Raja Muthirai Part 2 Ch48 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
ராஜ முத்திரை இரண்டாம் பாகம் – சாண்டில்யன்
அத்தியாயம் – 48 மூலிகை மருத்துவம்
Raja Muthirai Part 2 Ch48 | Raja Muthirai | TamilNovel.in
இரவின் அந்த நேரத்தில் பரதபட்டன் அரண்மனை வாயிலில் நின்றிருந்தது மிகவும் அதிசயமாகவே பட்டது இந்திரபானுவுக்கு. ஆய்ச்சியர் குரவையின் முக்கால் கூத்தைப் பார்த்துவிட்டு வெளியில் வந்து பல நாழிகைகள் கழித்தே சிறைப்பட்டு அரண்மனைக்குக் கிளம்பினானாகை யால் தான் அரண்மனையை அடையும்போது நள்ளிரவு தாண்டிவிடும் என்பதை உணர்ந்தே இருந்தான் பாண்டியர் உபதலைவன். ஆகையால் தன்னைச் சிறை செய்த காவலாளர் அரண்மனைத் தலைமைக் காவலனிடந்தான் தன்னை ஒப்படைப்பார்களென்றும் விடிந்த பின்புதான் குருநாதரைச் சந்திக்கும்படியாயிருக்குமென்றும் எண்ணி னான் அவன். அவன் எண்ணத்துக்கும் ஊகத்துக்கும் அடியோடு பரதபட்டன் அந்த மேற்குப்புற வாயிலில் நின்றிருந்தது பெருவியப்பாயிருந்தது அந்த வாலிப வீரனுக்கு
அவன் முகத்தில் விகசித்த வியப்புக் குறியைக் கண்ட குருநாதன் சற்றே குறுநகை கொண்டான். “வருக வீரனே! வருக,” என்றும் வரவேற்புரையும் பகன்றான்.
குருநாதர் தன்னைப் பார்த்து நகைக்கிறாரென்பதைப் புரிந்து கொண்ட இந்திரபானு, “நானாக வரவில்லை.” என்று சுட்டிக்காட்டி தான் சிறை செய்யப்பட்டதை வலியுறுத்த பக்கத்தில் ஆயுதந்தாங்கி நின்ற இரு காவலர் மீது கண்களை ஓட்டினான்.
குருநாதன் இம்முறை குறுநகை கொள்ளவில்லை. மெல்ல நகைக்கவே செய்து, “இவ்விருவரும் உன்னைச் சிறை செய்து விட்டார்களா?” என்று வினவினான்.
குறிஞ்சி ஏதோ சொல்ல வாயெடுத்தாள். அதற்கு முன்பாகவே காவலனொருவன், “சிறை செய்தது இந்தப் பெண்மணி குருநாதரே! அவர் கட்டளைப்படி நாங்கள் இவரைச் சிறை செய்தோம்,” என்றான்.
“அதைத்தானே கேட்டேன்,” என்றான் குருநாதன் மீண்டும் நகைத்து.
“என்ன கண்டுவிட்டீர்கள் குருநாதரே இப்பொழுது?” என்று வினவினாள் குறிஞ்சி.
பதிலுக்குக் குருநாதன் தனது இடது கையால் இந்திர பானுவின் கச்சையில் தொங்கிக்கொண்டிருந்த வாளைச் சுட்டிக் காட்டினான். “ஒருவனைக் காவலர் சிறை செய்யும் போது அவன் வாளை எடுத்துக்கொள்வது சாதாரண வழக்கம். காவலர் இவனைச் சிறை செய்யவில்லை யென்பதை கச்சையில் இருக்கும் வாள் நிரூபிக்கிறது. காவலர் செய்யாததை ஒரு கயல்கண்ணி செய்திருக்கிறா ளென்ற ஊகம் உண்மைக்கு மாறாகுமா?” என்று வினவவும் செய்தான்.
குறிஞ்சி அதற்குமேல் குருநாதனிடம் பேச்சுக் கொடுக்க இஷ்டப்படவில்லை. ‘இந்தக் கிழட்டு மந்திர வாதிக்கும் பெண்பித்துப் போகவில்லை,’ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டு, “எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள். இதோ இவரை ஒப்படைத்து விட்டேன்.” என்று கூறி விட்டு விடுவிடு என்று அந்தப்புர பகுதிகளை நோக்கி நடந்தாள்.
