Raja Muthirai Part 2 Ch47 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
ராஜ முத்திரை இரண்டாம் பாகம் – சாண்டில்யன்
அத்தியாயம் – 47 சரண்
Raja Muthirai Part 2 Ch47 | Raja Muthirai | TamilNovel.in
கேளிக்கை மண்டபத்திற்கு வெளியே ஆகாயம் கறுத்துக் கிடந்ததனாலும் மண்டபத்தின் முகப்புச் சர விளக்குகள் வீசிய வெளிச்சத்தில் இந்திரபானுவும் குறிஞ்சியும் ஒருவரையொருவர் நன்றாகப் பார்த்துக் கொள்ள முடிந்தது. பார்த்த அந்த இரு ஜோடிக் கண்களில் பெருத்த திகைப்பும் வியப்பும் கலந்து கிடந்தன. அதிக வீடுகளோ அரவமோ இல்லாத நகரத்தின் வடமேற்கு மூலையிலிருந்த கேளிக்கை மண்டபத்திற்கு அப்பால் மேற்குத் தொடர்ச்சி மலைக்காடும், அதன் சரிவில் நகரத்தின் பெருமதிலும், மதிலை அடுத்துச் சில காவலர் இல்லங்களும், இவற்றிலிருந்து அறவே தள்ளிக் கூத்தர் குடிசைகளும் இருந்தமையாலும், காவலர் மதிலோரம் அரவம் ஏதுமின்றிக் காவல் புரிந்த காரணத்தாலும், கூத்தர் குடிசைகளிலிருந்தோர் கேளிக்கை மண்டபத்துக்கு வந்திருந்தபடியாலும் அந்தப் பகுதியில் மண்டபத்துக் குள்ளிருந்த ஆடலொலியைத் தவிர வேறு அதிக ஒலி ஏதும் இல்லை. அரவம் அதிகமாக இல்லாத அந்த இடத்தில் இரவில் எழுந்த ஒலி மிகத் திட்டமாகவே கேட்டது. குறிஞ்சியும் இந்திரபானுவும் நீண்ட நேரம் அதை நன்றாக உற்றுக் கேட்ட பிறகு இந்திரபானு சொன்னான், “சந்தேக மில்லை” என்று
மலைமகள் குறிஞ்சி தன் பெருவிழிகளை அவன் மீது திருப்பி, “ஆம், சந்தேகமில்லை,” என்று பதில் சொன்னாள் பயமும் வியப்பும் கலந்த குரலில்.
இருவரும் மீண்டும் மௌனம் சாதித்தனர். ‘டக் டக்’ என்று புரவிக் காலடி ஓசை மிகத் தெளிவாகவும் ஒரே சீராகவும் கேட்டது. அந்த இரவில் அந்த ஓசையை மலைப்பகுதியும் வாங்கி எதிரொலி செய்ததால் அது எந்தப் பகுதியிலிருந்து வருகிறது என்பது மட்டும் விளங்கவில்லை இருவருக்கும். ஆகவே அப்படியும் இப்படியும் காதை மட்டுமின்றி, புத்தியையும் திருப்பிப் பார்த்த அந்த இருவரில் குறிஞ்சி கேட்டாள், “ஒலி கேட்கிறது, ஆனால் எந்தத் திசையிலிருந்து வருகிறது?” என்று.
“எனக்கும் தெரியவில்லை குறிஞ்சி. ஆனால் இது அந்த சாம்பல் நிறப்புரவியின் குளம்பொலிதான். அதை நீயும் பார்த்திருக்கிறாயல்லவா?” என்று வினவினான்.
“பார்த்திருக்கிறேன், ஒரு விசித்திரப் புரவி அது.” என்றாள் குறிஞ்சி.
“அதன் அறிவு விவரணத்துக்கு அப்பாற்பட்டது குறிஞ்சி. அவர் இஷ்டத்தை அறிந்து நடக்கும் அது. இப்பொழுது கேட்கும் அதன் குளம்பொலியை அப்புரவி வேண்டுமென்றே கிளப்புகிறது. நமக்கு அது கேட்கவேண்டு மென்பதற்காகவே அது நடக்கிறது,” என்று விளக்கினான் இந்திரபானு.
