Raja Muthirai Part 2 Ch50 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
ராஜ முத்திரை இரண்டாம் பாகம் – சாண்டில்யன்
அத்தியாயம் – 50 வீரரவியின் பரிவு
Raja Muthirai Part 2 Ch50 | Raja Muthirai | TamilNovel.in
பரலிமாநகரின் எல்லைக்காட்டின் ஊடே கடு வேகத்தில் சென்றுகொண்டிருந்த பட்டத்து ராணியின் ரதத்தில் அமர்ந்திருந்த முத்துக்குமரியின் சித்தமும் அந்த ரதத்தின் சக்கரங்களைப்போலவே கனவேகத்தில் சுழன்று கொண்டிருந்தது. அந்தக் காட்டின் நடுவில் ராணிகளின் உல்லாசப் பயணத்துக்காகப் போடப்பட்டிருந்த ராஜ பாட்டையும், அனேகமாகச் சீராக இருந்தபோதிலும் சிற்சில இடங்களில் மடிப்புகள் இருந்ததால் அந்த மடிப்புக்களில் இறங்கி ஏறிய சமயங்களில் ரத்தத்தின் சக்கரங்கள் அதிர்ந்து ரதத்தின் உட்புறத்தையும் தூக்கி எறிந்து கொண்டிருந்ததைப் போலவே முத்துக்குமரியின் சிந்தனைச் சுழலும் சில மடிப்புக்களிலும் இடையிடையே சிக்கியதால் அவ்வப்போது அவள் உணர்ச்சிகளுக்கு அதிர்ச்சியைத் தந்துகொண்டிருந்தது. அவள் நினைப்புக்கள் அந்தச் சமயத்தில் அந்த ரதத்திலோ அல்லது அக்கம் பக்கத்தில் ரமணீயமாக இருந்த காட்டுச் சூழ்நிலையிலோ சிறிதும் ரசிக்காமல் அன்று பகல் முதல் நிகழ்ந்த அரண்மனை நிகழ்ச்சிகளிலேயே உழன்று கொண்டிருந்தது.
அன்று பகல் கோபத்துடன் தனது அறைக்குத் திரும்பியதும் குறிஞ்சி தன்னை ஏளனமாகப் பார்த்தாள் என்பதை நினைத்தாள் முத்துக்குமரி. பிறகு அவள் ஏள னத்தை அகற்றத் தனது பஞ்சணை முகப்பில் உட்கார்ந்து பரிவுடன் தனது முதுகைத் தடவிக் கொடுத்து, “இதில் நமக்குத் தெரியாத விஷயங்கள் பல இருக்கலாம். இந்திர பானு திடீரெனக் கோழையாகிவிட முடியாது” என்று கூறியதும் அவள் சிந்தையில் உலாவிற்று.
“அவர் கோழைத்தனத்துக்கு அத்தாட்சியிருக்கிறதே குறிஞ்சி’ என்று குரல் தொண்டையை அடைக்கக் கூறினாள் அரச குமாரி.
“புறச்சான்றுகளை நம்பக்கூடாது அரசகுமாரி,” என்றாள் குறிஞ்சி.
“வேறு சான்று எது?”
“மனச்சான்று இருக்கிறதே?”
“என்ன சொல்கிறாய் குறிஞ்சி?”
“உங்கள் மனத்தைக் கேட்டுப் பாருங்கள் அது சொல் கிறதா உப தலைவர் கோழையென்று?”
பஞ்சணையில் நெஞ்சத்தை வினவினான் முத்துக்குமரி. மனம் ஒப்புக் கொண்டதாகத் தெரியவில்லை இந்திரபானுவின் கோழைத்தனத்தை. பின், சித்தம் ஏன் அப்படிக் கொதித்தெழுந்தது அவன்மீது? அதற்கும் விடை கிடைக்கவில்லை பாண்டியன் மகளுக்கு. ஆகவே பஞ்சணையில் புரளவே செய்தாள். நெஞ்சத்தில் அமைதியின்றிக் கடைசியாக ஒருவார்த்தை சொன்னாள், “எப்படியும் இன்றிரவு சந்திக்கிறேன் அவரை,” என்று.