குருநாதன் அவள் போவதை புன்முறுவலுடன் பார்த்துக் கொண்டிருந்து விட்டு இந்திரபானுவுடன் வந்த காவலரையும் அனுப்பிவிட்டு, “வா இந்திரபானு! எனது அறைக்குப் போவோம்,” என்று அந்தப்புர பகுதியின் வட எல்லையிலிருந்த கட்டிடத்தை நோக்கி நடந்தான். இந்திர பானு ஏதும் பேசாமல் அவனைப் பின் தொடர்ந்தான். இருவரும் அறையை அடைந்ததும், மூலையிலிருந்த குத்து விளக்கைச் சிறிது தூண்டிவிட்ட குருநாதன் தரையிலிருந்த கோரைப் பாயில் உட்கார்ந்தான். இந்திரபானுவையும் உட்காரும்படி செய்தான். இந்திரபானு கச்சையை அவிழ்த்து வாளை ஒருபுறம் சார்த்திவிட்டுப் பாயில் அமர்ந்தான். அவன் உட்கார்ந்த பின்பு நீண்ட நேரம் மௌனம் சாதித்த குருநாதன் மெல்லக் கேட்டான். “உன் மனத்தை மாற்றியது எது?” என்று.
இந்திரபானுவின் கூரிய கண்கள் பட்டன் கண்களைச் சந்தித்தன. “எதைப்பற்றிக் கேட்கிறீர்கள்?” என்று அவன் உதடுகள் மெல்லச் சொற்களை உதிர்த்தன.
“நீ இங்கு வந்த காரணம்” என்றான் குருநாதன்.
“என்னைச் சரணடையும்படி நீங்கள் தான் பறையறை வித்தீர்களே!” என்று உண்மையை மறைக்கப் பார்த்தான் இந்திரபானு.
“பறையறைவித்து நாட்கள் மூன்று ஆகின்றன. நீயாகச் சரணடைவதாயிருந்தால் முதல் நாளே இங்கு வந்திருப்பாய்,” என்று சுட்டிக் காட்டினான் குருநாதன்.
“இப்பொழுது நானாக வராமல் காவலர் சிறை செய்தார்களா?”
“அதுதான் இல்லையென்று முன்னமே சொல்லி விட்டேனே.”
“நானாக சரணடைந்திருப்பதால் உங்கள் விருப்பப் படி தானே இருக்கமுடியும்?’
“அதையும் இல்லையென்று உணர்த்திவிட்டேனே.”
“வேறென்ன காரணம்?”
“அதைத்தான் கேட்கிறேன். ஏதோ ஒரு நிகழ்ச்சி. அதுவும் இந்த இரவின் ஆரம்பத்திலோ சற்று முன்போ ஏற்பட்ட நிகழ்ச்சி. உன் மனத்தை மாற்றியிருக்கிறது. அது என்னவென்று சொல்ல உனக்கு விருப்பமா?” என்று வினவினான் குருநாதன்.
இந்திரபானு தீவிர சிந்தனையில் இறங்கினான். குருநாதனிடம் தனது சந்தேகத்தைப் பங்கிட்டுக் கொள்ளலாமா என்று ஒரு விநாடி யோசித்தான். பிறகு அதில் அர்த்தமில்லையென்ற முடிவுக்கும் வந்தான். தவிர குருநாதனும் அறியாத தந்திரத்தில் வீரரவி இறங்குவதால் அது குருநாதனுக்குத் தெரிந்து விட்டது என்று தெரிந்தாலும் மன்னன் தன் திட்டத்தை மாற்றிவிடுவான் என்ற எண்ணமும் பிறந்ததால் உண்மையைச் சொல்ல இஷ்டப்படாமல் “குறிஞ்சி சற்று முன்பு ஒரு செய்தி சொன்னாள்,” என்று குறிப்பிட்டான்.
“என்ன செய்தி?” என்று கேட்டான் குருநாதன்.
“என் முக விகாரத்தைத் திரும்பவும் மாற்றிவிட உங்களால் முடியும் என்று சொன்னாள். தவிர….”
“சொல்.”
“நான் சரணடையாவிட்டால் நீங்கள் அதைச் செய்ய மாட்டீர்கள் என்றும், ஆகவே சரணடைவதே நல்ல தென்றும் கூறினாள்.”
“உம்.”
