Raja Muthirai Part 2 Ch46 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
ராஜ முத்திரை இரண்டாம் பாகம் – சாண்டில்யன்
அத்தியாயம் – 46 இரவில் எழுந்த ஒலி
Raja Muthirai Part 2 Ch46 | Raja Muthirai | TamilNovel.in
பரலிமா நகரின் பிரதான கேளிக்கை மண்டபமல்ல அது. நகர எல்லைகளில் காட்டுவாசிகளும் நகரவாசிகளும் கலந்து, ஆடல் பாடல் கூத்து இவற்றைக் கண்டு ரசிக்கும் சிறிய கூடங்களில் ஒன்றுதான் அது. இருப்பினும் அந்தக் கேளிக்கைக் கூடத்தின் ஆடலரங்கு சம்பிரதாயத்துக்குச் சிறிதும் மாறுபடாமலும் மிகச் சிறப்பாகவும் அமைந்தி ருந்தது. நடனமாடுபவர் புகவும் வெளிவரவும் வாயில்கள் உடையதாய் நால்வகை வருணராகிய வச்சிரதேகன், வச்சிர தந்தன், வருணன், இரத்தகேசுரன் ஆகிய பூதருடைய தூண்கள் பெற்றதாய், நிலை விளக்குகள் உளதாய், இடத்தூணிடத்தே உருவு திரையாகிய ஒருமுக எழினியும், இரண்டு வலத் தூண்களிடத்தும் உருவு திரையாகிய பொருமுக எழினியும், மேற்கட்டுத் திரையாகக் காத்துவரல் எழினியும், சித்திர விதானமுடையதாய் சந்திரன், குரு, அங்காரகரை அதிதேவதைகளாகப் பெற்ற வெண்மை, பொன்மை, செம்மையென்னும் முத்துமாலைகள் தொங்க விட்டதாய் அமைந்திருந்த அந்தக் கேளிக்கை மண்டபம் கண்களுக்குப் பெருவிருந்தாகக் காட்சியளித்தது. அந்தச் சிறு கேளிக்கை மண்டபத்தின் சிறப்பைக் காணும் எந்தப் புதுமனிதனும் சேரநாட்டுச் செல்வ வளமும், கலைவளமும் எத்துணை சிறப்பு வாய்ந்தவை என்பதைப் புரிந்து கொள்வான். நகர எல்லையின் சிறுகூடத்துக்கே இந்தச் சிறப்பு உண்டென்றால் மற்றப் பெருங் கூடங்களும் அரண்மனை ஆடலரங்கும் எப்படியிருக்கும் என்று’ நினைத்துப் பிரமை கொள்வான்.
அத்தகைய பிரமையை அன்று அளித்தது ஆடலரங்கு மட்டுமல்ல; அன்று அந்த அரங்கில் நடந்த ஆய்ச்சியர் குரவையும் பிரமிக்கத் தக்கதாகவே இருந்தது. மலையாழத் தின் வழவழத்த மேனியுள்ள அழகுப் பைங்கிளிகள் எழுவர் சேர்த்து கைகோத்துக் கண்ணன் பின்னையை மாலையிட்ட வீரக்கூத்து ஆடினார்கள். முதலில் ஆடல்மாதரை வரிசையாக நிறுத்தி அவர்களுக்குப் பெயர் சூட்டினார்கள்.
“மாயவன் என்றாள் குரல்; விறள் வெள்ளை
ஆயவன் என்றாள் இளி தன்னை ; ஆய்மகள்
பின்னையாம் என்றாள் ஓர் துத்தை மற்றையள்
முன்னையாம் என்றாள் முறை.” குரலை என்பாளொருத்தி தன்னை மாயவனான கருமை நிறக் கண்ணனாகவும், இளி என்ற இன்னொbzருத்தி தன்னை வெள்ளை நிறத்தவனான பலராமனாகவும், துத்தை என்பவள் பின்னையாகவும், மற்றவர்கள் கண்ணன் காலத்திலிருந்த ஆயர்குல மாதராகவும் அறிமுகப்படுத்திக் கொண்டபின் முறைப்படி கூத்து துவங்கியது. இசைக் கருவிகள் முழங்கின.
