Raja Muthirai Part 2 Ch52 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
ராஜ முத்திரை இரண்டாம் பாகம் – சாண்டில்யன்
அத்தியாயம் – 52 குருநாதனுக்கு மீண்டும் சிறை
Raja Muthirai Part 2 Ch52 | Raja Muthirai | TamilNovel.in
அரண்மனை அந்தப்புரப் பகுதிலிருந்த தனது அந்தரங்க அறையில் அன்றிரவின் மூன்றாம் ஜாமம் நாலாவது ஜாமத்தை எட்டிப் பிடிக்க முயன்று கொண்டிருந்த சமயத்தில் பஞ்சணையில் உட்கார்ந்து கொண்டிருந்த சேர மன்னனான வீரரவி உதய மார்த்தாண்டவர்மன் மகிழ்ச்சி மிகுதியால் வாய்விட்டு நகைத்தான். எதிரே அடக்கத்துடன் நின்றிருந்த சேனாதிபதி மன்னனைப்போல் வாய்விட்டு நகைக்கவில்லையானாலும் வித்தியாசம் இருக்கவே செய்தது. முன்னமேயே இட்ட திட்டப்படி இந்திரபானுவையும் முத்துக்குமரியையும் பாண்டியன் பெரும் செல்வத்தையும் சிங்களத்துக்குக் கடத்திவிட்டாலும் குருநாதன் போர்த் திட்டமும் விளக்கமாகத் தெரிந்துவிட்டதாலும் ‘இனி குருநாதனையும் தீர்த்துக் கட்டலாம்’ என்ற நினைப்பாலும் தங்கு தடையின்றி மகிழ்ச்சி பிரவாகித்துக் கொண்டிருந்தது மன்னன் மனத்தில். ஆனால் சேனாதிபதியின் இதயத்தில், குருநாதன் திட்டத்தைத் தான் வெட்டவெளிச்சமாக்கி விட்டாலும் குருநாதனை மீறிச் செயலில் இறங்குவது அத்தனை சுலபமல்லவென்ற நினைப்பால் மகிழ்ச்சியுட னும் சற்று அச்சமும் கலந்தே இருந்தது. அதன் விளைவாக அவன் மன்னன் உற்சாகத்தில் முழுவதும் கலந்து கொள்ள முடியாது, நின்ற இடத்தில் சற்று சங்கடத்துடன் அசையவும் செய்தான். சேனாதிபதியின் சங்கடத்தை மன்னன் கவனிக்கத் தவறாததால் நகைப்பைத் தொடர்ந்து லேசாகப் புன்முறுவலும் செய்து கேட்டான், “ஏன் சேனாதிபதி! உனக்கு இன்னும் குருநாதரிடமுள்ள கிலி போகவில்லை போலிருக்கிறது?” என்று.
சேனாதிபதியின் கண்கள் மன்னன் கண்களைச் சற்றுத் தைரியத்துடனே சந்தித்தன. “மன்னவா! குருநாதர் மிகத் தந்திரசாலி. மக்கள் அவரைப் பெரிதும் மதிக் கின்றனர்,” என்று சுட்டிக் காட்டினான் சேனாதிபதி .
“அதைப்பற்றிக் கவலைப் படாதே சேனாதிபதி மக்கள் இன்று மதிப்பவனை நாளை மதிப்பதில்லை. மக்களுக்கு தீர்க்காலோசனை கிடையாது. அவ்வப்பொழுது தங்களுக்குக் கிடைக்கும் நன்மை தீமைகளைப் பொறுத்து அவர்கள் மதிப்பும் கசப்பும் மாறிவிடுகின்றன. குருநாதரிட மிருக்கும் மதிப்பை மக்களிடமிருந்து அகற்றுவது இனிப் பிரமாதமில்லை ,” என்ற மன்னன், “குருநாதர் விஷயத்தை நான் கவனித்துக்கொள்கிறேன். போர் விஷயத்தில் இனி அவர் உதவி உனக்குத் தேவையா? அதை மட்டும் சொல்,” என்று வினவினான்.