இதைக் கேட்ட குறிஞ்சிக்குக் குதிரைக் குளம் பொலியி லிருந்த சிரத்தை அதிகப்படவே அவள் கேட்டாள், “வேண்டுமென்றே புரவி இப்படி நடக்கிறதா?” என்று.
“ஆம், வீரபாண்டியர் தாம் இத்தலைநகருக்கருகில் வந்து விட்டதை நமக்கு அறிவுறுத்துகிறார். இக் குளம்பொலி மூலம்,” என்றான் இந்திரபானு.
குறிஞ்சியால் அதை அடியோடு நம்பமுடியாததால் அவனைச் சந்தேகத்துடன் பார்த்தாள். அந்தச் சந்தேகம் குரலிலும் ஒலிக்கக் கேட்டாள். “நாம் இங்கிருப்பது வீர பாண்டியருக்குத் தெரியுமா?” என்று.
“தெரியாது.” சிறிதளவும் சிந்திக்காமலே பதில் சொன்னான் இந்திரபானு.
“பின் எதற்காகக் குளம்பொலியைக் கிளப்புகிறார்?”
“இன்றுதான் இந்த ஒலி முதன் முதலாகக் கிளம்புகிறதா அல்லது நேற்றும் முந்தாநாளுங்கூடக் கிளம்பி யிருக்கிறதா என்று நிச்சயமாகச் சொல்ல முடியாது குறிஞ்சி ஆனால் தன்னைச் சேர்ந்தவர்கள் யாராவது மலைச் சாரலின் இந்தப் பகுதியிலிருந்தால் அவர்கள் இந்த ஒலியைப் புரிந்து கொள்வார்களென்பது இளவரசருக்குத் தெரியும். அல்லது பாண்டிய ஒற்றர்கள் நம்மைத் தவிர வேறு யாராவது இந்தப் பகுதியில் இருக்கலாம். அவர்களுக்குத் தாம் அருகிலே இருப்பதைத் தெரியப் படுத்தவும் இளவரசர் இந்தக் காட்டுப் பகுதியில் புரவி மீது வரலாம். வீரபாண்டியர் எதற்காக எதைச் செய்கிறார் என்பது விளைவு ஏற்படும் வரையில் யாருக்கும் புரியாது. ஆனால் ஒன்று நிச்சயம். அவர் இந்த மலைச்சாரலில் எங்கோ வெகு அருகில் உலாவுகிறார். அதில் சந்தேக மில்லை.”
“ஆம் ஆம். சந்தேகமில்லை’’
இந்திரபானு குறிஞ்சியை வியப்புடன் நோக்கினான். “அவருடைய இணையற்ற துணிவைப்பற்றி நீயும் கேள்விப் பட்டிருக்கிறாயா?” என்று வினவவும் செய்தான் வியப்புடன்.
“நேரே பார்த்தே இருக்கிறேன்.” என்ற குறிஞ்சி, “கோட்டாற்றுக்கரைக் கோட்டையிலிருக்கையில் தன்னந் தனியே இதே புரவியில் அவர் நீண்ட தூரம் மலைக் காட்டில் பயணம் செய்து, சேரர் படை முன்னோடிகளால் தாக்கப்பட்டுப் படுகாயப்பட்டு விஜயவர்மர் மாளிகைக்கு வந்தார். வேவு பார்க்கப் படைத்தலைவர்கள் தன்னந் தனியே நேரே செல்வதை அவரிடம்தான் பார்த்தேன். மற்றப் படைத்தலைவர்களாயிருந்தால் ஒற்றர்களைத்தான் அனுப்புவார்கள். எதிரி எந்தச் சமயத்திலும் தம்மை நோக்கி வரலாம் என்ற நிலையில் தனிப்படப் புரவியேறி எதிரி வாயில் நுழையச் செல்லும் வீரர் இவரைத்தான் பார்த்தேன்.” என்றும் கூறினாள். இதைச் சொன்ன அவள் கண்களில் கனவு தெரிந்தது. கோட்டாற்றுக்கரை நிகழ்ச்சிகளைப் பற்றிய கனவு அது.