“குரல் மந்தம் ஆக, இனி சமன் ஆக
வரன் முறையே, துத்தம்வலியா,உரனிலா
மந்தம்விளரி பிடிப்பாள், அவள் நட்பின்
பின்றையப் பாட்டெடுப்பாள்.” இப்படி மாயவனானவன் குரல் மந்தசுரமாகவும், இளி என் பவள் சமசுரமாகவும், துத்தை ஸ்தானத்திலிருந்தவளின் குரல் வல்லொலியாகவும் ஒலித்தன.
இப்படி பாத்திரத்திற்கு ஏற்ப குரலும் சுருதியும் அமைத்துப் பாடவும் பாட்டிற்கேற்ப ஆடவும் துவங்கிய
அந்த ஆடலழகிகள் காற்சலங்கைகள் வெகு சீக்கிரம் மண்ட பத்தில் கம்பீரமாகவும் இன்பமாகவும் ஒலித்தன. இசைக் கருவிகளுடன் இணைந்து ஒலித்த அந்தச் சதங்கை ஒலிகளும், வேடத்துக்குத் தகுந்தபடி சுருதி பிடித்து மந்திரத்திலும் ஸ்தாயியிலும் பாடிய குரலோசையும், அவர்கள் அணிந்திருந்த ஆடைகளின் சரசரவொலிகளும் அந்த மண்டபத்தில் மட்டுமின்றி அங்கு குழுமியிருந்த மக்கள் இதயத்திலும் ஒலிக்கவே மக்கள் மெய்ம்மறந்து குரவைக் கூத்தைப் பார்த்தார்கள்.
கைகோத்து மெய்ம்மறந்து ஆடிய அந்த அழகு மாதர் எழுவர் மறை திரையேதும் இல்லாது போயினும் நின்ற இடத்திலேயே பிரிந்தும் கூடியும் கண்ணன் நப்பின்னையின் காதல் கதையை இசைத்து ஆடிக் கொண்டிருந்தார்கள். அங்கு மண்டபத்தில் ஆயர்பாடியே வந்திருந்தது. பார்க்க வந்தவர்கள்கூட. ஆயர்களாகவும் ஆய்ச்சியர்களாகவும் மாறி ஆர்ப்பரித்தார்கள். சில நாட்களாக இத்தகைய களியாட்டங்கள் நிறுத்தப்பட்டிருந்தமையால் இன்று ஆடியவர்களிடமும் வெறியிருந்தது. பார்த்தவர்களிடமும் வெறியிருந்தது. ஆடியவர்கள் சுவானுபவமும் பார்த்த வர்கள் அனுபவமுமாகச் சேர்ந்து பெரு மயக்கமும் கலை வெறியும் அந்தக் கேளிக்கை மண்டபத்தில் நிரம்பிக் கிடந்தது.
இத்தனை இன்பத்திலும் ஈடுபடாமல் இருவர் மட்டு மிருந்தனர். அந்த இருவரில் ஆண்மகனானவன் மண்டபத் தில் கடைத்தூணின் ஒரு பகுதியில் சாய்ந்து கொண்டிருந்தான். அவன் பக்கத்திலிருந்த பெண், அவனிருந்த இடத்திலிருந்து பத்து விரற்கடையே தள்ளி உட்கார்ந்திருந்ததால் அவளுடன் அந்த ஆண்மகன் சர்வ சகஜமாகப் பேச முடிந்தது. குரவைக் கூத்தின் ஆரவாரத்தில், இசையெழுப்பிய மயக்கத்தில் நடனம் கிளப்பிய உள்ளக் கிளர்ச்சியில் அவ்விருவரையும் யாரும் கவனிக்கச் சந்தர்ப்பமில்லாது போயிற்று. அந்த வாலிபன் கண்கள் கூத்தைப் பார்க்க மறுத்தன. புத்தி கூத்தின் கதையைச் சிந்திக்க மறுத்தது. சித்தத்தில் விளைந்த பெரும் கவலை அவன் நுதலில் விரிந்து கிடந்தது. “இது எனக்கு அடியோடு புரியவில்லை.” என்ற சொற்கள் அவன் வாயிலிருந்து குழப்பத்துடனும் கவலையுடனும் உதிர்ந்தன.
பக்கத்திலிருந்த யுவதியும் தன் அழகிய கண்களைக் குழப்பத்துடன் அவன்மீது திருப்பினாள். “எனக்கும் புரிய வில்லை ” என்றாள் அவள்.