சேனாதிபதியின் பதில் திடமாக வந்தது. “தேவை யில்லை மன்னவா. குருநாதர் நகரத்தின் கோட்டை மதிள்களில் விற்பொறி வேல் பொறிகளையும் நகரத்தைச் சுற்றிலும் கூட்டம் கூட்டமாகவும் வரிசை வரிசையாகவும் படைகளையும் நிறுத்தச் சொன்ன காரணத்தை நானறிவேன். இடையிடையே முரசு களை வைக்கச் சொன்ன காரணமும் தெரியும் எனக்கு. படைகளுக்கு இடையிடையே தனித்தனியாக நகரத்தைச் சூழ இருக்கும் முரசுகள் ஒலித்ததும் பிரிந்து நிற்கும் படை வரிசைகள் இணையும். கண்ணிமைக்கும் நேரத்தில் நகரத்தைச் சுற்றிப் பலமான படை வளையம் ஏற்படும். இப்படிச் சுமார் ஐந்து வளையங்களை அமைக்க குருநாதர் திட்டமிட்டார். அத்தனையையும் அமைத்திருக்கிறேன். அவரிஷ்டப்படி எரிபரந்தெடுத்தலால் வீடு வாசல் விட்டு வந்திருக்கும் கிராமமக்களில் பலசாலிகளான வாலிபருக்கு ஆயுதங்கள் கொடுத்து நகரத்தின் வடக்கெல்லையில் கடற்கரையோரமாக உள்ள பாதையில் நிறுத்தியிருக்கிறேன். இந்த நகரத்தின் பாதுகாப்பைப் பெரும் படையே இப்பொழுது உடைக்க முடியாது. நகரத்தைச் சுற்றி ஐந்தடுக்கு வளையங்கள், தளங்களில் விற்பொறிகளுடன் மேற்கே பலமான கடற்படை, கடற்கரை வடக்கு வழியில் ஆயுதந்தாங்கி நிற்கும் கிராம மக்கள் கூட்டம். தெற்கில் பெருங்காட்டில் மறைந்த பல வீரர்கள். இத்தனை பயங்கர ஏற்பாடுகளை யாரும் ஊடுருவ முடியாது. கிழக்கு எல்லையில் பாண்டியன் வரவே முடியாது. கோட்டைச் சுவருக்கு எதிரேயுள்ள காட்டு முகப்பு அழிக்கப்பட்டதால் வில் மூலம் வரும் எரியம்புகள் கோட்டையை அணுக முடியாது. எதிரிகள் வெட்டவெளியில் வந்தால் நமது விற்பொறிகளால் அழிக்கப்படுவார்கள்” என்று விளக்கிய சேனாதிபதி, “போருக்கு நான் சித்தம் மன்னவா! அதற்குக் குருநாதர் உதவி தேவையில்லை. இருப்பினும் என் மனத்தில் விவரிக்க இயலாத ஏதோ ஒரு சந்தேகம், பயம் இருந்து கொண்டேயிருக்கிறது குருநாதரைப் பற்றி,” என்றும் –முடிவாகக் கூறினான்.
அந்தப் பயம் அனாவசியமென்பதை மன்னன் தனது கையின் ஓர் அசைவினாலேயே தெரிவித்தான். “போரை நீ கவனி சேனாதிபதி. நான் குருநாதரைக் கவனிக்கிறேன். இந்திரபானுவும், முத்துக்குமரியும் தப்பிவிட்ட செய்தியை மக்களிடம் பரப்பு,” என்றான் மன்னன்.
“எப்படித் தெரிவிப்பது மன்னவா?” என்று வினவினான் சேனாதிபதி.