இந்திரபானு அவளை உற்று நோக்கினான். அவன் சிந்தையில் ஏதோ சந்தேகம் எழுந்ததென்றாலும் அதை அவன் வெளிக்குக் காட்டிக் கொள்ளவில்லை. அவள் கண்களின் பார்வை முகத்தில் விரிந்த விவரிக்க இயலாத இருப்பினும், அதைப்பற்றி அவன் ஏதும் சொல்லாமல், “ஆம் குறிஞ்சி! இளவரசர் இணையற்ற வீரர். அவர் நெஞ்சுத் துணிவுக்குச் சமம் கிடையவே கிடையாது. இருப்பினும் எனக்குச் சிறிது அச்சமாகவே இருக்கிறது.” என்றான்.
“எதற்கு அச்சம்?” என்று வினவினாள் குறிஞ்சி.
“இந்தப் பகுதியில் அவர் நடமாட்டம்.”
“அதைப்பற்றிக் கவலை வேண்டாம். அவரைப் பிடிக்க யாராலும் முடியாது. சிங்கணனே அவரிடம் திணறி விட்டான்.” என்று விளக்கினாள் குறிஞ்சி.
இந்திரபானு சற்றுச் சிந்தித்துவிட்டு நிதானமாகச் சொன்னான், “சிங்கணன் வேறு, வீரரவி வேறு. வீரரவியின் கண்களிலிருந்தும், காதிலிருந்தும் எதுவும் தப்பாது.” என்று.
“ஆனால் அவன் கண்களுக்கும், காதுகளுக்கும் இப்பொழுது வேலையில்லையே.”
“ஏன்?”
“அதிகாரத்தைத்தான் குருநாதரிடம் ஒப்படைத்து விட்டானே.”
இந்திரபானு சற்றுத் தாமதித்துவிட்டுச் சொன்னான் திட்டமாக, “நான் அதை நம்பவில்லை?” என்று.
“என்ன, நம்பவில்லையா?” என்று வியப்புடன் வினவினாள் குறிஞ்சி.
“நம்பவில்லை “
“இப்பொழுது அவர் உத்தரவுப்படி எல்லாம் நடப்பது உங்களுக்குத் தெரியவில்லையா?”
“தெரிகிறது. இருப்பினும் இது எத்தனை நாள் நடக்கும் என்று சொல்லமுடியாது. வீரரவி ஏதோ காரணத்தைக் கொண்டுதான் குருநாதரிடம் அதிகாரத்தைக் கொடுத்திருக்கிறான். மேலுக்கு, குருநாதர் அதிகாரம் பரி பூர்ணமானதுதான். ஆனால் இதற்கும் பின்னால் ஏதோ இருக்கிறது குறிஞ்சி. வீரரவி ஏதோ ஆழ்ந்த திட்டத்தை வகுத்திருக்கிறான். அது என்னவென்று எனக்குப் புரியவில்லை. இந்தச் சமயத்தில் வீரபாண்டியர் இத்தனை அருகில் உலாவுவதும் எனக்கு அச்சத்தை அளிக்கிறது,” என்று கூறினான் இந்திரபானு.
அச்சத்தின் விளைவாகச் சிறிது நேரம் ஏதோ சிந்தித்த இந்திரபானு, ‘குறிஞ்சி ! அரண்மனையில் நடந்த அனைத்தையும் சொல்லிவிட்டாயா?” என்று மற்றுமொரு கேள்வியை வீசினான்.
“முக்கியமானதை எல்லாம் சொல்லிவிட்டேன்,” என்றாள் குறிஞ்சி.
“முக்கியம் அல்லாததையும் சொல் குறிஞ்சி,” என்று கேட்டான் இந்திரபானு.
“வீண் சமாசாரங்கள் எதற்கு?” என்று வினவினாள் குறிஞ்சி.
“குறிஞ்சி!”
“உம்.”