வாலிபன் சிறிது நேரம் ஏதோ சிந்தித்தான். பிறகு கேட்டான், “நீ அரண்மனையில் தானே இருக்கிறாய்?” என்று.
“ஆம்,” என்றாள் அந்த அழகி.
“நீ இங்கு வந்துபோகச் சுதந்திரமிருப்பது உனக்கு வியப்பாயில்லையா?” என்று அவன் மீண்டும் வினவினான்.
“வியப்பாகத்தானிருக்கிறது. நான் அரண்மனையை விட்டு வெளியே போவதையோ வருவதையோ யாரும் தடுப்பதில்லை ” என்று அவள் கூறினாள்.
“இது விசித்திரமாயில்லையா?” என்று கேட்டான் வாலிபன்.
“இங்கு நடக்கும் கூத்தைவிட விசித்திரமில்லை” என்ற அவள், “போர் நகரத்தை நெருங்கிவிட்டது. இருக்கிற போர் சன்னத்தையும் தளர்த்தி நகரத்தில் கேளிக்கையும் கூத்தும் நடக்க அனுமதிப்பதைவிட அரண்மனைப் பணிப் பெண்ணை வெளியே போக விடுவது பெரிய அனர்த்தமா?” என்று வினவவும் செய்தாள்.
“விசித்திரம், பெருவிசித்திரம்” என்ற வாலிபன் உதடுகள், “இத்தனையும் குருநாதர் ஏற்பாடுதானே?” என்று வினவினான்.
“ஆம்.”
“இன்னும் என்ன செய்திருக்கிறார் குருநாதர்?” என்ற வாலிபன் மீண்டும் யோசனையில் இறங்கினான். மறுபடியும் கேட்டான். “இத்தனைக்கும் சேரமன்னன் ஒப்புக்கொண்டிருக்கிறானா?” என்று.
“ஆம், கடற்படைத் தலைவர், சேனாதிபதி, அமைச்சர்கள் எல்லாருமே அவர் சொற்படி கேட்கிறார்கள்,” என்றாள் அந்த யுவதி.
“அந்த எல்லோரும் நகரப் பாதுகாப்பை உடைத்து விடத் தீர்மானித்திருக்கிறார்களா?” என்று வினவினான் அந்த வாலிபன்.
“அவர்கள் நடவடிக்கையிலிருந்து அப்படித்தான் தெரிகிறது,” என்றாள் அவள்.
“இந்த நிலையில் பாண்டிய மன்னருக்கு என்ன செய்தியனுப்ப முடியும் என்று எனக்கு விளங்கவில்லை. குறிஞ்சி. நகரம் பாதுகாப்பிழந்து கோலாகலத்தில் கிடக்கிறது. தாக்குங்கள் என்று செய்தியனுப்புவதா? எனக்கேதும் புரியவில்லை என்று சொல்லியனுப்புவதா? இங்கு நடக்கும் சகலமும் அறிவுக்குப் புறம்பாயிருக்கிறதே?” என்றும் அவன் மெல்லச் சொன்னான்.
“அறிவுக்குப் புறம்பானது மட்டுமல்ல,” என்றாள் அந்த யுவதி…
“வேறென்ன?” என்று வினவினான் அவன்.
“நேற்றிலிருந்து கிழக்குக் கோட்டைச் சுவருக்கெதிரி லுள்ள காட்டு முகப்பு மரங்கள் வெட்டப்படுகின்றன,” என்று பதில் கூறினாள் அவள்.
மீண்டும் திகைத்தான் அவன். “நானிருக்கும் மறைவிடத்திலிருந்து என்னால் ஏதும் அறியமுடியவில்லை. கோட்டையின் இயற்கை அரணான காடு ஏன் அழிக்கப் படுகிறது? இதைச் சாதாரணமாக நீயே விசாரித்திருக்க லாமே?” என்று கேட்டான் வாலிபன்.
“குருநாதரையே கேட்டேன்.” என்றாள் அவள்.
“என்ன சொன்னார் அவர்?”
“அரணை அழித்தால்தான் போர் நோக்கம் சேர மன்னனுக்கில்லை என்பது பாண்டிய மன்னருக்குத் தெரியுமாம்.”