“அவ்விருவரும் தப்பிவிட்டதாகவும், பிடித்துக் கொடுப் போருக்கு நல்ல வெகுமதி உண்டென்றும் முரசறைவித்து விடு,” என்று உத்தரவிட்ட மன்னன், “பட்டத்துராணியின் ரத சாரதியையும், ரதத்துடன் சென்ற வீரர்களையும் தற்காலிகமாகச் சிறையில் அடைத்து வை,” என்றும் கூறினான்.
சேனாதிபதியின் முகத்தில் வியப்புத் தோன்றியது. “அவர்களை எதற்குச் சிறை செய்ய வேண்டும்?” என்று வினவினான்.
“நானும் நீயும், இந்திரபானுவையும், முத்துக்குமரியை யும் அனுப்பியது அவர்களுக்குத் தெரியுமல்லவா?”
“ஆமாம்.”
“அவர்களை ஏதாவது உளறுவது விரும்பத்தக்கதா?”
“இல்லை.”
“ஆகவே சிறையிலடைத்துவிடு. பிறகு விடுதலை செய்வோம்.”
மன்னன் கபடம் பூராவும் சேனாதிபதிக்குத் தெரிந்தது. அவசியமானால் மன்னன் தன்னையும் நீக்கத் தவறமாட்டான் என்பதைப் புரிந்துகொண்டதால் மௌனமே சாதித்தான் சேனாதிபதி.
“ரதம் வந்தவுடன் சாரதியையும் வீரர்களையும் கவனித்துவிடு. குருநாதர் ஏதாவது கேட்டால் என்னைக் கேட்டுக்கொள்ளச் சொல். போர் ஏற்பாடுகள் மும்முரமாகத் தொடர்ந்து நடக்கட்டும்,” என்ற மன்னன் சேனாதிபதி போகலாமென்பதற்கு அறிகுறியாகக் கையை அசைத்தான்.
சேனாதிபதி தலைவணங்கி தீவிர சிந்தனையுடன் வெளியேறினான். ஆனால் மன்னன் மன மகிழ்ச்சியுடன் படுத்துக் கொண்டான், அந்த மகிழ்ச்சி அடுத்த ஒரு வாரம் தினம் தினம் உச்சநிலையை அடைந்து கொண்டிருந்தது. கிட்டத் தட்ட மூன்று மாத காலமாகத் தன்னைவிட்டு விலகி நின்ற அதிர்ஷ்ட தேவதை மீண்டும் தன் பக்கம் திரும்பிவிட்டதை உணர்ந்தாள் மன்னன்.
இந்திரபானு மறைந்த நாள் குருநாதன் மன்னனை அணுகி இந்திரபானுவைப் பற்றி விசாரித்தபோது, “அவனைப்பற்றி யாருக்காவது தெரிய வேண்டுமென்றால் உங்களுக்குத்தானே தெரிய வேண்டும்,” என்று அலட்சியமாகப் பதில் சொன்னான் வீரரவி, அரியணையிலிருந்து இறங்கவும் இல்லை. தானாகவே வந்து எதிரே நின்ற குரு நாதனை உட்காரக்கூடச் சொல்லவில்லை வீரரவி. சரியாகக் குருநாதனை ஏறிட்டுப் பார்க்கவும் இல்லை அவன்.
மன்னனின் திடீர் மாற்றம் பெரும் வியப்பை அளித்தது குருநாதனுக்கு. முந்திய நாள்வரை தன்னிடம் தாசனாயிருந்த மன்னன் தன்னை அடியோடு அலட்சியம் செய்வதையும் முகங் கொடுத்தப் பேசாததையும் கண்டதும் குருநாதன் ஏதோ விபரீதம் நடந்திருக்கிறது என்று மட்டும் தீர்மானித்துக் கொண்டதால் நிதானத்தை இழக்காமலே மன்னனை நின்றபடி ஏறிட்டு நோக்கினான். “இந்திர பானுவை அவன் அறையில் காணவில்லை,” என்றான் குருநாதன் உள்ளுக்குள் இருந்த குமுறலை வெளிக்குக் காட்டாமல்.