“வீரரவியின் செய்கைகளில் எது முக்கியம், எது முக்கியமல்லவென்பதை நிர்ணயிக்க முடியாது. முக்கியமானது முக்கியமில்லாது இருக்கலாம். முக்கிய மில்லாதது முக்கியமாயிருக்கலாம். உனக்குத் தெரிந்த அனைத்தையும் சொல்” என்று சொல்லிக்கொண்டே மெல்ல நடந்தான் இந்திரபானு. கோட்டைச் சுவரை யொட்டி மலைச்சாரலில் இருந்த குடிசைகளை நோக்கி, குறிஞ்சியும் அவனுடன் நடந்து கொண்டே சொன்னாள்: “இரண்டு நாட்களாக அரசைக் கவனிப்பதில்லை. அந்தப் புரத்தைத்தான் கவனிக்கிறார்,” என்று.
“என்ன கவனிக்கிறார் அந்தப்புரத்தை?” இந்திரபானு வின் கேள்வியில் சந்தேகம் ஒலித்தது.
“பட்டத்து ராணி மாளிகையிலும், இளையராணி மாளிகையிலுமே பாதி சமயம் இருக்கிறார்.” என்றாள் குறிஞ்சி.
“அப்படியா! அங்கு என்ன செய்கிறார்?” என்று வினவினான் இந்திரபானு.
அவனுடன் நடந்து கொண்டிருந்த குறிஞ்சி நகைத்தாள். “நல்ல கேள்வி இது?” என்ற அவள் சொற்களில் நாணமும் கேலியும் மிதமிஞ்சியிருந்தது.
“ஏன்? கேள்விக்கென்ன?” என்றான் இந்திரபானு. அவன் சித்தம் வீரரவியையும் போர் நிலையையுமே சுற்றிக் கொண்டிருந்ததால் எதைக் கேட்கிறோம், கேள்வியில் என்ன பொருள் தொனிக்கும் என்பதைச் சிறிதும் அறியாமலே கேட்டான் அவன்.
குறிஞ்சி மீண்டும் நகைத்தாள். “கேள்விக்கென்னவா?” என்று வினவினாள் வெட்கத்துடன்.
“ஆம், கேள்விக்கென்ன?” இம்முறை அவன் குரலில் கோபம் லேசாக ஒலித்தது.
“ராணிகளின் மாளிகையில் மன்னர் என்ன செய்கிறார் என்ற கேள்வி அசட்டுக் கேள்வி” என்றாள் குறிஞ்சி நாணங் கலந்த கோபத்துடன்.
“என்ன கேள்வியாயிருந்தாலும் பதில் சொல்,” என்ற இந்திரபானுவின் சொற்களில் திட்டமிருந்தது, கடுமையு. மிருந்தது.
“சொல்லட்டுமா?”
“சொல்.”
“எனக்கு மூக்கில் மயக்க மலர் காட்டி முத்துக் குமரியின் அறைக்குச் சென்றீர்களல்லவா?”
“ஆம்.”
“அங்கு நீங்கள் என்ன செய்தீர்கள்?” இதைக் கேட்ட குறிஞ்சி நகைத்தாள்.
“குறிஞ்சி!” இந்திரபானுவின் சொல் உக்கிரமாக எழுந்தது.
“ஏன் உபதலைவரே!”
“இது அர்த்தமற்ற கேள்வி. குறும்புக் கேள்வி.”
அந்த அர்த்தமற்ற, குறும்புச் செயலில் தான் மன்னரும் ஈடுபடுகிறார்….ராணிகளிடம் .”
இந்திரபானு மேற்கொண்டு மௌனம் சாதித்தான். அவன் கண்முன்பு முத்துக்குமரியின் நாணத்துடன் கவிழ்ந்த விழிகளும், நாணமின்றி எழுந்த அழகுகளும் தோன்றின. இருப்பினும் அவற்றைத் தன் புத்தியிலிருந்தும் பார்வை யிலிருந்தும் அகற்றிய இந்திரபானு, “குறிஞ்சி! வீரரவி செய்வது எதுவாயிருந்தாலும் சொல். ராணிகளுடன் கொஞ்சுவதை நீ பார்த்தாலும் சொல்” என்றான்.
