்கினான். நள்ளிரவுக்குச் சற்று முன்பு மாளிகைக்குள் நுழைந்தான். பிறகு வெளியே வந்து புரவிமீதேறி ஓடினான். அடுத்து நடந்தது உனக்குத் தெரியும். அவன் மீது கத்தி வீசப்பட்டது. இருப்பினும் வேகமாக மறைந்துவிட்டான்,” என்ற மன்னன் சிறிது பேச்சை நிறுத்தி வாலிபனைக் கூர்ந்து கவனித்தான்.
“இது எதுவும் எனக்குத் தெரியாது மன்னவா,” என்றான் வாலிபன்.
“ஆம் ஆம். மறந்துவிட்டேன். உனக்கெப்படித் தெரியும்? நீதான் கூத்தனைப் பார்க்கவில்லையே,” என்ற மன்னன், “வீரனே! உன்னைப் போன்ற சாதாரண வீரனுடன் நான் ஏன் இத்தனை நேரம் பேசுகிறேன். இத்தனை விவரங்களைச் சொல்லுகிறேன் என்பது உனக்கே விசித்திரமாயில்லையா?” என்று வினவவும் செய்தான்.
“ஆம் மன்னவா! வியப்பாகத்தானிருக்கிறது,” என்றும் ஒப்புக்கொண்டான் வாலிபன்.
“வியக்கவேண்டாம் வீரனே! நான் வீரர்களை எப்பொழுதும் விரும்புகிறேன், மதிக்கிறேன். நீ கூத்தனல்ல, வீரன். கூத்தன் அறிமுகப்படுத்திய அன்றே நான் அதைப் புரிந்து கொண்டேன்,” என்று சற்று நிதானித்தான் மன்னன்.
“நன்றி மன்னவா,” என்று வாலிபன் தலை தாழ்த்தினான்.
“கூத்தனை நான் நம்பவில்லை. எப்படியும் கூத்தாடி கூத்தாடிதான். அவனை விலைக்கு வாங்கலாம். ஆனால் வீரனை விலைக்கு வாங்க முடியாது. ஆகவே நீ கூத்தனால் அறிமுகப்படுத்தப்பட்டவனாயிருந்தாலும், உன்னை நம்புகிறேன். இனி கூத்தனை மறந்துவிடுவோம். துரோகச் சிந்தையின்றி நீ நடப்பாயா?” என்று வினவிய அரசன் தனது மஞ்சத்திலிருந்து மிகக் கம்பீரமாக நின்றான்.
“இதை மன்னர் கேட்க வேண்டுமா?” என்று கேட்டான் வாலிபன்.
“கொடுத்த பணியை ராஜத் துரோகமின்றிச் செய்வதாக உன் வாளின் மேல் ஆணை வை,” என்றான் மன்னன்.
“இது அரண்மனைக் காவலனாகச் சேரும்போதே எடுத்துக் கொண்ட பிரமாணம்தானே?” என்றான் வாலிபன்.
“மீண்டும் ஒருமுறை என் முன்பாக ஆணையிடு,” என்று உத்தரவிட்டான் மன்னன்.
வாலிபன் தன் வாளை உருவி உயர்த்தி ஆணையிட்டான். அந்த ஆணையின் வேகத்தைக் கண்ட மன்னன் முகத்தில் சிந்தனை சற்றே விரிந்தது. “நன்று வாலிபனே! இன்று முதல் கூத்தன் பணியை நீ மேற்கொள்,” என்று அறிவித்த மன்னன், வாலிபன் வெளியே செல்லலாமென்பதற்கு அறிகுறியாகக் கையை அசைத்தான்.
தலை வணங்கி வெளியே வந்த வாலிபனை அங்கிருந்த தலைமைக் காவலன் மீண்டும் சிறைக் கோட்டத்திற்கே அழைத்துச் சென்று சிறையிலடைத்தான். வாலிபன் சிந்தை குழம்பிக் கிடந்தது. மன்னன் உத்தரவுக்குப் பிறகு தான் மீண்டும் சிறையில் அடைபட வேண்டிய காரணம் அவனுக்குப் புரியவில்லை. வீரரவியின் சொற்களில் பல தத்துவங்கள் ஒலியிட்டாலும் அவற்றுக் கெல்லாம் பின்னால் அவன் மனத்தில் ஏதோ எண்ணங்கள் ஓடியதாக நினைத்து நினைத்து அவை என்னவாக இருக்க முடியும் என்ற விளக்கம் தேடித் தேடி அலுத்த வாலிபன் சிறையில் உணவருந்தி நீண்ட நேரம் உறங்கினான். அன்று இரவு நீண்ட பிறகும் அவனுக்கு விடுதலை கிடைக்க வில்லை . இரவின் முதல் ஜாமம் முடியும் தருவாயில் படுக்கப்போன சமயத்தில் சிறைக் கதவு திறக்கப்பட்டு உள்ளே நுழைந்த தலைமைக் காவலன் “உடைகளை அணிந்து புறப்படு” என்று உத்தரவிட்டான்.