“வெளியே எங்காவது போயிருக்கலாம்,” என்றான் அரசன் கையிலிருந்த ஓர் ஓலையைப் படித்துக் கொண்டே.
“அரண்மனையை விட்டுப் போக நான் அனுமதி யளிக்கவில்லை அவனுக்கு,” என்றான் குருநாதன்.
“பின் போயிருக்க மாட்டான்.” என்றான் மன்னன்.
“போய்விட்டான் மன்னவா. அவன் அரண்மனையில் இல்லை; முத்துக்குமரியும் இல்லையாம்,” என்றான் குரு நாதன் மெல்ல.
மன்னன் கண்கள் அதிர்ச்சியுடன் எழுந்தன ஓலையிடமிருந்து. “என்ன! என்ன சொன்னீர்கள் !” என்று வினவினான் அந்தப் போலி குரலிலும் ஒலிக்க.
முத்துக்குமரியையும் காணவில்லையாம்,” என்றான் குருநாதன் மீண்டும் நின்ற இடத்தில் அசையாமல் நின்ற வண்ணம்.
மன்னன் அரியணைப்படியில் எழுந்து நின்றான். அவன் எழுந்த வேகத்தில் படியிலிருந்த காலணையும் சற்று அழுந்தியது. “குருநாதரே! விளையாட வேண்டாம். முத்துக் குமரி எங்கும் போயிருக்க முடியாது. பலத்த காவலில் வைத் திருந்தேன்,” என்றான்.
“குறிஞ்சியைக் கேள்,” என்றான் குருநாதன்.
“என்ன சொன்னாள் குறிஞ்சி?” ஆத்திரத்துடன் எழுந்தது மன்னனின் கேள்வி.
“முத்துக்குமரி அறையில் இல்லை என்று மட்டும் கூறினாள். வேறெதுவும் சொல்ல மறுக்கிறாள்,” என்றான் பரதப்பட்டன்.
“வற்புறுத்திக் கேட்பதுதானே?”
“கேட்டேன்.”
“அதற்கு என்ன சொன்னாள்?”
“உன்னைக் கேட்கச் சொன்னாள்?”
“என்னையா?” மன்னன் குரலில் ஆத்திரம் இருந்தது.
“ஆம் உன்னைத்தான்,” என்ற குருநாதன் குரலில் மீண்டும் கடுமை இருந்தது.
மன்னன் அரியணைப் படியிலிருந்து கீழே இறங்கி குருநாதனை எரித்துவிடுவதுபோல் பார்த்தான். “குரு நாதரே! என்ன நாடகம் இது? அந்தப் பாண்டியன் வேவுகாரியும் நீரும் சேர்ந்து எங்கு கடத்தினீர்கள்கள் பாண்டியன் மகளையும், எனது விரோதியையும்? சொல்லுங்கள் உண்மையை?” என்று கடுங்கோபத்துடன் கேட்டான் மன்னன்.
குருநாதன் சித்தத்தில் மெள்ள மெள்ள உண்மை உதயமாகவே அவன் முகத்திலும் சினம் லேசாகத் தெரிந்தது. உதடுகளில் சினம் கலந்த முறுவலும் தெரிந்தது. “மன்னவா! நாடகமாடுவதில் என்னைவிட நீ வல்லவனாயிருக்கிறாயே. இதுவரையில் கலைஞனென்ற இறுமாப்பு எனக்கு இருந்தது. அந்தப் பட்டம் உனக்கே உரியது.” என்று கூறினான் வெறுப்புடன் பட்டன்.