“தெரிந்து பாண்டிய மன்னன் என்ன செய்வாராம்?”
“சமாதானத்தை நாடுவாராம்?”
“அவர் மகளைச் சிறையெடுத்தவனிடமா?”
“அதையும் கேட்டேன்.”
“அதற்கு என்ன பதில் கூறினார் குருநாதர்?”
“இப்பொழுதுதான் பாண்டியன் மகள் சிறையில் இல்லையே?” என்றார்.
*முத்துக் களவைப்பற்றி என்ன சொன்னார்? பாண்டிய மன்னர் மகள் கிடைத்தால் போதுமென்று போரை நிறுத்தி விடுவார் என்று எதிர்பார்க்கிறாரா?”
“எதிர்பார்க்கவில்லையாம். பாண்டியன் புத்திசாலி யானால் போரை நிறுத்தித் தன்னிடம் வந்து அது பற்றி நேரில் பேசுவான் என்கிறார்.”
வாலிபன் மேலும் குழம்பினான். “குறிஞ்சி! நீ என்னை மேலும் மேலும் குழப்புகிறாய்,” என்று கூறினான் அலுப்புடன்.
“குழப்புவது நானல்ல, குருநாதர்,” என்று மறுமொழி கூறிய குறிஞ்சி கேட்டாள் அந்த வாலிபனிடம், “உங்களைச் சரணடையச் சொல்லி மூன்று நாட்களாகிறதே, அதற்கு என்ன செய்யப் போகிறீர்கள்?” என்று.
“நான் சரணடைந்தால் சிறையிலிருந்து இம்முறை மீள முடியாது. குருநாதர் சொல்வதை என் ஒருவன் விஷயத்தில் சேரமன்னன் கேட்கமாட்டான்.” என்றான்.
“அப்படியானால் சரணடைய உத்தேசமில்லையா?”
“இல்லை,” என்றான் இந்திரபானு.
குறிஞ்சி தன் குரலை அவசியத்துக்கு அதிகமாகத் தாழ்த்தினாள். “குருநாதர் ஒரு முக்கிய விஷயம் சொன்னார்” என்று கூறினாள் மிக ரகசியமாக.
இந்திரபானு தன் கூரிய விழிகளைச் சரேலெனத் தூக்கினான். “என்ன அது?” என்று வினவினான்.
“உங்கள் முகம் உண்மையில் மிக அழகாம்…”
“உம்…”
“அதை விகாரமாக்கியது அவர்தானாம்…”
“ஆம்.”
“அதைத் திரும்பப் பழைய நிலைக்குக் கொண்டுவர அவரால்தான் முடியுமாம்.”
“ஆம்.”
“ஆகையால் முகத்தாசையால் நீங்கள் சரணடைவீர் களாம்.”
இதைக் கேட்ட இந்திரபானு மெல்ல நகைத்தான். “குருநாதர் இந்திரபானுவை இன்னும் புரிந்து கொள்ள வில்லை . முகத்தாசையல்ல , உயிர் ஆசைகூட வீர பாண்டியனிடமிருந்து இந்திரபானுவைப் பிரிக்கமுடியாது” என்றான் அந்தச் சிரிப்புக்கிடையே. அதைச் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே திடீரென அவன் கண்கள் என்று மில்லாதபடி பளிச்சிட்டன. அவன் எதையோ உற்றுக் கேட்பதை முகம் வலியுறுத்தியது. காதுகள் கேட்பது கேளிக்கையின் ஒலிகள் அல்ல; அதையும் மீறி எங்கோ ஒலித்த ஓர் ஓசை. அவன் குறிஞ்சியின் கையை அழுத்திப் பிடித்துக்கொண்டான். “வெளியே வா” என்று அவளிடம் கூறிவிட்டு எழுந்து மெல்ல கூட்டத்தில் திக்குமுக்காடி வெளியே வந்தான். மண்டப வாயிலில் உற்றுக் கேட்டான். அவன் பின்னால் வந்து நின்று கொண்ட குறிஞ்சியை நோக்கி, “குறிஞ்சி! உற்றுக் கேள் , உன் காதில் ஏதாவது விழுகிறதா?” என்று.
கேட்டது அவளுக்கும். இரவில் எழுந்த அந்த ஒலி இருவருக்கும் திக்பிரமையை அளித்தது.