Raja Muthirai Part 2 Ch55 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
ராஜ முத்திரை இரண்டாம் பாகம் – சாண்டில்யன்
அத்தியாயம் – 55 ராமவர்மன் விளக்கம்
Raja Muthirai Part 2 Ch55 | Raja Muthirai | TamilNovel.in
வீரபாண்டியனின் பாசறைச் செய்திகளை ராம வர்மன் விவரித்ததால். வீரரவியின் மனத்திலே திறந்த பெருங்கதவு பல உண்மைகளை அவனுக்கு வெட்ட வெளிச்சமாக்கியது. குருநாதனின் திட்டங்களுக்கு எதிர்த் திட்டங்களை வகுத்ததால் தனது நிலை எத்தகைய அபாயத்தில் சிக்கவிட்டது. என்பதை உதயமார்த்தாண்ட வர்மன் சந்தேகத்துக்கிடமின்றிப் புரிந்து கொண்டான். ராமவர்மன் சற்றுக் கடுமையும் அதிகப் பரிதாபமும் துலங்கிய குரலில் விஷயங்களை எடுத்துரைக்க முற்பட்டு, “மன்னவா! கோட்டாற்றுக்கரையில் வெற்றிக் கொடியை நாட்டிவிட்ட பிறகு அங்கிருந்து சேரர்தலைநகர் நோக்கித் திரும்பிய வீரபாண்டியன் தனது முழுபடைபலத்துடன் கிளம்பவில்லை. தனது படையினர் ஆயிரம் பேர்களை மட்டும் கோட்டாற்றுக் கரையைக் காக்க விட்டு வைத்து கோட்டையின் பாதுகாப்பையும் பழையபடி விஜயவர்மன் வசமே ஒப்படைத்தான். மீதி இரண்டாயிரம் வீரர் கொண்ட புரவிப்படையுடன் அவன் கிளம்பியபோது கோட்டாற்றுக்கரையில் அவனிடம் சிறைப்பட்டிருந்த சேரவீரர் மூவாயிரவரையும் தனது படையுடன் சேர்த்துக் கொண்டான். அவர்களுக்கு ஆயுதங்களையும் வழங்கினான்” என்று கூறிச் சிறிது நிதானித்தான்.
“நமது வீரர்களை அவன் படையில் சேர்த்துக் கொண்டானா?” என்று மன்னனும், சேனாதிபதியும் வியந்து ஏககாலத்தில் கேட்டார்கள்.
“ஆம். தனது படையில் சேர்த்துக் கொண்டான்,” என்றான் ராமவர்மன் திடமாக குரலில்.
“நமது வீரர்கள் துரோகிகளாகத் திரும்பி விட்டார்களா?” என்று சீறினான் சேனாதிபதி
.
“அப்படித்தான் தெரிகிறது.” என்றான் வீரரவியும்.
ராமவர்மன் அவர்களிருவரையும் ஏற இறங்கப் பார்த்தான். பிறகு கேட்டான், “மன்னவா, உங்கள் உயிரை ஒருவன் காப்பாற்றுகிறான். அவனிடம் நீங்கள் எத்தகைய உணர்ச்சி கொள்வீர்கள்?” என்று.
இந்தக் கேள்விக்குக் காரணத்தைப் புரிந்து கொள்ள முடியாத மன்னன், “எந்த உணர்ச்சியும் சந்தர்ப்பத்தைப் பொறுத்தது,” என்று கூறினான்.
“அப்படியானால் சந்தர்ப்பத்தையும் கூறுகிறேன் கேளுங்கள் மன்னவா! சிங்கணன் வீரபாண்டியனைச் சரணாகதி செய்யும்படி அழைத்தான். வீரபாண்டியன் படைவீரர்கள் நிராயுதபாணிகளாகக் கோட்டைக்கு வெளியே வரவேண்டுமென்றும் நிபந்தனை விதித்தான். அந்தச் செய்தியை நானே கொண்டு சென்றேன். வீரபாண்டியன் அந்த நிபந்தனையைக் கேட்டுச் சீறுவான் அல்லது நகைப்பான் என்று எதிர்பார்த்தேன். அவன் சீறவுமில்லை நகைக்கவுமில்லை. ஒப்புக் கொண்டான்…” என்றான் ராமவர்மன்.
“ஒப்புக் கொண்டானா!” என்றான் சேனாதிபதி வியப்புடன்.
அந்த வியப்பைக் கண்ட ராமவர்மன். “உங்களுக்கு ஏற்படும் வியப்பு எனக்கும் ஏற்பட்டது. வியப்பு மட்டுமின்றிச் சந்தேகமும் ஏற்பட்டது ஆனால் சிங்கணன் சந்தேகப்படவில்லை. தன் தந்திரம் பலித்துவிட்டதாக கொக்கரித்தான். மறுநாள் படைவீரர்கள் நிராயுதபாணி களாகக் கோட்டையின் பிராதான வாயில் வழியாக வெளிவந்தார்கள். அவர்களை அழிக்கச் சிங்கணன் நமது புரவிப்படையை ஏவினான்…” என்று கூறினான்.