“சரியென்று இணங்கினேன். முத்துக்குமரிக்காக முகத்தை விகாரமாக்கிக் கொண்டேன். இப்பொழுது அவளுக்கு ஆபத்து ஏதுமில்லையென்பதையும் உங்கள் வசம் ஒப்படைக்கப் பட்டிருக்கிறாளென்பதையும் கேள்விப் பட்டேன். ஆகையால் விகாரத்தை நீக்கிக் கொள்வதானால் அதைத் தவிர்ப்பானேன் என்று நினைத்தேன்.”
இந்திரபானுவின் சொற்களை மட்டுமின்றிக் குரலையும் கவனித்த குருநாதனுக்கு அப்பொழுதும் இந்திர பானுவிடம் நம்பிக்கை பிறக்கவில்லையாயினும் அவன் சொன்ன காரணங்களைப் பட்டனால் மறுக்கமுடிய வில்லை. ஆகவே அதை ஒப்புக் கொண்டதாகவே காட்டிக் கொண்டபட்டன், “உண்மை இந்திரபானு, நீ என் ஆணைக்குக் கீழ்ப்படியவில்லையானால் ஆயுள் முழுவதும் இந்த முகத்துடனேயே இருந்திருப்பாய். நீ சரணடைந்து விட்டதால் உன் சிகிச்சையை நாளை முதல் துவக்குகிறேன்.
ஆகையால் நீ என் பக்கத்து அறையிலேயே சிறையி ருக்கலாம். உன்னை நானே காவல் புரிகிறேன்.” என்றான். இந்திரபானு அதை ஆமோதிக்கவே பரதப்பட்டன் காவலரை அழைத்துப் பக்கத்து அறையைச் சுத்தம் செய்யச் சொல்லி அந்த அறையிலிருந்த மஞ்சத்தில் இந்திர பானுவைப் படுக்கச் சொல்லிக் கதவைப் பூட்டிக் கொண்டு சென்றான்.
அடுத்த இரண்டு நாட்கள் இந்திரபானு பரதபட்டனைச் சந்திக்கவே இல்லை. காவலரே வந்து அவனுக்கு சகல சௌகரியங்களையும் செய்து கொடுத்துச் சென்றார்கள். அவன் அறையை ஒவ்வொரு முறையும் காவலர் பூட்டிக் கொண்டே சென்றார்கள். இந்த நிலையின் விளைவாக அவன் ஒவ்வொரு விநாடியும் துடித்துக் கொண்டிருந்தான். ஆகவே மூன்றாவது நாள் காலை பரத பட்டன் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்த போது இந்திரபானுவின் முகத்தில் பெரும் சீற்றம் இருந்தது. குருநாதன் அந்தச் சீற்றத்தைச் சிறிதும் கவனிக்கவேயில்லை. “மஞ்சத்தில் படு” என்று கூறிவிட்டுப் பக்கத்திலிருந்த ஓர் ஆசனத்தில் தனது மந்திரத் தண்டத்தையும் மூலிகைகள் கொண்ட ஒரு குடுவையையும் சிறுகலுவம் குழவி இவற்றையும் வைத்தான். பிறகு மூலிகைகளைக் கலுவத்தில் சேர்த்துக் குழவியால் இடித்தான் சிறிதுநேரம், பிறகு சாளரத்தைச் சாத்தி அறையை இருட்டாக்கி, சிறு அகல் விளக்கை மட்டும் ஏற்றினான். அந்த அகல் விளக்கு எண்ணெயில் பச்சிலைச் சாறு சிறிது பிழிந்தான். மீதிச் சாற்றை எடுத்து வந்து மெல்ல தன் ஆள்காட்டி விரலால் இந்திரபானுவின் முகத்தில் பூசினான் தழும்பிருந்த இடங்களிலெல்லாம், அடுத்தபடி மஞ்சத்தை அகல் விளக்குடன் அவன் பக்கத்தில் இழுத்து வைத்து, “வாலிபனே! நன்றாகக் கேட்டுக்கொள், என் சொல்லை இம்மியளவும் தவறாமல் கேட்டு நடப்பதிலிருக்கிறது, உன் பிற்கால வாழ்க்கை . முகத்தை அடையாளம் புரியாமல் அடிப்பதைவிடத் திரும்ப அதைப் பழைய நிலைக்குக் கொண்டு வருவது கஷ்டம். உனக்குப் பழைய அழகு திரும்பினாலும் திரும்பும். இந்த விகாரம் நிலைத்தாலும் நிலைக்கும். ஆனால் பச்சிலைகள் வீண்போவதில்லை. இந்தப் பச்சிலை உன் சருமத்தின் ஜீவநாடிகளைத் தூண்டும் சக்தியுள்ளது; அதை அதிகமாக உலரவிடாமல் வைக்கவேண்டும். அந்த அகல் விளக்குத் திரி எரிய எரிய இதிலுள்ள எண்ணெய் லேசாகச் சுடும். அதை எடுத்து மெல்ல மெல்ல பச்சிலைச் சாறு தடவிய இடங்களில் தடவிக்கொள்,” என்றார்.