ஆனால் அவள் எண்ணப்படி சந்திக்க முடியவில்லை அந்த சிங்களத்தின் வாலிபனை. அவனைத் தான் சிறிதும் எதிர்பாராத முறையில் சந்திக்க நேர்ந்ததை நினைத்துப் பெரிதும் வியந்தாள் முத்துக்குமரி. ரதத்திலிருந்த அந்தச் சமயத்தில் அன்று மாலை தன்னைச் சந்தித்த சேரமான் வீரரவியின் போக்கே அவளுக்குப் பெரும் புதிராயிருந்தது. வீரரவி அன்று மாலை அவள் அறைக்கு வந்தபோது அவன் பார்வையில் காம விகாரமில்லை . உதடுகளில் சதா தவழும் அந்த வேட்கைப் புன்முறுவலுமில்லை. அவன் கண்களில் அனுதாபம் நிரம்பிக்கிடந்தது. புன்சிரிப்பும் சற்று இருக்கத் நான் செய்தது ஆனால் அதில் விரவி நின்றது பரிதாபம்.. காம வேட்கை அல்ல. வீரரவியின் குரலிலும் பரிதாபம் ததும்பி நின்றது. அவன் வந்ததும் உள்ளறைக்கும் வராமல் தன்னைப் பார்க்கக் குறிஞ்சியைவினவியதே விந்தையாயிருந்தது குமரிக்கு. வெளியறையில் சந்தித்த போது அவன் முகபாவம் அவள் வியப்பை எல்லை மீறச் செய்தது. “பாண்டிய மன்னன் செல்வி!” என்று அழைத்த குரலில் மட்டு மரியாதை பரிதாபத்தில் குழைந்து கிடந்தது.
“தங்கள் விஜயத்தின் காரணம்?” வழக்கம்போல் கடுமையாக இருந்தது குமரியின் கேள்வி.
அந்தக் கடுமையைக் கவனிக்க இஷ்டப்படாத வீரரவி “உனக்கொரு செய்தி கொண்டு வந்திருக்கிறேன். மகிழ்ச்சியை அளிக்கும் என நம்புகிறேன். ஆனால் மகிழ்ச்சி யளிக்கும் செய்தியல்ல அது,” என்றான் வீரரவி.
“சொல்லுங்கள்.” வறண்ட குரலில் எழுந்தது குமரி யிடமிருந்து அந்த ஒற்றைச் சொல்.
“இந்திரபானுவை விடுதலை செய்ய உத்தரவிட்டு விட்டேன்,” என்றான் மன்னன்.
“இப்பொழுதே சுதந்திரமாகத்தானே உலாவுகின்ற தாகக் கேள்வி,” என்றாள் முத்துக்குமரி தன் விழிகளை நிலத்திலிருந்து உயர்த்தி.
“அரண்மனை எல்லைக்குள் உலாவுகிறான்.”
“இனி?”
“அரண்மனையில் வைத்திருக்க உத்தேசமில்லை.”
“ஏன்? உங்கள் விரோதம் என்ன ஆயிற்று?”
“அகன்று விட்டது.”
“ஏன்?”
“விரோதமும் பரிதாபமும் இணைந்துறைய முடியாத இருவகை உணர்ச்சிகள்.”
“பரிதாபத்துக்குக் காரணம்?”
“அவன் நிலை” என்ற மன்னன் மேலும் சொன்னான்; “இந்திரபானு பழையபடி இருந்தால் அவனை வெட்டுப் பாறைக்கு அனுப்புவதே என் குறிக்கோளாக இருக்கும். ஆனால் அவன் இப்பொழுது இறகிழந்த பறவை. வெளியில் காட்டமுடியாத கோரமுகத்தைப் பெற்றிருக்கிறான். அரு வருக்கத்தக்க, பார்ப்பவர் பத்தடி தூரம் விலகிச் செல்லத் தக்க, அத்தனை விபரீதமாக அடித்துவிட்டார் குருநாதர் அவன் முகத்தை. சேரநாட்டு நன்மைக்காக அதைச் செய்ததாகக் கூறுகிறார் குருநாதர். ஆனால் சேர நாட்டுக்கு அந்த விதத்தில் நன்மைதேட நான் இஷ்டப்படவில்லை. ஆகவே இந்திரபானுவைச் சிறையெடுக்கவோ கண்காணிக்கவோ நான் இனி இஷ்டப்படவில்லை. இன்றிரவு அவன் அரண் – மனையிலிருந்து குருநாதருக்கும் தெரியாமல் வெளியேற்றப் படுவான்…”
“அவர் வெளியேற இஷ்டப்படாவிட்டால்? குருநாதர் சொல்லை மீற மறுத்தால்?” என்று வினவினாள் முத்துக்குமரி.
“குமரி! அவனை நான் புரிந்து கொண்ட அளவுக்குக் கூட நீ புரிந்து கொள்ளவில்லை . அவன் சுத்த வீரன். போர் தலை நகரத்தை அணுகிவிட்டது அவனுக்குத் தெரியும். ஆகவே அந்தப் போரில் பங்குபெறுவதையே விரும்புவான். அந்த விருப்பத்தை நிறைவேற்றுவது எனது கடமையாகிறது. நானும் வீரர் குலத்தில் பிறந்தவனல்லவா? வீரரவி பெயரையும் எனக்குச் சூட்டியிருக்கிறார்களே!” என்றான் மன்னன்.