“நிராயுதபாணிகள் மீதா?” என்றான் வீரரலி கோபத்துடன்.
“ஆம் மன்னவா! ஆனால் அவர்கள் பாண்டியப் படை வீரர்கள் அல்ல. கோட்டாற்றுக்கரையில் சிறைப் பட்டிருந்த சேரநாட்டு வீரர்கள்” என்று சுட்டிக் காட்டினான் ராமவர்மன்.
கூரிய அறிவுள்ள வீரரவி நிலவரத்தை நிமிடத்தில் புரிந்து கொண்டான். “பிறகு?” என்று கேட்கவும் செய்தான்.
ராமவர்மன் தொடர்ந்து கூறினான், “அவர்கள் மீது சிங்கணன் படை விழுந்து தாக்குவதற்குள் கோட்டையின் வடக்கு வாயில் வழியாகப் பாண்டியப் படை வந்து சிங்கணன் படைகளைத் தாக்கியது. நிராயுதபாணிகள் காக்கப்பட்டனர். அந்த நிராயுதபாணிகள் மனோபாவம் எப்படியிருக்கும்?” என்று.
“நம்மிடத்தில் கசப்பும், வீரபாண்டியனிடத்தில் பிரமிப்பும் இருக்கும்,” என்று ஒப்புக்கொண்டான் மன்னன்.
எதிரியின் தாராளத்தையும் ஒப்புக் கொள்ளும் வீரரவியின் உயர்ந்த குணத்தைக் கண்ட ராமவர்மன், அவன் மட்டும் சில குற்றங்களைப் புரியாதிருந்தால் சேர நாட்டையாரும் அணுக முடியாதென்றும் எண்ணினான். அந்த எண்ணத்துடன் கூறினான்: “ஆம் மன்னவா! சேர வீரர்கள் அவனிடம் பெரும் பிரமிப்பையும் நன்றியறிய தலையும் கொண்டார்கள். அவர்களைத் தன் படையில் சேர அழைத்ததும் உடனடியாக ஒப்புக்கொண்டார்கள். அவர்களும் தங்கள் பழைய உடைகளையே அணியலா மென்றும் தனது படையில் ஒரு பிரிவாக இருக்கலா மென்றும் கூறினான் வீரபாண்டியன்.”
மன்னன் வியப்பு அதிகமாயிற்று. “நமது வீரர்கள் அவனுக்கு அடிமைப்படக் காரணமிருக்கிறது. இந்தத் தாராளம் எனக்குக்கூட இருக்காது,” என்றான் வீரரவி வியப்பு பலமாக ஒலித்த குரலில்.
“மன்னவா! இதில் தாராளம் ஏதுமில்லை,” என்றான் ராமவர்மன்.
“நினைத்தேன்,” என்று உரையாடலில் புகுந்த சேனாதிபதியைச் சுடும் விழிகளுடன் பார்த்த வீரரவி, “என்ன நினைத்துவிட்டாய்?” என்று சீறினான்.
“அதில் தாராளம் ஏதுமில்லையென்று தெரிகிறது.” என்றான் சேனாதிபதி.
“எப்படித் தெரிகிறது!”
“திடீரென்று நமது வீரர்களைச் சேர்த்துக்கொண்டதிலிருந்து”
“வேறெதுவும் புரியவில்லை உனக்கு?”
“எதைக் குறிப்பிடுகிறீர்கள்?”
“வீரபாண்டியன் நமது தலைநகருக்கு எதிரில் பாசறை அமைத்திருப்பதை.”
“அதெப்படித் தெரியும் எனக்கு?”
“தெரியக் காரணமில்லை. அதைச் சொல்ல ராமவர்மன் வரவேண்டும். ஆகவே மீதியையும் நிதானமாகக் கேள்,” என்று இகழ்ச்சியுடன் கூறிய மன்னன், “மேலே சொல் ராமவர்மா,” என்று உத்திரவிட்டான்.
ராமவர்மன் சொன்னான்: “மன்னவா! வீரபாண்டியன் படை கோட்டாற்றுக் கரையை விட்டுக் கிளம்பிய போது அதன் முன்னணியில் சேரவீரர் இரண்டாயிரம் பேர் சென்றனர். நடுவில் வீரபாண்டியனும் அவன் மனைவியும் சென்றனர். அவர்களுக்குப் பின்புறம் நகர்ந்தது பாண்டியப் படை. வீரர்களையே அவர்கள் எதிர்நோக்க வேண்டி யிருந்தது. சுந்தரபாண்டியன் தென்புறத்தில் தாக்க வீரபாண்டியன் வடபுறத்தில் தாக்க, சிங்கணன் அனுப்பிய சேரர் படை முதலில் தத்தளித்தது. பிறகு இரு பிரிவாகப் பிரிந்து ஒரு பிரிவு சுந்தரபாண்டியனையும், இன்னொரு யனை எதிர்கொண்ட சேரர்படை வீரபாண்டியன் படை முகப்பிலிருந்த சேர வீரரைக் கண்டதும் குழம்பியது. குழம்பி அது தாக்குமுன்பாக வீரபாண்டியன் தனது பின்னாலிருந்த பாண்டியப் படையை இருபிரிவாகப் பிரித்து நமது படையின் இரு விலாப்புறங்களிலும் தாக்கச் செய்தான். தங்களுக்கு நேர் எதிரில் சேரவீரரும் இரு பக்கங்ககளிலும் பாண்டிய வீரரும் தாக்கவே சரியாகக் கண்ணிமைக்கும் நேரத்தில் நமது படைகள் சிதறி யோடியன. இதற்குள் சுந்தரபாண்டியன் தென்புறத்தில் முன்னேறி நெருக்கினான். நமது படைகள் நிலையை நான் சொல்ல வேண்டியதில்லையென நினைக்கிறேன்,” என்று.