அவனை எதுவும் கேட்பதில் பயனில்லை என்று அறிந்த வாலிபன் உடைகளை அணிந்து வாளை இடையில கட்டிக்கொண்டு தலைமைக் காவலனைத் தொடர்ந்து அறையைவிட்டு வெளியே வந்தான். வெளியே நான்கு காவல் வீரர்கள் இருந்ததையும் தனிப் புரவி ஒன்று தனக்காகக் கொண்டு வரப்பட்டதையும் கண்டு யாரையும் எதுவும் கேட்காமல் புரவி மீதமர்ந்து சென்றான். இப்படி நான்கு வீரர்களும், தலைமைக் காவலனும் புடைசூழ்ந்து வர, புரவியை நடத்திச் சென்று வாலிபனை நகரத்தின் தென் கிழக்குக் கோடிக்கு அழைத்துச் சென்று அங்கிருந்த கடற்கரை மாளிகை வாயிலில் இறக்கினார்கள். பிறகு தலைமைக் காவலன் மட்டும் அவனை உள்ளே அழைத்துச் சென்று மாளிகையின் உள்ளறையொன்றில் விட்டுச் சென்றான். சில நிமிடங்களுக்குக் கெல்லாம் அந்த உள்ளறையில் தோன்றிய வீரரவி வாலிபனைத் தன்னுடன் வருமாறு சைகை செய்து இன்னும் உள்ளே சென்றான்.
மன்னனைத் தொடர்ந்து சென்ற வாலிபன் அம் மாளிகைக்கு உள்ளடுக்குள் பல இருந்ததையும் ஒவ்வோர் அடுக்கிலும் வாள் தாங்கிய வீரர்கள் காவல் புரிந்து கொண்டிருந்ததையும் கண்டான். அந்த அடுக்குகளின் கடைசி அரங்கை அடைந்த மன்னன் அங்கிருந்த வாயிலைக் காட்டி, இந்த வாயிலை நீ காக்கவேண்டும். உள்ளேயிருப்பவருடன் எக்காரணம் முன்னிட்டும் பேசாதே. மற்ற யாரையும் பேச அனுமதிக்காதே. ஆனால் பயப்படாதே. உன் விகார முகமே உனக்குப் பாதுகாப்பு,” என்ற மன்னன் திடீரென எதையோ யோசித்துவிட்டு, “உன் முகத்தில் இத்தனை தழும்புகள் எங்கிருந்து உண்டாயின?” என்றும் வினவினான்.
“பத்தினித் தெய்வத்துக்குத் தீக்குளித்தேன்,” என்று விளக்கினான் வாலிபன்.
“சுத்தமின்றி நெருப்பில் இறங்கிவிட்டாயா?” என்று பயத்துடன் கேட்டான் மன்னன்.
“ஆம்.”
“குப்புற விழுந்துவிட்டாயா?”
“ஆம்.?”
”பத்தினித் தெய்வத்துடன் விளையாடலாமா வீரனே?” என்று வினவினான் மன்னன் சீற்றத்துடன்.
“யார் விளையாடுவதும் தவறு, மன்னவா!” என்றான் வாலிபன்.
இதைக் கேட்ட மன்னன் முகத்தில் சீற்றம் மறைந்து கபடம் ததும்பியது. “சாமர்த்தியமாகப் பேசுகிறாய் வீரனே. இந்தச் சாமர்த்தியத்தைக் காவலில் காட்டு,” என்று கூறிய மன்னன் வாலிபனை அவ்விடத்திலேயே விட்டுச் சென்றான்.
வாலிபன் காவலைத் துவங்கினான். உருவிப் பிடித்த வாளுடன் அந்தக் கடைசி அடுக்களையின் வாயிலில் அப்புறமும் இப்புறமும் நடந்தான். தன்னைப் போன்ற வீரர்கள் இதர அரங்குகளில் நடக்கும் ஒலியும், வெளியே கடலலைகளின் ஒலியும் கூட அவன் காதில் விழுந்தன. நாழிகைகள் ஓடின. நள்ளிரவும் தாண்டிக் கொண்டிருந்தது. காவல் நடை போட்டவண்ணம் மெள்ள அந்த அரங்கைச் சுற்று முற்றும் பார்த்தான். சற்றுச் கோடியிலிருந்த அறை வாயிலின் உள்ளேயும் அரவம் அடங்கிவிட்டதைக் கவனித் தான். பிறகு அந்த அறைவாயிலை நெருங்கி அதன் படியில் அமர்ந்து கொண்டு சிந்தனையில் ஆழ்ந்தான். நீண்ட நேரம் சிந்தனையில் ஆழ்ந்துவிட்டதால் உணர்ச்சிகளை அடியோடு இழந்து நின்ற வாலிபன், தனக்குப் பின்னாலிருந்த அறைக்கதவு திறக்கப் பட்டதையோ ஒரு பெண் உள்ளிருந்து அடிமேலடி எடுத்து வைத்துத் தன்னை அணுகியதையோ கவனிக்கவில்லை. ஆனால் கதவைத் திறந்த அந்தப் பெண்ணுருவம் மட்டும் அவனைக் கவனித்தது; கவனித்தது மட்டுமல்லாமல் கையிலிருந்து ஒரு சிறு விசிறியால் அவனைத் தட்டி “கூத்தா! கூத்தா!” என்று மெதுவாக அழைக்கவும் செய்தது.
வாலிபன் திடுக்கிட்டுத் திரும்பினான். மிக அழகிய இருவிழிகள் அவன் விழிகளைச் சந்தித்தன. சந்தித்த விழிகள் மருண்ட ன. “நீ… நீ.” எனக் குழறினாள் விழிக்குடை யவள். வாலிபன் பதிலில் குழப்பம் சிறிதுமில்லை .
“புதுக் காவலன்,” என்ற பதில் மெதுவாக அச்சம் லவலேசமுமின்றி உறுதியுடன் வெளிவந்தது. அவள் திரும்பிக் கதவைச் சாத்த முயன்றாள்
.
“வேண்டாம்,” என்று மெல்லச் சொன்ன புதுக் காவலன் துணிவுடன் அவள் கரத்தைப் பற்றியதல்லாமல் அவை உள்ளே செல்லவிடாமல் தடுக்கவும் செய்தான்.