“இதையெல்லாம் என்னிடம் ஏன் சொல்லுகிறீர்கள்?” என்று வினவினான் குமரி.
“நீயும் அவனுடன் செல்கிறாய்.” வீரரவியின் பதில் மிக உறுதியுடன் வெளிவந்தது.
“நானா!” வியப்பினால் பவளவாயைத் திறந்து மூடினாள் முத்துக்குமரி ஒரு வினாடி.
“ஆம்.”
“நான் எதற்கு?”
“நீயும் வருவதாகச் சொன்னாலொழிய அவன் கிளம்ப மாட்டான். குருநாதரிடமே லயித்து அழிந்து விடுவான்,” என்ற வீரரவி, “இன்றிரவு இரண்டாம் ஜாமத்தில் கிளம்ப வேண்டும். தயாராயிரு,” என்றும் கூறிவிட்டு வெளியே நடந்தான்.
முத்துக்குமரியின் தலை சுழலும் நிலைக்கு வந்ததால் அவள் அங்கிருந்த ஆசனத்தில் உட்கார்ந்து தனது கைகளில் முகத்தைப் புதைத்துக்கொண்டாள். மன்னனிருந்தவரையில் அறைக்கு வெளியே சென்றுவிட்ட குறிஞ்சி அவன் சென்றதும் உள்ளே வந்து அரசமகள் நிலை கண்டு பிரமித் தாள். “என்ன அம்மணி! ஏனிப்படி உட்கார்ந்திருக் கிறீர்கள்?” என்று வினவவும் செய்தாள்.
மன்னன் கூறியதை ஒன்று விடாமல் சொன்ன குமரி, “இதைப் பற்றி என்ன நினைக்கிறாய் குறிஞ்சி” என்று வினவவும் செய்தாள்.
பாண்டிய குமாரியின் மலைப்பைவிடப் பன்மடங்கு அதிக மலைப்பை அடைந்த குறிஞ்சி பல விநாடிகள் பதில் சொல்ல வில்லை. “எல்லாம் விபரீதமாயிருக்கிறதே அம்மணி,” என்று மட்டும் கூறினாள் நீண்ட நேர மௌனத்திற்குப் பிறகு.
“ஆம் குறிஞ்சி,” என்றாள் குமரி.
“உங்களிடம் மையல் கொண்டுள்ள இந்திரபானு உங்களை அலட்சியம் செய்கிறார். பார்க்கவும் மறுக்கிறார். உங்களைக் கடத்திவந்த வீரரவி உங்களை உங்கள் காதலருடன் சேர்க்க முயல்கிறார். பெரிய விபரீதம்…” என்றாள் குறிஞ்சி.
“குறிஞ்சி!”
“ஏன் அம்மணி ?”
“இந்த அரண்மனையில் ஒரு வேளை…’
“என்ன அம்மணி?”
“எல்லோருக்கும் புத்தி பிசகிவிட்டதா?”
“அப்படித்தான் தோன்றுகிறது.”
“அல்லது….”
“உம்”
“நமக்குத்தான் பிசகியிருக்கிறதா?”
“அப்படியும் இருக்கலாம்.”
முத்துக்குமரி சிறிது சிந்தித்தாள். “இன்னொன்று தோன்றுகிறது குறிஞ்சி,” என்று மீண்டும் துவங்கினாள் உரையாடலை.
“என்ன தோன்றுகிறது?” என்று கேட்டாள் குறிஞ்சி .
“குருநாதர்…”
“பெரிய கலைஞர்.”
“அது மட்டுமல்ல மந்திரவாதி. மருத்துவர் கூட.”
“ஆம்.”
“ஏதாவது கண்ட மருந்தைக் கொடுத்தோ, மந்திரம் ஜபித்தோ அவர் புத்தியை மாற்றியிருப்பாரோ?”
“அவர் புத்தியை மட்டும் மாற்றவில்லையே அம்மணி, அரசன் புத்தியையும் மாற்றியிருக்கிறாரே.”
“ஆம். குறிஞ்சி! எனக்கெதுவும் புரியவில்லை,” என்ற முத்துக்குமரி அதற்குப் பிறகு ஏதும் பேசவில்லை கடைசியாக ஒரு விஷயம் மட்டும் சொன்னாள், “குறிஞ்சி! நான் சென்றதும் நீ எனது தகடியைப் போர்த்திக்கொண்டு வெளித் தாழ்வரை விளக்கின் கீழ் இரண்டொரு நிமிடங்கள் நில்,” என்று .
“எதற்கு அம்மணி நிற்க வேண்டும்?’ என்று வினவினாள் குறிஞ்சி.
“அரண்மனையில் முக்கிய நிகழ்ச்சி ஏதாவது ஏற்பட்டால் அது எனக்குத் தெரிந்தால் அப்படி நிற்கும்படி அவர் சொன்னார்” என்றார் குமரி.