“உங்கள் பேச்சு அழகாயிருக்கிறது” என்றாள் குறிஞ்சி
“அழகில்லாமலென்ன?”
“அரசர் ராணிகளிடம் கொஞ்சுவதை நான் பார்க்க முடியுமா? ஏன் உளறுகிறீர்கள்?”
“வேறு ஏதாவது சொல்.”
“மன்னர் ராணிகளிடம் அன்பாயிருக்கிறார் இரண்டு நாட்களாக, அதுவும் பட்டத்து ராணி மாளிகையில் அதிக நேரம் கழிக்கிறார். பட்டத்து ராணிக்குப் பல சௌகரியங்களையும் செய்து கொடுக்கிறார். உதாரணமாக பட்டத்து ராணியாரின் பவனி ரதம் இரண்டு நாட்களாகப் பழுது பார்க்கப்படுகிறது. அவற்றுக்குப் புரவிகள் மாற்றப் பட்டிருக்கின்றன…” என்று சொல்லிக்கொண்டே போன குறிஞ்சியைப் பிடித்துச் சட்டென்று நிறுத்தித் தானும் நிலைத்து நின்றுவிட்டான் பல விநாடிகள். “பட்டத்து ராணி உலாத் தேரா?” என்றும் வினாவினான் கவலையுடன்.
“ஆம்.” என்றாள் குறிஞ்சி அவன் திகைப்புக்குக் காரணத்தை அறியாமல்,
“பழுது பார்ப்பது யார்?” என்று மற்றொரு கேள்வியும் கேட்டான்.
“சேனாதிபதி,” என்றாள் குறிஞ்சி.
பட்டத்துராணி மாளிகையிலும், இளையராணி மாளிகையிலுமே பாதி சமயம் இருக்கிறார்.” என்றாள் குறிஞ்சி.
“அப்படியா! அங்கு என்ன செய்கிறார்?” என்று வினவினான் இந்திரபானு.
அவனுடன் நடந்து கொண்டிருந்த குறிஞ்சி நகைத்தாள். “நல்ல கேள்வி இது?” என்ற அவள் சொற்களில் நாணமும் கேலியும் மிதமிஞ்சியிருந்தது.
“ஏன்? கேள்விக்கென்ன?” என்றான் இந்திரபானு. அவன் சித்தம் வீரரவியையும் போர் நிலையையுமே சுற்றிக் கொண்டிருந்ததால் எதைக் கேட்கிறோம், – கேள்வியில் என்ன பொருள் தொனிக்கும் என்பதைச் சிறிதும் அறியாமலே கேட்டான் அவன்.
குறிஞ்சி மீண்டும் நகைத்தாள். “கேள்விக்கென்னவா?” என்று வினவினாள் வெட்கத்துடன்.
“ஆம், கேள்விக்கென்ன?” இம்முறை அவன் குரலில் கோபம் லேசாக ஒலித்தது.
“ராணிகளின் மாளிகையில் மன்னர் என்ன செய்கிறார் என்ற கேள்வி அசட்டுக் கேள்வி” என்றாள் குறிஞ்சி நாணங் கலந்த கோபத்துடன்.
“என்ன கேள்வியாயிருந்தாலும் பதில் சொல்,” என்ற இந்திரபானுவின் சொற்களில் திட்டமிருந்தது, கடுமையுமிருந்தது.
“சொல்லட்டுமா?”
“சொல்.”
“எனக்கு மூக்கில் மயக்க மலர் காட்டி முத்துக் குமரியின் அறைக்குச் சென்றீர்களல்லவா?”
“ஆம்.”
“அங்கு நீங்கள் என்ன செய்தீர்கள்?” இதைக் கேட்ட குறிஞ்சி நகைத்தாள்.
“குறிஞ்சி!” இந்திரபானுவின் சொல் உக்கிரமாக எழுந்தது.
“ஏன் உபதலைவரே!”
“இது அர்த்தமற்ற கேள்வி. குறும்புக் கேள்வி.”
”அந்த அர்த்தமற்ற, குறும்புச் செயலில் தான் மன்னரும் ஈடுபடுகிறார்…ராணிகளிடம்.”