“குருநாதரே! இப்பொழுது புரிகிறது எனக்கு. நீரும் பாண்டிய ஒற்றராகத்தானிருக்க வேண்டும். இல்லையேல் இந்திரபானுவையும், முத்துக்குமரியையும் உம்மிடம் ஒப்படைக்கச் சொல்லிவிட்டு, அவர்களைத் தப்ப வைத்து அந்தப் பழியை என்மீதே போடுவீரா? உம்மை நம்பினேன் குருநாதரே. எனது விரோதிகளை, நகரப் பாதுகாப்பை, படைகளை உம்மிடம் நம்பி ஒப்படைத்தேன். போரில் சிறந்த படைத்தலைவர்களை உமக்கு அடிமையாக்கினேன். ஏன்? நான் என்னையே அடிமையாக்கிக் கொண்டேன். இத்தனைக்கும் உட்பட்ட என்னை இந்திரபானு எங்கே, முத்துக்குமரி எங்கே என்று கேட்க உமக்கு மிகத் துணிவு வேண்டும். அவர்களிருவரும் உமது ஆணைக்குட்பட்டவர்கள். உமது பார்வையிலிருந்தவர்கள். அவர்கள் எங்கேயென்று என்னைக் கேட்கிறீர்கள். இப்பொழுது உண்மையைச் சொல்லும். எங்கே அவர்கள்? எங்கு அனுப்பினீர் அல்லது எங்கு மறைத்திருக்கிறீர்? ராஜத்துரோகம் பெருங்குற்றம் குருநாதரே! நம்பிக்கைத் துரோகம் பஞ்சமா பாகங்களில் ஒன்று.” உணர்ச்சியும் கோபமும் கலந்த குரலில் இரைந்தான் அரசன்.
எதற்கும் அசையாத குருநாதன் திக்பிரமை பிடித்து நின்றான். மன்னன் எத்தனை கெட்டிக்காரத்தனமாய் தன்னைப் பெரும் இக்கட்டில் கொண்டுவந்து நிறுத்தி விட்டான் என்பதை உணர்ந்தான் குருநாதன். மன்னன் இந்திரபானுவையும் முத்துக்குமரியையும் தன்னிடம் ஒப்படைத்தது அரண்மனைக் காவலருக்குத் தெரியும். மக்களிடை அந்தச் செய்தி பரவவும் காலமிருந்திருக்கிறது, அவ்விருவரைப் பற்றித் தனக்கு ஏதும் தெரியாதென்றால் யாரும் நம்பமாட்டார்களென்பதைக் குருநாதன் உணர்ந்தான். ஆனால் போரைப்பற்றி மன்னன் என்ன செய்யப் போகிறான் என்று நினைத்துப் பார்த்தான்.
அடுத்த விநாடி அதற்குப் பதில் கிடைத்தது. மன்னன் இரைந்து கொண்டிருந்த சமயத்தில் உள்ளே நுழைந்த சேனாதிபதி மன்னன் இரைச்சல் முடிந்ததும் மெள்ளச் சொன்னான்; “குருநாதர் உத்தரவுப்படி நகரப் பாதுகாப்பை அமைத்துவிட்டேன்,” என்று.
குருநாதன் சேனாதிபதியை நோக்கினான் சந்தேகத் துடன். சேனாதிபதி விளக்கினான். “குருநாதர் சொற்படி படை வளையங்களை அமைத்துவிட்டேன். குருநாதர் எள் என்றவுடன் எண்ணெயென்று நிற்பது அடியவன் கடமை யல்லவா?” என்றான் சேனாதிபதி.
மற்றோர் இடி குருநாதர் தலையில் இறங்கியது. இந்திரபானுவைப்போல சேனாதிபதியும் தனது பாதுகாப்பு முறையைப் புரிந்து கொண்டு விட்டான் என்பதை உணர்ந்துகொண்ட குருநாதன் மன்னனும் சேனாதிபதியும் கலந்தே சகலத்தையும் செய்து முடித்திருக்கிறார்களென்று ஊகித்துக் கொண்டான். அதனால் நிலைகுலைந்து நின்ற குருநாதனை நோக்கிய மன்னன், “குருநாதரே! எங்கே அவர்கள்!” என்று மீண்டும் ஒரு கேள்வியை வீசினான்.