வீரரலிக்கு மட்டுமின்றிச் சேனாதிபதிக்கும் நிலைமை தெளிவாகப் புரிந்தது. சேனாதிபதி பெருமூச்செறிந்தான், சித்தத்தைக் குழப்பும் அந்தச் செய்தியால் வீரரவி மட்டும் எந்த உணர்ச்சியையும் காட்டாமல், “சரி மேலே சொல்,” என்று ஊக்கினான் ராமவர்மனை.
“மன்னவா! இந்தப் போரிலும் வீரபாண்டியன் தனது பெருந்தன்மையைக் காட்டினான். சேர வீரர்களை முகப்பில் நிறுத்தினானேயொழிய அவர்களை நமது படைகளுடன் கை கலக்கவிடவில்லை . பக்கங்களில் தனது படைகளைக் கொண்டு தாக்குகையில் சேரர் பிரிவைப் பின்வாங்கச் சொல்லிக் கொம்பு ஊதினான். அவர்கள் பின்வாங்கிய இடத்தைப் பக்கத்தில் தாக்கிய பின் பிரிவுகளைக் கொண்டு கனவேகத்தில் நிரப்பினான். இந்தப் போர் முறை உங்களுக்குப் புரிகிறதென்று நினைக்கிறேன். எதிரே சேரவீரர் நிற்பதைக் கண்டு, நமது படை தயங்குகிறது. அந்தத் தயக்கம் தெளியுமுன்பு பக்கங்களில் தாக்கப் படுகிறது. அதைச் சமாளிக்க முற்படுகையில் கொம்பு ஊதப்பட்டுச் சேரவீரர் பின்வாங்குகிறார்கள். அந்த இடத்தில் பக்கங்களில் தாக்கிய பாண்டியப்படை இரு நதிகளாகப் பாய்ந்து இணைகிறது. திடீரெனத் தங்கள் முன் எழுந்து பாய்ந்து வந்த படையைச் சமாளிக்க முயலும் நமது படை பின்புறத்தில் சுந்தரபாண்டியனால் தாக்கப்படுகிறது. நமது படைகளுக்கு நகரவும் அவகாசமில்லை , நினைக்கவும் அவகாசமில்லை” என்று விளக்கினான் ராமவர்மன்.
வீரரவிக்கு வெட்டவெளிச்சமாகப் புரிந்தது. போர் முறையும் அதன் முடிவும். ஆகவே கேட்டான், “பிற்கு?” என்று.
“முன்பே கூறினேனே மன்னவா! அது போல் சேர வீரர்கள் ஆயுதமற்றவர்களாகக் கிராமங்களுக்கு அனுப்பப் பட்டார்கள். நானும் சில வீரர்களும் சிறையிருந்தோம். எங்களை விடுவித்துத் தங்களிடம் செல்ல அனுமதி கொடுத்தான் வீரபாண்டியன். அதற்குமுன்பு இங்கு நடந்த விஷயங்களைக் கேட்டு மகிழ்ந்தேன்,” என்றான் ராமவர்மன்.
“எதைக் கேட்டு?” என்று வினவினான் வீரரவி.
“நீங்கள் இந்திரபானுவையும் முத்துக்குமரியையும் சிறையிலிருந்து விடுவித்துவிட்டதையும், முத்தைக்கூடக் கொடுத்துவிடப் போவதாகவும் செய்தி வந்தது,” என்றான் ராமவர்மன்.
“செய்தியனுப்பியது யார்?” என்று வினவினான் மன்னன்.
“குருநாதர்” என்றான் ராமவர்மன்.
இந்தப் பதில் மன்னனுக்குப் பெருவியப்பை அளித்தது.
“யார் மூலமாக அனுப்பினார்?” என்ற மன்னன் குரல் பலமாக எழுந்து–எதிரொலி செய்தது அந்த அறையில்.
ராமவர்மன் பதில் மன்னன் பிரமிப்பை உச்ச நிலைக்குக் கொண்டு சென்றது.” என்ன! என்ன! இன்னொரு முறை சொல்,” என்றான் மன்னன்.