“அவர்தான் இங்கேயே இருக்கிறாரே,” என்றாள் குறிஞ்சி.
“அவர் சகாக்கள் அறியலாம். கூத்தன் அறியலாம். அவன் மூலம் என் தந்தையோ, சிறிய தந்தையோ அறியலாம். இந்தக் குழப்பத்திற்கு அதுதான் விடிமோட்சம்,” என்றாள் குமரி.
அப்படியே செய்வதாகக் கூறிய குறிஞ்சி தனது அலுவல்களைக் கவனிக்கச் சென்றாள். அரசன் சொன்னபடி அனைத்தும் நடந்தன. இரண்டாம் ஜாம் ஆரம்ப மணி அடித்ததும் அரசனே வந்து குமரியை அழைத்துச்சென்றான். அந்தப்புரத்தின் வாயிலுக்கு வந்ததும் “குமரி, இனி நான் வருவதற்கில்லை . இவர் உன்னை அழைத்துச் செல்வார்,” என்று கூறி சேனாதிபதியிடம் அவளை ஒப்படைத்தான்.
சேனாதிபதி அவளை அந்தப்புரத்தின் தாழ்வரை இருட்டிலேயே அழைத்துச் சென்று மெள்ள தென்புறத்திலிருந்த அந்தப்புர அந்தரங்க வாயிலுக்கு அழைத்து வந்தான். அங்கு பட்டத்துராணியின் ரதம் பயணத்துக்குத் தயாராயிருந்தது. ரதசாரதி ரத பீடத்திலேயே அமர்ந் திருந்ததையும் அவன் பக்கத்தில் காவலர் இருவர் அமர்ந் திருந்ததையும் கவனித்த குமரி சேனாதிபதி ரதத்தின் திரைச்சீலையை நீக்க உள்ளே ஏறினாள். ஏறியவள் திகைத் தாள். பட்டுக் கவசம் தலையையும் முகத்தையும் மூடியிருக்க அமர்ந்திருந்தான் இந்திரபானு. திரும்பிப் பழையபடி தனது அறைக்கு ஓடிவிடலாமா என்று நினைத்தாள் குமரி ஒரு வினாடி. பிறகு பெருமூச்சு விட்டுத் தொப்பென்று ஆசனத்தில் விழுந்தாள். அடுத்த வினாடி ரதம் புறப் பட்டது. அடுத்த சில வினாடிகளில் அரச வீதியில் பறந்தது. வீசம் ஜாமத்திற்குள் தென்புறக் காட்டுப் பாதையில் நுழைந்துவிட்டது.
இது அத்தனையும் சித்தத்தில் கனவுபோல் சுழன்ற தால் பிரமை பிடித்தவள் போல் உட்கார்ந்திருந்தாள் முத்துக்குமரி, பக்கத்தில் உட்கார்ந்திருந்த இந்திரபானுவின் போக்குக்கூட அவளுக்கு விபரீதமாயிருந்தது. இந்திரபானு அவள் பக்கத்தைக்கூட அணுகவில்லை. அவளைத் தொடவும் முயலவில்லை. அசையாமல் சிலைபோல் உட்கார்ந்திருந்தான். இரண்டாவது ஜாமம் கழித்து மூன்றாவது ஜாமம் நெருங்கியது சமயத்தில் ரதப்புரவி களின் வேகம் சிறிது குறைந்து, மெள்ள மெள்ள சக்கரங்களின் சுழற்சி மும்முரம் குறைந்து கடைசியாக ரதம் நிற்கவும் செய்தது.
திரைச் சீலையை நீக்கிய வீரனொருவன், “தேவி, இறங்குங்கள்.” என்று வணக்கத்துடன் தெரிவித்தான்.
முத்துக்குமரி மெள்ள இறங்கினாள். அவளைத் தொடர்ந்து இந்திரபானுவும் இறங்கினான். முத்துக்குமரி சுற்றும் முற்றும் நோக்கினான். காட்டின் எல்லையைக் கடந்து கடற்கரையை அடைந்திருந்தது ரதம். தூரத்தே கடலில் மரக்கலம் ஒன்றிருந்தது.
“அது என்ன மரக்கலம்?” என்று வினவினான் பக்கத்திலிருந்த காவலனை நோக்கிய பாண்டியகுமாரி.
வீரன் வணக்கத்துடன் பதில் கூறினான், “சேர நாட்டுப் போர்க்கலம்,” என்று.
“இங்கு எதற்கு நிற்கிறது?” என்று கேட்டாள் குமரி சந்தேகத்துடன்.
“தங்களை அழைத்துச் செல்ல.” வீரன் பதில் திட்ட வட்டமாக இருந்தது. சற்று ஏளனமும் அதில் ஒலித்தது.