இந்திரபானு மேற்கொண்டு மௌனம் சாதித்தான். அவன் கண்முன்பு முத்துக்குமரியின் நாணத்துடன் கவிழ்ந்த விழிகளும், நாணமின்றி எழுந்த அழகுகளும் தோன்றின. இருப்பினும் அவற்றைத் தன் புத்தியிலிருந்தும் பார்வை யிலிருந்தும் அகற்றிய இந்திரபானு, “குறிஞ்சி! வீரரவி செய்வது எதுவாயிருந்தாலும் சொல். ராணிகளுடன் கொஞ்சுவதை நீ பார்த்தாலும் சொல்” என்றான்.
“உங்கள் பேச்சு அழகாயிருக்கிறது” என்றாள் குறிஞ்சி.
“அழகில்லாமலென்ன?”
“அரசர் ராணிகளிடம் கொஞ்சுவதை நான் பார்க்க முடியுமா? ஏன் உளறுகிறீர்கள்?”
“வேறு ஏதாவது சொல்.”
“மன்னர் ராணிகளிடம் அன்பாயிருக்கிறார் இரண்டு நாட்களாக, அதுவும் பட்டத்து ராணி மாளிகையில் அதிக நேரம் கழிக்கிறார். பட்டத்து ராணிக்குப் பல சௌகரியங்களையும் செய்து கொடுக்கிறார். உதாரணமாக பட்டத்து ராணியாரின் பவனி ரதம் இரண்டு நாட்களாகப் பழுது பார்க்கப்படுகிறது. அவற்றுக்குப் புரவிகள் மாற்றப் பட்டிருக்கின்றன….” என்று சொல்லிக்கொண்டே போன குறிஞ்சியைப் பிடித்துச் சட்டென்று நிறுத்தித் தானும் நிலைத்து நின்றுவிட்டான் பல விநாடிகள். “பட்டத்து ராணி உலாத் தேரா?” என்றும் வினாவினான் கவலையுடன்.
“ஆம்.” என்றாள் குறிஞ்சி அவன் திகைப்புக்குக் காரணத்தை அறியாமல்,
“பழுது பார்ப்பது யார்?” என்று மற்றொரு கேள்வியும் கேட்டான்.
“சேனாதிபதி,” என்றாள் குறிஞ்சி.
“அப்படியானால் திரும்பு” என்றான் இந்திரபானு.
“எங்கு ?”
“அரண்மனைக்கு.”
“எதற்கு ?”
“நான் சரணடையப் போகிறேன்.”
குறிஞ்சி பிரமித்து நின்றாள், “சற்று முன்புதானே சரணடைய மறுத்தீர்கள்?” என்று கேட்டாள்.
“ஆம், ஆனால் நிகழ்ச்சிகள் நான் எதிர்பார்த்ததை விட மும்முரமாகவும் துரிதமாகவும் முன்னேறுகின்றன., வா போவோம் அரண்மனைக்கு. நீயே என்னைச் சிறை செய்து ஒப்படைத்து விடு,” என்றான் இந்திரபானு.
“நான் உங்களை எப்படிச் சிறைபிடிக்க முடியும்?” என்று வினவினாள் குறிஞ்சி,
“சேரவீரர். ஆயிரம் பேரால் செய்யமுடியாதது உன்னால் முடியும். உன்னைத் தவிர வேறு யாராலும் சிறை செய்ய முடியாது” என்றான் அவன்.
குறிஞ்சி மலைப்புடன் அவனை நோக்கினாள் “மலைக்காதே குறிஞ்சி! போய் அருகேயுள்ள கோட்டைக் காவலரில் இருவரை அழைத்து வந்து என்னை மடக்கிவிடு” என்று உத்தரவிட்டான்.
அடுத்த அரைஜாமத்துக்கெல்லாம் குறிஞ்சி முன் செல்ல ஆயுதம் தாங்கிய இரு காவலருக்கிடையில் இந்திரபானு அரண்மனையை அடைந்தான். பரதப்பட்டன் அவனை எதிர் கொள்ள அரண்மனை வாயிலிலேயே நின்றிருந்தான்.