“திரி எரியும் போது விளக்கின் எண்ணெய் சாதாரண மாகச் சுடுவதில்லையே,” என்றான் இந்திரபானு.
“இந்த விளக்கு சாதாரண விளக்கு இல்லை. சொன்ன படி செய். ஒரு ஜாமம் கழித்து வருகிறேன்,” என்று கூறி விட்டுச் சென்றான் பரதப்பட்டன்.
இந்திரபானு மஞ்சத்தில் மல்லாந்து கிடந்தான். அவன் முகச் சருமத்தில் மெல்ல லேசாக எரிச்சல் கண்டது. உடனே அகல் விளக்கின் எண்ணெயை எடுத்துத் தடவிக் கொண்டான். உண்மையில் விளக்கிலிருந்த எண்ணெய் அந்த எரிச்சலுக்கு மிக இதமாயிருந்தது. இப்படியே திரும்பத் திரும்ப எண்ணெயைத் தடவிக் கொண்டும் சிந்தனையைப் பலவிதமாக அலையவிட்டும் படுத்துக் கொண்டிருந்தான் இந்திரபானு. சரியாக ஒரு ஜாமம் கழித்து உள்ளே நுழைந்த குருநாதன் கையில் ஒரு பாத்திரத்தில் ஏதோ கொண்டுவந்து “வாயைத் திற” என்றான்.
இந்திரபானு வாயைத் திறந்ததும் சுட்ட மோர் ஊற்றப்பட்டது. அந்த மோரிலும் ஏதேதோ மூலிகைகள் சேர்க்கப்பட்டிருந்தாலும் மிகவும் ருசியாயிருந்தது. சுமார் அரைக்கிண்ண மோரை ஊற்றிய குருநாதன். “இனி உனக்கு நாளைக்குத்தான் ஆகாரம். பேசாமல் படுத்திரு” என்று கூறி விட்டு முகத்தின் மீதி இடங்களிலும் பச்சிலைச் சாறு தடவி விட்டுச் சென்றான்.
அடுத்த நாள் சிகிச்சை இன்னும் கடுமையாயிருந்தது. அன்று பூராவும் முகத்தில் ஒரு பச்சிலை துணியைப் போட்டு மூடினான் குருநாதன். சுவாசம் விட ஒரு துவாரம் மட்டும் மூக்குப் பகுதியில் விடப்பட்டிருந்தது. மூன்றாம் நாள் சிகிச்சை நடந்து கொண்டிருக்கையில் அந்த இடத்திற்கு வீரரவி வந்து சேர்ந்தான். “இங்கு என்ன நடக்கிறது குருநாதரே?” என்று வினவவும் செய்தான் சினத்துடன்.
சிகிச்சையில் லயித்திருந்த குருநாதன் மன்னனைத் திரும்பிப் பார்க்காமலே சொன்னான், “சிகிச்சை,” என்று.
“என்ன சிகிச்சை?” என்று கேட்டான் வீரரவி சீற்றத்துடன்.
மெல்ல சிகிச்சையை முடித்து எழுந்த குருநாதன், “இதோ பார்” என்று மஞ்சத்தில் கிடந்த இந்திரபானுவைச் சுட்டிக் காட்டினான்.
எதற்கும் அஞ்சாத வீரரவி பேரச்சத்திற்குட்பட்டுப் பேச நா எழாமல் நின்றான். இந்திரபானுவின் முகம் முன்னை விட ஆயிரம் மடங்கு அதிக விகாரப்பட்டிருந்தது. “குருநாதரே!” என்ற அதிர்ச்சிச் சொல் மன்னனிடமிருந்து எழுந்தது.