“யார் மன்னவா?” ஏதுமறியாததுபோல் சேனாதிபதி கேட்டான்.
“பாண்டியன் மகளும், இந்திரபானுவும்,” என்றான் மன்ன ன்.
“அவர்களுக்கென்ன?” என்று வினவினான் சேனாதிபதி பூனைபோல்.
“அரண்மனையில் காணோமென்று குருநாதர் கூறு கின்றார்” என்றான் மன்னன்.
“குருநாதரா?” வியப்பு ஒலி கிளப்பினான் சேனாதிபதி.
“ஆம்.” மன்னன் குரலில் வெறுப்பு ஒலித்தது.
சேனாபதி குருநாதனை நோக்கி, “எங்கே அவர்கள் குருநாதரே! தங்கள் உத்தரவின்றி யாரையும் அரண் மனைக்கு வெளியே அனுப்பக் கூடாதென்று காவலருக்கு உத்தரவிட்டிருந்தோமே” என்றான்.
குருநாதன் மன்னனையும் நோக்கி சேனாதிபதியை யும் நோக்கினான். “மன்னனுக்கு ஏற்ற சேனாதிபதி,” என்றும் வாய்விட்டுச் சொன்னான்.
“குருநாதரே, பாசாங்குக்கு ஒரு முடிவு கட்டவேண் டியது அவசியம்,” என்றான் அரசன்.
“ஆம்,” என்று ஆமோதித்த குருநாதன், “மன்னவா! உன் நாடகத்தின் கடைப்பகுதி நடக்கட்டும்,” என்றான் முடிவில் திடமான குரலில்.
“எது கடைப்பகுதி?” என்று கேட்டான் மன்னன்.
“என்னைச் சிறை செய்ய வந்திருக்கும் சேனாதிபதிக்கு அனுமதி கொடு,” என்ற பரதபட்டன், “சேனாதிபதி! வீரர்களை அழை,” என்றும் உத்தரவிடும் தோரணையில் கூறினான்.
மன்னன் சேனாதிபதியை நோக்கி, “குருநாதர் குற் றத்தை ஒப்புக்கொள்கிறார்,” என்றான்.
“தண்டனையையும் அவரே விதித்துக் கொள்கிறார்” என்றான் சேனாதிபதி’
“அவர் விருப்பத்தை நிறைவேற்றிவிடு,” என்றான் மன்னன்.
அடுத்த விநாடி சேனாதிபதி கைதட்ட, உள்ளே நுழைந்த வீரர்கள் உருவிய வாட்களுடன் குருநாதனுக்கு இருபுறமும் நின்றார்கள். அவர்களுடன் செல்லுமுன்பு மன்னனை வெறுப்புடன் நோக்கிய குருநாதன், “சேரர் பெருமானே! உன்னைக் காக்கவல்ல ஒரே ஒருவனையும் அகற்றிவிட்டாய். இத்துடன் சேரர் தலைநகர் அழிந்தது. செருக்களத்தில் பாண்டியன் தயவில் நீ நிற்கும்போது என்னை நினைத்துக்கொள்,” என்று சற்றே இரைந்தே கூறினான். மேலும் சொன்னான், “நாளை ராமவர்மன் வருகிறான் தலைநகருக்கு. அவன் கூறும் செய்தியையும் கேள். உன் வீழ்ச்சியின் துவக்கத்தைப் புரிந்து கொள்வாய் ,” என்று. அத்துடன் வெறுப்பு நகைப்பொன்றையும் உதிர விட்டான். அந்த நகைப்பை அந்த மந்திராலோசனை மண்டபம் பயங்கரமாக எதிரொலி செய்தது. அதையும் வீரரவி லட்சியம் செய்யவில்லை . “இந்தத் துரோகியை இழுத்துச் செல்லுங்கள்,” என்றான் வீரர்களை நோக்கி.